தாயக மக்கள் அனைவரும் ஹர்த்தாலில் பங்கெடுத்து வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்க வேண்டும்

பிரான்ஸ் தமிழர் உரிமை மையம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலிற்கு பூரண ஆதரவினை வழங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் (Tamil Centre for Human Rights – TCHR, Est.1990) ஆகிய நாம், எதிர்வரும் செவ்வாய்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்து கொள்வதுடன், மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இவ் ஹர்த்தாலிற்கு உங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இவ் ஹர்த்தாலை முன்னின்று நடத்து அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகபூரமான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை, உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கிறோம்.

நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் ஹர்த்தாலில் பங்கு கொண்டு முன்னெடுத்து மிக வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வட-கிழக்குத் தழுவிய பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து மன்னாரில் அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ),ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 11 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டானியல் வசந்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

குறிப்பாக வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கமானது எமது மக்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஏற்கனவே அடக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கின்ற எமது மக்களை மீண்டும் மீண்டும் அடக்கி ஆழ் வதற்கான ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகின்றது.
இதற்கு எதிராக நாங்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து துடைத்து எடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிறிய கருத்தை பதிவிட்டாலே அவர்களை கைது செய்து சிறை படுத்துவதற்கான அதிகாரம் இந்த ஆயுதப் படைகளுக்கு வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்த ஆயுதப் படைகளுக்கு இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் அதே போன்று அவசர கால தடைச் சட்டம் ஊடாக பல அடக்குமுறை அதிகாரங்கள் வழங்கி இருக்கிறது.

உதாரணத்திற்கு எமது கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான அதிகாரம் எமது நிலங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம் மற்றும் கேள்வி கணக்கின்றி எமது இளைஞர்கள் யுவதிகளை சிறை படுத்துவதற்கான அதிகாரம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரம் என்று பல அதிகாரங்களை வழங்கி இந்த நாடு எமது மக்களை அடக்கி ஆள்கிறது.

மீண்டும் மீண்டும் எமது மக்களை ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் வைப்பதற்கான புதிய சட்டத்தை நாட்டிலே இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.
அது தான்சட்டம் எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இந்த நாட்டில் கொண்டு வராத வகையில் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்பதுடன் எதிர் வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அன்றைய தருணம் வர்த்தக நிலையங்களை மூடி அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் முச்சக்கர வண்டிகள் அரச தனியார் பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதோடு இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பை காட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு கிழக்கில் 25ஆம் திகதி ஹர்த்தால் : 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்

அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

குறித்த மதஸ்தலத்தினால் அதிகளவு சத்தம் போட்டு பிரார்த்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மல்லாகம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போதகர் உட்பட மூவர் அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அச்செய்தியை வெளியிட்டமைக்காக உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள்ளும் அடாவடியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசவுசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என கோரி இன்று போராட்டம் இடம்பெற்றது.

ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து வடக்கு கிழக்கில் போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கில் போராட்டம் இடம்பெறவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, காணிகள் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரியும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தினை அமுலாக்கப்படுவதை நிறுத்துமாறும் இந்தப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக கூறினார்.

ஆகவே குறித்த போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன ஆதரவினை வெளியிட்டுள்ள என்றும் அதேபோன்று வடக்கு, கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நிலையில் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்த வாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ´வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மிகத்தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்குநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தை தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு´ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடமும், அதிபருக்கான மகஜர் அதிபரின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது

இதனையடுத்து இது குறித்து அதிபருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிபரின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கயேந்திரன், தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“: நெடுந்தீவில் போராட்டம்

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் மக்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் – நிலாந்தன்.

கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்.

போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.

அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போதிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னெழுச்சிப் போராட்டங்களின் குழந்தைதான் என்பது. போராட்டங்கள் இல்லையென்றால் ரணிலுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது.

தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர்தான் தன்னெழுச்சி போராட்டங்களை நசுக்கினார். அதாவது அரசியல் அர்த்தத்தில் அவர் ஒரு தாயைத் தின்னி.

அவர் அவ்வாறு தன்னெழுச்சிப் போராட்டங்கள் நசுக்கப்பட்டபோது வசந்த முதலிகே-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதானி- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பல மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தன்னெழுச்சிப் போராட்டங்களின் பிரதானிகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். தன்னெழுச்சிப் போராட்டங்களுக்காக ஒப்பீட்ளவில் அதிகம் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.

அண்மையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தமது போராட்டத்திற்கு ஆதரவைக் கேட்பதே அவருடைய வருகையின் நோக்கம்.

சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருக்கிறார்கள். ஆனால் வசந்த முதலிகே குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தை எப்படி தங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை முழுவதிலும் உள்ள 100 நகரங்களில் தாங்கள் போராட இருப்பதாகவும், அப் போராட்டங்களில் தமிழ் மாணவர்களும் இணைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் மாணவர்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை அவர்களே தென்னிலங்கைக்கு வந்து மக்களுக்கு கூற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தாங்கள் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் சில நாட்களுக்கு முன் வசந்த முதலிகே பிபிசிக்கு வழங்கிய போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் அவ்வாறு பத்து அம்சக் கோரிக்கையைக் கையளிக்கவில்லை என்று கூறயிருக்கிறார்.

பிபிசி இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டிருக்கின்றது. வசந்த முதலிகே அணியிடம் தாங்கள் முன்வைத்த 10அம்ச கோரிக்கைகளை மாணவ அமைப்பின் கடிதத் தலைப்பில் எழுதிக் கொடுக்கவில்லை என்ற போதிலும் அவற்றை முன்வைத்தே தாங்கள் உரையாடியதாக யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

சந்திப்பின்போது தாங்கள் எதைக் கதைத்தார்களோ அதையே கதைக்கவில்லை என்று கூறுபவர்களோடு எப்படிச் சேர்ந்து போராடுவது ? என்ற சந்தேகம் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உண்டு.

தென்னிலங்கையில் நடந்த தென்னெழுச்சி போராட்டங்கள் அதாவது இலங்கைத்தீவில் நடந்த நான்காவது பெரிய போராட்டம் ஒன்று நசுக்கப்பட்ட பின் தென்னிலங்கையில் இருந்து வடக்கை நோக்கி வந்த ஆகப் பிந்திய அழைப்பு அது.

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வருமாறு தெற்கு வடக்கை அழைக்கின்றது. அந்த அழைப்புக்கு தமிழ் மாணவர்கள் கொடுத்த பதிலை மேலே கண்டோம்.

தமிழ் மக்கள் அப்படித்தான் பதில் கூற முடியும் என்பதைத்தான் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன சில நாட்களின் பின் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது என்று அநுரகுமார கூறியிருக்கிறார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுரகுமார கூறுவதின்படி 13ஆவது திருத்தம் ஒரு தீர்வு இல்லை என்றால் அதைவிடப் பெரிய தீர்வை அவர் மனதில் வைத்திருக்கிறாரா? என்று கேள்வி எழும்.

நிச்சயமாக இல்லை.அவர்கள் 13ஐ எதிர்ப்பது ஏனென்றால் மாகாண சபைகளை தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

ஏற்கனவே வடக்கு-கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இல்லாமல் செய்த கட்சி ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜேவிபி 13 எதிர்ப்பதற்கு மேற்கண்ட காரணத்தை விட மற்றொரு காரணமும் உண்டு அது என்னவெனில், 13ஆவது திருத்தம் இந்தியா பெற்றெடுத்த குழந்தை என்பதால்தான். அதாவது இந்திய எதிர்ப்பு.

ஜேவிபி தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்ரியை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவும் தயாரில்லை.ஜேவிபி மட்டுமல்ல தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் முன்னிலை சோசியலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரட்னமும் அப்படித்தான் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்க அவர்கள் தயாரில்லை. அவ்வாறு சமஸ்டியை ஒரு தீர்வாக முன் வைப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இதுதான் பிரச்சினை.

இலங்கைத் தீவில் நிகழ்ந்த, உலகின் கவனத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் ஈர்த்த, படைப்புத்திறன் பொருந்திய ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரும், தென்னிலங்கையின் நிலைப்பாடு அப்படித்தான் காணப்படுகிறது.

தமிழ்ப் பகுதிகளில் ஒருபுறம் நிலப்பறிப்பு தொடர்கிறது.இன்னொரு புறம் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது.மட்டக்களப்பில் மைலத்தனை மேய்ச்சல் தரைகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கே ஆக்கிரமிப்பு நடக்கின்றது.தமிழ்மக்களின் கால்நடைகள் இரவில் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகின்றன.இன்னொருபுறம் திருகோணமலையில் கன்னியா வெந்நீர் ஊற்று, குருந்தூர் மலை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை போன்றவற்றில் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது. குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே நாட்டின் தளபதி சவீந்திர டி சில்வா 100பிக்குகளோடு நாவற்குளிக்கு வந்திருக்கிறார். அங்கே கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு கலசத்தை வைப்பது அவர்களுடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனையிறவில், கண்டி வீதியில், தட்டுவன் கொட்டிச் சந்தியில், கரைச்சி பிரதேச சபை இலங்கைத்தீவின் மிக உயரமான நடராஜர் சிலையை கட்டியெழுப்பிய பின் தளபதி சவேந்திர டி சில்வா நாவற்குழிக்கு வருகை தந்திருக்கிறார்.

அதாவது அரசின் அனுசரணையோடு ராணுவ மயப்பட்ட ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் தமிழ்மக்கள் அதற்கு எதிராகப் போராடும்போது அவர்களோடு வசந்த முதலிகே வந்து நிற்பாரா? ஜேவிபி வந்து நிக்குமா? சஜித் வந்து நிற்பாரா? அல்லது குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சுலோக அட்டைகளைத் தாங்கியபடி சந்திகளில் நிற்கின்ற இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறிய கட்சிகள் வந்து நிற்குமா?

இல்லை. அவர்கள் வர மாட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களைத் தீண்டியதால் அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வருகிறார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனப்பிரச்சினைதான் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இனப் பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்மக்கள் அவர்களோடு எந்த அடிப்படையில் இணைந்து போராடுவது?

அதே சமயம் வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் வெற்றி பெறவில்லை என்பது ரணிலுக்கு ஆறுதலானது. தனக்கு எதிராகத் தமிழ் மக்களை எதிர்க்கட்சிகளால் அணி திரட்ட முடியாது என்பது அவருக்கு ஒரு விதத்தில் ஆறுதலான விடயம். தங்களுக்கிடையே ஒற்றுமைப்பட முடியாதிருக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களையும் இணைக்கமுடியாமல் இருப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆறுதலான ஒரு விடயம்தான்.

மேலும் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன காலத்தையொட்டி கிண்ணியா வெந்நீரூற்று விவகாரம் மீண்டும் சூடாகி இருக்கிறது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரமும் ஊடகங்களில் சூடான செய்தியாக இருக்கிறது.

இவை தற்செயலானவைகளா? அல்லது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்படுகின்றவையா?என்று ஒரு நண்பர் கேட்டார். ஏனெனில் இது போன்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை இப்பொழுது ஏன் தீவிரப் படுத்தவேண்டும்? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில், அதைவிடக் குறிப்பாக வசந்த முதலிகே யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன ஒரு பின்னணியில், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்வதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்று மேற்சொன்ன நண்பர் கேட்டார்.அவருடைய கேள்வி நியாயமானது.

தமிழ் மக்களை எதிர்நிலைக்கு தள்ளிவிட்டால்,அவர்கள் வசந்த முதலிகேயோடு இணைய மாட்டார்கள். தங்களோடு சேர்ந்து போராட வா என்று கேட்பார்கள். அதை வசந்த முதலிகே செய்ய மாட்டர். ஜேவிபி செய்யாது.

எனவே ஒருபுறம் தமிழ் மக்களின் கவனத்தைப் புதிய பிரச்சினைகளின் மீது திசை திருப்பி விடலாம். இன்னொருபுறம் தென்னிலங்கையின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வடக்குடன் இணைவதைத் தடுக்கலாம்.

அதாவது தொகுத்துக்கூறின் தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள்வதை ரணில் கெட்டித்தனமாகத் தடுத்துவருகிறார்.

அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பலமான கூட்டு ஜனவசியம் மிக்க தலைமையின் கீழ் உருவாகவில்லையென்றால் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாது.

பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் சரி செய்யும்வரை அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டேயிருக்கும்.

‘இனப்படுகொலையாளியே வெளியேறு’: யாழில் விகாரையில் கலசம் திறக்க வந்த சவேந்திர சில்வாவிற்கு எதிர்ப்பு!

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்தில் கட்டப்பட்டுள்ள விகாரையின் கலச திரை நீக்கம் இன்று இடம்பெற்றது.

சமீத்தி சுமன என்ற இந்த விகாரையின் கலச திரை நீக்கத்தில் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றினார். அவருக்கு எதிராக போராட்டமும் இடம்பெற்றது.

இதற்காக தென்பகுதியிலிருந்து பேருந்துகளில் பிக்குகளும், பொதுமக்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதன்போது, மக்கள், முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.