சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கேள்வியெழுப்பிய செல்வம் எம்.பி.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் போகின்றார்களா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம். அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன.

அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது? இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ?

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும் பொறுப்புண்டு. அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.