படையினரால் அபகரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைய நாட்களாக பலாலி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான செய்திகளை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். 1990 ஆண்டு யுத்தம் காரணமாக தனது தாய் இடம் பெயர்ந்து சென்றனர்.

ஆனால் நாங்கள் இங்கே பிறக்கவில்லை. எங்கள் சொந்த நிலத்தை இப்போது தான் நாங்கள் பார்க்கின்றோம். இங்கு இருந்து இடம் பெயர்ந்த பின்னர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தோம். தற்போதும் அனுபவித்து வருகிறோம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம்.

ஒழுங்கான மலசல கூடம் இல்லை. கிணறு இல்லை, முகாம்களின் அருகில் வசிக்கும் மக்களின் வீடுகளில் அவற்றுக்காக சென்றோம். தற்போது கூட இங்கு மலசல கூட வசதி, நீர் வசதி மின் வசதி, இல்லாமல் கடற்கரைகளில் நாங்கள் எமது தேவையை பூர்த்தி செய்கிறோம்.

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது. அந்த மக்களின் சந்தோசங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தற்போது காணிகளை விட்டும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. வீடு சீரமைப்பதாக இருந்தாலும் காணி துப்பரவாக்குவது என்றாலும் நீங்கள் வழங்கும் பணம் போதுமானதாக இல்லை.

இந்த கடற்கரையின் வருமானத்தை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். எனவே விரைவில் எங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய உதவிகளையும் மலசல கூட வசதி, நீர் வசதி, மின்சார வசதிகளையும் மேற்கொண்டு தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பலாலி காணி விடுவிப்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவிக்கையில்,

இந்த காணி விடுவிப்பில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெறும் 109 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கு வெறும் 80 ஏக்கர் காணிகளே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2500 ஏக்கர் காணிகள் உள்ள இடத்தில் வெறுமனே 80 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. காணிகள் தற்போது விடுவிக்கப்பட்ட மக்கள் புன்னகைத்தாலும் அவர்களுக்கு முன் பெரியதொரு போராட்டம் உள்ளது.

கடந்த 30 வருடங்கள் போராட்டம் காரணமாக உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்த மக்கள் எந்த ஒரு பொருளாதார வாய்பும் இல்லாத வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு அரசாங்கம் காணிகளை விடுவித்துள்ளது.

வெறும் காணிகளை மாத்திரம் வழங்கி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் அவர்களுக்கு வீடுகள் உடனே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு வாழ்வாதார தொழில் முயற்சிக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் மேலும் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இந்த அரசாங்கம் விடுவிக்க வேண்டியுள்ளது. எனவே உள்நாட்டில் மக்கள் காணிகள் இல்லாது இருப்பது கொடுமையான விடயம். எனவே இம் முறை ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக இந்த அரசாங்கம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக காணிகளை விடுவிக்க வேண்டும்.

நாங்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த காணி விடுவிப்புபை பார்க்கிறோம். ஆனால் வெறுமனே இந்த 109 ஏக்கர் காணி விடுவிப்பில் நாங்கள் திருப்தி கொள்ளவில்லை. 2009 யுத்தம் முடிந்து விட்டது.

யாருக்கு பாதுகாப்பு மக்களின் காணிகளில் உணவகங்கள் கட்டுவதற்கும் ,விடுதிகள் கட்டுவதற்கும்,தென்னந்தோப்பு வைப்பதற்கும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்குமா? இந்த மக்களின் காணி.

எனவே மக்களின் காணிகள் அனைத்து விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பலாலியில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை – மக்கள் ஆதங்கம்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தது .

இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதாகவும் மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்துகொண்டு பார்க்கமுடிவதாகவும் அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்துவருவதை பார்க்க முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி விடுவிக்கப்பட்டது

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி – அந்தனிபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணனா் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளாா்.

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கா் / மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கா் /தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கா்/ பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கா்/ நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கா், மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாகஇராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னா் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும்
75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐனாதிபதி பணித்துள்ளார்.

இன்றைய நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினா்களானஅங்கஜன் இராமநாதன்மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன்,பிரதம செயலாளா், யாழ்.மாவட்டச் செயலா், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபா், மேலதிக அரசாங்க அதிபா் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலா் மற்றும் பொதுமக்கள், படையினா, பொலிஸாா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

அக்கரையில் கடற்படைக்கு காணி வழங்க முடியாது: வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் இராணுவமயப்படுத்தலை ஏற்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும் வலி – கிழக்கு தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கறை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகம் கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளார். அக் கடிதத்தில், இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கறை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர். அதற்கமைய கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தியுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாகவும் பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்துள்ளது.

இவ் அறிவிப்பினைத் தொடர்ந்து பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தவிசாளார், உள்ளுராட்சி மன்றிற்கு உரிய முடிவுகள் தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே அதிகாரம் உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், எது எப்படியிருந்த போதும் படைத்தரப்பிற்கு காணியை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளடன் பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். இக் கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கு என மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கிய கடற்கரையாக மக்கள் பாவனையில் உள்ளது. அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எதுவித அறிவிப்புக்களும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளர், கடற்படையினர் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர்;. இது அரச நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மையினையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவ மயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையும் மீறி அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் ஆயின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையே மீறி அவர்களுக்குச் செந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்கு அபகரிப்பதாகவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இராணுவத்தின் ஆலோசனையின்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு ஆலோசனைகளை போற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமையவே காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சர்வகட்சி மாநாட்டில் ரணில்

வடக்கு கிழக்கில் இருக்கும் காணி பிரச்சினை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3000 ஏக்கர் வரையான காணிகளே மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், அவற்றை பகிர்ந்தளிப்பது குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காணி ஆணைக்குழுவை விரைவில் நியமித்து அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

காணி ஆணைக்குழுவிற்காக மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

இதன் பின்னரே தேசிய காணி கொள்கையொன்று அறிமுகம் செய்யப்பட்டு தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என ஜனாபதி தெரிவித்துள்ளார்.

நட்டஈடு எங்களுக்கு வேண்டாம் சுவீகரித்த காணிகளே வேண்டும் ; வலி வடக்கு மக்கள் கோரிக்கை

“காணிகளுக்கான நட்டஈடு தேவையில்லை காணிகளே எமக்கு தேவை. காணிகள் இல்லாமல் 30 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து துன்பப்படுகிறோம், விவசாயம் செய்த காணி தற்போது விவசாயம் செய்யாமல் கூலி தொழிலுக்கு செல்கிறோம். காணியின் பெறுமதி தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மாக இருக்கும்”

ஆனால் இவர்கள் என்ன பெறு மதியை தரப்போகிறார்கள், வய தான காலத்தில் எங்களுக்கு என்று ஒரு காணி கூட இல்லாமல் தெரு வில் நிற்கிறோம்.” -இவ்வாறு தெரிவித்துள்ளனர் வலி.வடக்கில் அரசினால் சுவீகரிக் கப்பட்ட காணிகளின் உரிமை யாளர்கள்.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான காணி விஸ்தரிப்புக்காக கடந்த காலங்களில் மக்களின் காணிகள் சுவீ கரிக்கப்பட்டடிருந்தன. வலி.வடக்கு பிரதேச மக்களின் காணிகள் நீண்ட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தன. இந்தநிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வலி.வடக்கு பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.

இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப் பட்ட காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று முன் தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத் தில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கையில் தெல்லிப் பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி, நிலஅளவை திணைக்களம், விலை மதிப் பீட்டு அதிகாரிகள், கிராம சேவகர்கள் ஈடுபட்டனர்.

இப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினர்.

எங்களுக்கு நட்ட ஈடு எதுவும் தேவை யில்லை. எமது சொந்தக் காணிகளே வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல்

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காடுகள் அதிகம் உள்ள மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் அமுலாவுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்திற்கு அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர் இராணுவ தளபதியுடன் பேச்சு

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

2019ஆம் ஆண்டு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க நடவடிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.

குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.