பொருளாதார மறுசீரமைப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் – சாகல

நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட நாட்டுக்குத் தேவையான பல பொருளாதார மறுசீரமைப்புகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான திட்டங்கள் அரசியல் ரீதியாக பாதகமானதாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேர்தலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களே நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களின் பலன் இன்றே கிடைக்காவிட்டாலும், நாட்டின் இளைஞர் யுவதிகளும் எதிர்கால சந்ததியினரும் அதனால் பயனடைவர் என்று உறுதியளித்தார்.

மாத்தறை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற 2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வு தொடர்பாடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதிய அளவில் அதிகரிக்கவில்லை. அதனால் அனைத்து துறைகளையும் மறுசீரமைப்புச் செய்து அரசாங்கம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்துவதற்கான நிதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிர்மாணத்துறையை பலப்படுத்துவதால் மீண்டும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதால் அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்னரான இந்நாட்டின் நிலைமையை நாம் மறந்துவிட முடியாது. அப்போது, எரிவாயு வரிசைகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் மக்கள் நேரத்தை செலவிட வேண்டியிருந்தது. மருந்துகள் கிடைக்கவில்லை, வாழ்க்கைச் சூழல் மிகக் கடினமானதாக மாறியிருந்தது.

அந்த நேரத்தில் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு சதம் கூட வருமானம் இருக்கவில்லை. எரிபொருள், எரிவாயு இறக்குமதிக்கும் பணம் இருக்கவில்லை. அதனால் மக்கள் வீதியிலிறங்கி போராடிய போதிலும் நாளடைவில் அவை சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரச சொத்துகளுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துதாக மாறியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற ஓரிரு வாரங்களின் பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்பட்டது. நிதி நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டதுடன், எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த தருணத்தில் உரம் கிடைத்திருக்காவிட்டால் விவசாயத்துறை சரிவடைந்திருக்கும்.

இரண்டு முக்கிய காரணிகள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. முதலாவதாக உரக் கொள்கையால் விவசாயத் துறை வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. இரண்டாவதாக வரி குறைக்கப்பட்டதால் அரசாங்க வருமானம் குன்றியது. தேர்தல் குறித்த நோக்கத்தில் மாத்திரமே எடுக்கப்பட்ட முடிவுகளே இந்த நிலைக்கு வழிவகுத்திருந்தாலும் பிற்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைத்த உதவியால் அவற்றுக்குத் தீர்வைக் காண முடிந்தது.

பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த வேலைத்திட்டத்திற்கு செல்ல ஜனாதிபதி தீர்மானித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அழுத்தங்களைக் குறைத்து அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன்படி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்தது. இதன் மூலம் வரியை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டை எந்த வகையிலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் இந்த கஷ்டங்களை இரண்டு மூன்று வருடங்கள் தாங்கினால் இயல்பு நிலைமை ஏற்படும். அதன்படியே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதற்கமைவான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

மற்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நீண்ட காலம் சென்றது. ஆனால் நமது நாடு விரைவில் ஒப்பந்தம் செய்து கொண்டதன் காரணமாக சர்வதேச சமூகத்திற்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டது.

எமது நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கிய உத்தரவாதம் எமக்கு சாதகமாக அமைந்தது. அதன்படி, பல புதிய சீர்திருத்தங்களுடன் அடுத்த திட்டத்தை செயல்படுத்தினோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளையும் முன்னெடுத்தோம்.
அதன்படி செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய திட்டமாக ‘அஸ்வெசும’ உள்ளது. எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்று கருதுகிறேன். இத்திட்டத்தின் மூலம் மக்களின் நிதி நெருக்கடிகளை ஓரளவுக்குத் தீர்க்க முடியும். திட்டத்தினால் பயனடைவோரின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமான தொகையை இதற்காக ஒதுக்கினோம். இத்தொகை பயனாளிகளின் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படுகிறது. எதிர்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கலுடன் இந்த திட்டத்தை மேலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி தாய்மாருக்கு சத்துணவுப் பொதி வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிக்கவுள்ளோம். முதியோர், சிறுநீரக நோயாளர், விசேட தேவையுடையோர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதுபோன்ற திட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

அத்துடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்து பாரிஸ் (Paris) சமவாயத்துடன் இணக்கப்பட்டு எட்டப்பட்டு அது குறித்த அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீண்டுவரும். அதனால் சர்வதேச கடன்களை பெறுவதற்கான வாய்ப்பும் உதவிகளும் கிடைப்பதோடு நாட்டுக்குள் பெருமளவான முதலீடுகளும் வந்தடையும்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி கணக்கு வழக்குகளை ஆரம்பிக்க வேண்டும். மேலும் புதிய வருமான வழிகளை உருவாக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம். அந்த நோக்கிலான முதன்மை திட்டமாக விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தற்போது இலங்கையில் ஒரு ஹெக்டயரில் 4 மெட்ரிக்தொன் விளைச்சலையே பெற முடிகிறது. தற்போது அதை இரட்டிப்பாக்கக்கூடிய திட்டத்தை தயாரித்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு கிராம பகுதிகளில் அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறையிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஏற்கனவே இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 1,489,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அது முன்னைய ஆண்டை விடவும் இரட்டிப்பாகும். மேலும், 2017 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். அதே அளவானோரை மீண்டும் வரச் செய்வதே எமது பிரதான இலக்காகும்.

அடுத்த ஆண்டுக்குள் இதை மேலும் உயர்த்த வேண்டும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு 100 டொலரை செலவிடுகிறார்கள். அவற்றுக்கு மேலதிகமாக, நாளொன்றுக்கு சுமார் 500 டொலரை செலவழிக்கும் உயர்தர சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான புதிய திட்டங்களை வகுத்துள்ளோம்.

மேலும், உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை ஆகிய அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமிடலையும் அரசாங்கம் கொண்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியால் நாம் அனைவரும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தோம். நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட பல சீர்திருத்தங்களை தற்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம். இது அரசியல் ரீதியாக பாதகமாக இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

சில நேரங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் பிரதிபலன்களை 100 சதவீதம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், எதிர்கால சந்ததியினரும், இளைஞர் யுவதிகளுக்கும் அதனால் பயனடைவார்கள். அதற்காக நாம் இந்தப் பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம். இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மீளவும் தடுக்க முடியாத வகையில் நாடாளுமன்ற சட்டத்தை நிறைவேற்றிய பின்பே செயற்படுத்துகிறோம். இருப்பினும் அந்த திட்டங்களை முறையாக நிறைவு செய்ய வேண்டுமெனில் நாம் ஒரு நாடாக ஒன்றுட வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கடனை செலுத்த முடியாது என்று அரசாங்கம் முதல் முறையாக அறிவித்தது. நாங்கள் கடனை செலுத்தவில்லை, வெளிநாடுகளின் கடனையும் சர்வதேச பத்திரங்களின் கடனையும் மட்டுமே செலுத்தினோம். அப்போதிருந்து, நாங்கள் உள்நாட்டு கடன்களையும் முக்கிய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களையும் தொடர்ந்து செலுத்தி வருகிறோம். ஆனால் அவற்றில் பெரும்பாலான வெளி நாடுகளில் இருந்து பெற்ற கடன்கள் மற்றும் தனியார் கடன்கள் இன்னும் செலு்தப்படவில்லை.

இருப்பினும், தனியார் கடனை செலுத்த முடியவில்லை என்பதை வங்குரோத்து நிலையாகவே கருத வேண்டும். கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் இந்த நிலை ஏற்பட்டதில்லை. எனவே, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கையின் பொருளாதார சமூக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆண்டு மற்றும் திகதியென குறிப்பிடப்படும்.

இதன்போது பாராளுமன்றமும் மக்களும் இந்த நிலையில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது ஒன்றே செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதன்படி சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அந்த அதிகாரிகள் அப்போது இலங்கைக்கு வரவே அஞ்சினார்கள். ZOOM தொழில்நுட்பத்தின் வாயிலாகவே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. மிகவும் கடினமான பயணத்திற்குப் பிறகு, செப்டம்பர் 1 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் நிபந்தனையுடன் கூடிய இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது. 4 வருட காலத்திற்கு 3 பில்லியன் டொலர் உடன்படிக்கைக்கு வந்துள்ள போதிலும், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாதுள்ளதாக அறிவித்துள்ளதால் அதனை வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடனை திருப்பிச் செலுத்தும் முறைமை தொடர்பில் இணக்கப்பாட்டினை எட்டுமாறு வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, இரண்டு சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலுடன் 7 மாதப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2023 மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் இணக்கப்பாட்டை பெற்றோம். அதனால் பாரிய தொகை கிடைக்காவிட்டாலும், இலங்கையில் பொருளாதார நிலைமை வலுவடைந்திருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது என்றார்.

ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய பேசுகையில்,

2024 வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு நாடு எங்கு கொண்டு செல்லப்படும் என்பதை விவாதிக்கும் நிதிசார் ஆவணமாகும். அதை முறையாகப் படிப்பதும், அதற்கு எவ்வாறு பங்களிப்பது என்பது பற்றிய சரியான யோசனையைப் பெறுவதும் மிகவும் முக்கியமானதாகும். மக்கள் வரிசையில் நின்று இறக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் உருவாக்கப்பட்டது. மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எண்ணெய் பவுசர் வந்தபோது மக்கள் குழு ஒன்று கைதட்டியதைக் கண்டோம். இப்படிப்பட்ட கடினமான காலகட்டத்திற்கு நாம் முடிவு கட்டினோம்.

ஜனாதிபதியின் சரியான வேலைத்திட்டத்தினால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு நாடாக எழுச்சி பெற முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அந்த வேலைத்திட்டத்தை இன்று உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று சர்வதேச நாணய நிதியம் கூட வீழ்ச்சியடைந்த நாடுகளுக்குள் விரைவாக எழுச்சி பெறும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அறிவித்துள்ளது என்றார்.

தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி. கமகே, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ, மாகாண செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், காலி மாவட்டச் செயலாளர், ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர், முப்படை, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்.தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.சந்தைப்படுத்தல் பொருளாதாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.வெகு விரைவில் சிறந்த திட்டங்களை வெளியிடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களினால் தேசிய பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளது.தொழிலின்மை தீவிரமடைந்துள்ளதுடன் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதாரத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள தீர்மானங்களினால் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருந்தாலும் ஏழ்மை இரட்டிப்படைந்துள்ளது.எதிர்பாராத வீழ்ச்சிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போராடுகிறார்கள். தற்போதைய ஸ்திரப்படுத்தல் தற்காலிகமானதாக உள்ளது.நிலையான பொருளாதார செயற்திட்டங்களை உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் இந்த ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலை என்பன மீண்டும் பலவீனமடையும், சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெறும்.

நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டுமாயின் போட்டித்தன்மையான சமூக சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை அமுல்படுத்த வேண்டும். பொருளாதார விவகாரத்தில் தனிப்பட்ட சுதந்திரம் இன்றியமையாததாகும். தொழிற்றுறை மற்றும் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாயின் பொருளாதார தனிமனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பணவீக்கம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை காணப்படும் போது பொருளாதார மீட்சிக்கான துறைசார் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமை பொருளாதார வீழ்ச்சிக்கான பிரதான காரணியாகும். வட்டி வீதம்,பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பன நிதி கொள்கையுடன் தொடர்புடையது,நிதி கொள்கை பிரச்சினைக்குரியதாகக் காணப்படும் போது வட்டி வீதம், பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பனவற்றை நிலையானதாகப் பேண முடியாது. மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களினால் நிதி ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதார ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் சந்தை பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருளாதார மீட்சிக்கான 20 திட்டங்களை முன்வைத்துள்ளார். 2022.ஆகஸ்ட் மாதமும்,2023 பெப்ரவரி மாதமும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான திட்டங்களை முன்வைத்தோம்.ஆனால் அரசியல் நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு அரசாங்கம் எமது யோசனைகளைக் கவனத்திற் கொள்ளவில்லை.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.பாரம்பரியமான எதிர்க்கட்சியாகச் செயற்படவில்லை.சந்தை பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய சிறந்த திட்டங்களை வெகுவிரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.

நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க

இலங்கையில் பலம் மிக்க அரசியல் மாற்றம் ஒன்று உருவாக அனைத்து விடயங்களும் தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பலம் பொருந்திய அரசியல் மாற்றம் ஒன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

தரத்துடன் கூடிய பாரியளவிலான பல கோணங்களுடன் ஒரு அரசியல் கூட்டணி நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க உள்ளோம்.

அதே போன்று சிறந்த தேர்ச்சியான வேட்பாளர் குழுவினை பொதுத் தேர்தலிலும் களமிறக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது என்ற கதை பொய்யானது – நந்தலால் வீரசிங்க

இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார்.

நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் கடந்த புதன்கிழமை இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வங்குரோத்து நிலையில் உள்ளதாக கூறப்படுவதை தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்தது நாட்டின் திவால் நிலை அல்ல என்றும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் தீர்வை ஒத்திவைப்பதே தவிர வேறில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலான உண்மைகளை மேலும் தெளிவுபடுத்தியுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்ததாகவும் அதில் திவால் பிரகடனம் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பானது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அசௌகரியங்கள் தொடர்பில் நீண்ட விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

நாடு திடீரென மூடப்பட்டதன் காரணமாக கொவிட் தொற்றுநோய்களின் போது நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், குறைந்த வளங்களைக் கொண்ட ஏழை நாட்டை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் தேசிய வருமானத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பொருளாதார மீட்சிக்குத் தீங்கு விளைவிக்கும் – கனடா கவலை

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

இதைத் தவிர்க்க, நிகழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது – ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஒரு வார காலமாக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

நிதியத்தின் இலங்கைக்கான முதலாம் கட்ட கடனுவியை தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள பரந்த மக்கள் தொகையை சென்றடையும் வகையில் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மேம்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சொத்து வரியின் மூலம், நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை வேகமாக பூர்த்தி செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரே பொறுப்பேற்க வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவித்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்தபோதே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்துறை சீர்குலைந்தமையும் காரணம் – நீதியமைச்சர் விஜயதாச

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டம் தொடர்பான அறிவை பொது மக்களுக்கு வழங்கும் நோக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தேசிய சட்ட வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில் நேற்று (28) கொழும்பு நீதிமன்ற வளாகத்திவ் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“எமது நாட்டில் சட்டத் தொழில் தொடர்பாக சாதாரண மக்கள் மத்தியில் இருந்துவரும் பிழையான கருத்தை போக்குவதற்காக முன்னாள் நீதிபதி சீ,ஜே. வீரமந்திரியினால் 2006ஆம் ஆண்டில் இந்த தேசிய சட்ட வார திட்டம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு தேவையாகும்.

தற்போது சட்ட உதவி ஆணைக்குழுவினால் குறைந்த வருமானமுடைய மக்களுக்கு இலவசமாக சட்ட சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக செயற்திறமையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதற்காக ஐரோப்பிய சங்கம், ஆசிய மன்றம், யுனேஸ்கோ மற்றும் யூ.என்.டீ.பி நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறது.

அதேபோன்று மத்தியஸ்த சபை முறையை பலப்படுத்துவதற்காகவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்கும் சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

மேலும் கடந்த காலத்தில் எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்ட ஆதிக்கத்தின் வீழ்ச்சியும் காரணமாகும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இவ்வாறான வேலைத்திட்டங்களை நடத்துவது மிகவும் பிரயோசனமாகும். என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.