வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம் பேரணி ஒன்று இன்று (15) முன்னெடுக்கப்பட்டது.

நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணி, நெடுங்கேணி – புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், உதவிப் பிரதேச செயலாளரிடம் கண்டன மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரார்கள் வனவளத் திணைககள அலுவலக வாயிலில் நின்று வனவளத் திணைக்களத்திறகு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பின்னர் அங்கிருந்து சென்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரருடன் பேச முற்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து பொலிசாருக்கு எதிரான கோசங்களை ஆர்ப்பாட்டக்கரரர்கள் எழுப்பினர். இதன்போது அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொலிஸ் நிலையம் முன்பாக சுமார் அரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் பின்னர் அங்கிருந்து சென்று பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான வினோதரராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுருமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, து.ரவிகரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வெடுக்குநாறிமலை பொலிஸாரின் அட்டூழியத்துக்கு எதிராக நல்லூரில் போராட்டம்

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு .அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெற்றது.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், சி.சிறிதரன், செ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறிகாந்தா, ஈ.சரவணபவன், மதகுருமார், அரவெடுக்குநாறிமலை அட்டூழியத்துக்கு எதிராக நல்லூரில் போராட்டம்சியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரி பூசையின் போது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வழிபட சென்றவர்கள் மீது பொலிசாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் ஆரம்பம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் ஆரம்பமானது.

குறித்த போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது.

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் ‘சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. பெப்ரவரி ஆகவே வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என மாணவர் ஒன்றிய தலைவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

“அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன. ஆகவே தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை.”

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் அரசாங்கத்தின் புதிய உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (TURC) என்பன தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.

“14 வருடங்களாக நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுகத்துக்கொண்டிருக்கின்றோம். எத்தனை ஜனாதிபதி மாறி மாறி வந்தாலும். எனினும் எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை யாரும் கூறவில்லை. 220ற்கும் மேற்பட்ட தாய்மாரை நாம் இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம். ஓஎம்பி, டிஆர்சி என அனைத்தும் பொய்களே. எம்மை ஏமாற்றுவதற்காகவே இவைகள். பிள்ளைகளுக்கு , பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.”

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சஹராஜன் சுகந்தி, திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கே.செபாஸ்டியன் தேவி ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, இன்று சனிக்கிழமை (27) மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகவியலாளர்கள், மத குருமார், சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் உட்பட பலர் காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஒன்றிணைந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து’, ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கொடு’, ‘எங்கே எங்கே ஊடகவியலாளர் எக்னியாகொட எங்கே’, ‘நிகழ்நிலை காப்பு சட்டத்தை வாபஸ் பெறு’ போன்ற சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் நெற்றியில் கறுப்புப்பட்டி அணிந்தும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களிடம் பிக்பொக்கட் அடித்து வெளிநாடுகளில் விநோதங்களில் ஈடுபடும் ஜனாதிபதி – சஜித் குற்றச்சாட்டு

சுகாதார தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றை நிறைவேற்ற பணம் இல்லை எனக் கூறும் அரசாங்கம், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 67ஆவது கட்டமாக, கலாவெவ சிறிமாபுர மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும்

இன்றைய நிகழ்வில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,

”கூலித்தொழிலாளர்களின் அன்றாட வருமானத்தை பிக் பொகட் அடித்துக் கொள்ளும் அரசாங்கமே நாட்டில் உள்ளது. இன்று நாள் முழுவதும் நடைபெற்று வரும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நோய்வாய்ப்பட்ட சமூகத்தால் மருந்துகளைப் பெறமுடியவில்லை.

சுகாதார சேவையே இந்நேரத்தில் நாட்டுக்குத் முக்கியமான தேவையாக இருந்தாலும், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒதுக்கீடுகளே வழங்க அனுமதியளிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வாறு போதாது எனக் கூறும் அரசாங்கத்திடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்கும் போதாதது எனக் கூறுகிறோம். பலவீனமான தலைமைத்துவத்தினாலயே சுகாதார சேவை முடங்கியுள்ளது.

நாட்டின் சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், திங்கட்கிழமை (11) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர். குறித்த மகஜரில்,

இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு இன்மையே இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாங்கள் எதிர் நோக்கி வருகின்றோம் குறிப்பாக நீரியல்வளங்கள்,நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவதுடன் அதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றது.

அதிலும் வட பகுதியில் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் காணி அபகரிப்பு, இராணுவமயமாக்கல், இராணுவ சோதனை தடுப்பு அரண்கள்,மக்கள் மீள்குடியேற்றப்படாமை போன்றவற்றால் இங்கு வாழ்கின்ற மக்களாகிய நாம் பெரும் சவாலையே எதிர்நோக்கின்றோம்.

தற்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு,எரிபொருட்களின் விலைஅதிகரிப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை,இந்திய இழுவை மடி எமதுகடற்பரபில் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை,பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், போதைப்பொருள் பாவனை,சமூர்த்தி கொடுப்பனவுகள் சரியான முறையில் கிடைக்கபெறாமை போன்ற சாவால்களையும் மக்களாகிய நாம் எதிர்நோக்குவதுடன் நாட்டின் பொருளாதார கொள்கை,நாட்டின் புதிய சட்ட மற்றும் சட்ட மூலங்கள் சர்தேச உடன்படிக்கைகள் மூலம் வட பகுதி மக்களாகிய நாம் பல இன்னல்களை எதிர் நோக்கின்றோம்.

அதிலும் நாட்டின் முதலீட்டை அதிகரித்தல் என்ற ரீதியில் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி சில திட்டங்கள் நடைபெறுகின்றது நடைபெற உள்ளது மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி,விடத்தல்தீவு இறால் பண்ணை,கனிய மண் அகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் அட்டைப்பண்ணை, பொன்னாவெளி கிராம டோக்கியோ சீமேந்து தொழிற்ச்சாலை திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி அத்துடன் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றசெயற்பாடுகளும் நடைபெறுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட குருந்தூர் மலைவிவகாரம், திட்டமிட்ட மாகாவலி குடியேற்றங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை போன்ற பல்வேறு பிரச்சனைகளை வட மாகாண பெண்கள் என்ற ரீதியில் எதிர்நோக்குகின்றோம் ஆகவே வட மாகாண பெண்கள் குரல் என்ற ரீதியில் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதனுடன் மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள் என்றுள்ளது.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் மரிக்கவில்லை – பிரபாகரனின் மகள் என அடையாளப்படுத்தி கொள்ளும் பெண் உரை

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் முடிவுக்கு வரவில்லை எனவும், மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் மாண்டுபோன மக்களின் ஈகைகள் அதற்கு வழிகாட்டும் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகா என ‘தமிழ் ஒளி’ இணையப்பக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி தாம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், சிங்கள மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நாளான நேற்று திங்கட்கிழமை (27) ‘தமிழ் ஒளி’ எனும் இணையத்தளப்பக்கமொன்று இயங்க ஆரம்பித்ததுடன், அதில் நேற்று மாலை 5.20 மணிக்கு மாவீரர்தின நிகழ்வு எனும் பெயரில் நேரடி ஒளிபரப்பொன்று இடம்பெற்றது. அதில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உரையாற்றுவார் எனக்கூறப்பட்டு, அவரது உரையும் ஒளிபரப்பப்பட்டது. கணினித்தொழில்நுட்பத்தின் ஊடாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடி என்பன பின்னணியாக அமைக்கப்பட்டிருந்ததுடன், அதன்முன் தோன்றிய துவாரகா என்று ‘தமிழ் ஒளி’யினால் கூறப்படும் நபர் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் வருமாறு:

அன்புக்குரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். ‘தமிழீழம்’ என்ற அதியுயர் இலட்சியத்துக்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக்கோவில்களில் பூஜிக்கும் இத்திருநாளில் உங்கள்முன் உரையாற்றுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பளித்திருப்பதைப் பெரும் பேறாகவே கருதுகிறேன். இப்படியொரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையோ ஆபத்துக்கள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே நான் இன்று உங்கள்முன் உரையாற்றுகின்றேன். அதேபோன்று என்றோ ஒருநாள் தமிழீழத் தாயகம் திரும்பி எமது மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு காலம் எனக்க வாய்ப்பளிக்கும் என்ற அசையாத நம்பிக்கை உண்டு.

ஒன்றுமொத்த உலகமுமே அதியமடையும் வகையில் சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். எதிர்த்துநின்று எம்மோடு போர்புரியத் திராணியற்ற நாடுகளை சிங்கள அரசு தன்பக்கம் வளைத்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நிய சக்திகளிடமும், ஏனைய நாடுகளிடமும் மண்டியிட்டு யாசகம் கேட்டது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீது உலகின் பல நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்டு, எமது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தமிழீழத் தாயகத்துக்கான விநியோகப்பாதைகள் மூடப்பட்டன.

எமது தேசவிடுதலை இயக்கம் பலவீனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்நிய நாடுகள் தலையிட்டு சிங்கள அரசுக்கு உயிர்ப்பூட்டின. உலகில் ஒரு மூலையில் தனித்துநின்று, எமது மக்களின் ஆதரவில் மாத்திரம் தங்கிநின்று போராடிய எமது தேசவிடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போவதற்கு இதுவே காரணமாகும். ஆனாலும் அரசியல் சுதந்திரத்துக்கான எமது போராட்டம் முற்றுப்பெறவில்லை.

தமிழீழம் என்ற இலட்சியம் கருக்கொள்ளக் காரணமான புறநிலைச்சூழ்நிலைகள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. தமது தாயகபூமியில் தம்முடைய கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கமுடியாதவாறு சீரழிவுகளை மேற்கொள்வதுடன், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை சிங்கள பௌத்த அரசு முழுமூச்சுடன் முன்னெடுத்துவருகின்றது. இதுபோதாதென்று ஈழத்தமிழ் தாயகம் சிங்களப்படைகளால் முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரமும், அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாகத் தமிழீழம் திகழ்கிறது. சட்டவாட்சி மறுக்கப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவத்தின் ஆட்சியை சிங்கள அரசு திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்டவர்களாகவே எமது மக்கள் ஈழத்தில் வாழ்கின்றனர்.

மறுபுறத்தில் போர்நிகழ்ந்த காலத்தில் ஆசைவார்த்தைகூறிய உலகின் சக்திவாய்ந்த நாடுகள், இன்றளவிலும் எமது மக்களுக்கு காத்திரமானதொரு அரசியல் தீர்வை வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டது போர்க்குற்றமென்றும், மனித உரிமை மீறலென்றும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் எந்தவொரு தரப்பினரும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை. இவையே எமது அரசியல் போராட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணங்களாகும்.

1950 களில் சமஷ்டியைக்கோரி எழுச்சியடைந்த எமது போராட்டம் 1960 களில் ஆயுதபலத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. 1970 களில் போர்க்குணமுடைய இளைய தலைமுறை தோற்றம்பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் அரச ஒடுக்குமுறை இயந்திரத்தையும் எதிர்த்து வீரம் செறிந்த ஆயுதப்போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத்தலைவரும், எனது தந்தையுமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரண்டனர். அவர்கள் தமிழீழத்துக்காய் தமது இன்னுயிரைத் தியாகம்செய்த மாவீரர்களே. அவர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றுமே எமது மனக்கோவிலில் வைத்துப் பூஜிப்போம்.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும், எமது மக்களும், அரசியல் தலைவர்களும், முன்னாள் போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்துக்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வாறான யதார்த்த சூழமைவில் மக்களென்றும், புலிகளென்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப்பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிணாமமாகும். ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கட்சிபேதங்கள், அமைப்புக்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவும், இனப்படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கடப்பாடு ஈழத்தமிழ் மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டு. எமக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவலாம். ஆனால் அரசியல் தீர்வு என்று வரும்போது நாமனைவரும் ஒரே கோட்டில் பயணிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

அதேவேளை தாயகத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் எமது மக்களினதும், கடந்தகாலங்களில் தமது வாழ்வை அர்ப்பணித்துப்போராடிய முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, வாழ்க்கையை மேம்படுத்தவேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் வளம்பொருந்திய எமது மக்கள் இருக்கின்றனர். ஈழத்தமிழர்கள் அனைவரையும் பொறுப்பேற்று, அவர்களுக்கு உதவி புரிந்தால் அந்நிய தேசத்திடம் கையேந்திநிற்கும் நிலை அவர்களுக்கு ஏற்படாது. இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி பக்கபலமாகத் திகழும் தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத்தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமாத்திரமன்றி இந்தியாவிலும், உலகநாடுகளிலும் எம்மோடு துணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையுடன் பற்றிக்கொள்கின்றேன். ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக நீங்கள் தொடர்ந்து குரல்கொடுப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.

எனது அன்பார்ந்த மக்களே, நாம் வரித்துக்கொண்ட இலட்சியமும், அதற்காக மாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் சந்தித்த இழப்புக்களும் அளப்பரியவை. இவை ஒருநாளும் வீண்போகாது. மாற்றங்கண்டுள்ள உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அறவழியில் நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லாவிதத்திலும் அரசியல் போராட்டம் மிகவும் கடினமானது. அவ்வகையான போராட்டத்துக்கு பொறுமையும், நம்பிக்கையும், இலட்சிய உறுதியும் இன்றியமையாதவை என்பதை நான் உணர்ந்துகொள்ளாமல் இல்லை.

இந்நேரத்தில் சிங்கள மக்களுக்கு ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாம் என்றுமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை. தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதை நானறிவேன். எமது தேசியத்தலைவர் குறிப்பிட்டதுபோன்று, எமது பாதைகள் மாறலாம். ஆனால் எமது இலட்சியங்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை. மாவீரர்களின் தியாகங்களும், மாண்டுபோன மக்களின் ஈகங்களும் எமது மக்களுக்கு வழிகாட்டும். நாம் எமது இலட்சியத்தின் பாதையில் சென்று, அதனை ஒருநாள் அடைந்தே தீருவோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.