தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி ரணில் – சபாகுகதாஸ் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் விவகாரங்களில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார் என தமிழ் ஈழ  விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் உடனடியாக மேய்ச்சல் நில அபகரிப்பில்  மேலதிக செயற்பாடுகளை நிறுத்துமாறு ஓடர் போட்டார். ஆனால் மறுநாள் அரச படைகளினதும் பொலிசாரின் பாதுகாப்புடனும் மேற்கொள்ளப்படும் புத்தர் சிலை விவகாரம்  மற்றும் அத்துமீறிய  மேய்ச்சல் நில அபகரிப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தாது  கண்டும் காணாதவர் போல ஐனாதிபதி செயற்படுகிறார்.

அரசமைப்பு சபை பொலிஸ்மா அதிபரை நீக்கம் செய்த செய்தியை அறிந்ததும்  சீனாவில் இருந்தவாறு ஒரு மணித்தியாலத்தில் தொலைபேசியில் கதைத்து அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை மீறி மீள நியமிக்க ஓடர் போட முடியுமாயின், தமிழ் மக்கள் விவகாரத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை சிங்கள மக்கள்  ஏவி அபகரிக்கும் செயற்பாட்டை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இதில் வெளிப்படையாக தெரிகிறது ஐனாதிபதியின் இரட்டை வேடம்.

தனது அதிகார கதிரையை பாதுகாக்க தனக்கு சாதகமான பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் முடிந்து நீடிக்கப்பட்டு மேலதிக காலமும் முடிவடைந்த  நிலையில் தங்களுக்கு பொருத்தமானவரை நியமிக்கும் வரையும் இருப்பவரை தக்க வைக்க வெளிநாட்டில் இருந்து உடன் நடவடிக்கை எடுக்கும் ஐனாதிபதி, சட்டவிரோதமாக தமிழர் தாயகத்தில் நடைபெறும் செயற்பாடுகளை ஏன் தனது அரச இயந்திரத்திற்கு கீழ் உள்ள கட்டமைப்புக்களை  நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தவில்லை ஆகவே இத்தகைய நடவடிக்கைகள் ஐனாதிபதி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.