தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) பிரித்தானியக் கிளைக்கூட்டம் இன்று இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரித்தானியக் கிளையின் கூட்டம் சனிக்கிழமை மாலை கரோவில் தலைவர் திருவாளர் சாம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களுடன் எதிர்காலத்தில் வெளிநாட்டு கிளைகளின் பங்களிப்புகள், புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்து பயணித்தல் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.


இன்றைய கூட்டத்தில் இணைந்து கொண்டு சிறப்பித்த மூத்த உறுப்பினர்கள் மற்றும் சக கிளைத்தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் – செல்வம் எம்.பி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடன் உதவியை வழங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிதி எமது ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் வைத்தியசாலைகள், பாடசாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

அதேவேளை, நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒரு அம்சமாக அமைய வேண்டியது அவசியம்.இந்த எமது கோரிக்கையையும் அதில் உள்ளடக்குமாறு நாம் சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து செயற்பட்டமையே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணமாகும். ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அதிபரைக் கேட்டுக்கொள்கின்றோம். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து நாடு செழிப்புள்ளதாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுத் தருகின்ற கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது – செல்வம் எம்.பி

மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் என்ற ஒன்று இல்லை என்ற ஜனாதிபதியின் கூற்று எந்தளவிற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை.

ஏனெனில்  தேர்தலிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது ஐக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்களும்  பல இடங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்கள், அப்படியிருக்கும் போது ஜனாதிபதியின் கூற்று வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

தேர்தலை நடாத்துவதில் நிதிப்பிரச்சனை இருக்குமானால் அதனை முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் போது அவர் இவ்வாறு தெரிவிப்பதில் நியாயம் இருக்குமா என்று தெரியவில்லை.எனவே தேர்தலை நிறுத்துவது ஜனநாயக விரோதமானது என்பதே எனது கருத்து. உண்மையில் மாகாணசபை தேர்தலே முதலில் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகள் அதனை முதன்மையானதாக கருதவில்லை. எமது நிலங்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் 13 வது திருத்ததில் இருக்கின்றது. மாகாணசபை முறைமை கட்டாயம் வேண்டும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.

அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் போது முதலில் எதிர்ப்பவர்கள் பௌத்த பிக்குகளாகவே இருக்கின்றனர். இது ஒரு அர்த்தமில்லாத செயற்பாடு.

வடகிழக்கில் ஒரு நீதியான தீர்வை வழங்கமுடியாது என்ற செய்தியை பிக்குகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர். 13 வது திருத்தம் அமுல்படுத்தப்பட்டாலும்பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்று ஜனாதிபதி சொல்கிறார். அவரும் பௌத்த பிக்குகளின் சிந்தனையில் செயற்ப்படுவதுபோல தெரிகின்றது. எனினும் சிங்கள மக்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என்று அர்த்தமில்லை.

தமிழ்த்தரப்பிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி அதனை  எதிர்க்கின்றது. பௌத்தபிக்குகளுடன் இணைந்து அவர்கள் இதனை எதிர்ப்பது வேடிக்கையானதாக இருக்கின்றது. சமஸ்டியே வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதனை பெறுவதற்கான செயற்பாட்டை முன்வைக்கவில்லை. அதனை வென்றெடுப்பதற்கான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.

நான் அவர்களிடம் கேட்கின்றேன் மாகாணசபை முறைமையை எதிர்க்கும் நீங்கள் மாகாணசபை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா. அல்லது எதிர்த்து நிற்பீர்களா. இந்த கேள்விக்கு பதில் வழங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுநிற்கின்றேன்.

13 வது திருத்ததின் ஊடாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் கேட்கின்றோம். எனவே இந்தவிடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். என்றார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை ரெலோ தலைவர் செல்வம் எம்.பி நிராகரித்தார்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கிய செயன்முறையில், நம்பிக்கை கொள்ளத்தக்க எந்தவிதமான உடனடி நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. காணி சுவீகரிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம, மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என எதையும் அரசாங்கம் செய்யாத சூழலில், அரசை காப்பாற்றும் விதமான எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டோம் என செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை; நீதி அமைச்சருக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை . அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் நன்றாக கதை அளந்து இருக்கிறார். நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விஷமத்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமாகும்.

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப்பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு ஜனாதிபதியிடம் கடந்த ஆவணி மாத சந்திப்பிலே நாங்கள் கையளித்திருந்தோம். அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட முடியும் என்பதையும் சட்டம் சொல்கிறது.

இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா? அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம்.
அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

‘சுதந்திர தினம் தமிழருக்கு இல்லை’ பெப்ரவரி 4 மக்கள் எழுச்சி போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு – செல்வம் எம்.பி

நான்காம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்விற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியினுடைய கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்டத்திலே பிரிந்து சென்று வரும் தேர்தலிலே பங்கு பற்றலாம் என முடிவெடுக்கின்றார்கள். மட்டக்களப்பில் வடக்கு கிழக்கிலே தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் போராடுகின்றனர் அதே வேளை முல்லைதீவில் நான்கு நாட்களாக விடுதலைப்புலி போராளி மாதவன் வேலுப்பிள்ளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொள்கின்றார். இந்த இரண்டு போராட்டங்களும் தமிழரசு கட்சியினுடைய காதுகளில் எடுபடவில்லை.

நாங்கள் அந்த போராளியை சென்று பார்வையிட போது சில கோரிக்கைகளினை எழுதி அதை நடைமுறைபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் எனக்கூறியிருந்தார். குறிப்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதில் நாங்கள் கையெழுத்திட்டோம்.விக்கினேஸ்வரன் ஐயாவும் கையொப்பமிட்டு உண்ணா நோம்பினை முடிவுக்கு கொண்டு வந்தார்.

எமக்கு வழிகாட்டியாக இருந்த தமிழரசு கட்சி ஒரு சிறிய தேர்தலிலே பிரிந்து செல்வதாக முடிவெடுப்பது சுமந்திரன் போன்றோரின் உள்நுழைவு தான் காரணம். இதனாலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விலகிச்சென்றார்கள். அதனை தொடர்ந்து பிரேமசந்திரனின் கட்சியும் விலகி சென்றது. ஆமை புகுந்த வீடு விளங்காது.

இவ்வாறாக அவர் வந்த பின்னர் வாக்காளர்களும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் குறைந்தது. இன்று 10 ஆக இருக்கின்றோம். 3 கட்சிகள். முன்னர் 6 காட்சிகள் இருந்தன. அதன் பின்னர் வெளியில் நாங்கள் 6 காட்சிகளாக இயங்கினோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை உள்ளெடுக்க விரும்பவில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் சம்மந்தன் ஐயா ஏற்றுக்கொண்டார். சுமந்திரன் மறுத்தார். அந்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். எமக்கும் சில காட்சிகள் மேல் கோபமுள்ளது. அதனை உடனடியாக தீர்க்க முடியாது என்று சொன்னார்கள்.

அவ்வாறிருந்தும் நங்கள் இறுதியாக ஜனாதிபதி பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக இவ் 6 கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்தாலொசித்தது தான் சென்றோம். மக்களுடைய தேவைக்காக ஒற்றுமையாக செயற்பட்ட நாங்கள் இந்த தேர்தலுக்காக பிரிந்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் எவரால் கொண்டுவரப்பட்டது?

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்கு மனமார்ந்து சேவையாற்ற வழங்கியதற்கு வணங்குகின்றேன். விடுதலையின் கட்சியாகவே இனி திகழும். விடுதலை தலைவனின் அங்கீகாரம் ஊடாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே, இந்த கட்சிகளின் பெயர்கள் உச்சரிக்கப்படாது.

தேர்தலின் பின்னர் இணைவோம் என பொய் பிரசாரம் செய்கின்றனர். அவ்வறை இணைவதாயின் எம்

குத்து விளக்கு சின்னத்தில் தான் தேர்தல் கேட்க வேண்டும் . பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என அறைகூவல் விடுகின்றோம்.

ஒவ்வொரு நிலமும் திணைக்களத்தாலும், முப்படையாலும் அபகரிக்கபடுகின்றது. ஜனாதியிடம் கேட்டால் கட்டளை இடுகின்றார். அதனை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

பேச்சு வார்த்தை என்பது இப்பொழுது தம் சுயநலத்திற்காக அழைத்து பேசிய பின்னர் பேசிவிட்டோம் என்று சொல்லும் நிலையிலே உள்ளது. அதனால் நாம் ஒன்றாக சர்வகட்சி மாநாட்டிற்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளோம். காரணம் நிலத்தை அபகரிக்கின்ற,நிலத்தை விடுகின்ற சூழலை கேட்டோம் அத்தோடு அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நியாயம் கிடைக்கவில்லை.

தென்னிலங்கையில் எம் நிலங்களை பறிக்கின்ற நிலை மாறும் ஒற்றுமையின் சக்தியாக செயற்படக்கூடிய

வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கும். வரும் 4 ஆம் திகதி சுதந்திரதின விழாவிலே அந்த சுத்தந்திரம் எமக்கில்லை என சொல்லுகின்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள பல்கலைக்கழக மாணவர்களிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி உங்களுடன் பயணிப்போம் என்பதை செய்தியாக கூறுகின்றோம்.

ஆகவே எமது போராட்டம் எதுவானாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் நிற்கும். எமது வீர மறவர்களின் கரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது. மண்ணினதும் மக்களினதும் விடுதலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக அணிதிரண்டு மக்களாக செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலே மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்- செல்வம் எம்.பி.

காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பாக இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடை பெறுகின்ற சர்வ கட்சி கூட்டத்தில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
அதற்கான காரணம் கடந்த காலங்களில் ஜனாதிபதியால் வாக்குறுதி அளித்த விடயங்களான நில அபகரிப்பு மற்றும் சிறைக்கைதிகள் விடுதலை போன்ற பல விடயங்களை அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தால் இன்றைய தினம் நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்ட விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை வைக்கின்றோம்.
தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் கேட்ட விடயங்கள் நிறை வேற்றப்படுமாக இருந்தால் இனி வரும் ஏனைய கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
இது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் நேரில் சந்தித்து கூற இருக்கின்றோம்.ஜனாதிபதி உத்தரவிட்டும் கூட வன வள திணைக்களம் தங்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே கடந்த பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் வந்து வாக்களித்த 108 ஏக்கர் பொதுமக்களின் காணி இன்னும் விடுபடவில்லை. ஆகவே அதை எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.
எனவே நாங்கள் வைத்த கோரிக்கைகள் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை. அவை சாத்தியமாக இருந்தால் அடுத்தடுத்து கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ் அரசு கட்சி வெளியேறிய பின் கூட்டமைப்பு பலமடைந்துள்ளது; கஜேந்திரகுமாரும் இணைந்துகொள்ள வேண்டும்: செல்வம் எம்.பி அழைப்பு

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை சந்திக்க செல்கின்ற போது நிலங்களை சுவீகரிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, எடுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் செயலை செய்ய வேண்டும் எனக் கோரினோம். அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக பேசியதுடன், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். காணாமல் போனோர் சம்மந்தமான பிரச்சனை தொடர்பிலும் பேசினோம். இவ்வாறான விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என 31 ஆம் திகதி காலக்கெடு கொடுத்து இருந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. இவை தொடர்பில் ஒன்றுமே நடைபெறவில்லை.

இதனை நாம் ஜனாதிபதிக்கு நேற்று (10) தெரியப்படுத்தினோம். 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் போது நிலம் சம்மந்தமாக தான் சில தீர்மானங்களை எடுப்பதாகக் கூறினார். காணி பறிப்பு தொடர்ந்தும் பறிக்கப்படுகின்றது.

அரசியல் யாப்பில் உள்ள அதிகார பரவலாக்கல் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அதிகாரங்கள் ஊடாக எடுக்கப்பட்ட சட்டங்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தோம். அதில் பொலிஸ், நில அதிகாரங்கள் சம்மந்தமாக சில முணு முணுப்புக்களை அங்கு காண முடிந்தது. எதிர்வரும் 4 ஆம் திகதி தீர்வை வழங்குவதாக சொல்லியிருந்தார். ஆனால் எதுவும் நடைபெறாமல் தொடர்ச்சியாக மேசையில் பேசி போகும் நிலைதான் காணப்படுகின்றது. ஆகவே, நாங்கள் கூறிய விடயங்களில் எதை செய்யப் போகின்றீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவதா, இல்லையா என தீர்மானம் எடுப்போம் எனத் தெரிவித்தோம். அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை கூட நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் எப்படி இனப் பிரச்சனையை தீர்க்க முடியும். நாங்கள் போயிருக்கா விட்டால் தாம் பல விடயங்களை செய்ய இருந்ததாகவும், நாம் வர வில்லை எனவும் கூறுவார்கள். அதற்காகவே பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.

தமிழ் தரப்பு வில்லை எனச் சொல்லியிருப்பார்கள். இதனால் சென்றோம். அவர்கள் நல்லிணக்க சமிஞ்க்ஞையை காட்ட வேண்டும். எனவே இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைப் பொறுத்து தான் அடுத்த பேச்சுக்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித் தனியாக பிரிந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து பயணித்தன. எங்களைப் பொறுத்தமட்டில் நானும், சித்தார்த்தன் அவர்களும் கட்சி ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு கடிதம் எழுதினோம்.

ஏனைய கட்சிகளையும் அரவணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக நாங்கள் எல்லோருக்கும் வலுவான ஒற்றுமையாக இருப்பதாக காட்ட முடியும். மக்களது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். நாங்கள் 6 கட்சிகள் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதினோம். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினோம். இதன்போது, எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக ஏனைய தேசிய கட்சிகளையும் உள்ளெடுப்பது சம்மந்தமாக சம்மந்தன் ஐயாவுடனும் பேசினோம். கடிதமும் எழுதினோம். ஆனால் அந்த கடிதத்திற்கான பதில் வருவதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்ற முடிவை எடுத்திருந்தார்கள். அந்தவகையில், நாங்கள் வைத்த கோரிக்கைகு பதில் தராது இந்த முடிவை எடுத்து வெளியில் செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் எமது கூட்டில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சனையை வென்றுறெடுப்பதற்கு நாங்கள் பலமான கூட்டாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கூட்டில் வந்து இணைய வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே கூட்டு என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும். அதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பங்களிப்பு இருக்கும். தனிப்பட்ட கட்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுக் கொடுக்க முடியாது. மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தனித்து செல்ல தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட பத்திரிகையாளர்கள் இந்த கூட்டமைப்பு உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடும். தொடர்ச்சியாக 6 கட்சிகள் ஒற்றுமையாக பயணித்தோம்.

தேர்தல் தொடர்பில் எங்களது கடிதத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவு கவலையளிக்கிறது. மக்கள் ஒற்றுமையைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. கூட்டமைபில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், முன்னர் விலகிச் சென்றவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள். கூட்டமைப்பு சிதைவு பட முடியாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள். தற்போது தேர்தல் ஒன்று வந்துள்ளது. தேர்தல் தான் எங்களது குறிக்கோள் அல்ல. இந்த தேர்தல் முடிந்த பின் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பை உருவாகின்ற, தொடர்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற, மக்களது ஆலோசனைகளைப் பெறுகின்ற செயற்பாடுகளை செய்ய இருக்கின்றோம். தனிப்பட்ட கட்சிகளின் விருப்பு வெறுப்பு இங்கு இருக்காது. இது ஒரு கூட்டு. சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். நாம் பிளவுபடாமல் மக்களது நம்பிக்கையை வீண்போகாது, மக்களது நலனை முன்னிறுத்தி கட்டுக்கோப்பாக செயற்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படும். பொது சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொது சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது கூட்டமைப்பின் இலட்சியம் இல்லை-செல்வம் எம்.பி

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் வைத்து நேற்று புதன்கிழமை(4) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் நாங்கள் சந்திக்க வேண்டும்.எனினும் தேர்தல் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முறையானது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆளுகின்ற நிலை இல்லாத முறையாக இருக்கிறது.மக்களினுடைய எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்பது எமது நோக்கம்.
இந்த கால கட்டத்தில் இந்த தேர்தல் வருகிறது என்பதை பார்க்கின்ற போது அரசாங்கம் நடக்க இருக்கின்ற தேர்தலுக்கான நிதி யை உலக நாடுகளிடம் இருந்து பெற்று மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை மக்கள் செலுத்துகின்ற வாக்கின் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

எனவே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதும் எமது பிரதான கருத்து.

இத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும்.தேர்தலுக்கான அமைப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒற்றுமையாக எமது இனப்பிரச்சினை,மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றை நாங்கள் தட்டிக்கேட்கும்,அதனை செயல் படுத்துகின்ற விடையங்களை கையாளுகின்ற ஒரு அமைப்பாக தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்பட வேண்டும்.

நாங்கள் முன் வைத்த கோரிக்கை மட்டக்களப்பில் இடம் பெற இருக்கும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன்.
ஒற்றுமையை வலியுறுத்துகின்ற வகையில் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின் நாங்கள் என்ன செய்வது என்ற நிலைப்பாட்டை தெரிவித்துக் கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரிசி : செல்வம் எம்.பி அரச அதிபருக்கு கடிதம்

இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் தொடர்பில் தகவல் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வவுனியா அரசாங்க அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.

இவ்விடயத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.