இலங்கையுடன் தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயார் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 21 – 25 ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உபகுழுவினால் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதியளித்தது.

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை, நிலையான சமாதானத்தை நோக்கிப் பயணிக்கவேண்டுமெனில் உண்மையைக் கண்டறிவதற்கான சுயாதீன உள்ளகப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது அர்த்தமுள்ளதோர் வழிமுறையாக அமையுமென அம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதியமைச்சருக்கு அமைச்சரவை அதிகாரமளித்துள்ளது.

எனவே அச்செயன்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விஜயத்தின்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர், அந்நாட்டின் சர்வதேச விவகாரங்கள், ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோர் மற்றும் நீதி, அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர், தென்னாபிரிக்க அரச வழக்குரைஞர்கள் அலுவலக அதிகாரிகள், தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடனும் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அந்தவகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நட்பை நினைவுகூர்ந்த அவர், இலங்கையுடனான இருதரப்புத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்தார்.

அதேபோன்று அமைச்சர் அலி சப்ரிக்கும் தென்னாபிரிக்க சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோருக்கும் இடையிலான சந்திப்பின்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத்தினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியினால் தென்னாபிரிக்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கை விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் செயன்முறை பின்பற்றப்படவேண்டும் என்றும், அதன்படி இலங்கை மக்களுக்குப் பொருந்தக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கான கூடுதல் சுயாட்சியை IMF நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும்

இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன்னர் தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவரது கருத்துக்கள் கனேடிய கொள்கையை பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி எதனையும் கூறவில்லை.

எந்தவிதமான அளவீட்டின்படியும், இலங்கை தோல்வியுற்ற மற்றும் வங்குரோத்து நாடாகும்.

அத்துடன் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிசெய்யும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைமை இல்லாத நாடு என்றும் ஹரி ஆனந்த சங்கரி கூறியுள்ளர்.

எனவே, சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் மொத்த மற்றும் கடுமையான மீறல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று ஹரி ஆனந்த சங்கரி கோரியுள்ளார்.

தென்னிலங்கை ஏற்றுக்கொண்டு தமிழருக்கு வழங்க முன்வந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் என்ன? அனுரகுமார திசாநாயக்கா சொல்வாரா? – சுரேந்திரன்

தென்னிலங்கை நிராகரிக்கும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கை இதுவரையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு முன்வைத்த அரசியல் தீர்வுதான் என்ன என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவால் பதில் கூற முடியுமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை உள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதையும் தங்களது கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமா?

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களும் அல்ல என்பதை உங்களது கட்சியின் ஸ்தாபகர் மறைந்த ரோகன விஜயவீர அவர்கள் கட்சி நிலைப்பாடாக அறிவித்தமையும் அதைத் தொடர்ந்தும் உங்களுடைய கட்சி பின்பற்றி வருவதையும் நீங்கள் அறியாமல் இல்லை.

மேலும் எமது அரசியல் தீர்வாக அமையாத 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், அது நாட்டை பிரித்து விடும் என்று தங்களது கட்சி ஆயுதமேந்தி போராடியதையும் நீங்கள் மறந்து இருக்க வாய்ப்பு இல்லை. இணைந்த வடக்கு கிழக்குக்கு எதிராக நீதிமன்றமேறி வாதாடி அதைப் பிரிப்பதற்கும் தங்களுடைய கட்சி ஆற்றிய பங்கு பெருமளவு. அதை தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறந்துவிடவில்லை.

தமிழ் மக்கள் இந்நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு இனப் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தென் இலங்கை அரசியல் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தீர்வாக எதனை பரிந்துரைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா? அல்லது அது சம்பந்தமாக தங்களுடைய கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எட்டியுள்ளீர்களா?

ஆகவே தங்கள் கட்சி ஆட்சி அமைத்து தென்னிலங்கையும் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என்ற கானல் நீரை தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்

 

13ஐ எதிர்க்கும் தேரர்களின் பின்னால் அந்நிய சக்திகள்! – அர்ஜூன் சம்பத்

அரசியலமைப்பின் 13ஆவது சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது, அதனை எரிப்போம் என்று கூறும் பௌத்த துறவிகளின் பின்னால் ஏதோ ஒரு அந்நிய சக்தி இருக்கலாம் என இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் நிறுவுனரும் அதன் தலைவருமான அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்திய திருநாடு இலங்கையிடம் முன்வைத்திருக்கின்றது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாரத பிரதமர் நரேந்திர மோடி இவர்களெல்லாம் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆனால், உடனடியாக இலங்கையில் அதற்கொரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இங்கு இருக்கக் கூடிய பௌத்த துறவிகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என தெரிவித்து இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஓர் அழுத்தத்தை பிறப்பிக்கின்றார்கள்.

சொல்லப்போனால் ஒட்டுமொத்த பௌத்த மக்களினுடைய பிரதிநிதிகள் அவர்கள் மட்டுமே அல்லர். அதாவது 13ஆவது சீர்த்திருத்தத்தை எரிக்கின்றேன் என்று சொல்பவர்கள் மட்டும் அல்லர். அவர்கள் வேறு ஏதோ அந்நிய சக்திகளால் தூண்டி விடப்பட்டு இதனை செய்கின்றார்கள். இதற்குள் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. உண்மையாக 13ஆவது திருத்தம் என்பது பௌத்தர்களுக்கு எதிரானதா என்று கேட்டால் கிடையாது. சிங்கள மக்களுக்கும் எதிரானது கிடையாது. இது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே ஒரு தீர்வு.

13ஆவது திருத்தம் வலியுறுத்தப்படுவது இன்று நேற்று அல்ல. ஜெயவர்த்தன அவர்கள் ராஜிவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாட்டினுடைய பிரதிநிதிகள் கையெழுத்திட் டுள்ளனர்.

எனவே இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கையினுடைய பொறுப்பாகும், சில மத சார்பானவர்கள் ஏதோ சொல்கின்றார்கள் என்பதற்காக அதனை நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்க முடியாது- என்றார்.

நாடு பிளவுபடுவது ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தல்

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விமானப்படைக்கு தெரிவான கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “இன்று நீங்கள் அதிகாரிகளாகும்போது, அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்.

விமானப் படையின் பதவிப் பிரமாணமும் செய்து கொண்டீர்கள். இந்த இரண்டு பிரமாணங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது உங்களின் முதன்மையான கடமை மற்றும் பொறுப்புமாகும்.

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பாகும். ஏனெனில் நாடு இல்லாமல் அரசியலமைப்பு இல்லை. ஒரு நாடு இல்லாமல், அரசியலமைப்பு வெறும் காகிதத் துண்டாகவே இருக்கும்.

ஒரு நாடு இருப்பதாலேயே அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அளித்த சத்தியப் பிரமாணத்தின்படி, இந்நாட்டு அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும், குடியரசிற்கு விசுவாசமாகச் செயல்படவும் உறுதியளித்துள்ளீர்கள்.

நமது நாட்டின் அரசியலமைப்பின் முதல் சரத்து “இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அரசியலமைப்பு இருப்பது குடியரசுக்காகத்தான். நாட்டின் ஒற்றையாட்சி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அத்தியாயம், மக்கள் இறையாண்மையை செயல்படுத்தும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் நமது தேசிய கீதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. மற்ற அனைத்து அத்தியாயங்களும் இவற்றைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவே உள்ளன.

அப்படியானால், நாம் அதன்படி செயல்பட வேண்டும். முதலில் நாட்டை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாடாக இருக்க வேண்டும்.

இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாட்டை அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்க இடமளிக்கக்கூடாது. அது நமது முக்கிய கடமை. அங்கு நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, இந்த நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு 1980 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அச்சந்தர்ப்பத்தில் முப்படையினரும் பொலிஸாரும் உயிர்த் தியாகம் செய்து அதனைப் பாதுகாத்தனர்.

ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாட்டு மக்களின் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

நாடு என்ற வகையில் நாம் ஒரு தனியாக எழுந்து நிற்க வேண்டுமாயின், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்று, அனைத்து மதத்தினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நாம் அனைவரும் நமது கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

அதேபோன்று, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை என்ற நிறுவனங்களினால் இலங்கையின் சட்டபூர்வ தன்மை  நிறுவப்பட்டுள்ளது. சட்டத்துறை இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதித்துறை செயல்படுகிறது.

இந்த அனைத்து நிறுவனங்களாலும் இலங்கையின் அரசியலமைப்பைப் பாதுகாப்பது தொடர்பான விடயங்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.

ஒரு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. வீதிகள் என்பது நாடாளுமன்றத்திற்கான மாற்றுவழியல்ல.

கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றம் இல்லாத நாடுகள் அராஜக நாடுகளாக மாறலாம். ஏனெனில் நாடாளுமன்றம் இல்லையென்றால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போய்விடும்.

அதேபோன்று, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாடுகளும் அராஜகமாகின்றன. எனவே, ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல செய்திகளை கொண்டு வருவதற்காக, வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல அமைப்புகளுடன் கலந்துரையாடினோம்.

நாடும் நீங்களும் விரைவில் அதன் பிரதிபலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை இழந்தால் நாம் நாட்டை இழப்போம். நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அடிப்படை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது உங்களின் பொறுப்பு ஆகும். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டால், உங்களுக்கு ஒரு நாடு இருக்கும். மேலும், அரசியலமைப்பு வழங்கிய ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்கின்றன. அதனைப் பிரிக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் தொடர்பில் பட்டிமன்றம் நடத்தாமல் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் தோன்றுகின்ற பொழுது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவதும் இதனை சிங்கள இனவாத சக்திகள் எதிர்ப்பதும் பின்னர் அதனை திசைதிருப்பும் நோக்கில் செயற்படுவதும் இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்பவர்களின் வழக்கமாகிவிட்டது.

தென்னிலங்கை அரசியல் சமூகமும் பௌத்த மதகுருமார்களும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்தால் மாத்திரமே இந்த நாடு முன்னேற்றமடையும் என்பதை ஏற்க மறுத்து, தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் தமிழர் விரோதப்போக்கைக் கடைப்பிடிப்பது இந்த நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வாகாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியபொழுது, பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறை படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைக் கோரினார். 13ஐப்பற்றிப் பேசிவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் 13ஆவது திருத்தத்திற்கு மேலே சென்று அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தான் தயார் எனக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் 13ஆவதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த தனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தார். ஜேவிபியினரும்கூட அதற்கு ஆதரவான கருத்தையே வெளியிட்டிருந்தனர்.

சிங்கள இனவாதிகளின் தூண்டுதலின் பேரில் பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய இனவாதக்குழுக்கள் சில 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில இனவாத சக்திகளான விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர போன்றோரும் குரல்கொடுத்தனர்.

இது இவ்வாறிருக்க, முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் இப்பொழுது 13ஐ நிறைவேற்றத் தேவையில்லை என்று சிங்கள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிங்கள வாக்கு வங்கியை நம்பியிருக்கக்கூடிய தரப்புகளும் தங்களது வாக்குவங்கிகளுக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இதே நிலைப்பாட்டை எடுக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 13ஐ நடைமுறைப்படுத்துவேன் என்று உத்தரவாதம் அளித்த ஜனாதிபதி அவர்கள் இன்றுவரை அதுதொடர்பில் ஒரு சிறுதுரும்பைத்தன்னும் நகர்த்தவில்லை.

இதுதொடர்பாக சர்வகட்சி மகாநாடுகளை ஜனாதிபதி நடத்தியபொழுதிலும் இவற்றை நிறைவேற்றுவதற்காக ஒரு கால அவகாசத்தை தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்டபொழுதும் அவை எதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இவை இவ்வாறிருக்க, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் அவை ஒற்றையாட்சிக்கு உட்பட்டது எனவும் அதனை நடைமுறைப்படுத்தக் கோருபவர்கள் இந்தியாவின் முகவர்கள் எனவும் அடிவருடிகள் எனவும் பிரச்சாரம் செய்யும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கும் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு, அந்த அரசியல் சாசனத்தைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வேடிக்கையும் இங்கேதான் நிகழ்கிறது.

பதின்மூன்றாவது திருத்தம் என்பது ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் அங்கீகரித்து நிறைவேற்றப்பட்டது அதுமாத்திரமல்லாமல், இலங்கையின் உயர்நீதிமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி யாரிடமும் அங்கீகாரமோ அனுமதியோ பெற வேண்டிய தேவையில்லை. 1988ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, இலங்கையில் மாகாணசபைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதற்கு உர்pத்தான அதிகாரங்களில் சில கொடுக்கப்பட்டிருப்பதும் சில கொடுக்கப்படாமலிருப்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

ஆகவே, நாங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோருகின்றோம். ஆனால் இலங்கையின் அரசியல் சாசனத்தில் உள்ள இந்த விடயங்களை சிங்கள தரப்பில் இருக்கக்கூடிய குறுகிய அரசியல் இலாபம் கொண்ட கட்சிகள் இதனை மறுதலிப்பதும் அதற்கு எதிராகப் போராடுவதும் புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆனால் தமிழ்த் தரப்பில் இயங்குகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போன்றவர்கள் அதே சிங்கள இனவாதக் குழுக்கள்போல் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகச் செயற்படுவதும் எந்த வகையில் தமிழ் மக்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும், இவர்கள் கூறுகின்ற சமஷ்டி அரசியல் சாசனத்திற்கான வழிமுறைகளையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். சட்டத்தின்பால் கிடைத்தவற்றை ஏற்கமறுத்து, அதனை வேண்டாம் என்று தூக்கியெறியக்கூடிய தமிழ் தரப்பு அரசியல் விற்பன்னர்களை இப்பொழுதுதான் காணக்கூடியதாக இருக்கின்றது.

சமஷ்டி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு புதிய கோரிக்கை அல்ல. தந்தை செல்வா அவர்கள் சமஷ்டி கட்சியைத்தான் ஆரம்பித்து அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று பெயரையும் வைத்தார்.

ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள இனவாத சக்திகளுக்கும் சமஷ்டி என்ற சொல் வேப்பங்காயாகக் கசக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடியது ஒற்றையாட்சி முறையைக் கொண்ட அரசியல் சாசனமே.

இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவரவேண்டுமாக இருந்தால், சமஷ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.

அவ்வாறான சமஷ்டி அரசியல் சாசனத்திற்கு தமிழர் தரப்பில் யாரும் எதிரானவர்கள் அல்ல. ஆகவே, ஒரு சமஷ்டி அரசியல் சாசனத்திற்காகப் போராடக்கூடியவர்கள் அதற்கான வழிமுறைகளை வகுத்து தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அதற்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவும் இருக்கின்றது. அது ஒரு நீண்ட போராட்டமாக அமையப்போகிறது என்பதுதான் யதார்த்தமானது.

இந்த நிலையில், ஒரு மாற்று ஏற்பாடு இல்லாமல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை நிராகரிப்பதும் அதனை அரசியல் சாசனத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று சொல்வதும் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவற்றையும் இல்லாமல் செய்யக்கூடிய அறிவீலித்தனமான செயலாகும்.

பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அதுமாத்திரமல்லாமல், சர்வதேச ரீதியிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினூடாகவும் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்து வருகின்றது. இதுதான் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு என்று இந்தியாவும் கூறியது கிடையாது.

இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் வேண்டுமா? வேண்டாமா? அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து, தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டின் அனைத்து அரசியல் சமூகத்திற்கும் நல்லது

13ஆவது திருத்த சட்டம் தேவையில்லாத ஒன்று – மகிந்த ராஜபக்ஷ

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் செய்தியாளர்களை மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார். இதன்போது, அவரிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மகிந்த, அவ்வாறான (13ஆவது திருத்தம்) ஒரு சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும் சிறீலங்கா பொதுஜன பெரமுன அதே கருத்தை கொண்டி ருக்கவில்லை – இது (13) தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் – என்று கூறினார்.

மக்களின் உரிமைகளை நிலைநாட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். மக்களின் தேவைகளை தீர்மானிக்கும் ஒரேவழி தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமை. எவ்வாறாயினும் அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது.

எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கிறது. நாம் வெற்றிபெறுவோம் என்பது தெரியும். இதனால்தான் நான் ஜனாதி பதியாக இருந்த காலத்தில் ஒரு தேர்தலையும் தாமதப்படுத்தவில்லை. தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் தேர்தலும் நிச்சயமற்று உள்ளது – என்றும் கூறினார்

13 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உடன்பாடு இல்லை

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் மீண்டும் சொன்னேன், 13க்கும் மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம்.

அப்படியானால் பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும் இப்போது எங்கே? அரசியலமைப்பில் உள்ளன, ஆனால் நடைமுறைப்படுத்த முடியாது. ஏன் 13 வேலை செய்யவில்லை தெரியுமா? மக்களுக்கு பிடிக்கவில்லை. ஜே.வி.பி. சார்பில் நான் கூறிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.

பைத்தியக்காரர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி!

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும், எதிரணியில் உள்ள எம்.பிக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதில் வழங்கும் போதே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமுலாகவில்லை. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

அதிகாரங்களைப் பகிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது” – என்றார்.

Posted in Uncategorized

13 இலிருந்து கீழிறங்கும் ரணில்-அகிலன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கும் பின்னணியில் தென்னிலங்கை மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது. பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பிக்குகளின் அமைப்புக்களே இப்போது வீதிக்கு இறங்கியிருக்கின்றன. பின்னணியில் பிரதான கட்சிகள், குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இருக்கலாம்.

கடந்த வருடத்தில் முழுமையாக நாட்டை முடக்கிவைத்த பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணிகளில் ஒன்று இனநெருக்கடி. இது உணா்த்தப்பட்டிருக்கும் நிலையில்தான் அதற்கு நிரந்தரமான ஒரு தீா்வு காணப்பட வேண்டும் என சா்வதேசம் அழுத்தம் கொடுத்தது. இந்தியாவையும் இவ்விடயத்தில் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை ரணில் எடுத்திருந்தாா். ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முற்படுவதற்கு எதிரான போராட்டங்களை காணமுடிகின்றது.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீா்வு காணப்படும் என டிசெம்பா் மாதத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தாா். பின்னா் சுதந்திரதினத்துக்கு முன்னதாக தீா்வு குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்தாா். இப்போது, புதன்கிழமை பாராளுமன்றத்தில் அவா் நிகழ்த்திய உரையில் தன்னுடைய பாதை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றாா். ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று இதன்போது தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் அதிகாரம் பகிரப்படாது என்றும் கூறியுள்ளார்.

ஆக, பிக்குகளும், இனவாதிகளும் கொடுத்த மிரட்டலுக்கு அஞ்சி தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ரணில் கீழிறங்குவதற்குத் தயாராகிவிட்டாா் என்பதன் அறிகுறிதான் பொலிஸ் அதிகாரம் குறித்த அவரது அறிவிப்பு. பிக்குகளின் போராட்டம் தொடா்ந்தால் ஏனையவற்றிலிருந்தும் அவா் கீழிறங்கலாம்!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பொலிஸ், காணி அதிகாரங்கள்தான் முக்கியமானவை. திட்டமிட்ட வகையிலான காணி அபகரிப்புத்தான் தமிழ் மக்கள் எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் இதனால் பறிபோவதுடன், இவை சிங்கள மயமாவதற்கும் காணி அதிகாரங்கள் எம்மிடம் இல்லாமலிருப்பதுதான் காரணம். அதனால்தான், காணி அதிகாரம் மாகாண சபைகளுக்குத் தேவை என்பதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அதேபோல, தமிழ்ப் பகுதிகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் அனைவருமே சிங்களத்தில்தான் கதைப்பாா்க்கள். போக்குவரத்துப் பொலிஸாா்கூட, தமிழ் மக்களுடன் சிங்களத்தில் பேசுவதையும், தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைவிட, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு குழப்பங்களுக்கும் சிங்களப் பொலிஸாரின் அத்துமீறல்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றது. பொலிஸ் அதிகாரம் எம்மிடம் இருக்க வேண்டும் என தமிழ்த் தரப்பினா் வலியுறுத்துவதற்கு இவைதான் காரணம்.

ஆனால், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்பதற்கு முற்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சிங்களவா்களின் சீற்றத்துக்கு உள்ளாகாமல், தமிழ் மக்களையும் சமாளிப்பதற்கு முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனால்தான், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என தமிழ்த் தரப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும் வாக்களித்த ஜனாதிபதி இப்போது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு பின்னடிக்கின்றாா்.

13 குறித்து ஜனாதிபதி அறிவித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆறு இணைந்து இந்தியப் பிரதமருக்கு கடந்த வருடத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அதில் முக்கியமாக 13 முழுமையாக நடைமுறைப்படுததப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவும் இது தொடா்பான அழுத்தங்களை ரணிலுக்குக் கொடுத்திருந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கிய இந்தியாவிடமிருந்து தொடா்ந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. 13 தொடா்பாக ரணில் வெளியிட்ட அறிவிப்புக்களுக்கு இவைதான் காரணம்.

கோட்டா கோ ஹோம் போராட்டத்துக்குப் பின்னா் வீடுகளுக்குள் தலைமறைவாக இருந்த விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்ற சிங்கள மக்களின் மீட்பா்களாக தம்மைக் காட்டிக்கொள்பவா்கள் மீண்டும் களத்தில் இறங்குவதற்கு ரணிலின் 13 குறித்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்கின்றாா்கள். அறிக்கைகளை வெளியிடுவதற்கு மேலாக வீதிகளில் இறங்குவதற்கு இன்னும் அவா்கள் துணியவில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அதேவேளையில் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் ரணிலின் இந்த 13 குறித்த நகா்வுக்கு எதிராக போா்க்கொடி துாக்குவதற்குத் தயாராகவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 13 க்கு உட்பட்டதாக தீா்வொன்றைக் கொண்டுவருவதற்கு தாம் தயாராகவில்லை என்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருந்தாா்கள். அதேபோல பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த கட்சியாக இருக்கும் பொதுஜன பெரமுன இதற்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றது. அதன் தலைவா் மகிந்த ராஜபக்ஷ இதனை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தாா்.

இதனைவிட மற்றொரு திருப்பமாக, இவ்வளவு காலமும் மாகாண சபை முறையையும், 13 ஆவது திருத்தத்தையும் எதிா்த்துவந்த ஜே.வி.பி. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கலை தாம் எதிா்க்கப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதன்மூலமாக தமது பிரச்சினைகளுக்குத் தீா்வு கிடைக்கும் எனக் கருதுவதால் அதனை தாம் எதிா்க்கப்போவதில்லை என அதன் தலைவா் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றாா்.

ஆக, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் எதிா்ப்புக்கள் இருக்கப்போவதில்லை என்பதை கட்சிகளின் இந்த நிலைப்பாடு உணா்த்துகின்றது.

உதிரிகளாகவுள்ள சிங்கள அரசியல்வாதிகள் சிலரும், பிக்குகளும்தான் இப்போது 13 க்கு எதிராக போா்க்கொடி துாக்கியிருக்கின்றாா்கள். ஆனால், இவ்விடயத்திலும் பிக்குகள் மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிக்குகளின் குழு ஒன்று, அங்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், சா்வ மதங்களின் தலைவா்களையும் சந்தித்தாா்கள். இதன்போதும் 13 குறித்துதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அதிகபட்சமான அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனநெருக்கடிக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை அவா்கள் இந்த சந்திப்புக்களின் பின்னா் ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்கள்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட பிக்குகள் 13 பிளஸ் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து சொல்கின்றாா்களே தவிர, அதனை கண்டிக்குச் சென்று மகாநாயக்கா்களிடம் சொல்வதற்குத் துணிவதாகத் தெரியவில்லை. அதேபோல தென்னிலங்கையிலும் இதற்கான போராட்டம் ஒன்றை நடத்துவதற்கும் அஞ்சும் நிலையில்தான் அவா்கள் இருக்கின்றாா்கள். யாழ்ப்பாணத்தில் அவா்கள் மேற்கொண்ட சந்திப்புக்கள், அதன்பின்னா் அவா்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனவே தவிர, சிங்கள ஆங்கில ஊடகங்கள் அவை தொடா்பாக அலட்டிக்கொள்ளவே இல்லை.

பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருந்தாலும் பிக்குகள் மூலமாக 13 க்கு எதிரான உணா்வுகள் சிங்களவா்கள் மத்தியில் பரப்பப்படுவதை உணர முடிகின்றது. 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதும், இது போன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. ஜே.ஆா்.ஜெயவா்த்தன அதனை இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கினாா். அதன்மூலமாகவே பின்னா் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

பண்டா – செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதுகூட இதேபோன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. பிக்குகள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவா்களாக மாற்றமடைந்தது அதன்போதுதான். இந்த எதிா்ப்புக்களுக்கு முகங்கொடுக்க முடியாத பண்டாரநாயக்க பின்னா் அந்த உடன்படிக்கையை கிளித்தெறிந்தாா் என்பது வரலாறு. ஆனால், அதேகாரணத்துக்காக பின்னா் பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் பின்னா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பண்டா – செல்வா உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடிக்கான தீா்வு அப்போதே காணப்பட்டிருக்கும். பாரிய உயிரிழப்புக்களுக்கும், பொருளாதாரச் சீரழிவுகளுக்கும் காரணமாக இருந்த போரும் இடம்பெற்றிருக்காது. சிங்களத் தலைவா்கள் பிக்குகளின் இனவாதப்போராட்டங்களுக்கு அடிபணிந்ததன் விளைகளை நாடு அனுபவித்துவிட்டது. இதே வரலாறு மீண்டும் திரும்பப்போகின்றதா? என்பதுதான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பாா்க்கும் போது எமக்கு எழும்கேள்வி!