மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களைச் சந்தித்த சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஞாயிற்றுக்கிழமை (25) கண்டியில், மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க திம்புல் கும்புரே ஸ்ரீ விஜய தம்ம தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பிரதான ஆவணக் காப்பாளர் மெதகம தம்மானந்த தேரர்களை சந்தித்து,நலன் விசாரித்து தனது எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதே எமக்கு உள்ள ஒரே சவால்

ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் கட்சிகள் முன்வைக்கும் விடயங்களுக்கு பதிலளிக்காமல், நாட்டின் வங்குரோத்து நிலையுடன் இந்நாட்டில் பெண்கள் தலைமையிலான ஏனைய சமூகம் எதிர்நோக்கும் பாரதூரமான அவல நிலைக்கு பதில்களையும் தீர்வுகளையும் வழங்கவே செயற்படுகின்றது. பெண்களை பலர் மறந்துவிட்ட இந்த வேளையில், இன்று நேற்றல்ல 2019 ஆம் ஆண்டிலயே பெண்களுக்கான சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நீட்சியே நேற்றைய நிகழ்வு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருப்பது வறுமையை ஒழித்து பொருளாதார அபிவிருத்தி விகிதத்தை அதிகரிப்பதும், தகவல் தொழில்நுட்ப கனவை எவ்வாறு நனவாக்குவது என்பதுமே ஆகும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவது சவாலானது. ஏனைய கட்சிகளின் சவால்கள் தமக்கு பாதகமாக அமையாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெண்களுக்கு பக்க பலத்தை வழங்கும் முகமாக சமூக ஒப்பந்தம்

2019 ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, பெண்களை உள்ளடக்கிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்கும் ஆரம்ப நிகழ்வை கண்டியில் ஆரம்பித்தார். இங்கு பெண்களின் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் ஆண் இல்லாத 16 இலட்சம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களுக்காக விசேட பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், வீட்டின் முக்கிய வருமானம் ஈட்டுபவர் என்பதுடன், இல்லத்தரசி தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் வீட்டிலிருந்தவாறே ஒரு தொழிலிலும் ஈடுபடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

திக்வெல்ல பத்தேகம பிரதேசத்தில் குறிப்பிட்ட பெண் ஒருவர் ஜேர்மனிக்கு தென்னை நாரினால் ஆன விரிப்புகளை ஏற்றுமதி செய்வது போன்று ஏனைய பெண்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். பிரதேச செயலாளர் மற்றும் உப பிரதேச செயலாளர் எல்லைகளில் மகளிர் மேம்பாட்டு மையங்களை நிறுவி இந்நாட்டு பெண்களுக்கு கணினி பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், தொழில்முனைவு, சுயதொழில் அறிவு போன்றவற்றை வழங்க முடியும். இதன் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும், அதற்கு பெரிய பொருளாதார கோட்பாடுகள் தேவையில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்கு கூடிய முன்னுரிமை

தற்போது பிள்ளைகள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முதல் பணியாக பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட் சாதனம் வழங்கப்படும். இதனூடாக புதிய தகவல்கள் மற்றும் தரவுகளை அணுக முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தொழிலாளர் சந்தைக்கு திறமையான தொழிலாளர்கள்

வீட்டு பணிப் பெண் துறையில் மட்டும் தங்கியிருக்காமல் அவர்களுக்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து, இதன் மூலம் திறமையான தொழிலாளர்களாக வெளிநாட்டு வேலைகளுக்கு அவர்களை வழிநடத்த முடியும். இந்தியாவைப் போன்று ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் உலக சந்தைக்கு ஏற்ற பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அனுப்ப முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சமும் மற்றும் மூச்சும் மிகவும் வெற்றிகரமான செயற்திட்டங்களாகும்

இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக, பிரபஞ்சம் பேருந்துத் திட்டம், பிரகஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம் மற்றும் மூச்சுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தம்புத்தேகம தேசிய பாடசாலைக்கு கூட பஸ் வழங்கப்பட்டன. திருகோணமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட ஜம்போரிக்குக் கூட அந்தப் பாடசாலையின் பிள்ளைகள் குறித்த பேருந்துலயே சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் 99.999% ஆசிரியர்கள் பிள்ளைகளை நேசிக்கும் ஆசிரியர்களே,ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து இந்த திட்டத்தை தோல்வியடையச் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 76 வருட அரசியல் வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் இந்த மூன்று திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது இதுவே முதற் தடவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம்

தற்போதைய மக்கள் ஆணையற்ற அரசாங்கம் மக்களுக்கு பாதகமான ஒப்பந்தமொன்றையே சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இது திருத்தப்படும். கூடிய சலுகையும் மிகக் குறைந்த அழுத்தமும் ஏற்படக் கூடிய வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏறக்குறைய 40 சதவீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர், LIRNEasia கணக்கெடுப்பின்படி, ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை 40 இலட்சம் அதிகரித்து 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது

இதனால், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மிகவும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பரேட் சட்டத்தின் மூலம் அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. வங்கி முறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நிலைமையும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்கள் விரோத பிற்போக்குத்தனமான கூறுகள் அகற்றப்பட்டு மக்கள் சார்பான கருத்துக்கு கொண்டு வரப்பட்டு சாதகமாக திருத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டுக்கு கொள்கையே முக்கியம்!

நாட்டிற்கு தனிமனிதர்களை விடுத்து, கொள்கைகள், வேலைத்திட்டங்கள், செயற்பாடுகள் என்பனவே முக்கியம்.ஐக்கிய மக்கள் சக்தியில் படித்த புத்திஜீவிகள் உள்ளனர். எனவே, இதைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியமில்லை, மக்கள் அதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். 76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் எந்த கட்சியும் செய்யாத சேவையை இந்த ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது. நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் என்ன கூறினாலும் தமக்கு கவலையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் பல்வேறு தீர்க்கதரிசனங்களை கூறினாலும் அவர்களால் பாராளுமன்றத்தில் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை. பேசுபவர் என்ன சொன்னாலும் கேட்பவர் புத்திசாலித்தனமாக கேட்க வேண்டும். சர்வஜன வாக்குரிமையால் அன்றி, நாட்டை வங்குரோத்தாக்கிய 134 பேரினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியே தற்போது இருக்கிறார். நாட்டின் சுகாதாரத்தை அழித்த கெஹலியவை பாதுகாக்க 113 பேர் முன்வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறித்து முதலில் குரல் கொடுத்தது நாமே!

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை பாதித்துள்ள பரேட் சட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகிறேன். இறுதியாக, தனது பேச்சுக்களைக் கேட்டு, அரசாங்கம் சரியானதைச் செய்ய முடிவு செய்துள்ளது, எனவே அவர் இதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அரசாங்கம் கூறியவாறு இது சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பரேட் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும். இது நிறைவேறும் வரை இதற்காக முன்நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதன் பிரகாரம் 100 மில்லியன் கடன் உத்தரவாத வேலைத்திட்டம் மற்றும் கடனுதவி வழங்கப்பட்டது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாநிதி மகவெல ரதனபால தேரர், கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு ; பெளத்த உறவுகளை மேம்படுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர்  ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்ப பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இச் சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழ்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விற்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமனுக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பௌத்த  உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புடன்  முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

கண்டி மல்வத்து மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய நிதி அமைச்சர்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று புதன்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர் மகாநாயக்கருடனான தனது சந்திப்பின் போது இலங்கை மக்களுடனான இந்திய நட்புறவை  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாளை வியாழக்கிழமை (2) இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான  ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாயில் 82.40 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாற்றப்படும் என இந்தியாவின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான கலாசார உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரியத்தையும் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அங்கீகரித்தார்.

மேலும் இந்தியா வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு  நன்றி தெரிவித்த அவர் இலங்கையின்  பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவுவதற்கு முதலில்  கைகோர்த்த நாடு இந்தியாவே ஆகும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்திய நிதியமைச்சர் கண்டியில் சியாம் பிரிவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதனையையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் இந்திய நிதியமைச்சர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து விவாதித்தார்.

இந்தியாவின் நிதியமைச்சர் இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களின் சூரிய மின்மயமாக்கல் திட்டம் தொடர்பாகவும் கூறினார்.

மேலும் மகாநாயக்க தேரர்கள் இந்தியாவுக்கு உதவிய விடயங்களுக்காக நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

புலிகளால் பெளத்த மதத்திற்கு எவ்வித இடையூறுகளும் இருந்ததில்லை – வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்

”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மத தலைவர்கள் ” குருந்தூர் மலை விடயமானது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது. இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது. சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா..?

அவ்வாறு இருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள் எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது சிங்கள பெளத்த என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர். இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப்பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன்,கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பெரஹரா கலாசாரத்திற்கு எதிராக சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்கள் – அஸ்கிரிய பீடாதிபதி

பௌத்த விகாரை ஒன்றில் வைத்து யானை முத்துராஜா மோசமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, பல அரச சார்பற்ற நிறுவனங்கள் யானைகளை பெரஹரா கலாசாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தை விளம்பரப்படுத்த முயல்வதாக அஸ்கிரிய பீடாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் மேற்கொள்ளும் திட்டமிட்ட பிரசாரம் இது என்றும் தேரர் கூறினார்.

“எந்த நாட்டிலும் ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த கலாச்சாரம் உள்ளது, சிங்கள பௌத்த கலாச்சாரத்தில், யானைகளைப் பயன்படுத்தினோம், இங்கிலாந்தில், குதிரைகள் தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர்களின் அரச விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்“ என்று அவர் கூறினார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2022 இல் மனித-யானை மோதலின் போது அதிக எண்ணிக்கையிலான யானைகள் கொல்லப்பட்டன. ஆனால் துஷ்பிரயோகம் காரணமாக வளர்ப்பு யானைகள் எதுவும் இதுவரை இறக்கவில்லை என்றார்.

யானைகளை பராமரிப்பதற்கு தொழில் பயிற்சியோ அல்லது கல்வியோ வழங்காததே யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம் என்றும், விகாரைகளுக்கு யானைகளை வழங்கக்கூாது என பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடாதிபதி, யானை வளர்ப்பு எப்போதும் நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே, எமது சொந்த பெரஹரா கலாசாரத்தை பாதுகாக்க அந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பூர்வீக தொல்லியல் இடங்களை அடையாளங் காணமுற்பட்டால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும்

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுகின்றனர்.

வடக்கில் அரசாங்கத்திற்கு சார்பான தொல்பொருள் திணைக்களத்திற்கு கூறக்கூடிய விடயம் பூர்வீக தொல்லியல் இடங்கள் என தெரிவித்தால் இந்து சமயத்திலும் பல இடங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதேபோல் பௌத்த மதத்திலும் உள்ளது.

அவற்றையெல்லாம் கூறப்போனால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அவை தற்போதுள்ள மத நல்லிணக்கத்திற்கு குரோதமாகவே அமையும். எனவே தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை கைவிடுதல் வேண்டும். தற்போதுள்ள சம நிலையை பேணி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது  யாழ் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. ஜெபரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “மத நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

மற்ற மதங்களை மதிக்காத அன்பு செய்யாத ஏற்றுக்கொள்ளதா தன்மை எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலை இருப்பது போல் தோன்றுகின்றது.

இதனால் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சனைகளால் மதங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது. இந்த நேரத்தில் நாம் எங்கள் மதத்தை எவ்வாறு மதிக்கின்றோமோ அதேபோல் ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நாட்டில் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இருந்தபோதிலும் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் திணிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு இனம் வாழும் இடத்தில் அந்த இனத்திற்கு தேவையில்லாத அந்த இனத்திற்கு ஒவ்வாத மற்றோர் இனத்திற்கு தேவையான ஒரு விடயத்தினை செய்கின்றபோது மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒவ்வாரு இனத்தவரும் வசிக்கும் இடங்கள் மதிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய கலாசார சமய விழுமிங்கள் மதிக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறம்போது இவ்வாறான பிரிவினைகள் எற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய மத குருமார் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்

புத்தசாசன அமைச்சு தூங்கிக்கொண்டு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் ஆனால் புத்தசாசன அமைச்சு விழிப்புடனே செயற்பட்டு வருவதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதாற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதாகவும் அந்த நடவடிக்கை புத்தசாசன அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு காவல்துறையில் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

புத்த சாசன அமைச்சு தூங்குகிறது என்று குறிப்பிட்டிருந்ததையும் அவதானித்துள்ளேன்.புத்த சாசன அமைச்சு 24 மணிநேரமும் விழித்திருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன், புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார் பாரதப் பிரதமர்

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகை உறுதிச்செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கலாசார அமைச்சு மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 150 பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்து 171 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Uncategorized

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தல்!

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகான தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் விபரம் வருமாறு-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், பொதுமக்களின் துன்பங்களைக் குறைக்கவும், சமூக அமைதியின்மையைப் போக்க முறையான கொள்கைப் பொறிமுறையைத் தயாரிக்கவும். <br>

நாட்டில் நிலவும் கடுமையான, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற தன்மையைப் போக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மகா சங்கம் என்ற வகையில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வாறாயினும், பொருளாதாரச் சுருக்கம், பணவீக்கம், மோசமான அரசாங்க நிர்வாகம், தற்போதைய உயர் மின் கட்டணங்கள், தண்ணீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத அதிகரிப்பு போன்றவற்றால் எழுந்துள்ள சமூக அழுத்தத்தையும் ஜனாதிபதி அறிந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.

வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஜனரஞ்சகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் புரிந்து கொண்டு நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்காக கடந்த காலகட்டம் முழுவதிலும் தொடர்ச்சியான நடைமுறை நிலையான கொள்கைகளை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன் கருதி தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மக்கள்தொகை வீழ்ச்சியுடன் ஏற்படும் சமூகச் சிதைவு மற்றும் அராஜகம் பற்றி இலக்கிய குடதந்த சூத்திரம் மற்றும் சக்கவட்டி சிஹானதா சூத்திரம் போன்ற பௌத்த சூத்திரங்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், பொது நிதியை முறையாக நிர்வகிப்பது, ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மக்கள் பிரதிநிதிகள் அனுபவிக்கும் வரம்பற்ற சலுகைகளை அகற்றுவது போன்ற நடைமுறைத் தீர்வுகளின் மூலம் பொதுமக்களின் துன்பத்தைக் குறைக்க அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது பொதுமக்களிடையே சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்துவது என்பது ஜனநாயகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே, உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது அரசின் பொறுப்பு.

‘நாட்டில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற தன்மையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படக்கூடாது.

மேலும், நாட்டின் சட்ட எல்லைகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும்.

எனவே, அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் மேலாதிக்கத்தைப் பெற்று மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.