அக்கரையில் கடற்படைக்கு காணி வழங்க முடியாது: வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் இராணுவமயப்படுத்தலை ஏற்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும் வலி – கிழக்கு தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கறை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகம் கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளார். அக் கடிதத்தில், இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கறை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர். அதற்கமைய கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தியுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாகவும் பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்துள்ளது.

இவ் அறிவிப்பினைத் தொடர்ந்து பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தவிசாளார், உள்ளுராட்சி மன்றிற்கு உரிய முடிவுகள் தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே அதிகாரம் உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், எது எப்படியிருந்த போதும் படைத்தரப்பிற்கு காணியை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளடன் பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். இக் கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கு என மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கிய கடற்கரையாக மக்கள் பாவனையில் உள்ளது. அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எதுவித அறிவிப்புக்களும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளர், கடற்படையினர் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர்;. இது அரச நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மையினையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவ மயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையும் மீறி அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் ஆயின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையே மீறி அவர்களுக்குச் செந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்கு அபகரிப்பதாகவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இராணுவத்தின் ஆலோசனையின்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை போற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமையவே காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சர்வகட்சி மாநாட்டில் ரணில்

வடக்கு கிழக்கில் இருக்கும் காணி பிரச்சினை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3000 ஏக்கர் வரையான காணிகளே மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், அவற்றை பகிர்ந்தளிப்பது குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காணி ஆணைக்குழுவை விரைவில் நியமித்து அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

காணி ஆணைக்குழுவிற்காக மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

இதன் பின்னரே தேசிய காணி கொள்கையொன்று அறிமுகம் செய்யப்பட்டு தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என ஜனாபதி தெரிவித்துள்ளார்.

நட்டஈடு எங்களுக்கு வேண்டாம் சுவீகரித்த காணிகளே வேண்டும் ; வலி வடக்கு மக்கள் கோரிக்கை

“காணிகளுக்கான நட்டஈடு தேவையில்லை காணிகளே எமக்கு தேவை. காணிகள் இல்லாமல் 30 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து துன்பப்படுகிறோம், விவசாயம் செய்த காணி தற்போது விவசாயம் செய்யாமல் கூலி தொழிலுக்கு செல்கிறோம். காணியின் பெறுமதி தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மாக இருக்கும்”

ஆனால் இவர்கள் என்ன பெறு மதியை தரப்போகிறார்கள், வய தான காலத்தில் எங்களுக்கு என்று ஒரு காணி கூட இல்லாமல் தெரு வில் நிற்கிறோம்.” -இவ்வாறு தெரிவித்துள்ளனர் வலி.வடக்கில் அரசினால் சுவீகரிக் கப்பட்ட காணிகளின் உரிமை யாளர்கள்.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான காணி விஸ்தரிப்புக்காக கடந்த காலங்களில் மக்களின் காணிகள் சுவீ கரிக்கப்பட்டடிருந்தன. வலி.வடக்கு பிரதேச மக்களின் காணிகள் நீண்ட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தன. இந்தநிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வலி.வடக்கு பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.

இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப் பட்ட காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று முன் தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத் தில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கையில் தெல்லிப் பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி, நிலஅளவை திணைக்களம், விலை மதிப் பீட்டு அதிகாரிகள், கிராம சேவகர்கள் ஈடுபட்டனர்.

இப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினர்.

எங்களுக்கு நட்ட ஈடு எதுவும் தேவை யில்லை. எமது சொந்தக் காணிகளே வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல்

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காடுகள் அதிகம் உள்ள மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் அமுலாவுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்திற்கு அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர் இராணுவ தளபதியுடன் பேச்சு

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.

குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் தைப்பொங்கலின் போது காணி விடுவிப்பதற்கு சாத்தியம் !

வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும் – சபா குகதாஸ்

ஜனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை செய்யப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

அதன் முதற் கட்டமாக வடக்கு மாகாணம் உட்பட பதுளை, குருணாகல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையில் கடந்த 30 ஆண்டு போர் காரணமாக இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் வசிப்பதால் அவர்களுக்கு சொந்தமான பெரும் தொகையான பயிர்ச்செய்கை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.

அதனை அவர்கள் பயன்படுத்த ஒரு நிலையான அரசியல் தீர்வு மிக அவசியமானது. ஆகவே இனப் பிரச்சினைக்கான தீர்வுவை முன்னெடுப்பதை தவிர்த்து நிலத்தை கையகப்படுத்தல் புதிய வடிவிலான இன அழிப்பாகவே மாறியுள்ளது. இத்தகைய செயற்பாடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 14000 ஏக்கர் காணி அபகரிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிரந்தர அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் வரை பயிர்ச்செய்கை நிலங்களை கையகப்படுத்தல் மற்றும் அரச திணைக்களங்கள் மூலமாக நிலத்தை அபகரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

அத்தோடு வடக்கு கிழக்கில் மாகாணத்திற்கு சொந்தமான அரச காணிகள் வடகிழக்கில் வாழம் மக்களில் சொந்தக் காணி இல்லாதவர்களுக்கும் தொழில் வாய்ப்பு இல்லாது ஆயிரக்கணக்காக தொழில் தேடி அலையும் இளையோருக்கும் வழங்கப்பட வேண்டும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இரசாயன கூட்டுத்தாபனத்துக்குக்கான காணிகள் எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் இன்று (21) பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாகவும் தமது காணிகளையும் சேர்த்து இரசாயனத் தொழிற்சாலைக்கான காணியெனத் தெரிவித்து எல்லையிட்டதுடன் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized