யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனை சாவடிகள்

யாழ்ப்பாணத்தின் சோதனை சாவடிகளை அமைத்து, வீதி சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் , யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து , வாகனங்களை பரிசோதிப்பதன் மூலம் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வியாபாரிகள் அல்லது போதைப்பொருள் பாவிப்போர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு தகவல்களை தந்து உதவுமாறு மக்களிடம் கோருகிறோம். தகவல்களின் இரகசிய தன்மை பேணப்படும். அதனால் மக்கள் பயமின்றி இராணுவ முகாமில் தெரிவிக்கலாம்.

எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி சமூகத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காகவே , வீதி சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். அதனால் பொது மக்கள் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்துள்ளார்

மூழ்கிக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் மீட்பு

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.

படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் கடற்படையை இன்று தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்

இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த டி சில்வா, ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இலங்கை அகதிகள் 306 பேருடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்

306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இக் குரல் பதிவில் கப்பலில் தத்தளித்து கொண்டிருக்கும் 306 இலங்கையர்களையும் காப்பாற்றுமாறும் ஐ.நாவிடம் இதனை தெரியப்படுத்தும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சர்வதேச செய்தியாளர், பிரான்சிஸ் கரிசன் Frances Harrison மேற்படித் தகவலை உறுதிப்படுத்த முடியுமா என தற்போது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

306 இலங்கை தமிழர்களுடன் (30 குழந்தைகள்) கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடற்கரையில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ் சரிசெய்வது அவசியம் என்று பயணிக்கும் ஒருவரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோருக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஸ்லோவேனியா ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்க திட்டம் – செல்வம் எம்.பி

எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாவில் பல கிராமங்களை அனுராதபுரத்துடன் இணைக்கும் செயற்பாடாகவும், திருகோணமலையின் சில பிரதேசங்களை பொலனறுவையுடன் இணைக்கும் செயற்பாடாகவும், தமிழ் பிரதேசங்கள் பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுக்குள் உள்வாங்குவதற்கான செயற்பாடாகவும், எங்களது பிரதேசங்களை காவு கொள்ளக்கூடிய நிகழ்ச்சி நிரலிலே எல்லை நிர்ணயம் இடம்பெறலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

இந்த எல்லை நிர்ணயம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இருப்பதோடு இது தொடர்பாக மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அத்துடன் ஐந்து பேரை உள்ளடக்கிய எல்லை நிர்ணய குழு தனித்து, தன்னிச்சையாக தங்களது முடிவினை எடுத்து செயற்படுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டோம். மேலும் இதன் ஊடாக நகரசபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களினை பிற்போடுவதற்கான நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன் தற்போது நகரசபை மாநகரசபையாகவும், பிரதேசசபைகள் நகரசபைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. எல்லை நிர்ணம் செய்யாமல் எவ்வாறு சபைகளை தரமுயர்தினார்கள் என்பது கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடித்து தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

காலத்தை பின்னடிக்காது உடனடியாக ஒரு கால எல்லைக்குள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு அதனை மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் காணப்பித்து தேர்தலை நடத்த வேண்டும். மக்களது பொதுவான அபிப்பிராயத்தை பெறுவதற்காக தேர்தல்களை பின் போடாது நடத்துவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஸவினர் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீள தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்படுபகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் சனநாயகத்தை பேசிக் கொண்டு அவர்கள் சொல்லும் செயற்பாட்டை செய்யக் கூடாது. அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு பலரிடம் இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மாற்ற வேண்டும்.

இது தவிர, மஹிந்த அமரவீர அமைச்சர் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் செய்தார். விவசாய அமைப்புக்களை அழைத்து வனவளத்திணைக்களங்களின் காணிகளில் உழுந்து சாகுபடி செய்யலாம் என ஆசை வார்த்தை கூறினார். தற்போது காணிகளை துப்பரவு செய்து விவசாயிகள் உழும் மட்டும் பொறுமையாக இருந்த வனஇலாகா அவர்கள் உழுத பின் அதில் காட்டு மரங்களை நடும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

இதனை ஏற்க முடியாது. இது பற்றி நாடாளுமன்றத்திலும் பேசுவோம். பணத்தை செலவு செய்து உழுத பின் வன இலாகா செய்யும் செயற்பாடு ஏற்க முடியாது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வனஇலாகா வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் மௌனம் காட்டாது உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி விவசாயிகளுககு தீர்வைப் பெற்றுப் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டேரஸ்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் – 27’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தேசிய சுற்றாடல் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 27’ மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் பங்கேற்கும் அதேநேரம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார். இதேவேளை, அங்கு நடைபெறவுள்ள உலக உணவு பாதுகாப்பு பேரவை மற்றும் உலக தலைவர்களின் பேரவையிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் சாசனத்தின் கீழ் இணங்கியுள்ளமைக்கு அமைய காலநிலை தொடர்பான உலகின் கூட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கோப்-27 இல் நாடுகள் ஒன்றிணைகின்றன.

கிளாஸ்கோவில் நடந்த கோப் – 26 மாநாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தமக்குள்ள பொறுப்புகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக இம்முறை உலக நாடுகள் கோப்-27 இல் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு வாக்களிப்போம் – ஜீவன்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தை யார் முன்வைக்கின்றார் என்பது முக்கியம் அல்ல அதில் உள்ள விடயங்கள்தான் பிரதானம். அந்தவகையில் வரவு – செலவுத் திட்டதில் உள்ளடக்கங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடிய விடயம் இருந்தால் நிச்சயம் ஆதரிப்பதோடு ஏனைய கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்போம். எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால்தான் தோட்ட நிர்வாகத்துக்கு துணிவு பிறக்கின்றது எனவே தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவறான அரசியல், பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு வினையாக மாறியுள்ளது – அனுர குமார

அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராகவுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் சனிக்கிழமை (5) மாலை இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்க வேண்டும்.ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்களே மாற்றியமைக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டு நாட்டு மக்கள் தவறான அரசியல் நிர்வாகத்தை, தவறான தலைவர்களை தெரிவு செய்தார்கள். தெரிவு செய்யப்பட்ட தலைவர் தவறானவர் என மீண்டும் மீண்டும் தவறான தலைமைகளையே தெரிவு செய்கின்றார்கள் .

தற்போதைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்னைய அரசாங்கங்களிலும் பதவி வகித்துள்ளார். ஆகவே எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இவ்வாறு சகல அரசாங்கங்களிலும் அமைச்சு பதவி வகித்துள்ளார்.ஆகவே உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெறவில்லை.

உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் பொருளாதார கொள்கை மாற்றியமைக்க வேண்டும்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளோம்.கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது,பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.

சிறுபான்மை தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் பறி போகின்றமைக்கு குரல்கொடுக்க வேண்டும் – கவிஞர் கால்தீன்

கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், ஜனாதிபதி இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த காணிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நீதி இல்லாமல் நடு வீதியில் நிற்கிறார்கள்.

இதற்கான தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து வடக்குக் கிழக்கில் அதிகாரப் பகிர்வொன்றினைப் பெற்றுக் கொண்டு நமது மக்களின் துன்பங்களைப் போக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோளொன்றையும் இதன்போது முன்வைத்தார்.

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இழுத்தடிப்பு செய்து வந்துள்ளன- ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வு விடயமாக இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளன. பிரேமதாஸவின் காலத்தில்கூட 1989, 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளும். சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள். அந்த நேரத்தில் இறுதியில் பிரேமதாஸவால் கூறப்பட்டது தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒருமித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் அதனைப் பரிசீலிக்கின்றேன் என தெரிவித்திருந்தார். தற்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களும் அதே கருத்தாக சமஸ்ட்டி தீர்வைத் தருவதற்கு முன்னர் தமிழ் மக்கள் ஒன்றாக வேண்டும் என கூறியிருக்கின்றார்.

என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்படும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றது. இதனைப் பார்வையிட வந்திருந்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு சிங்களக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்படல் வேண்டும், என்பதை நான் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களுக்குக் கூறிக் கொள்கின்றேன். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இனப்பிரச்சனைதான் முக்கியமான காரணமாகும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வைக் கொடுக்க வேண்டும் என சிங்கள மக்கள் மனம்மாறிக் கொள்ள வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டுப்பிரஜைகள், அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் எனவும் சிங்கள மக்கள் நினைக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருடத்தினுள் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படும் என புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அதபோன்று நீதி அமைச்சரும் புதிய அரசியலமைப்பினூடாக அரசியல் தீர்வைக் கொடுப்போம் எனக் கூறியிருக்கின்றார். கடந்த நாடாளுமன்றத்திலே 21வது திருத்த சட்டம் நிறைவேறியிருக்கின்றது. அதற்குக்கூட சில இனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஆளும், எதிர்க்கட்சி, மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட 179 வாக்குகளை அளித்து அதனை நிறைவேற்றியிரக்கின்றார்கள். அதபோன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் இனைப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்கினால்தான் சர்வதேசம் தமக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் உதவிகளைச் செய்யும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்துள்ளது. இதற்காக வேண்டி புலம்பெயர் மக்களும் அந்த அந்த நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கு அளுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்கள்.

பிரித்தானியாவினால் ஐ.நா வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கும் எமது புலம்பெயர் தேசத்து தமிழர்களின் வேண்டுகோளின் பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு ஒரு இக்கட்டான நிலமையைக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து இலங்கை விடுபட வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைக் காணவேண்டியுள்ளது. அதனை இந்த அரசு உணர்ந்திருக்கின்றது. எதிர்காலத்தில் சுபீட்சமான நாடாக இலங்கை திகழ வேண்டுமானால் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை அரசு முன் வைக்க வேண்டும். அது நிறைவேறினால் இந்நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக வாழ்வார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.