ஜனாவின் வாக்குமூலம் : தமிழ் இளைஞர்கள் அனைவரும் படித்து அறிய வேண்டிய வராலாற்று ஆவணம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

இன்று அக்டோபர் மாதம் முதலாம் தேதி தனது அகவை அறுபதை எட்டும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பா.உ தனது அனுபவத் தொகுப்பான ஜனாவின் வாக்கமூலம் என்ற நூலை வெளியிடுகிறார்.

இந்நூல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது பிறந்த நாளிலே பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் மத்தியில் வெளியிடப் படுகிறது.

தனது பதின்ம வயதிலே, இனத்தின் விடுதலைக்காக சகலவற்றையும் துறந்து உயிரைத் துச்சமாக எண்ணி ஆயுதப் போராட்டத்தை வரித்துக் கொண்டு ஒரு இளைஞன் புறப்படுகிறான். களத்திலே விழுப் புண்களை சுமக்கிறான். தனது கனவிலும் கொள்கையிலும் மாறாத நம்பிக்கையோடு போராட்டத்தில் ஈடுபடுகிறான்.

வீரமும் தீரமும் அர்ப்பணிப்பும் ஆயுத பலமும் இருந்தால் விடுதலையை காணலாம் என்ற கனவு நனவாகியதா? தன் வாழ்நாளில் சந்தித்த மாற்றங்கள் என்ன? பயணித்த பாதை சரியானதா? இலக்கை எட்ட முடிந்ததா? எதிர்கொண்ட சிக்கல்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் என்ன?
மாற்றங்களை ஏற்றுக் கொண்டாரா? அடைந்த பயன்கள் பெற்றெடுத்த வெற்றிகள் என்ன?

தேசம், தேசியம், போராட்டம், அதன் வடிவம், மாற்றம், தொடர்ச்சி என்ன பல விடயங்களை தொகுத்து இந்த நூலின் வடிவத்தில் ஜனா தந்திருக்கிறார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால போராளியாக பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக ஒரு அரசியல் தலைவனாக அரசியல் வாழ்க்கையிலே இவ்வளவு காலமும் அவர் கடந்து வந்த பாதைகள் என்பவற்றின் அனுபவப் பகிர்வை வடித்து தந்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் பயணித்த பலருக்கு எழுதுவதற்கு ஆக்கபூர்வமான வரலாறுகள் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பயணிக்காத பலர் இன்று விடுதலை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனாக தேசிய பயணத்தில் போராளியாக ஆரம்பித்து இன்று ஒரு அரசியல் தலைவனாக அகவை 60 தொடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவில் அனைத்து தற்கால மற்றும் எதிர்கால தமிழ் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் புதைந்துள்ளன.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அதில் பங்கு பற்றிய ஒருவருடைய நேரடி வாக்குமூலம் தரப்பட்டுள்ளது. செவி வழி கதைகளை கேட்டு போராளிகளையும் போராட்டத்தையும் விமர்சிக்கின்ற பலருக்கு இந்த வாக்குமூலம் தக்க பதிலாக அமையும் என்று கருதப்படுகிறது.

ஒரு போராட்டத்தின் இலக்கு, அதை அடைவதற்கு படுகின்ற துன்பங்கள், அதில் செல்வாக்குச் செலுத்துகின்ற உள்ளக வெளியக காரணிகள், அவற்றை கையாளும் திறமை, அத்திறமை இல்லாவிட்டால் இனம் படுகின்ற துன்பம் என்ற பல விடயங்களை இந்த வாக்குமூலம் புட்டுக்காட்டி உள்ளது.

வாழும் போராளியாக துணிச்சலோடு இந்த வாக்குமூலத்தை ஜனா பதிவு செய்துள்ளது தன்னுடைய சொந்த வாழ்க்கையை மாத்திரமல்ல தமிழ் இளைஞர்களின் குறிப்பாகப் போராளிகளின் வாழ்க்கையை படம் போல எடுத்துக் காட்டியுள்ளது.

இதை தனிப்பட்ட ஒரு ஜனாவின் வாக்குமூலமாக கருதாமல் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று ஆவணமாக படித்துப் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

குருசுவாமி சுரேந்திரன்
பேச்சாளர்- ரெலோ-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு