காஸாவின் தற்போதைய நிலை இலங்கையின் இறுதிப் போரின் ஆரம்பத் தருணங்களை நினைவுபடுத்துகின்றது

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன.அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதன் பிரதான விளைவு என்னவென்றால் தொடர்ச்சியான வான்வெளி ஆட்டிலறி தரைதாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்தன.விடுதலைப்புலிகளை பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆயுதங்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் நாட்களில் காசாவில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாது என நம்புகின்றேன் பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ரணில் அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது

சர்வதேச விசாரணை நடாத்த முடியாது. ஐ.நா மனித உரிமைத் தீர்மானங்களை தான் நிராகரிப்பதாகவும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்து அழகு பார்க்கும் தரப்பு மேற்குலகம் இல்லை என்று மக்களை ஏமாற்றும் வகையிலும் மிகவும் கடும் தொனியில் பதில் வழங்கினார் .

ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசில் பிரதமராக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைத் தீர்மானத்தை ஏற்று கால நீடிப்பு பெற்றத்தை மறந்து விட்டாரா? அல்லது ராஐபக்ச அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருப்பதால் நிராகரிப்தாக கூறுகிறாரா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

நாட்டை முன்னேற்றுவதாக வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும் வார்த்தை ஜாலங்களால் கதை அளக்கும் ஐனாதிபதி ரணில் விக்கரமசிங்க ராஐபக்சாக்கள் தமது ஆட்சியில் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு அஞ்சி தொடர்ந்து நிராகரித்த சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா மனிதவுரிமைத் தீர்மானங்களை ரணில் விக்கிரமசிங்காவும் ஏற்றுக் கொள்கிறார் என்றால் ஐனாதிபதி நாட்டை முன்னேற்ற வில்லை ராஜபக்சக்களை காப்பாற்றுகிறார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

இலங்கைத் தீவு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான நிலையான வளர்ச்சியை அடைய வேண்டுமாயின் பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் சுயாதீன சர்வதேச விசாரணை பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடாத்தப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும் இதனை மேற்கொள்ளாமல் ரணில் அல்ல எவர் ஜனாதிபதிக் கதிரைக்கு வந்தாலும் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது.

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது காரணம் மக்கள் ஆணை இழந்த பாராளுமன்றத்தை வழிநடத்தும் மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் ? – இலங்கை ஜனாதிபதி கேள்வி

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

DW NEWS உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ

நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர் நான் அவ்வாறு செயற்படவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து பிரிட்டனில் பலர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் ஏன் நீங்கள் சனல் 4னை மாத்திரம் கருத்தில் கொள்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்உறுதியான வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தமைக்கு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்- சிஐடியின் முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஏன் அது பற்றி கேள்வி எழுப்பகூடாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்புகின்றது உங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் அதனை முதலில் என்னிடம் கேட்கவில்லை நான் கேள்வி எழுப்பிய பின்னரே கேட்கின்றீர்கள் நீங்கள் சனல் 4 அறிக்கை முற்றிலும் உண்மையான விடயம் என்பது போல என்னிடம் கேள்வி எழுப்பினீர்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய மைத்திரி மற்றும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.

எனினும் அதனை பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!! – ஜெனீவாவில் அன்புமணி இராமதாஸ்

தமிழினப் படுகொலை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என பாமகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில்உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இனவாதம் பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான 21-ஆம் நூற்றாண்டின் முதலாவது அட்டூழியம் மற்றும் குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அழைப்பை செயல்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புடைமைத் திட்டத்தின் திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களைக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசின் மீது பல்வேறு வகையான தடைகளை விதித்தல் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நீதிமன்றங்களில் சிவில் குற்றவியல் வழக்குகளை தொடருதல் உலகில் இப்போது செயல்பாட்டில் உள்ள பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றங்களுக்கு போர்க்குற்றம் குறித்த வழக்குகளை மாற்றுதல் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி விசாரிக்கும் வகையில் பன்னாட்டு குற்றவியல் நீதி வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்க வேண்டும் என்று ஐநா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி பரிந்துரை வழங்குவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்ன் பொறிமுறைக்கு உறுப்பு நாடுகள் கீழ்க்கண்ட வகைகளில் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி சாத்தியமாகக் கூடிய அனைத்து சட்டத் தளங்களிலும் வழக்குகளை வலிமையாக்குவதன் மூலம் பொறுப்புடைமைத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள வலிமையான குழுவை அதே நிலையில் பராமரித்தல் மற்றும் வலுப்படுத்துதல்.

இதுவரை மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழினப்படுகொலை மற்றும் 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் திட்டமிட்ட பரவலான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் பொறிமுறை மூலம் ஆதாரங்கள் திரட்டப்படுவதை உறுதி செய்தல்.

மூன்றாவதாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் காலம் காலமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவும் இலங்கை அரசின் உதவியுடன் இந்து கோயில்கள் சிதைக்கப்படுவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை மாற்றத்தை தடுத்து நிறுத்துதல்.

ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக இலங்கை அரசி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றம் மற்றும் பிற பன்னாட்டு பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளுக்காக அமெரிக்கா ஓரவஞ்சனை செயற்பாடு – சரத் வீரசேகர

அமெரிக்க தூதரகத்தால் தனக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே அவர்கள் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் இது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அமெரிக்காவின் வாஷிங்டனில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விசாவிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாம் நாட்டைப்பற்றியும், நாட்டின் சுயாதீனத்தன்மை பற்றியும் பேசுகின்றமையால் அமெரிக்கா எமக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு எமக்கு விசா மறுக்கப்பட்டிருக்கலாம்.

நான் இதற்கு முன்னர் அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்றிருக்கின்றேன். அவ்வாறிருந்தும் தற்போது எனக்கு விசா வழங்க மறுத்துள்ளனர். தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே இவர்கள் இதன் மூலம் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். விசா வழங்குவதென்பது அமெரிக்காவின் உரிமையாகும்.

எனவே இவ்விடயத்தில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் ஒரே நாட்டுக்குள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற விடயங்களில் அமெரிக்கா ஓரவஞ்சனையாகவே செயற்படுகிறது.

அதே போன்று யாரை அனுப்ப வேண்டும் என்றும் அவர்களால் கூற முடியாது. அது எமது உரிமையாகும். இவர்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மையை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் துணிச்சலுடன் செயற்பட வேண்டும். தனிப்பட்ட விவகாரங்களில் உங்களால் தலையிட முடியாது என்று அரசாங்கம், அமெரிக்காவுக்கு நேரடியாகக் கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மனித புதைகுழிகளை மறைப்பதற்காகவே அவ்விடங்களில் விகாரைகள்? ரெலோ தலைவர் செல்வம் எம்.பி சந்தேகம்

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொக்குதொடுவாயில் மனித புதைக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது எனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டு பிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 09 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது முழுமையான 17 உடற்பாகங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வு அகழ்வு நடவடிக்கைகள் கடந்த 06 ஆம்; திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் 9 ஆம் நாள் அகழ்வு பணிகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த அகழ்வு பணிகள், தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ். நிரஞ்சன், தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்றைய அகழ்வு பணியின் போது, ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ-1124 அடையாள இலக்கமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அகழ்வு பணி இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் என்றுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை – அலன் கீனன்

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த வருடம் கறுப்பு ஜுலையின் 40 ஆவர் நினைவுதினம். இலங்கை தலைநகரில் ஏற்பட்ட வன்முறைகளால் 3000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரம் பேர் நாட்டைவிட்டு தப்பியோடியிருந்தனர். பல ஆயிரம் உடமைகள் சேதமாக்கப்பட்டன. அதுவே முழு அளவிலான போருக்கு வழிவகுத்திருந்தது.

இந்த போரில் பல ஆயிரம் மக்கள் கொல்ப்பட்டனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலர் திரும்பிவரவில்லை. தமது பிள்ளைகளை தேடி உறவினர்கள் கடந்த 5 வருடங்களாக போராடி வருகின்றனர். அங்கு மனித புதைகுழிகள் உள்ளன.

ஆனால் இவை எவற்றுக்கும் அங்கு நீதி கிடைக்கவில்லை. வாக்குறுதிகளை வழங்குவது இலங்கை அரசுகளின் வழக்கமாகிவிட்டது. விசாரணைகளை அரசுகளே குழப்பி அதனை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லாது தடுக்கின்றன.

உதாரணமாக உடலகம ஆணைக்குழுவை கூறலாம். மகிந்தாவே அதனை அமைத்தார். அவரின் ஆட்சிக்காலத்தின் முதலாண்டு பகுதியில் இடம்பெற்ற 17 படுகொலைகள் தொடர்பான விசாரண அது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அவர்கள் அனுபவங்களை கற்பதும், நல்லிணக்கப்பாடும் என்ற குழுவை அமைத்தனர். இந்த குழு காலத்தை கடத்துவதிலும், அனைத்துலக விசாரணைகளை தடுப்பதிலும் தான் கவனம் செலுத்தியது. பொதுமக்களின் படுகொலைகளில் படையினருக்கு உள்ள தொடர்புகளையும் அது மறைக்க முயன்றது.

எனவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்றால் அங்கு விசாரணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதுடன் அவர்களின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் அதற்கான அனைத்துலக உதவிகளும் பெறப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.