பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது – ஜனாதிபதி

பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார உரையாடல் – ஐ.எம்.எப் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் இன்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எம்.எப் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

IMF உதவி இலங்கைக்கான நிரந்தர ‘பிணையெடுப்பு’ அல்ல – பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘அட்வகாட்டா’ அமைப்பு

இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.

எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.

ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.

இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று ‘அட்வகாட்டா இன்ஸ்டியூட்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பு

வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளியலாளர் ஸேர்கி லேனோ

இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.

பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்

இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது.

கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.

இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 – 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற ‘நாணயச்சபை’ முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

டொலரை விட ரூபாயின் பெறுமதி அதிகரிப்பின் அமெரிக்கா இலங்கை மீது குண்டு வீசும்

அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்தால், அமெரிக்கா எம்மீது குண்டுகளை வீசும் என தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொருட்களில் விலை குறைவடைவதாக கூறினால் கடந்த வருடம் காணப்பட்ட விலைக்கு குறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி குறையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னர் 33 ரூபாய்க்கு காணப்பட்ட சவர்க்காரத்தின் இன்றைய விலையை ஒப்பிட்டு பார்க்கையில் விலை குறைந்துள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களும் கிடையாது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் கடன் உதவி எதிர்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காமைக்கான காரணம் என்னவென சிலர் எம்மிடம் வினவுகின்றனர். நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்களினதும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் கொள்கையும், முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்துமாயின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தயாராகவே இருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மக்களின் வாழ்க்கைக்கு பேரிடியாக அமைந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவளிப்பதால் நாம் நிராகரிக்கப்படுவோம்.

மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு எம்மிடம் கேட்கின்றனர். ஆனால் அனைத்து மக்களையும் மீட்டெடுக்கும் பொறுப்பு எமக்குள்ளது.

எதிர்க்கட்சி சமூக பொருளாதார கொள்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. சமூக பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றினால் நாம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார். இந்த அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட இலங்கைக்கு நிதியளிக்கும் பல்வேறு குழுக்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் பற்றி பேசியது, குறித்த திட்டங்கள் எங்கே? மக்களை தூக்கிலிட்ட பின்னர் மக்களுக்கு உணவளிக்கும் முறைமையே காணப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் கடன் கிடைக்கவிருக்கிறது. இலங்கை நிதிச் சந்தையில் குறித்த நிதியை எவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தப் போகின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கடன் பெறும்போது அவர்களின் ஒப்பந்தந்தங்களுக்கு அடிபணிய நேரிடும். சில சரத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாததனாலேயே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

ஒப்பந்தம் வெற்றி என்றாலும் நிபந்தனைகளில் யாருக்கு பாதிப்பு என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும், உழைக்கும் மக்களும் பாரியளவில் பாதிப்புகளை சந்திக்கவுள்ளனர்.கடன்பெற்று கொள்ளும்போது வறுமையிலுள்ள மக்களையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இந்த கடனை பெற்ற பின்னர் முதலாவது மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் எழும். அதிகளவிலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, பலரும் தொழிலை இழந்துள்ளனர். மின்கட்டணம் அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மக்களின் வருவாய் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

கடந்த வருடம் பொ ருளாதார திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வருடமும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு நாட்டு மக்களை தூக்கிட்டு கழுத்தை நெரித்து கொள்வதன் ஊடாக தானா பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்? சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின்னர் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்றார்

வங்கிகளினூடாக அனுப்பப்படும் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவிகள் குறைவடையும் வாய்ப்பு – சுரேந்திரன்

புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும் என பொருளியல் ஆய்வாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளருமான கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,“புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும். எனவே அவர்கள் நேரடியாக உண்டியல் முறையூடாகவோ அல்லது உறவுகளின் ஊடாகவோ தான் இனி இந்த பண பரிமாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் புலப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் டொலர் பெறுமதி குறையும் போது பல புலம்பெயர் உறவுகள் அது தொடர்பான கவலையை தெரிவித்திருந்தனர். இருப்பினும் டொலரின் பெறுமதி குறைவது இலங்கையில் இருப்பவர்களுக்கு நல்ல விடயம் என நாம் கூறினோம்.

ஏனென்றால் எமது நுகர்வு பொருட்களுக்கான விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் நிதி அனுப்புபவர்களின் நிலைப்பாடு அப்படி இருக்கவில்லை.

இதனால் நிதி பரிமாற்றம் என்பது வங்கிகளினூடாக அல்லாமல் உத்தியோகப்பூர்வமற்ற பண பரிமாற்றமாக மாறுவதற்கு தான் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது.”என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஐ.எம்.எப் உடன்படிக்கை முன்வைக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி இரவு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியதுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் வலய பிரதானி, இலங்கை தூதுக்குழுவின் பிரதானி ஆகியோர் இணைந்து அன்றைய தினம், இரவே இது குறித்து ஊடக சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில்  திடீர் மரண விசாரணை அதிகாரி   அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக  , கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய  தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கை : இயல்பு நிலை பாதிப்பு

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் (15.03.2023) நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாகஅனைத்து மாவட்டங்களின் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும், மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய், பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்களும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

மலையகம்

தூரப் பகுதிகள், பிரதேசங்களில் உள்ள தோட்டங்களிலிருந்து பிரதான மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைபெற வந்த மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேவேளை, பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றனர். மலையகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும் பணிகள் இடம்பெறவில்லை. அரச வங்கிகள் உட்படப் பல துறையினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று நடைபெற்றுவருவதுடன், மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு சுமார் 60க்கு மேற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கமும், ஆசிரியர் சேவை சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிபர், ஆசிரிய சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர், உள்ளிட்டோர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் பாடசாலை சென்ற மாணவர்கள் வீடு திரும்பிச் சென்றுள்ளார்கள். மேலும், மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் இன்று மாவட்ட மருத்துவமனையில் கிளினிக் மற்றும் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வீடு திரும்பியுள்ளார்கள்.

வவுனியா

வவுனியாவில் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘மக்களைப் பொருளாதார சுமையிலிருந்து காப்பாற்று, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை நிறுத்து, அடிப்படை சட்டங்களைச் சீரழிக்காதே, முதலாளிகளுக்கு வரிச் சலுகை உத்தியோகஸ்தர்களுக்கு வரி அறவீடு’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பத்தைகளைத் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர் சேவா சங்கம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

 

திருகோணமலை
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை திருவண்ணாமலை பிரதேச பொறியாளர் காரியாலயத்திற்கு முன்னால் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மீதமுள்ள சம்பளப்படிகள், மருத்துவ விடுப்பு படிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மருத்துவ விடுமுறைக்கான கொடுப்பனவை தடுக்காதே அநியாயமாக அறவிடப்படும் விடுதி வாடகைகள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டுள்ளனர்.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க உதவுமாறு மாகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவையும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களையும்  குறைத்து, சமூகத்தில் நிலவும் அமைதியின்மையை சீர்செய்ய கொள்கை ரீதியான உரிய பொறிமுறையை தயாரிக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

மகாநாயக்க தேரர்கள் கூட்டாக இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன், ஜனாதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு மக்கள் நேய கொள்கையினை நடைமுறைப்படுத்த  அரசாங்கம் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமிக்க  தருணத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தங்களின் கடமைகளை பொறுப்புணர்ந்து  நிறைவேற்ற  வேண்டும் என்பதை வலுவாக நம்புவதாக மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதென்பது  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஊடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதாகும் என வலியுறுத்தியுள்ள மகாநாயக்கத் தேர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய முறையில் நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலையுடன் நிறைவு

தங்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால், நாளை (16) காலை 8 மணியுடன் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்யவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இதனை குறிப்பிட்டது.

ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் தமது தொழிற்சங்க கூட்டமைப்பிலுள்ள அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் வாசன் இரத்னசிங்கம் குறிப்பிட்டார்.