தமிழர்களின் ஒற்றுமையை காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய வளங்களை நினைத்தவாறு வெளிநாடுகளுக்கு கொடுப்பதிலே எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அரசு தற்போதைய பொருளாதார நிலைமை கருதி தேசிய வளங்களை விற்பதும் அல்லது வேறு விதமாக வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதும் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய இரகசியமாக தாங்கள் நினைத்தவாறு ஜனாதிபதியோ அல்லது சம்பந்தப்பட்ட துறை சார் அமைச்சரோ அல்லது திணைக்களங்களின் தலைவர்களோ முடிவு எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் நிலைமை அருதி அதற்குரிய துறை சார்ந்தவர்களிடம் அனுமதியுடன் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பொதுநலன் கருதி செயல்பட வேண்டும்.

இந்த நாட்டிற்கும் 2009 க்கு பின்பு தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவீனமடைத்து ஒரு இக்ட்டான சூழ்நிலையில் நடுச்சந்தியில் திக்கு தெரியாமல் நிற்கும் ஒரு நிலையில், தற்போது இருக்கும் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளது கொள்கைகளும் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள்ளே பிளவு பட்டு இருப்பது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் வடகிழக்கு சிவில் சமூக குழுவானது நேற்றைய சந்திப்பை ஒழுங்குப்படுத்தி ஒரே மேசையிலே தேசியக் கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளும் ஒரு சில கட்சிகளையும் அழைத்து ஒரு மேசையில் இருந்தது ஒரு மகிழ்வான தருணமாக இருந்தது. அந்த கூட்டு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இந்த கூட்டு ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களது அரசியல் விடுதலையை, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான கூட்டாக அமையுமாக இருந்தால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் சந்தோஷப்படக்கூடிய நிகழ்வாக இருக்கும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுவரை நேரடியாக தேர்வு செய்யப்படாதவர் அவருக்கு முன்பு 6 ஜனாதிபதிகளில் நாங்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம். ஆனால் நாங்கள் வாக்களித்து ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டவர்களும், நாங்கள் விரும்பாத நான்கு பேரும் இந்த நாட்டை ஆண்டு, எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. எங்களது இனப்பிரச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை. அந்த வகையில் இன்னும் இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. ஒற்றுமையை காட்டுவது என்பது அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டிய ஒரு நிலையாகவும் இருக்கலாம். ஏனென்றால் கட்சிகளும் வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்கெடுத்து வெல்லக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகாது என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம்.

தற்போது ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்பட்டு மூன்று வேட்பாளர்களும் வாக்குகளை எந்த வழியில் பெறலாம் என்று நினைக்கின்றார்கள் தவிர தமிழ் மக்களது புரையோடிப் போய் உள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையை காட்டி பிரச்சாரம் செய்கின்றார்களே தவிர இந்த பொருளாதாரச் சூழ்நிலை எப்படி ஏற்பட்டதன் என்ற அடிப்படைத் தன்மையை புரிந்து கொள்வதாக தெரியவில்லை. இந்த நாட்டிலே ஆயுதப் போராட்டம் தொடங்கியதில் இருந்து தான் இந்த நாட்டின் கையிருப்பு இல்லாமல் போனது என்பதை உணராதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றார்கள். ஆட்சிக்கு வந்தால் மூன்று வேலை சாப்பாடு தருவேன் என்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க போலீஸ் அதிகாரங்கள் அற்ற 13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறுகின்றார். சஜித் பிரேமதாசாவும் ஒரு வெளிப்படுத்தல் தன்மையுடன் பகிரங்கமாக பேசுவதாக இல்லை.

ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி எங்களது ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவை தற்போதைய நிலைமையில் தேவைப்பாடாக இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் வந்திருந்தன.

இலங்கை தமிழரசு கட்சி தங்களுக்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் கூடுதலான பெரும்பாலான தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பொது வேட்பாளர் கருத்தை ஆதரித்திருந்தனர். அந்த வகையில் அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். இந்த வகையில் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி வழங்கிய வாக்குமூலங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி. வலியுறுத்து

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எது எப்படிஇருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியே ஆகவேண்டும்.அந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பியை பொறுத்த வரையில் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாகவந்த மாகாணசபை முறைமையினை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள் ஜேவிபியினர்.அதற்கு எதிராக எதிர்த்தவர்கள் மட்டுமன்றி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கினை பிரித்து தனியலகாக மாற்றியவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜேவிபியினர் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் தமிழர் பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டுமானால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை முன்வைக்கின்றார்கள் என்பதை பொறுத்தே நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான உறவுகளையும் முன்னெடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம் – ஜனா எம்.பி தெரிவிப்பு

தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் சிதைந்து சின்னாபின்னமாகி இன்று தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி இன்று ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது தமிழ் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு இவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக செயல்படுவது மாத்திரமல்ல அவர்களது கட்சிக்குள்ளே தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவர்கள் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 37 வது ஆண்டு நினைவு தினம் (28) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வருடா வருடம் இந்த பகுதியிலே மரணித்தவர்களுக்காக நாங்கள் அஞ்சலி செலுத்துவது வளமை ஆனால் ஒரு வருடம் அஞ்சலி செலுத்துவதற்கு பாதுகாப்பு படையின் அச்சுறுத்தல் தடைகள் இருக்காது சில நேரங்களில் தடைகள் காணப்படும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு பெரியதொரு தடை இருந்தது அனைவருக்கும் நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டது இங்கே எதுவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதையும் மீறி நான் அஞ்சலி செலுத்தியிருந்தேன் ஆனாலும் எனக்கு நீதிமன்ற கட்டளை வழங்கப்படவில்லை நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டவர்கள் இங்கு அஞ்சலி செலுத்த வரவில்லை எனக்கு நீதிமன்ற கட்டளை வழங்காததன் நிமித்தம் நான் அஞ்சலி செலுத்தியிருந்தேன். இருந்தும் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலை போலீசார் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள் எதிர்வரும் 31 ஆம் தேதி அந்த வழக்குக்கான ஆரம்பம் நடைபெற இருக்கின்றது மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அதனை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் ஒன்றை நினைத்துக் கொள்ள வேண்டும் வடக்கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான போராளிகள் இலட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தின் மூலமாக கொல்லப்பட்டிருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எந்த காலத்திலும் மறக்க முடியாது நாங்கள் எங்களது எதிர்கால சந்ததியினருக்கு இந்த வடுக்களை கொண்டு செல்வதற்காகவே இந்த நினைவஞ்சலிகளை ஒவ்வொரு வருடமும் எங்கெங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ அங்கெல்லாம் நாங்கள் செய்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் எங்களது தலைமுறை இல்லாவிட்டாலும் எதிர்வரும் தலைமுறையாவது இவைகளை நினைத்துப் பார்க்க வேண்டும் நினைத்துப் பார்ப்பதன் மூலமாக எங்களுக்கு எதிராக இடம் பெற்ற அநியாயங்கள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள், படுகொலைகள் ஞாபகத்தில் அவைகளை வைத்துக்கொண்டு தமிழர்கள் அனைவரும் ஒன்று இணைந்து எமது மக்களின் விடுதலையை வேண்டி போராடினோமோ அந்த விடுதலை கிடைப்பதற்காக தொடர்ச்சியாக நாங்கள் போராட வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம்.

உண்மையில் 2009 ஆம் ஆண்டு எங்களுடைய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது 2009 வரைக்கும் தமிழ் தேசிய இனம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற அரசியல் சக்தியின் ஊடாக எமது ஒற்றுமையை இந்த நாட்டிற்கு மாத்திரமல்ல சர்வதேசத்திற்கு கூட வலுப்படுத்தி இருந்தோம் அந்த காலகட்டங்களிலே 2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வடகிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வாக்கு உரிமைகள் மூலமாக நிரூபித்திருந்தார்கள் ஆனால் 2009 பிற்பாடு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு தமிழீல விடுதலை புலிகள் இயங்கு நிலை அற்றதன் பிற்பாடு இன்று வரை எங்களுடைய தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் சிதைந்து சின்னாபின்னமாகி இன்று தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அன்று உருவாக்கப்பட்டது தமிழ் மக்களின் அரசியல் சக்தியை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிரிவடைந்து இருக்கின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்கின்ற ரீதியிலே நாங்கள் ஐந்து கட்சிகள் இருக்கின்றோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே பெரிய கட்சியாக கடந்த காலங்களிலே இருந்து கொண்டு வந்த இலங்கை தமிழரசு கட்சி இன்று ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது தமிழ் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு இவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் ஒற்றுமையாக செயல்படுவது மாத்திரமல்ல அவர்களது கட்சிக்குள்ளே தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவர்கள் பலப்படுத்த வேண்டும்.

2009 க்கு பின்னர் சிங்கள பெரும் தேசியவாதம் தமிழ் தேசியக் கட்சிகளை பிரித்தாலும் தந்திரத்தைக் கொண்டு பிரித்து எங்களுக்குள்ளே பிரித்து கையாள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் அதற்காக ஒன்று இரண்டு முகவர்கள் கூட தமிழ் தேசியத்துக்குள்ளே வந்திருப்பதாக தான் நாங்கள் அறிகின்றோம் ஏனென்றால் சிங்கள பெரும் தேசிய வாதம் என்ன நினைத்ததோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2023 ஆம் ஆண்டு இடம்பெற இருந்த உள்ளூராட்சி தேர்தலில் பலவீனம் அடைந்தது இன்று தமிழரசு கட்சி கூட ஏனையவர்கள் கூறும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றது.

அதை விடுத்து நாங்கள் ஒற்றுமையாக தமிழ் மக்களது உரிமைகளை பெறுவதற்காக பதவி ஆசைகள் தங்களது கட்சிகளை தாங்களே தலைமை தாங்க வேண்டும் என்கின்ற அந்த ஆசைகளை விடுத்து உண்மையிலேயே விடுதலை போராட்டத்திற்கு சென்ற இளைஞர்கள் நான் உட்பட இந்த பதவிகளுக்காக சென்றவர்கள் அல்ல நான் உயிருடன் இருந்தாலும் என்னைப் போன்று எத்தனையோ போராளிகள் இந்த வடகிழக்கிலே போராட்டத்திற்காக மரணித்திருக்கின்றார்கள் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் அவர்களது ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் அந்த ஒற்றுமையினை ஒவ்வொரு கட்சியும் நிலை நிறுத்த வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஒன்றாக இருக்க வேண்டும்.

இன்று நாடு பொருளாதார ரீதியாக மிகவும் அதள பாதாளத்தில் இருக்கின்றது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்றார் இந்த வருட இறுதியிலே ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது ஜனாதிபதி கூட இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார் வடகிழக்கிலே ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றது அத்தனை பிரச்சினைகளையும் நான் தீர்க்கின்றேன் என்று கூறுகின்றாரே தவிர எந்த ஒரு பிரச்சனையும் தீர்வதாக தெரியவில்லை.

ஐக்கியமாக அனைத்து கட்சிகளும் இலங்கையிலே செயற்பட வேண்டும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்துபணத்தைப் பெற்று இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற ரீதியில் அவர் செயல்படுகின்றார் அதே நேரத்தில் இலங்கையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரான சட்டங்களை 79 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை தமிழர்களுக்கு எதிராக கொண்டு வந்தார்கள் இன்று நிகழ்நிலை காப்புச் சட்டத்தை ஒட்டுமொத்த மக்களது குரல்வளயை, குரலை நசுக்குவதற்காகவும் ஊடகங்களை அடக்குவதற்காகவும் தனக்குத் தேவையான சட்டங்களை அவர் கொண்டு வருகின்றார் அதே நேரத்தில் மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கின்றார்.

இதை எல்லாவற்றையும் பார்க்கின்ற போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெல்வதற்கான ஒரு சூழ்ச்சியை, தந்திரத்தை தான் செய்து கொண்டிருக்கின்றாரே தவிர இந்த நாட்டிலே இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது வடகிழக்கிலே புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அல்லது மயிலத்தமடு மாதவனை போன்ற தமிழ் மக்களது காணிகளை அபகரிக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இவர் நினைக்கின்றார் இல்லை.

உண்மையிலேயே நாங்கள் இதேபோன்று ஒவ்வொரு பிரதேசத்திலும் உயிரிழந்தவர்களை என்றும் நாங்கள் தொடர்ச்சியாக நினைவில் வைத்துக்கொண்டு அவர்களுக்கான நினைவேந்தலை நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம் ஏனென்றால் வடகிழக்கு மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் இதனை ஒற்றுமையாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. என்கிறார்.

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, இன்று சனிக்கிழமை (27) மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகவியலாளர்கள், மத குருமார், சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் உட்பட பலர் காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஒன்றிணைந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து’, ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கொடு’, ‘எங்கே எங்கே ஊடகவியலாளர் எக்னியாகொட எங்கே’, ‘நிகழ்நிலை காப்பு சட்டத்தை வாபஸ் பெறு’ போன்ற சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் நெற்றியில் கறுப்புப்பட்டி அணிந்தும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடகங்களை அடக்குவதற்காகவா நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் – சபையில் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி சீற்றம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் இன்றைய விவாதம் இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. உண்மையிலே ஜனநாயகத்தின் தூண்களில் நாலாவது தூணான ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? அல்லது தொடர்ச்சியாக இந்த ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என கோவிந்தன் கருணாகரம் எம்.பி தெரிவித்துள்ளார்

இன்றைய தினம்(24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இந்த சட்ட மூலம் இந்த கால கட்டத்திலே எதற்காக கொண்டு வரப்படுகிறது? உண்மையில் இந்த சட்ட மூலத்தில் கூறிய நோக்கங்களை அடைவதற்காகவா என்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல இந்த உயரிய சபையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் உண்டு. நமது அரசியல் அமைப்பு போதுமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அரசியலமைப்பை பேணி பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறும் செயல்பாடாகவே நான் இந்த சட்ட மூலத்தை நான் நோக்குகின்றேன். மீண்டும் ஒரு அரகலய நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது, என்ற அச்சமே இந்த சட்டமூலத்தை பின்னணி என்பது எனது கருத்து.

ஆட்சித்தலைவர்களிடமிருந்து அமைச்சர்கள் வரை விமர்சனங்களை எதிகொள்ள தயாரில்லை. தமது ஊழல் நிர்வாக சீர்கேடுகளை புள்ளி விபரங்களுடன் புட்டு வைக்கும் போது ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் பயப்பிரதிபலிப்பே இந்த சட்ட மூலம். நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு சாவுமணி. மக்களின் சிந்தனை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கல்லறையில் வைப்பதே இச்சட்ட மூலமாகும். உண்மையிலே இந்த நாட்டில் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் ஊடக அடக்குமுறையை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார்கள்.

மேலும் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசாங்க அமைச்சர்களினால் ஏற்படுத்தப்படும் ஊழல்களுக்கு எதிராகவோ யாரவது கருத்திட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இந்த நாட்டிலே உண்மையை எழுதிய ஊடகவியலாளர்கள் அரசினால் நடத்தப்படும் படுகொலைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே கொல்லப்பட்டுள்ளார். அதிலும் 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் ஊடகவியலாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசினாலும் அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் அரசதரப்பு படைகளினால் அல்லது வெள்ளை வான்களாலும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் இந்த நாட்டிலே நடந்தேறி இருக்கிறது.

கருத்து வெளிப்பாடு தொடர்பாக இன்னுமொரு ஜனநாயகவாதி கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் இவ்வேளையில் எனக்கு ஞாபகம் வருகின்றது. உன்னுடைய கைத்தடியை சுழற்ற உனக்கு பூரண சுதந்திரம் உள்ளது. ஆனால் உன்னுடைய கைத்தடி எனது மூக்கு நுனியை தொடாதவரை என்று நான் படித்தது எனக்கு ஞாபகம் வருகின்றது.

இன்று கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்துதலும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டி பார்ப்பதுவுமே கருத்துச்சுதந்திரம் என்ற கருதுகோளாக உள்ளது. அதுவும் தற்போது சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகியமை. உண்மைகளை திரிவுபடுத்துவதை ஊக்கமளிக்கும் நிலைமைகளை ஏற்படுத்துதப்பட்டுள்ளது. போலிப் பெயர்களில், போலி முகங்களில் உண்மைக்கு சவாலாக இருப்பவர்களை தண்டிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.

ஊடகவியலாளர்கள் என்று முகம் காட்டி ஊடக தர்மத்தை சிதைக்க முகம் காட்டுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தேவையும் அரசுக்கு உண்டு. உண்மையிலே இந்த முகநூல் வழியாகவோ அல்லது வட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களூடாகவோ, தனிப்பட்ட காழ்புணர்ச்சியினால் பல சமூக சீர்கேடுகள் எமது சமூகத்திலே இடம் பெறுகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் குடும்பங்கள் பிரிவதும் சிலர் தற்கொலைக்கு தூண்டபடுவதற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் உள்ளது. ஆனால் அரசு தன்னை பாதுகாக்க, ஊழலை பாதுகாக்க, தனது அமைச்சரவையை பாதுகாக்க, தனது ஆட்சியை பாதுகாக்க, பொதுவான மக்கள் எழுச்சியை அடக்குவதாக இது இருக்க கூடாது. இதற்கேற்ப வகையிலும் இச்சட்டங்களில் திருத்தங்கள் ஏற்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மஹிந்தவுடன் இணைய தமிழர்கள் தயாராக இல்லை” – ரெலோ செயலாளார் நாயகம் ஜனா எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பட்டிருப்பில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

ஆயுதப்போராட்டம் 2009 இல் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதியாவார். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஓர் உத்தரவாத்தத்தைக் கொடுத்து எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.

2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களுடன் மீண்டும் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என அ கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அவருடன் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதள பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை மீட்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தாலும் பொதுஜனப் பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை. ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இந்நிலையில் பொதுஜனப் பெரமுனவில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள்.

யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும் – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும். அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க தைத்திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற வாக்கிற்கு ஏற்ப இயற்கைக்கு நன்றி செத்தும் நாளாகவும் இத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டமைந்த இயற்கை முறை வாழ்வியலே உலகின் வாழ்வாதாரமாகும். இயற்கையின் ஆதாரமே சூரியனாகும். விவசாயத்திற்குத் தேவையான அனைத்து விடயங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதாகவும், உணவை வழங்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும், அவர்களுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் என நன்றி செலுத்தும் ஒன்றாக தைத்திருநாள் அமைந்துவருகிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் பயனாக ஒவ்வொருவரின் வாழ்வும் சிறப்புப் பெறும் பாரம்பரியம் மிக்கது தமிழர்களது பாரம்பரியம்.

பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகிப் பிரவாகிக்க வேண்டும் என்பது எமது விருப்பம். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் என பல்வகை இனங்களைக் கொண்ட இந்து , பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை கைக்கொள்ளும் மக்களையுடைய நம்நாட்டில் அமைதியுமு; மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ இந்தத் தைத் திருநாள்ள வழிசெய்ய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமிருந்தாலும் அதற்கான விட்டுக்கொடுப்பு பரஸ்பர புரிந்துணர்வின்மை காரணமாக அமைதியும் ஒற்றுமையும் உருவாவதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த தைத்திருநாள் அதற்கான வாய்ப்பை உருவாக்கித்தரவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

புதிய அரசியலமைப்பு உருவாதல், தமிழர்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் எதிர்பார்த்தே வருடங்களைக் கடத்துபவர்களாக ஒவ்வொரு வருடத்தினையும் நாம் கடந்து வருகிறோம். ஏமாற்றங்களையும் நாம் அனுபவிக்கிறோம்.

பொங்கலில் பால் பொங்கி வழிந்து அதன் கறைகள் வெளியேறி தூய்மையடைவது போன்று நாட்டிலுள்ள ஆதிக்கவாதிகளின் மனதிலுமுள்ள கறைகள் நீங்கி துய்மையடைந்து புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு இவ்வருடத்திலேனும் உருவாகவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

உழவுக்கு உதவும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி, தமிழர் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் வகையிலமைந்த தைத்திருநாளின் பெருமையை உணர்த்தும் இந்நாளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியுடன் சேர்த்து எல்லா வளங்களும் கிடைக்கவேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

‘கேக்’ விற்ற சிறுவன் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது; சபையில் ஜனா எம்.பி. ஆதங்கம்

பேக்கரியில் ”கேக் ”விற்ற ஒரு சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை   தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை.

ஆனால், அந்த பேக்கரியில் வேலைசெய்த குற்றத்துக்காக அந்த சிறுவன் பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படியே செல்லுமாக  இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.

தமிழர்களை சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தவறாக சித்தரிக்கும் தென்னிலங்கை : கோவிந்தன் கருணாகரம்

நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(23) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நிலையிலிருந்து சற்று எழும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக பாரிய நிதி ஒதிக்கீட்டிற்கு உட்பட்ட துறையாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகின்றது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் தமது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு வரவு செலவுத் திட்டத்திலிருந்து 12 மற்றும் 13 வீதங்களுக்கு இடைப்பட்ட தொகையையே ஒதுக்கப்படுகின்றன.

இந்நாடுகளை போன்றே அந்நிய அச்சுறுத்தல் இல்லாத நமது நாடும் சமமான தொகையை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது.

நமது நாட்டிற்கு அந்நிய நாடுகளினால் அச்சுறுத்தல் இல்லை. நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் சமத்துவத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது நாட்டின் ஆட்சியாளர்களே என குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் “தம்பி கால்நடை, பேச்சு பல்லக்கு’’ என்பதை நினைவுபடுத்துகிறது – ஜனா எம்.பி

“தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” என்பதை போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை வரவு செலவு திட்டத்தில் எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர் என தெரிவித்துள்ளார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மரம் ஓய்வெடுக்க விரும்பினாலும் காற்று ஓய்வெடுக்க விடுவதில்லை என்றார் தோழர் மாவோ. மௌனமாக இருக்கத்தான் நான் முயன்றாலும் காற்று மரத்தை அலைக்கழிப்பதைப்போல இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நானும் அலைக்கழிக்கப்படுகின்றேன். இந்தக் காற்றசைவில் நான் இசையாவிட்டால் எம் மக்கள் பிரதிநிதியாக இப் பாராளுமன்றத்தில் இருப்பதில் பயன் என்ன?

இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுவது வழமையான சம்பிரதாய பூர்வமான நிகழ்வேயொழிய, ஆக்க பூர்வமான நிகழ்வொன்றல்ல என்பதையே இந்த வரவுசெலவுத்திட்ட விவாத உரைகள் சுட்டி நிற்கிறது.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் என்பது வெறுமனே இலக்கங்களுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் மட்டுப்பட்டதல்ல. மாறாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான, நாட்டின் ஆக்கபூர்வமான, அறிவு பூர்வமான, விஞ்ஞான பூர்வமான, அடையக் கூடியதான ஏற்கத் தக்கதான, ஏற்புடைத்தான, முன்மொழிவுகளை எடுத்தியம்பவேண்டும். அது நம்பகத்தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வைப் பிரகடனப்படுத்துவதாகவோ, நிவாரணங்களை எடுத்துரைப்பதாகவோ இருக்கக் கூடாது. ஆனால், கடந்த பல தசாப்தங்களாக எம் ஆட்சியாளர்கள். வரவு செலவுத்திட்டத்திற்கு பிழையான வரைவிலக்கணத்தை மக்கள் நம்பும் படி வளர்த்துவிட்டார்கள். அத்தகைய பிழையான வரைவிலக்கணத்துக்குட்பட்ட வரவுசெலவுத்திட்டமே இந்த வரவுசெலவுத்திட்டம் என்பது என்கருத்தாகும்.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் அந்த நாட்டின் அடுத்த வருடத்துக்கான வருமான மூலங்கள் பெறும் வழிகள், பெறத்தக்க மூலகங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து, பெறத்தக்க தொகைகள் எவ்வளவு வரி வருமானங்களிலிருந்து பெறத்தக்க வருமானங்கள் எவ்வளவு, வெளிநாட்டு உதவிகள் ஊடாக பெறுபவைகள் எவ்வளவு, உள்நாட்டு வருமான மூலங்களிலிருந்து பெறப்படுபவைகள் எவ்வளவு என்று பிற வருமான மூலங்களிலிருந்து பெறுபவற்றை தெளிவாக எடுத்துரைப்பதோடு, நாட்டின் அடுத்த வருட செலவீனங்கள் தொடர்பாக மூலதனச் செலவு மீண்டெழும் செலவு இவையாவும் துறை ரீதியாக அலசி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து அதை வெளிக் கொணர வேண்டும். வருமானத்துக்கும் செலவீனத்துக்குமான துண்டுவிழும் தொகை எவ்வளவு. துண்டு விழும் தொகை எவ்வாறு சீர் செய்யப்படும் என்பதெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் எடுத்தியம்பப்பட வேண்டும்.

வரவு செலவுத்திட்டம் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் எவ்வாறு அடையப்பட வேண்டும். சிற்றினப் பொருளாதாரம் பேரினப் பொருளாதார கொள்கைகள் இக்காலத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும். அவற்றை அடைவதிலுள்ள சவால்கள் சிக்கல்கள், அதை எதிர்நோக்கி மீண்டெழும் திட்டங்கள் யாவும் உள்ளடக்கப்படவேண்டும். அது மட்டுமல்ல அவை நடைமுறைக்கு சாத்தியமானதாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

எமது நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச வருமான இலக்கு 4ஆயிரத்து 127 பில்லியன் ரூபா, உத்தேச செலவீனம் 6ஆயிரத்து தொள்ளாயிரத்து 78 பில்லியன் ரூபா, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 2ஆயிரத்து எண்ணுற்றி 51 பில்லியன் ரூபா. ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையில் இத்தகையதொரு பாரிய பற்றாக்குறை பொருளாதார அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தொகையாகவே நான் கருதுகின்றேன். இத்தகைய வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை வைத்துக் கொண்டு நிதியமைச்சர் முன்மொழிந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் இலக்குகளை அடைய முடியுமா என்பது தொடர்பாக, எனது கருத்து நமது நாட்டுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கொன்றே தேவையாகும். அலாவுதீனின் அற்புத விளக்கொன்று இல்லாவிட்டால் இந்த வரவு செலவுத்திட்ட இலக்குகளை எம்மால் அடையும் இயலுமை உள்ளதா என்பதை எனது பொருளியல் அறிவு என்னைக் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால் அதைக் காழ்ப்புணர்வு எனக் கூறி கடந்து விடலாம். ஜே.வி.பி. யினர் விமர்சித்தால் ‘ஏக்கத்தமாய் மூ’ எனக் கூறித் தப்பிக்கலாம். தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சித்தால் ‘அற கொட்டியாலா மேக்கத் தமாய் கியனவா’ எனக் கூறிக் கடந்துவிடலாம். ஆனால், வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முடிந்த கையோடு இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்க் கட்சியினர் விமர்சிக்க முன்னர் அதிகம் விமர்சித்த பிரமுகர்கள் ஆளும் பொது ஜன பெரமுன கட்சியினரே. பொது ஜன பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர் நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த வரவு செலவுத்திட்டமானது பொது ஜன பெரமுன கொள்கைக்கு ஏற்புடையதல்ல என்றார். இது தொடர்பாக நாம் ஆலோசிப்போம் என்றார். அப்படியானால் இந்த வரவு செலவுத்திட்டம் ஆளும் கட்சியினுடைய வரவு செலவுத்திட்டமா இல்லை, ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டமா?

ஆட்சியாளர்களுக்குள்ளேயே இத்தனை குழறுபடியெனில் எதிர்க்கட்சிகள் எப்படி ஆதரிக்கும் என நிதி அமைச்சரும் ஆளும் கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்?

எமது நிதி அமைச்சரே ஜனாதிபதியாகவும் உள்ளார். இந்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் குறுகிய காலத்தில் கூடிய தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அவரது அறிவு, ஞானம், புத்தி கூர்மை, தர்க்க வாதத்திறன், சர்வதேச அறிவு, சட்ட அறிவு பற்றி நான் நன்கு அறிந்தவன். அதை ஏற்றுக் கொள்பவன். ஆனால் அவர் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை மட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

எமது ஜனாதிபதி அவர்கள் இன்னும் பழைய புண்ணைப் பிச்சைக்காரன் தோண்டுவதைப்போல வங்குரோத்தான நாட்டை நான் பாரமெடுத்தேன். அழைப்பு விடுத்த எவரும் நாட்டைப் பாரமெடுக்க முன்வராத போது நான் நாட்டைப் பாரமெடுத்தேன். அன்று வரிசை யுகம் இருந்தது. மின்சாரமில்லை. இருண்ட யுகத்துக்குள் நாடு இருந்தது. போதிய மருந்தில்லை. சுகாதாரக் கட்டமைப்பு சீரழிந்திருந்தது என்று இது போல பண்டைக் கதைகள் பேசுவதில் இனிப் பயனில்லை. எவரும் இத்தகைய சவால் மிக்க நிலையில் நாட்டை ஏற்க முன்வராத போது இத்தகைய சவால்களைச் சமாளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்பின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப நீங்கள் ஜனாதிபதி ஆகியுள்ளீர்கள். எனவே இன்று உங்கள் முன்புள்ள முக்கிய கடமை பண்டைப் பழங்கதைகள் பேசுவதல்ல. உங்கள் முன்னுள்ள சவால்களை வெற்றி கொண்டு காட்டுவதேயாகும்.

இன்று நம் நாட்டின் யதார்த்த நிலை ஆளும் கட்சியினரே ஆட்சி மீது அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, தமிழத் தேசியக் கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, அரச உத்தியோகத்தர்கள், தொழில்சார் நிபுணர்கள் ஆட்சி மீது அதிருப்தி, புத்திஜீவிகள் ஆட்சி மீத அதிருப்தி, பொது மக்கள் ஆட்சி மீது அதிருப்தி, எங்கெங்கு நோக்கினும் அரச கட்டமைப்பில் ஊழல் இதனால் அனைவரும் அதிருப்தி. இப்படி நாட்டில் எட்டுத் திசையும் ஆட்சி மீது அதிருப்தி எனில் எம் நாடு எப்படி வளம் பெறும்.

இப்படியொரு நாட்டில் ஆட்சி மீது சகல பிரிவினரும் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்று உரையாற்றும் போது அன்று நான் பாடசாலையில் ஐரோப்பிய வரலாறு கற்ற அனுபவம் ஒன்று ஞாபகம் வருகிறது. அதுவும் உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட முக்கிய ஆண்டான 1789ஆம் ஆண்டு எனக்கு ஞாபகம் வருகிறது. அதுதான் மாபெரும் பிரஞ்சியப் புரட்சி. அன்றைய பிரஞ்சியப் புரட்சியை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் பிரான்சில் அத்தகைய புரட்சி ஏற்படுவதற்குக் காரணம் அந்த நாட்டின் அனைத்துப் பிரிவினரும் அதிருப்தியில் இருந்தார்கள். அதுதான் புரட்சிக்கான கருவினை விதைத்தது. குறிப்பாக பிரபுக்கள், மேன் மக்கள், மத்திய தர வர்க்கத்தினர், உழைப்பாளர்கள், புத்திஜீவிகள் என்று இவர்கள் மத்தியில் தோன்றிய அதிருப்தியே பிரஞ்சியப் புரட்சிக்கு வழி கோலியது. பிரான்சில் ஏற்றத்தாழ்வு மறைந்து சமத்துவம், சகோதரத்துவம் மிளிர வழி சமைத்தது.

அந்தப் பிரஞ்சுப் புரட்சியின் குழந்தையே மாவீரன் நெப்போலியன். பிரான்ஸ்சின் “அரகலய“விலிருந்து நெப்போலியன் தோன்றியதைப் போல நமது நாட்டின் சகல பிரிவினரதும் அதிருப்தி ஏற்படுத்திய அரகலயவின் குழந்தையாக நீங்கள் ஜனாதிபதியாகியுள்ளீர்கள். இன்னுமொரு புதிய அரகலயவில் நீங்கள் புதையக் கூடாது என்பது என் அவா. உங்கள் புத்தி ஜீவித் தனத்தை சொற்பொழிவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தாது உங்கள் அறிவு ஞானத்தை, வாத விவாதத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாது நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணியுங்கள். நாட்டில் எங்கும் எதிலும் புரையோடிப் போயுள்ள ஊழல்களைக் களைய உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள். நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கு உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.

நமது நிதியமைச்சர் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பிக்கும் போது கௌதம புத்தரின் ‘சம்ஜீவி கதா,” அதாவது கௌதம புத்தர் அவர்களின் சமநிலை வாழ்க்கைச் சூத்திரத்தை எடுத்துரைத்தார். இடையிடையே மக்களின் வாழ்வு இன்பம், துன்பம், இயலுமை, இயலாமை, வறுமை, செல்வம், தொடர்பான பல கௌதம புத்தரின் சூத்திரங்களையும் எடுத்துரைத்தார்.

பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் நிகழ்த்தப்பட்ட வரவு செலவுத்திட்ட உரையின் பெரும்பாலான இடங்களில் கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்கள், எடுகோளாக மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டது. அச் சூத்திரங்களின் கருவும் உருவும் கௌதம புத்தரின் ஜீவ அணுவும் இந்து மதத்திலிருந்தே உருவானது. இந்து மதத்தின் கருத்தியலிலிருந்து பெறப்பட்டது வரவு செலவுத்திட்டத்துக்காக கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்களை நாடும் நம் ஜனாதிபதி அவர் மூப்பு, பிணி, சாக்காடு கண்டு மக்களின் துன்ப நிவர்த்திக்காக குரல் கொடுத்து, மானிடத்தைப் பேணி, உலக வாழ் உயிர்கள் மீது அவர் கொண்ட கருணையினை தன் பாராளுமன்ற உரையில் என்றாவது வெளிப்படுத்தியிருந்தால் அவர் மீது இன்னும் என் மதிப்பு அதிகரித்திருக்கும்.

இந்த வரவு செலவுத்திட்டம் கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் தொடர்ச்சி. கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பு என்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் எடுத்துரைத்துள்ளனர். இது தொடர்பாக எமது நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் உரையாற்றும் போது ஆங்கில இலக்கிய வித்தகர் சேக்ஷ்பியர் நூலின் மறுபதிப்பு சிங்கள இலக்கிய வித்தகர் மாட்டின் விக்கிரம சிங்கவின் நூலின் மறுபதிப்பு, எவ்வளவு முக்கியம், எவ்வளவு சிறப்பு அது போலத்தான் இந்த வரவு செலவுத்திட்டமும் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பென்றால் அத்தகைய நூலாசிரியர்களின் நூல்களின் மறுபதிப்புக்குள்ள பெருமை போல இந்த வரவு செலவுத்திட்ட மறுபதிப்புக்கும் பெருமைதானே என்றுரைத்தார்.

நீதியமைச்சர் அவர்களே வில்லியம் சேக்ஷ்பியர் உலகளாவிய மதிப்புறு படைப்பாளி மார்டின் விக்கிரமசிங்க நம் நாட்டின் மதிப்புறு படைப்பாளி அவர்களது படைப்பொன்றும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்பானதல்ல.

அவற்றின் மறுபதிப்பு மாண்புறுவது, சிறப்புறுவது. ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பென்பது அந்நாட்டின் நிதி முகாமைத்துவத்தின் நிருவாக கட்டமைப்பின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் ஆட்சியாளர்களின் சீரழிவைக் குறித்து நிற்பது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைவை தேக்கத்துக்குட்படுத்துவது. நீங்கள் கடந்த கால வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பாக இந்த வருட வரவு செலவுத்திட்டத்தினை நோக்குவதன் மூலம் இதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலமான எனது ஒட்டு மொத்த சுருக்கமான கணிப்பு எங்கள் தமிழ் மொழியில் கூறுவார்கள் “தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” அது போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர்.

எனக்கு பழைய சிங்கள யாதகக் கதையொன்று இந்த வரவு செலவுத் திட்ட உரையை முடித்து வைக்கும் போது ஞாபகம் வருகிறது.

“ஒரு கொடுங்கோல் மன்னன் ஒரு நாட்டை ஆட்சி புரிந்தானாம். இன்றைய நமது நாட்டு ஆட்சியாளர்கள் போல அவன் சொல்வதே வேதவாக்காகும். ஒரு நாள் அவனுக்கோர் விசித்திரமான ஆசை வந்ததாம் உலகில் எவரும் அணியாத ஆடையொன்றை தான் அணிந்து அரச அவையையும் நாட்டு மக்களையும் மகிழ்விக்க வேண்டுமென்று, இதை மன்னன் அரசவையில் அறிவிக்க அரசவையும் உடனே முரசறைந்து இதுவரை எந்த அரசர்களும் அணியாத ஆடையை நம் மன்னர் அணிய வேண்டும். இதனை ஆடை தயாரிப்பவர்கள் தயாரிக்க வேண்டுமென்று அறிவித்தார்களாம்.

எவருக்குமே இதைத் தயாரிக்க முடியவில்லை. ஆனால், அந் நாட்டிலிருந்த என் போன்ற எதிர்க்கட்சி புத்தி ஜீவி ஆடை தயாரிப்பாளன் அன்று, இல்லாத ஆடையொன்றை எடுத்துச் செல்வது போல் பாவனை செய்து அரண்மனை சென்று அந்த ஆடையை அணிவிப்பது போல் அபிநயம் செய்து, மன்னரே இந்த ஆடை உங்களுக்கு எவ்வளவு அலங்காரமாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு மன்னனும் இவ்வாறான ஆடை அணிந்ததில்லை என்று கூற அரசனும் அக மகிழ்வு கொண்டு, தன் அமைச்சர் குழாமிடம் எப்படி இந்த ஆடையென்று கேட்டானாம். அதற்கோ அமைச்சர்கள் ஐயோ அபாரம், அற்புதம் இத்தகைய ஆடையொன்றை நாம் கண்டதில்லை என்று புகழ்ந்தார்களாம். அந்தப் புகழ்ச்சியில் மகிழ்ந்த மன்னன் மக்களுக்கு தன் ஆடையின் மதிப்பைக் காட்ட நகர் வலம் வந்தானாம். மன்னனைப் பற்றியறிந்த மக்களோ அணியாத நிர்வாண ஆடையினை புகழ்ந்து மகிழ்ந்தார்களாம். அப்போது ஓடிவந்த சிறுவன் ஒருவன் ஐயோ! அரசே அம்மணமாக வருகின்றீர்களே! உங்களுக்கு ஆடையில்லையா? என்று தன்னுடையைக் கொடுத்தானாம். அப்போதுதான் மன்னன் தன் அம்மணம் உணர்ந்தானாம். இதுதான் இந்த வரவு செலவுத்திட்டம் மீதான என்பார்வை.

சுற்றியிருப்பவர்கள் அறிவுரை சொல்பவர்கள் பதவி அனுபவிப்போர், பதவிக்காய் காத்திருப்போர், உங்கள் அம்மணத்தைக் காண்பிக்க மாட்டார்கள். நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இளைஞர் கழக அங்கத்தவராக இருந்து உங்களுடன் பழகியவன், அறிந்தவன் என்ற வகையில் அந்த அரசனின் அம்மணத்தைச் சுட்டிக்காட்டிய சிறுவனாக உங்கள் வரவு செலவுத்திட்டத்தின் அம்மணத்தை விமர்சிக்கின்றேன். இது விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. நம் நாடு தொடர்பானது.

இப்போது எனக்கு பிரபலமான சினிமாப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது. காதலியை நோக்கி காதலன் பாடுகின்றான். உன்னைவிட்டால் யாருமில்லை என் கண்மணியே என் கையணைக்க என்று.

எம் நாட்டை நினைத்து இன்றைய நிலையில் நான் பாடுகின்றேன் உங்களை நோக்கி, உம்மைவிட்டால் யாருமில்லை எம் நாட்டை இன்று மீட்பதற்கென்று. மீட்பீர்களா? மீட்பீர்கள் என்ற நம்பிக்கையில் என்னுரையை முடிக்கின்றேன் என்றார்.