கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது.

இந்நிலையில், குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச் சென்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 ஹெக்டயர் ( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்களம் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பௌத்த பிக்குவால் குழப்பம்; அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்கள்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.

இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,

இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.

எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.

குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம் பறாளாய் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை  நாட்டிய மரம் என  வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை பத்து மணியளவில் சுழிபுரம் சந்தி. பகுதியில் காலை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய மேலும் வரலாற்றினை திரிபடைய செய்துள்ளது.

சங்கமித்தா இலங்கைக்கு வருகை தந்ததாக கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்கு உரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக்குறைந்த  கலந்துரையாடலை கூட செய்யாது  எதேச்சதிகாரமான முறையில் இந்த  சிங்கள அரசு திட்டமிட்ட  பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக சிங்கள  அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

ஆகவே இதனை வலுச்சேர்க்கும் முகமாக பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர் யுவதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதவனை மயிலத்தமடுவில் மீளவும் முளைத்த ஆக்கிரமிப்பு புத்தர்

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு காணி அபகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அக்கரைவெளியில் 1500 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புதுக்குடியிருப்பு கைவேலியில் வனவளத் திணைக்களத்தினர் முன்னாள் போராளிகளின் வீடுகளை அழித்து பெண்கள் மீதும் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள்  முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில்  2000 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு  குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.

இந்நிலையில் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியோறிவிட்டனர் .

இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கிவிட்டனர்

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள்  கட்டு கிணறுகள் கட்டடங்கள் பயன்தரு மரங்கள் உள்ள குறித்த கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாடகை வீடுகளில் இருக்க முடியாத நிலையில் குறித்த 45 வீட்டுத்திட்டம் பகுதியில் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (12) மதியம் குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொளுத்துவதற்காக மண்ணெண்ணெயுடன் வருகை தந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த இருவரும் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை வனவள திணைக்கள  அதிகாரிகள் கொண்டு சென்ற மண்ணெண்ணெய்யை பறித்து அங்கு இருந்த நபரொருவர் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முற்ப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி  மற்றும் பொலிசார் சென்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி குறித்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்தோடு குறித்த பகுதி கிராம அலுவலர் அவர்களும் குறித்த பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினார்

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் வசதி படைத்தவர்கள் பாரிய காடுகளை வெட்டி காணி பிடிக்கிறார்கள் காசை வாங்கி கொண்டு அவர்களை அங்கு விடுகிறார்கள் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை எனவும் அப்பாவிகளான எங்களை மக்கள் வாழ்ந்த காணிகளில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை எனவும் தம்மால் வாடகை வீடுகளில் வாழ முடியாது எனவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (10) ஒன்பது  பேர்  வனவள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று ஒருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரை நீதிமன்றில் நாளை முற்ப்படுத்தவுள்ளதாக வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்

இதேவேளை தமது கடமைகளுக்கு இடையூறு என தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குருந்தூர் காணிகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நாடுவோம் – பெளத்த தேரர்கள் எச்சரிக்கை

தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் கொண்டு செல்வோம் என பௌத்த மத தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குருந்தூர் விகாரையின் விகாராதிபதி – கல்கமுவே சத்தபோதி தேரர்

குருந்தூர் மலை விகாரை மற்றும் காணி ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதிக்கும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதன் பெறுபேறாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த அனுர மனதுங்க பதவி விலகியுள்ளார்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணி அதிகம் அநுராதபுரம் மகா விகாரையை காட்டிலுல் குருந்தூர் விகாரைக்கு நிலப்பரப்பு அதிகம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை நோக்கி நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகா விகாரையின் நிலப்பரப்பு 100 ஏக்கர் கூட இல்லை அவ்வாறு இருக்கையில் குருந்தூர் விகாரையின் காணி எவ்வாறு அதிகரிக்க கூடும் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மகா விகாரை புத்தசாசனத்தின் ஆரம்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் அதனை மகா விகாரை என்று குறிப்பிடுகிறோம்.

மகா விகாரைக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது. அபயகிரி விகாரை, இசுறுமுனி விகாரை மற்றும் ஆகிய புனித விகாரைகளை உள்ளடக்கியுள்ளது.

மிகிந்தலை விகாரை 500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்த காரணிகளை அடிப்படையாக கொண்டே மகா விகாரையின் நிலப்பரப்பு அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை ஜனாதிபதி,தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குருந்தூர் மலையில் தமிழர்களுக்கு சொந்தமான காணி காணப்படுமாயின் அவற்றை விடுவிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டு காலமாக தமிழர்கள் விவசாயம் செய்த காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணி அளவிடப்பட்டு 1933 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.78 ஏக்கர் நிலப்பரப்பு வர்த்தமானி ஊடாக குறுந்தூர் விகாரைக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

குருந்தூர் மலையில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதால் அதனை ஆயவு செய்வதற்காகவே மேலதிகமாக 223 ஏக்கர் காணி தொல்பொருள் பாதுகாப்பு பகுதியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டது.

தமிழர்களின் காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தப்படவில்லை. வன அழிப்பு ஊடாக குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ் பிரிவினைவாதிகளின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

மக்கள் பேரவை –ஓமல்பே சோபித தேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் மரபுரிமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட கூடாது. குருந்தூர் விகாரை மற்றும் குருந்தூர் மலையில் உள்ள பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார்.

தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் – கஸ்ஸப்ப தேரர்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலகியமை தவறானது. ஜனாதிபதியின் சட்டவிரோத கட்டளைக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியம் இராசமாணிக்கத்தை தொல்பொருள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சராக நியமிக்க வேண்டும். இதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகள் பாதுகாக்கப்படும்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகளை அரசியல் நோக்கத்துகாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பில் வெகுவிரைவில் மகாநாயக்க தேரர்களை நாடுவோம் என்றார்.

வட,கிழக்கு மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவ அதிகாரி தலைமையில் விசேட அலுவலகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணப்படும் மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக விசேட அலுவலகமொன்றை  ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான  பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு பாதுபாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த அலுவலகம் ஸ்தாபிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தில் பிரிபேடியர் நிலை அதிகாரி தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த காணி விடுவிப்பு அலுவலகமானது 6 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், பாரம்பரியமான நில உரிமையை கொண்டுள்ள மக்களுக்கு அநீதிகள் ஏற்படாத வகையிலும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் குறித்த அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டில் 23,850.72 ஏக்கர் மக்களின் காணிகள் பாதுகாப்புப் படைகள் வசம் காணப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு ஆகுகையில் இந்த எண்ணிக்கையில் 20,755.52 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 106 ஏக்கர் மக்கள் காணி கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது. அத்துடன், 2989.80 ஏக்கர் மக்கள் காணி விடுவிப்பதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அவதானத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

33 வருடங்களாக இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.