ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் – அருட்தந்தை மா.சக்திவேல்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் செவ்வாய்க்கிழமை (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இது சிங்கள பௌத்த நாடு. நான் வடகிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன்” என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கூறி இருப்பது பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல நாட்டின் சட்டத்தை மிதித்து, இனவாத மதவாத வன்முறையை தூண்டும் வக்கிர நச்சு வார்த்தை  என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் இவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும்.

வடகிழக்கு தமிழர்களின் தாயக பூமி. இப் பூமியை அரச பயங்கரவாதம் மற்றும் இனவாத திணைக்களங்கள் மூலம் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதோடு சிங்கள பௌத்த இனவாதிகளால் வடகிழக்கின் மரபுரிமை சார் இடங்களும், சைவர்களின் வணக்க ஸ்தலங்களும் சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதோடு; தமிழர்களின் பூர்வீக இடங்களில் பௌத்த சின்னங்கள், தூபிகள்,விகாரைகள் அமைப்பதும்  தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தினமும் போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேவின் சில்வாவின் இப் பகிரங்க பயங்கரவாத வார்த்தை மதவாத வன்முறைக்கு வித்திடுவது மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்ய நினைப்பது பௌத்தத்திக்கும் நாட்டிற்கும் கேட்டையே விளைவிக்கும்.

அரசியல் கட்சிகளாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நாடு விழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடிமட்ட சிங்கள பௌத்த மக்களை தூண்டி அவர்களை வீதிக்கு இறக்கி இழிவான அரசியலை தேர்ந்தெடுக்க முயல்கின்றார். இவரது கடந்த கால வாழ்வில் நாட்டின் சட்டத்தையோ கௌரவத்தையோ மதித்தவர் கிடையாது.

இவரைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும் உள்ளனர். இவர்களும் இனவாத மதவாதத்தை நம்பியே அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். வடகிழக்கிற்கு எதிராக மக்களை தூண்டி விடுவதிலேயே அரசு அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் வாங்குவது நிலையை இது எடுத்துக்காட்டுகின்றது.

இவர்களை மன நோயாளிகள் என்றும் குறிப்பிட வேண்டும். விசர் நாய்களுக்கு தண்ணீரை காண்பது போல இவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளும், மரபுரிமைகளும் தெரிகின்றன. இன்றைய பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இவர்கள் தேவையாக உள்ளனர். இதனாலேயே இவர்கள் சுதந்திரமாக திரிய கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். இந்நிலை நீங்காத வரை நாட்டுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனலாம்.

தற்போது சூழ் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான  தெற்கின் அரசியல் சூழ்நிலைக்கு முகம் கொடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை வலுவாக கட்டமைத்துக் கொள்ளல் வேண்டும். அரசியல் தீர்வு என 13 வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டும் தற்போதைய ஜனாதிபதியின் நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடாது சுய உரிமைக் காக்கும் அரசியலுக்காக ஒன்று பாடல் வேண்டும்.

அரசியல் தீர்வு என பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் எலும்பு துண்டாக 13 காட்டிக் கொண்டிருப்பதும் அரசியல் லாபங்கள் சலுகைகளுக்காக அவற்றின் பின்னால் ஓடுவதும் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமையப் போவதில்லை.

தற்போது மேவின் சில்வா அவர்களின் கூற்றினை தனி மனித கூற்றாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கூற்றாகவோ மற்றும் எடுத்து அசமந்த நிலையில் இருந்து விடாது.

இதுவே நாட்டை எப்போதும் ஆட்சி செய்யும் பேரினவாதிகளின் நிலை என உணர்ந்து அதற்கு நாடாளுமன்றத்திற்குள்ளும்  வெளியிலும் மக்கள் சக்தியை பலப்படுத்தி கூட்டாக எழுந்து நிற்கவும்  தமிழ் அரசியல் தலைமைகள் முன் வரல் வேண்டும். சிவில் சமூக அமைப்புகளும் அதற்கு அழுத்தம் கொடுக்க வலுவான சக்தியாக தம்மை வடிவமைத்துக் கொள்ளலும் வேண்டும் என்றார்.

தமிழரின் தலை பற்றிப் பேசும் மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்ததே! – மனோ கணேசன்

“தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்குத் தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தைத் திருடர்கள், தரகுப் பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்தக் குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டுத் தரகுப் பணம் பெரும் பிரச்சினையால் ராஜபக்சர்களுடன் நடத்திய குடும்பம் பிரிந்ததோ என்ற கேள்வியும் எப்போதும் இந்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் சங்கதி.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“எல்லாவற்றையும் மிஞ்சிய உலக மகா கேலிக்கூத்து என்னெவென்றால் உலகத்துக்கு அஹிம்சையைப் போதித்த போதிசத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரைப் போன்றவர்களிடமிருந்து பெளத்தைப் போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற வேண்டும்” என்றும் மனோ எம்.பி. குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“முன்னையை ராஜபக்ச ஆட்சி காலத்தில், ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பேன் என்றும் இந்த மேர்வின் சில்வா சொன்னார். அப்புறம் அரச ரூபவாஹிணிக் கூட்டுத்தாபனத்துக்குச் சென்று தன் தலையையே உடைத்துக்கொண்டு வந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மக்களாலேயே அரசியலில் இருந்து விரட்டப்பட்டார்.

நாட்டில் விகாரைகளையோ, கோயில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில், பூஜைகளைச் செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால், அதைச் சட்டப்படி அணுக வேண்டும். அந்தச் சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளைக் கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரைப் பாரதூரமானவராக எடுக்கத் தேவையில்லை. ஆனால், இவரது கருத்து பாரதூரமானது. நாட்டில் இன மத குரோதத்தை உருவாக்கும் கருத்து. இவருக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும். அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இது பற்றி தங்கள் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் புகார் செய்ய வேண்டும்.” – என்றார்.

ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சரியான பொறிமுறையை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும்

தற்போது எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்று அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் பல்கலைக்கழக சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது அதே போன்று சட்டரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள சட்டவாளர்களின் பங்களிப்பு இப்போது போன்று தொடர்ந்து கிடைப்பதுடன் அது அனைத்து பிராந்திய மட்டத்திலும் ஒருங்கிணைத்த நிபுணத்துவத்துடன் இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.

அத்துடன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் மேலும் வீச்சாக போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும்.

அரசியலாளர்கள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் பாராளுமன்றை புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தயாராக வேண்டும்.

மேலும் பன்னாட்டு மற்றும் இந்திய அரசின் கவனத்தை மேலும் ஈர்த்து இந்த பாரிய பௌத்த மேலாண்மையை திணிக்கும் பூர்வீக தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக எம்முள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து முன்வருவோம்.

அமைப்புசார் நிலையில் இயங்கும் நாம் அனைவரும் எம் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் எம் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாக செயற்பட இந்த தீர்க்கமான தருணத்தில் அழைப்பு விடுகின்றோம்.

அதே நேரம் இந்த பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகி அரசு தீர்க்க தவறின் இந்த தீவில் இனங்களிற்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்ந்து கேள்விகுறியாகி நாட்டின் எதிர்காலம் அதலபாதாளத்திற்கு செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றோம்

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ள அரசியலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

இருப்பினும் இவற்றை செய்ய தவறின் தமிழர் நாம் தொடர் சாத்வீக போராட்டங்களிற்கும் ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புகளிற்கும் தள்ளப்படுவோம் என இந்த சந்தரப்பத்தில் அரசிற்கு ஆழமாக வலியுறுத்துகின்றோம்.

வடக்கு,கிழக்கில் விகாரைகள் மீது கைவைப்பவர்களின் தலையை எடுத்துக் கொண்டே களனிக்கு வருவேன் – மேர்வின் சூளுரை

வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேலும் கூறுகையில்,“ யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள், எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர். கிழக்கில் உள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.தெற்கிலுள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.

இங்கு பகுதி பகுதியாக ஒன்றும் இல்லை.இது எமது தாய்நாடு.அதற்கான உறுதிப்பத்திரம் எம்மிடமே உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.

மேலும் வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். பிரபாகரனின் பகையை வைத்துக்கொள்ள வேண்டாம். பிரபாகரன் ஆட்கொலை செய்தார். இந்த நாட்டின் இராணுவத்தினர், பொலிஸார் கொன்று குவித்தார். அவர்களின் குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளது. அந்த பகை இன்றும் உள்ளது. இன்றும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதிக்கு நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றைக் கூறுகின்றேன். இந்த நாட்டிலுள்ள வளங்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், வீதிக்கு இறங்குங்கள் என களனி மக்களுக்கு கூறுகின்றேன்.

மேலும் இந்த கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகள் மீது கை வைக்க வந்தால், நீங்கள் மகாநாயக்கர்கள் மீது கை வைக்க வந்தால், நான் வெறுமனே களனிக்கு வர மாட்டேன். உங்களின் தலையை எடுத்துக்கொண்டு தான், களனிக்கு மீண்டும் வருவேன். எனக்கு பணியாற்றுவதற்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் மீண்டும் நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டுமாயின், ராஜபக்ச திருடர்களை பிடியுங்கள், இந்த நாட்டின் திருடர்கள், தரகு பெறுவோர் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இடங்களில் 6 வீதமானவை, பசில் ராஜபக்ச என்ற தரகுதாரர், யாருக்கு கொடுத்தார். இன்று மக்களுக்கு மின்சாரம் இல்லை. விவசாயம் அழிவடைந்துள்ளது, குடிநீர் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.

இதேவேளை நுவரெலியாவில் மகிந்த ராஜபக்ச, கிரிக்கெட் விளையாடுகின்றார். ராஜபக்ச குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் நேரமா இது? 13ஐ வழங்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். சிலர் அதனை வேண்டாம் என்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் ஒன்றை கூறுகின்றேன். நாம் ஜனாதிபதி தேர்தல் முறையை மாற்றி அமைப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வாக்குறுதி எடுங்கள்.”- என கூறியுள்ளார்.

Posted in Uncategorized

பெளத்த மயமாக்கலை தடுத்து நிறுத்திய ஆளுநருக்கு எதிராக பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நிலாவெளி வீதியில் இலுப்பைக்குளத்தில் தமிழ் மக்கள் வாழுமிடத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பிக்குகள் சிலர் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை புல்மோட்டை வீதியின் ஒரு பாதையை மறித்து பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பொலிஸார் பாதையின் ஒரு பகுதியின் ஊடாக போக்குவரத்தை ஒழுங்கமைத்தனர்.

விகாரை அமைக்க அத்திவாரமிடப்பட்ட பகுதிக்கு சென்ற பிக்குகள் அங்கு தற்போது புதிதாக நடப்பட்ட அரச மரக்கன்றுக்கு முன்பாக சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு, பின்னர் வீதிக்கு வந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எது வித விகாரையும் இருக்கவில்லை என அக்கிராமத்தில் உள்ள வயோதிப பெண்ணொருவர் உட்பட சிலர் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனையஅடுத்து. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களுக்கும், பௌத்த மதகுரு ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்ற போதிலும் பொலிஸாரினால் சமரசம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மொரவெவ மஹா திபுல்வெவ ஸ்ரீ இந்திரராமதிபதி பொல்ஹெங்கொட உபரதன தேரர், இந்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆளுநர் செந்தில் தொண்டமான் மகாசங்கத்தை வீதிக்கு இழுத்தார்.இப்போது இப்படி என்றால் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் பிக்குகள் தமது சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

இரா.சம்பந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஆளுனர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக பிக்குகள் குமுறினர்.

கூட்டமைப்பின் தலையீட்டினால் பறாளாய் அரச மரத்தை விஞ்ஞானபூர்வ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

பறாளாய் முருகன் கோயிலின் தலா விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்து, முறையற்ற விதமான வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன், விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என தொல்லியல் திணைக்களத்தினரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இன்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, பறாளாய் முருகன் கோயில் விடயமாக பேச்சு நடத்தினார்கள்.

இன்று, இந்த விவகாரம் பற்றி இருவரும் தனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர், இப்படியொரு பிரச்சினை நீடிப்பது தனது கவனத்துக்கு யாராலும் கொண்டு வரப்படவில்லையென ரணில் தெரிவித்தார்.

பறாளாய் முருகன் கோயிலின் வரலாறு சுமார் 300 ஆண்டுகளிற்கு உட்பட்டது என குறிப்பிட்டு, சம்பவத்தின் பின்னணியையும், வரலாற்று சுருக்கத்தையும் த.சித்தார்த்தன் விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் 2 உண்மைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால், சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார், பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டனர்.

பறாளாய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரம், சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பதே தனது அபிப்ராயம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டிலிருந்த அரசமரங்களையெல்லாம் தறித்து விட்டதாக தெரிவித்தார். அப்படியானால் வர்த்தமானியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

மரத்தின் ஆயுட்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா அது வர்த்தமானியிடப்பட்டது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

அப்படியான பரிசோதனையெதுவும் மேற்கொள்ளாமல், இது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவிற்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

இதன்மூலம், அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய, சட்டபூர்வமற்ற வர்த்தமானியென்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களம் முறையற்ற விதமாக செயற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கையிட, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பணித்தார்.

உடனடியாக வர்த்தமானியை மீளப்பெறுவது, தென்னிலங்கை தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி, தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக மரத்தின் ஆயுட்காலத்தை கண்டறியும் சோதனை நடத்தி, வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

இராணுவத்தினரின் தகவலுக்கமையவே தொல்லியல் திணைக்களத்தினர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்கள் என்ற தகவலையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தமிழர் பிரதேசங்களை பெளத்த தொல்லியல் இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது – ஆறு திருமுருகன்

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களை பௌத்த அடையாள இடங்களாக மாற்ற நினைப்பது மிகுந்த வேதனை தருகிறது. கிழக்கில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சைவ மக்களின் புனித தீர்த்தமாக பலநூறு வருடங்களாக பேணிப்பாதுகாக்கப்பட்டது.

சைவசமயத்தை பெரிதும் நேசித்த இலங்கை வேந்தன் இராவணனோடு தொடர்புடைய இப்புனித தீர்த்தம் இன்று தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் அபகரித்துள்ளமை அநீதியான செயலாகும். தொடர்ந்து தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களை திட்டமிட்டு அபகரிக்க நினைப்பது அதர்மச் செயலாகும்.

தற்போது பறளாய் முருகன் கோவிலில் உள்ள அரசமர விருட்சத்தை சங்கமித்தை வரலாற்றோடு தொடர்புபடுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளமை சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. சைவ நிறுவனங்களையோ, வடக்கில் உள்ள பல்கலைக்கழக அறிஞர்களையோ தொடர்பு கொள்ளாமல் தொல்லியல் திணைக்களம் புதிய பிரகடனங்கள் செய்வது கவலையளிக்கிறது. கீரிமலைப் புனித தீர்த்த கேணியை திடீரென தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது மிகவும் தவறான செயலாகும்.

தெல்லிப்பழை கிராம முன்னேற்றச் சங்கம், வல்லிபுரம் என்ற பெரியவரின் நிதியுதவியுடன் 1916ஆம் ஆண்டு தூர்வைக் குளமாக இருந்த இக்கேணியை பொலிகலால் கட்டி பாதுகாத்தது. இன்றுவரை வலிவடக்குப் பிரதேசசபை குளத்தைப் பாதுகாப்பதுடன் காவலர்களை நியமித்து கண்காணித்து வருகிறார்கள்.

திணைக்களத்திற்கு உரித்தாக பிரகடனம் செய்திருப்பது நீதியற்ற செயல். எனவே ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் மேற்குறித்த பிரகடனங்களை மீளப்பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவமக்களின் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறது. தாங்கள் இவ்விடயத்தில் உடன் அக்கறை எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும், பறாளாய் வர்த்தமானியை மீளப்பெறவும் கோரி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்ப முடிவு

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும் படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.

13வது திருத்தம் தொடர்பில் ரெலோ, புளொட் என்பன தனித்தனியாக யோசனைகளை சமர்ப்பிக்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 கட்சிகளுடனும் கலந்துரையாடி, கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை 10 மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியுள்ளதால், அது தொடர்பில் மட்டும் குறிப்பிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களுடனும் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜனாதிபதி ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு சம்பவங்களை பட்டியலிட்டும், பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட- தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை பொறுத்துக் கொள்ள முடியாது – வேலன் சுவாமிகள்

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தகமானியிலே சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் காலங் காலமாக வழிபட்டு வந்த ஆதி வழிபாட்டுமுறைப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள தமிழர்களின் வடக்குக் கிழக்குத் தாயகத்திற்கு பௌத்தம் கெண்டுவரப்பட்ட சங்கமித்தை வந்த காலத்தில் சிங்களம் என்ற மொழி, இனம் கிடையாது.

ஆனால் அந்தக் காலத்தில் தமிழர்கள் ஆட்சி புரிந்தும் பாரம்பரியமாக வழிபாடுகளை நடாத்தியும் வந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது.

தொல்பொருள் என்பது மிகவும் தொன்மையை எடுத்துக் கூறுவது. அந்த வகையில் இங்கு அனைத்து இடங்களிலும் தமிழர்களின் வழிபாட்டிடங்களே காணப்பட்டிருக்கின்றன. மாறாக சி்ங்கள பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் எள்ளளவும் இடங்கிடையாது.

தமிழர் தாயகத்தில் பறாளாய் முருகன் ஆலயம், கீரிமலை, குருந்தூர் மலை, தையிட்டி, வெடுக்குநாறி மற்றும் மயிலத்தனைமடு போன்ற இடங்களைத் தொல்லியற் திணைக்களம் அடாவடியாக வர்த்தகமானி மூலமாகவும் ஏனைய விதங்களூடாகவும் கையகப்படுத்தி எமது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இவ் வர்த்தகமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். தமிழர் தரப்பிலுள்ள அனைவரும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

சர்வதேசம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதால் நிச்சயம் நீதி கிடைக்கும். எமக்கென்று ஒரு காலம் வந்து சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமக்குரிய தீர்வை நாமே தீர்மானிக்கின்ற பொழுது பார்த்துக்கொள்ளலாம்.

அறம், நீதி என்றோ ஓர் நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களின் நிரந்தரதீர்வு சர்வதேச கண்காணிப்புடன் பொதுசன வா்கெடுப்பாக நடாத்தப்பட்டு எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் என்றார்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று சுழிபுரத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பறாளாய் முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.