பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம். பி கோரிக்கை

ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படுவதை தடுக்க ஜனாதிபதி முன்வர வேண்டுமென குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக என்பதால், நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது என அவர் கூறினார்.

இனப்பிரச்சனை தொடர்பான பேச்சு: இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ கலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது என்றும் நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரந்தாலும் அப்போது அரசாங்கத்திற்குல் ஏற்பட்ட பிரச்சினையால் தட்டிக்கழிக்கபட்டது என்றார்.

தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ நா தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம், பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இருக்கலாம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் சந்தேகம் வெளியிட்டார்.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இனப்பிரச்சினை தீர்வுக்கு தற்போது அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் காலம் காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வு எட்ட முடியும் என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுமா ? என்பதை அறியவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி சபையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களிடம் வினவிய போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டார்கள்.

13 பிளஸ் இணக்கம் தெரிவித்தார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை  முழுமையான அதிகாரங்களுடன் பகிரக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளது.

அதிகாரங்களுடன் மாகாண சபை செயல்படும் போது எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அனைத்து மாகாணங்களுக்கும் முழுமையாக அதிகாரங்கள் உரித்துடையதாக்கப்பட வேண்டும்.  இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரதான விடயம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை தமிழ் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது இளம் தலைமுறையினர் இனம்,மதம் பேதம் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள எமது புலம்பெயர் உறவுகளை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் முதலீடு செய்ய வேண்டுமாயின் வங்கிக் கட்டமைப்பு சில விடயங்களை  திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

வட – கிழக்கு மாகாண வீட்டுத் திட்டங்களை இடையில் நிறுத்தாமல் முடித்துத் தாருங்கள் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.புதிய வீடமைப்பு திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்படமாட்டாது என வீடமைப்புத்துறை அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மை என்று கருதி செய்த விடயங்களில் வீட்டுத்திட்டம் உரிய இலக்கை அடையவில்லை. வீட்டுத்திட்டம் சிறந்ததாக அமைந்திருந்தால் இன்று ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் நன்மை அடைந்திருப்பார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் ஏழ்மையில் வாழந்த மக்கள் இன்று மென்மேலும் பாதிக்கப்பட்டு, வங்கி கடனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வீட்டுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியுதவி இதுவரை முழுமையாக மக்களுக்கு கிடைக்காததால் மக்கள் அரைகுறை குடியுறுப்புக்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை பிறிதொரு அரசியல் கொள்கை கொண்ட கட்சி ஆட்சிக்கு வரும் போது அந்த அபிவிருத்தி திட்டத்தை கண்டு கொள்வதில்லை.

வீட்டுத்திட்ட கடனால் பெரும்பாலானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். பலர் சொல்லனா பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் எடுத்த செயற்திட்ட அபிவிருத்தி பணிகளை தொடர கூடாது என்ற நிலைப்பாடு அரசுகளுக்கு இருக்க கூடாது. வீட்டுத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன தீர்வு, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக உள்ளார் என்றார்

தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையா இனப்பிரச்சினைக்கு தீர்வு? அரசியல் தீர்வு விடயத்தில்  தமிழ் தரப்பினர் முதலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. ஆகவே தீர்வு சாத்தியமற்றது என குறிப்பிடும் நிலையை தமிழ் தரப்பு  தோற்றுவிக்க கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (30) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில்,வர்த்தக,வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு,மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அவரது ஆட்சிக்காலத்தில் அவதானம் செலுத்தாமல் தற்போது மாவட்ட அபிவிருத்தி சபை ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிடுகிறார்.அதற்கு சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அரசியல் தீர்வு வழங்க தயார் என குறிப்பிட்டார்.பிரதான எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை எழுப்பி தீர்வு வழங்க தயாரா என கேள்வி எழுப்பினார்.பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்தன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என குறிப்பிட்டார்.

சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி குழு பற்றி தற்போது குறிப்பிடப்படுகிறது. தோல்வியடைந்த இந்த திட்டத்தின் ஊடாகவா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என்பது கவலைக்குரியதாக உள்ளது.

சமஸ்டி முறையிலான தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புகள் முதலில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.தீர்வு விவகாரத்தில் தமிழ் தரப்புகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை,ஆகவே தீர்வு கைநழுவி சென்று விட்டது என ஆட்சியாளர்கள் குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க வேண்டாம் என்பதை தமிழ் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

வடகிழக்கு மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் -ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை போக்குவரத்து சேவைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கும் மன்னாருக்கான ரயில் சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்கள் தங்கள் மனங்களில் நினைவு கூரும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்துடன் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த விடயத்தில் நல்லிணக்க சமிக்ஞையாக ஜனாதிபதி செயற்பட்டமை வரவேற்கத்தக்கது.

சில இடங்களில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெரியளவில் நெருக்கடி கொடுக்காது நல்லிணக்க அடிப்படையில் நடந்துகொண்ட ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வரவு செலவு விவாதத்தில் சில முக்கிய விடயங்களை கூற வேண்டியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை போக்குவரத்து சேவைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கும் மன்னாருக்கான ரயில் சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும்.

அத்துடன் வெளிநாடுகளில் மீனவர்கள் இலங்கை மீனவர்கள் கைதாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இங்கு கைதாகும் போது அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் உயர்ஸ்தானிகராலயம் செய்கிறது. அதேபோன்று இலங்கை மீனவர்கள் பிடிபடும் போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை சட்டத்திற்கு முரணான வகையில் வெளிநாடு செல்லும் நோக்கில் சென்று இந்தியா போன்ற நாடுகளில் பல வருடங்களாக சிறையில் இருப்பவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றேன் என்றார்.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு ஒதுக்கீடு : எதிராக வாக்களிப்போம் – செல்வம் எம்.பி.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆகவே நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், பாதுகாப்பிற்கு பெருமளவில் செலவழிக்காமல் இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிலையான நீண்டகால தீர்வுகளை இரு அமைச்சுக்களாலும் வழங்க முடியும் எனினும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? : ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கேள்வி

வட மாகாண ஆளுநரால் அவரின் செயலகத்தில் நேற்று (15.11.2022) நடந்த கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது. இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது. நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும்.

ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் இந்த கூட்டம் நடந்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஐ.நா பங்களிப்பு அவசியம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி பங்கேற்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே குரலில் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் அடங்கலான குழுவினரை இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு எடுத்துரைத்தனர்.

கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அரசியல் ஸ்தீரத்தன்மை அற்ற நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு பற்றியும் ஐ.நா குழுவினருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

. தமிழ் மக்களின் அபிலாஷைகள் இணைந்த வட கிழக்கிலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும். – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு எம்.பிக்களுடன் அடுத்தவாரம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமான பேச்சுகள் முன்னெடுக்கின்றபோது கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடன் சந்திக்கும் அதேநேரம் கிழக்கு உறுப்பினர்களின் பிரசன்னம் அவசியமாகின்றது.  வடக்கை தனியாகவும் கிழக்கைத் தனியாகவும் பார்க்கமுடியாது.

அதேநேரம், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப்  பூர்த்தி செய்வதாக இருந்தால் அது இணைந்த வடக்கு கிழக்கிலேயே அமைய வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடனான பேச்சுகளின் போது கிழக்கு உறுப்பினர்களையும் உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது. இதனால் ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கோரிக்கை விடுப்பதென தீர்மானித்துள்ளோம்.  பெரும்பாலும் இந்தச் சந்திப்பு அடுத்தவார நாடாளுமன்ற அமர்வில் இடைப்பட்ட நேரத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

Posted in Uncategorized