2023 வரவு செலவுத் திட்டம் – பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று (21) நடைபெற்ற 2023 வரி மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் தவிர்ந்த எந்தவொரு கட்சியோ, நபரோ அல்லது நிறுவனமோ சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளையோ மாற்று வழிகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அதனை நிராகரிப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எமது நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களான பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், இந்தியா தமக்கு தனித்துவமான முறையை பின்பற்றுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முதலீடுகளுக்கு துரிதமாக அனுமதி வழங்க பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் செல்வது சிக்கலானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நாடு பாரியளவு வருமானத்தை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை நேற்று(திங்கட்கிழமை) திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு பதிலாக பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து ஒரே நிறுவனத்தினால் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இன்று இந்த இடத்திற்கு வந்தபோது எனக்கு இன்னுமொரு பறவைகள் பூங்கா நினைவுக்கு வந்தது.

ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இவ்வாறான பறவைகள் பூங்காவொன்று   அமைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பறவைகள் தீவில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடாளுமன்றத்தை நிறுவியுள்ளார்.

இப்போது அன்றிருந்த பறவைகள் அங்கு  இல்லாத போதும்  வெவ்வேறு வகையான பறவைகள் உள்ளன. காகங்களும் உள்ளன.

இந்த பறவைகள்  பூங்காவை நிர்மாணிப்பதில் சுமார் 20 வருடகாலங்கள் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்ததாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ  கோட்டேகொட இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை இன்று நாட்டுக்கு  சமர்ப்பித்துள்ளார்.

சிங்கப்பூரின் ஜூரோன் பறவைகள் பூங்காவை மாதிரியாகக் கொண்டு  இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை உருவாக்கியதாக அவர் கூறினார். இதன் மூலம் கண்டி நகரின் சுற்றுலா மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஜூரோன் நகரம் முதலீட்டு வலயமாகத்தான் முன்னேற்றப்பட்டது. புதிய பொருளாதாரப் பயணத்துடன் இலங்கை முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர், அவர்களது வர்த்தகங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு 10 வருடங்கள்  செல்கிறது. இந்தநிலையை மாற்ற வேண்டும்.

புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் உற்பத்தி, ஏற்றுமதி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்  துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு முதலீட்டாளர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய 10 வருடங்கள் எடுத்துக் கொண்டால் அதன் மூலம் பொருளாதாரத்திற்கு நன்மை கிடைக்காது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மூன்று மாத குறுகிய காலப்பகுதியில் பெரிய கொழும்பு பொருளாதார திட்டத்தை நிறைவேற்றி  அதனை ஆரம்பித்து வைத்ததால், அதன் பொருளாதார நன்மை இலங்கைக்கு கிடைத்தது.

ஜனாதிபதி பிரேமதாசவின் 200 ஆடைக் கைத்தொழில் வேலைத்திட்டம் மூன்று வாரங்களில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது.

முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பவற்றுக்குப்  பதிலாக, பொருளாதார ஆணைக்குழுவை  நியமித்து, ஒரே  நிறுவனத்தால் முதலீடுகளுக்கு  அனுமதி  அளிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, எதிர்காலத்தில் அதை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், நமது நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மதிப்பை வழங்கி, இந்த பறவைகள்  பூங்காவை நாட்டிற்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதானது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும்; பேராயர் எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் திவால் நிலை மற்றும் உதவியால் நாட்டைப் பெரிய நெருக்கடிக்கு தள்ள வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசத்தின் நலனுக்காக முன்வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எதிர்மறையான நற்பெயரைப் பெறுவதைத் தவிர்க்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உடன்பாடு இல்லை

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் மீண்டும் சொன்னேன், 13க்கும் மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம்.

அப்படியானால் பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும் இப்போது எங்கே? அரசியலமைப்பில் உள்ளன, ஆனால் நடைமுறைப்படுத்த முடியாது. ஏன் 13 வேலை செய்யவில்லை தெரியுமா? மக்களுக்கு பிடிக்கவில்லை. ஜே.வி.பி. சார்பில் நான் கூறிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.

பைத்தியக்காரர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி!

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும், எதிரணியில் உள்ள எம்.பிக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதில் வழங்கும் போதே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமுலாகவில்லை. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

அதிகாரங்களைப் பகிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது” – என்றார்.

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக 132 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்தியப் பெருங்கடலில் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையமாக மாற இலங்கை எதிர்பார்க்கிறது.

இதற்கமைய துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது.

இந்த முதலீடுகள் துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் செய்யப்படும்.

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெயா கொள்கலன் முனையத்திற்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இரண்டு முனையங்களும் அரசுக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபையின் துணை நிறுவனங்களாகும்.

மேற்கூறிய முதலீடுகளைத் தவிர, திருகோணமலை துறைமுகத்தை மொத்த சரக்கு நடவடிக்கைகளுக்காகவும், காலி துறைமுகத்தை சுற்றுலாத் துறைக்காகவும் படகு சேவையுடன் மேம்படுத்தவும், பெரிய கப்பல்களை நங்கூரமிட வசதி செய்யவும் எதிர்பார்க்கிறோம். என கூறியுள்ளார்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயம்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க கூறினார்.

வாகன விபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி பற்றிய அறிவு இன்மையின் காரணமாக அனர்த்தத்தின் பாதிப்பு அதிகமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன  போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க  குறிப்பிட்டார்.

இரு வருடங்களுக்கான தவணை, வட்டியை இலங்கையிடம் குறித்தகாலப்பகுதியில் அறவிடப்போவதில்லை – சீன எக்ஸிம் வங்கி

2022 , 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய தவணைக் கடன் மற்றும் வட்டியை குறித்த காலப் பகுதியில் அறவிடப்போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்கான கடன், வட்டியை மீள செலுத்துவதற்கு EXIM வங்கி எனப்படும் சீனாவின் இறக்குமதி – ஏற்றுமதி வங்கி நிவாரணக் காலத்தை வழங்கியுள்ளதாக சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதன் ஊடாக இலங்கையின் குறுகிய கால கடனை மீள செலுத்துவதற்கு நிவாரணம் கிடைக்கும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பாகும்.

சீன EXIM வங்கி இலங்கையுடன் மத்தியகால, குறுகியகால கடனை மீள செலுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் இலங்கையின் கடன் ஸ்திரநிலையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 30,000 பீப்பாய் எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள், இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

குறித்த எரிபொருள் தொகைக்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, எதிர்வரும் நாட்களில் செலுத்தவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நெப்டா,  டீசல் மற்றும் பல எரிபொருள் வகைகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுகின்றன.

உபரியான சுத்திகரிப்பு எரிபொருள் தொகை களஞ்சியப்படுத்தப்படுவதுடன், இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தொகையானது கப்பல்கள் மூலம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்திற்கு அனுப்பப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.