தமிழ் பண்பாட்டு அழிப்பிற்கு எதிராக வடக்கு, கிழக்கில் மாவட்டம் தோறும் போராட்டம்!

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட 7 கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்திற்கு வந்த போதும், பிறிதொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் புறப்பட்டு சென்று விட்டார்.

அத்துடன், தென்னிந்திய திருச்சபையின் பேராயர், வேலன் சுவாமிகள், சைவமகாசபை செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட 22 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடையாள திணிப் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன், மற்றும் விதுசன்,  நிஷாந்தன், வேலன் சுவாமி, கலையமுதன் ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

தமிழரின் தொன்மை அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்- மக்களை அணி திரண்டு போராடவும் அழைப்பு

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டு பெளத்த சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் மக்களை அணிதிரண்டு போராடுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிங்கள பேரினவாத சக்திகளால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தின் தொல்லியல் சான்றுகளை அழிப்பதோடு, பௌத்த சின்னங்களை நிறுவி குடியேற்றங்களை உருவாக்கி வரும் நிகழ்ச்சி நிரல்களுக்கு கடும் எதிர்ப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அண்மையில் வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக விஷமிகளால் சேதமாக்கப் பட்டுள்ளது. இதேபோன்று கீரிமலையில் அமைந்துள்ள சிவனாலயம் சித்தர் மடங்கள் என்பன நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. நெடுந்தீவு, கச்சதீவு, மற்றும் நிலாவரையில் புத்தர் சிலை, குருந்தூர் மலையில் பௌத்த ஆலய கட்டிடம், கன்னியா வென்னீரூற்று தொல்லியல் திணைக்களத்தால் கைப்பற்றல் என தொடரும் நடவடிக்கைகளை நாம் முற்றாக கண்டிப்பதோடு அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாக கூறிக்கொண்டு அதைவிட கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முகமாக, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். அதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம். ஏற்கனவே இருந்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களுக்கும் மேலதிகமாக அவசர கால சேவைகளாக கருதப்படும் உணவு உற்பத்தி, விநியோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையோ போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது.

அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாயகரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது.

இது அடிப்படை மனித உரிமை மீறலை முற்றும் முழுதாக மீறுவதோடு தனிமனித பேச்சு சுதந்திரத்தையும் குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையாக நாம் நோக்குகிறோம். இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாம் சுவாசிப்பதற்கும் உணவு உண்பதற்கும் தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாதவர்களாக சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுவோம். எமது உரிமை சார்ந்த விடயங்களைப் பற்றி குரல் எழுப்பவோ அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளைப் பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாதவர்களாக ஆக்கப்படுவோம்.

இவற்றை எதிர்த்து எமது கண்டனங்களை பதிவு செய்வதோடு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரட்டி இவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அழைக்கிறோம். கட்சி பேதங்கள், அரசியல் கோட்பாடுகள், சின்னங்கள் என்பவற்றைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் மதத் தலைவர்கள் அனைவரையும் எம்மோடு கைகோர்த்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்த வாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ´வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மிகத்தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்குநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தை தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு´ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடமும், அதிபருக்கான மகஜர் அதிபரின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது

இதனையடுத்து இது குறித்து அதிபருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிபரின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கயேந்திரன், தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வெடுக்குநாறி மலையில் மீண்டும் ஆதிசிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் – சபா குகதாஸ்

கச்சதீவில் புத்த விகாரை என்ற விடயம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசங்களை தங்களது ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவதற்கு கையில் எடுத்திருக்கின்ற புத்த பெருமானுடைய சிலையை வைத்துக்கொண்டு விகாரைகளை அமைத்து அதன் மூலமாக ஒரு பாரிய நிகழ்ச்சித் திட்டத்தை நகர்த்திச் செல்கின்றார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இருந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆட்சியாளர்கள் இன நல்லிணக்கம் மத நல்லிணக்கம் என கூறிக்கொண்டு இப்படியான சட்டவிரோதமான விகாரைகளை அமைத்தல், புத்தர் சிலைகளை வைத்தல் என்பது உண்மையிலேயே இந்த நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற வகையில் பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் மத்திய மக்களின் கலாச்சாரங்கள் மதம் உள்ளிட்ட விடயங்களை மதிக்காது அவற்றினுடைய வரலாறுகளை மாற்றி அமைக்கின்ற வகையிலும் அவற்றினுடைய புனித தன்மைகளை செயல் இழக்க செய்வதாகத்தான் இவர்களுடைய செயற்பாடுகள் முன்னெடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கச்சதீவில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் புத்தக விகாரை என்பது உண்மையிலேயே ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த ஆட்சியாளர்கள் மதத்தின் பெயரால் ஏனைய இனங்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துகின்றனர்.

இதற்கான பூரண ஆதரவை இந்த அரசு இயந்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்த அரசு இயந்திரம் என்பது நாட்டில் உள்ள அத்தனை மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு இயந்திரம் பெரும்பான்மை இனத்தின் நலன் சார்ந்து செயற்பாடுகிறது.

இது உண்மையிலேயே ஒரு மனித உரிமை மீறல், அடிப்படை ஜனநாயக உரிமை மீறல். இதை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கச்சதீவு என்பது இந்திய பூகோள அரசியலில் ஒரு முக்கிய இடமாக விளங்குகின்றது. இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்ற விடயம் இலங்கைக்கு இந்தியாக்கும் இடையிலான ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்க கூடியதாகவும் அந்த நாடுகளின் உறவுகளை சீண்டுகின்ற விதமாகவும் அமைகிறது.

அடுத்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் தகர்த்தெறியப்பட்டு அங்கிருந்த சூலங்களும் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

இது சைவ மக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகும். யாரும் உள்ளே செல்ல முடியாது என்று நீதிமன்றம் தடையுத்தரவை போட்டுள்ள நிலையில் இவ்வாறு நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் – செல்வம் எம்.பி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடன் உதவியை வழங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிதி எமது ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் வைத்தியசாலைகள், பாடசாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

அதேவேளை, நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒரு அம்சமாக அமைய வேண்டியது அவசியம்.இந்த எமது கோரிக்கையையும் அதில் உள்ளடக்குமாறு நாம் சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து செயற்பட்டமையே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணமாகும். ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அதிபரைக் கேட்டுக்கொள்கின்றோம். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து நாடு செழிப்புள்ளதாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே; பதில் முதல்வர் ஈசனிடம் இந்திய துணைத்தூதுவர் வாக்குறுதி

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய கட்டிடத்தொகுதி யாழ் மாநகர சபைக்கே வழங்கப்படுமென இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தன்னிடம் வாக்குறுதியளித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாநகர பதில் முதல்வர் துரைராஜா ஈசன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் நேற்றைய தினம் இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அரை மணிநேரத்துக்கு மேலாக சந்தித்து கலந்துரையாடி குறித்த வாக்குறுதியை பெற்றேன் என்றார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோதே பிரதி முதல்வர் து.ஈசன் இதனை தெரிவித்தார்.

குறித்த விளக்கத்தில், கலைகள் கலாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படும்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் போன்ற கட்டிடத்தொகுதி யாழ் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றார்.

வங்கிகளினூடாக அனுப்பப்படும் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவிகள் குறைவடையும் வாய்ப்பு – சுரேந்திரன்

புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும் என பொருளியல் ஆய்வாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளருமான கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,“புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும். எனவே அவர்கள் நேரடியாக உண்டியல் முறையூடாகவோ அல்லது உறவுகளின் ஊடாகவோ தான் இனி இந்த பண பரிமாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் புலப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் டொலர் பெறுமதி குறையும் போது பல புலம்பெயர் உறவுகள் அது தொடர்பான கவலையை தெரிவித்திருந்தனர். இருப்பினும் டொலரின் பெறுமதி குறைவது இலங்கையில் இருப்பவர்களுக்கு நல்ல விடயம் என நாம் கூறினோம்.

ஏனென்றால் எமது நுகர்வு பொருட்களுக்கான விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் நிதி அனுப்புபவர்களின் நிலைப்பாடு அப்படி இருக்கவில்லை.

இதனால் நிதி பரிமாற்றம் என்பது வங்கிகளினூடாக அல்லாமல் உத்தியோகப்பூர்வமற்ற பண பரிமாற்றமாக மாறுவதற்கு தான் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது.”என தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஏற்றுக்கொண்டு தமிழருக்கு வழங்க முன்வந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் என்ன? அனுரகுமார திசாநாயக்கா சொல்வாரா? – சுரேந்திரன்

தென்னிலங்கை நிராகரிக்கும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கை இதுவரையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு முன்வைத்த அரசியல் தீர்வுதான் என்ன என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவால் பதில் கூற முடியுமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை உள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதையும் தங்களது கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமா?

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களும் அல்ல என்பதை உங்களது கட்சியின் ஸ்தாபகர் மறைந்த ரோகன விஜயவீர அவர்கள் கட்சி நிலைப்பாடாக அறிவித்தமையும் அதைத் தொடர்ந்தும் உங்களுடைய கட்சி பின்பற்றி வருவதையும் நீங்கள் அறியாமல் இல்லை.

மேலும் எமது அரசியல் தீர்வாக அமையாத 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், அது நாட்டை பிரித்து விடும் என்று தங்களது கட்சி ஆயுதமேந்தி போராடியதையும் நீங்கள் மறந்து இருக்க வாய்ப்பு இல்லை. இணைந்த வடக்கு கிழக்குக்கு எதிராக நீதிமன்றமேறி வாதாடி அதைப் பிரிப்பதற்கும் தங்களுடைய கட்சி ஆற்றிய பங்கு பெருமளவு. அதை தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறந்துவிடவில்லை.

தமிழ் மக்கள் இந்நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு இனப் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தென் இலங்கை அரசியல் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தீர்வாக எதனை பரிந்துரைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா? அல்லது அது சம்பந்தமாக தங்களுடைய கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எட்டியுள்ளீர்களா?

ஆகவே தங்கள் கட்சி ஆட்சி அமைத்து தென்னிலங்கையும் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என்ற கானல் நீரை தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்

 

வலி கிழக்கு பிரதேச சபையினால் 3 சிமாட் முன்பள்ளிகள் ஆரம்பிப்பு – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் நேரடியாக முகாமைசெய்யப்படும் மூன்று முன்பள்ளிகளும் சுமாட் முன்பள்ளிகளாக எதிர்வரும் வாரம் முதல் இயங்கும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முன்பள்ளிகளை வலுப்படுத்தும் எமது சபையின் செயற்றிட்டத்திற்கு அமைய சபை நிதிமூலம் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் மூன்று சுமாட் போட்கள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவை பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஆவரங்கால் அரிச்சுவடி முன்பள்ளி , இருபாலை சிகரம் முன்பள்ளி, அச்சுவேலி கஜமுகன் முன்பள்ளிகளுக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தாயகத்தில் முன்பள்ளிக் கல்வியை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாக உணர்கின்றோம். ஏற்கனவே எமது சபை இருபாலை சிகரம் முன்பள்ளியினை 10 மில்லியன்கள் வரையில் செலவுடன் புதிதாக அமைத்து திறந்து வைத்துள்ளது. மேலும் அரிச்சுவடி முன்பள்ளி அமைப்பிற்காக 6 மில்லியன்களுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. கஜமுகன் முன்பள்ளியும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இப் பள்ளிகள் மாகாண மட்டத்தில் பேட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சிறப்புத்தேர்ச்சி மிக்க ஆசிரியர் குழாத்தின் ஊடாக இயக்கப்படுகின்றது. இம் முன்பள்ளிகளில் மில்லியன்களில் செலவிடப்பட்டு நவீன விளையாட்டு உபகரண தொகுதிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலாக குறித்த முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, சத்துணவுத்திட்டம், கல்விச் சுற்றுலா என்பவற்றினையும் சபை மேற்கொள்கின்றது. வருமான ரீதியாக பாதிக்கப்ட்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளும் வசதி வாய்ப்புள்ள குடும்ப பிள்ளைகள் பெறும் வாய்ப்புக்களை பாரபட்சமின்றி பெறவேண்டும் என்ற நோக்கில் நாம் மேற்படி முன்பள்ளிகளில் கல்விக்கான முதலீடுகளை நிதிப்பற்றாக்குறை சவாலினையும் எதிர்கொண்டு பயன்படுத்துகின்றோம். இந் நிலைமையினை பிரதேச மக்கள் உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.