புலிகளால் பெளத்த மதத்திற்கு எவ்வித இடையூறுகளும் இருந்ததில்லை – வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்

”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மத தலைவர்கள் ” குருந்தூர் மலை விடயமானது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது. இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது. சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா..?

அவ்வாறு இருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள் எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது சிங்கள பெளத்த என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர். இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப்பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன்,கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பெரஹரா கலாசாரத்திற்கு எதிராக சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்கள் – அஸ்கிரிய பீடாதிபதி

பௌத்த விகாரை ஒன்றில் வைத்து யானை முத்துராஜா மோசமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, பல அரச சார்பற்ற நிறுவனங்கள் யானைகளை பெரஹரா கலாசாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தை விளம்பரப்படுத்த முயல்வதாக அஸ்கிரிய பீடாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் மேற்கொள்ளும் திட்டமிட்ட பிரசாரம் இது என்றும் தேரர் கூறினார்.

“எந்த நாட்டிலும் ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த கலாச்சாரம் உள்ளது, சிங்கள பௌத்த கலாச்சாரத்தில், யானைகளைப் பயன்படுத்தினோம், இங்கிலாந்தில், குதிரைகள் தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர்களின் அரச விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்“ என்று அவர் கூறினார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2022 இல் மனித-யானை மோதலின் போது அதிக எண்ணிக்கையிலான யானைகள் கொல்லப்பட்டன. ஆனால் துஷ்பிரயோகம் காரணமாக வளர்ப்பு யானைகள் எதுவும் இதுவரை இறக்கவில்லை என்றார்.

யானைகளை பராமரிப்பதற்கு தொழில் பயிற்சியோ அல்லது கல்வியோ வழங்காததே யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம் என்றும், விகாரைகளுக்கு யானைகளை வழங்கக்கூாது என பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடாதிபதி, யானை வளர்ப்பு எப்போதும் நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே, எமது சொந்த பெரஹரா கலாசாரத்தை பாதுகாக்க அந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பூர்வீக தொல்லியல் இடங்களை அடையாளங் காணமுற்பட்டால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும்

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுகின்றனர்.

வடக்கில் அரசாங்கத்திற்கு சார்பான தொல்பொருள் திணைக்களத்திற்கு கூறக்கூடிய விடயம் பூர்வீக தொல்லியல் இடங்கள் என தெரிவித்தால் இந்து சமயத்திலும் பல இடங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதேபோல் பௌத்த மதத்திலும் உள்ளது.

அவற்றையெல்லாம் கூறப்போனால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அவை தற்போதுள்ள மத நல்லிணக்கத்திற்கு குரோதமாகவே அமையும். எனவே தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை கைவிடுதல் வேண்டும். தற்போதுள்ள சம நிலையை பேணி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது  யாழ் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. ஜெபரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “மத நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

மற்ற மதங்களை மதிக்காத அன்பு செய்யாத ஏற்றுக்கொள்ளதா தன்மை எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலை இருப்பது போல் தோன்றுகின்றது.

இதனால் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சனைகளால் மதங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது. இந்த நேரத்தில் நாம் எங்கள் மதத்தை எவ்வாறு மதிக்கின்றோமோ அதேபோல் ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நாட்டில் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இருந்தபோதிலும் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் திணிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு இனம் வாழும் இடத்தில் அந்த இனத்திற்கு தேவையில்லாத அந்த இனத்திற்கு ஒவ்வாத மற்றோர் இனத்திற்கு தேவையான ஒரு விடயத்தினை செய்கின்றபோது மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒவ்வாரு இனத்தவரும் வசிக்கும் இடங்கள் மதிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய கலாசார சமய விழுமிங்கள் மதிக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறம்போது இவ்வாறான பிரிவினைகள் எற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய மத குருமார் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்

புத்தசாசன அமைச்சு தூங்கிக்கொண்டு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் ஆனால் புத்தசாசன அமைச்சு விழிப்புடனே செயற்பட்டு வருவதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதாற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதாகவும் அந்த நடவடிக்கை புத்தசாசன அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு காவல்துறையில் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

புத்த சாசன அமைச்சு தூங்குகிறது என்று குறிப்பிட்டிருந்ததையும் அவதானித்துள்ளேன்.புத்த சாசன அமைச்சு 24 மணிநேரமும் விழித்திருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன், புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார் பாரதப் பிரதமர்

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகை உறுதிச்செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கலாசார அமைச்சு மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 150 பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்து 171 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தல்!

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகான தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் விபரம் வருமாறு-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், பொதுமக்களின் துன்பங்களைக் குறைக்கவும், சமூக அமைதியின்மையைப் போக்க முறையான கொள்கைப் பொறிமுறையைத் தயாரிக்கவும். <br>

நாட்டில் நிலவும் கடுமையான, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற தன்மையைப் போக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மகா சங்கம் என்ற வகையில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வாறாயினும், பொருளாதாரச் சுருக்கம், பணவீக்கம், மோசமான அரசாங்க நிர்வாகம், தற்போதைய உயர் மின் கட்டணங்கள், தண்ணீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத அதிகரிப்பு போன்றவற்றால் எழுந்துள்ள சமூக அழுத்தத்தையும் ஜனாதிபதி அறிந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.

வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஜனரஞ்சகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் புரிந்து கொண்டு நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்காக கடந்த காலகட்டம் முழுவதிலும் தொடர்ச்சியான நடைமுறை நிலையான கொள்கைகளை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன் கருதி தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மக்கள்தொகை வீழ்ச்சியுடன் ஏற்படும் சமூகச் சிதைவு மற்றும் அராஜகம் பற்றி இலக்கிய குடதந்த சூத்திரம் மற்றும் சக்கவட்டி சிஹானதா சூத்திரம் போன்ற பௌத்த சூத்திரங்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், பொது நிதியை முறையாக நிர்வகிப்பது, ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மக்கள் பிரதிநிதிகள் அனுபவிக்கும் வரம்பற்ற சலுகைகளை அகற்றுவது போன்ற நடைமுறைத் தீர்வுகளின் மூலம் பொதுமக்களின் துன்பத்தைக் குறைக்க அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது பொதுமக்களிடையே சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்துவது என்பது ஜனநாயகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே, உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது அரசின் பொறுப்பு.

‘நாட்டில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற தன்மையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படக்கூடாது.

மேலும், நாட்டின் சட்ட எல்லைகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும்.

எனவே, அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் மேலாதிக்கத்தைப் பெற்று மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

13ஐ எதிர்க்கும் தேரர்களின் பின்னால் அந்நிய சக்திகள்! – அர்ஜூன் சம்பத்

அரசியலமைப்பின் 13ஆவது சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது, அதனை எரிப்போம் என்று கூறும் பௌத்த துறவிகளின் பின்னால் ஏதோ ஒரு அந்நிய சக்தி இருக்கலாம் என இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் நிறுவுனரும் அதன் தலைவருமான அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்திய திருநாடு இலங்கையிடம் முன்வைத்திருக்கின்றது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாரத பிரதமர் நரேந்திர மோடி இவர்களெல்லாம் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆனால், உடனடியாக இலங்கையில் அதற்கொரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இங்கு இருக்கக் கூடிய பௌத்த துறவிகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என தெரிவித்து இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஓர் அழுத்தத்தை பிறப்பிக்கின்றார்கள்.

சொல்லப்போனால் ஒட்டுமொத்த பௌத்த மக்களினுடைய பிரதிநிதிகள் அவர்கள் மட்டுமே அல்லர். அதாவது 13ஆவது சீர்த்திருத்தத்தை எரிக்கின்றேன் என்று சொல்பவர்கள் மட்டும் அல்லர். அவர்கள் வேறு ஏதோ அந்நிய சக்திகளால் தூண்டி விடப்பட்டு இதனை செய்கின்றார்கள். இதற்குள் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. உண்மையாக 13ஆவது திருத்தம் என்பது பௌத்தர்களுக்கு எதிரானதா என்று கேட்டால் கிடையாது. சிங்கள மக்களுக்கும் எதிரானது கிடையாது. இது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே ஒரு தீர்வு.

13ஆவது திருத்தம் வலியுறுத்தப்படுவது இன்று நேற்று அல்ல. ஜெயவர்த்தன அவர்கள் ராஜிவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாட்டினுடைய பிரதிநிதிகள் கையெழுத்திட் டுள்ளனர்.

எனவே இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கையினுடைய பொறுப்பாகும், சில மத சார்பானவர்கள் ஏதோ சொல்கின்றார்கள் என்பதற்காக அதனை நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்க முடியாது- என்றார்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட கோரிக்கை

நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.தேர்தலை நடத்த மகா சங்க சபையை கூட்டி சங்க பிரகடனத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி அஸ்கிரி, மல்வத்து, ஆகிய பீடங்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தேசிய பிக்கு முன்னணியினர் வியாழக்கிழமை (02) அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித தேரர் குறிப்பிட்டதாவது,

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசியலமைப்புக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுத்த போது ‘நாட்டில் தேர்தல் இல்லை, தேர்தலுக்கான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக இல்லை’ என குறிப்பிட்டு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் போது நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

வரலாற்றில் பல சம்பவங்கள் அவ்வாறு பதிவாகியுள்ளன. வாக்குரிமையை கோரி மக்கள் வீதிக்கு இறங்கும் போது அரசாங்கம் மிலேட்சத்தனமான தாக்குதலை மேற்கொள்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாட்டு மக்கள் வாக்குரிமை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும். ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.

இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருடம் பிற்போடப்பட்டது. இந்த தேர்தலை மீண்டும் பிற்போட இடமளிக்க முடியாது.

உள்ளுராட்சின்றத் தேர்தலை விரைவாக நடத்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தி மகாநாயக்க தேரர்களிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சகல பௌத்த மத பீடங்களையும் ஒன்றிணைத்து மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும், இரண்டாவது மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற அடிப்படையில் பௌத்த தேரர்களை ஒன்றிணைத்து விசேட கூட்டத்தை நடத்த வேண்டும் மூன்றாவது, செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தை சங்க பிரகடனமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்ளுராட்சிமனற்த் தேர்தலை நடத்துமாறு ஆட்சியாளர்களுக்கு வழங்கும் யோசனைகள் செயற்படுத்தப்படாவிடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு மகாநாயக்க தேரர்கள் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி  அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று (13)  அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இந்த  துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு  இடம்பெற்றபோது அம்பிட்டிய சுமண  தேரர்  தனது அறையில்  இருந்தார் என்றும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.