இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மனோ கணேசன்

மாகாணசபை முறைமை நாட்டின் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதனை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. அத்துடன் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அரசியலமைப்பில் ஓர் அங்கமாகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்துள்ளது. அதனால் மாகாண சபைமுறையை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. ஆனால் இதிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இப்போதும் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தத் தேவையில்லை. இருக்கும் பிரச்சினைகள் போதும்.

2009இல் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது யுத்தத்தை நிறைவு செய்தது போன்று அதிகார பகிர்வை மேற்கொண்டு பிரச்சினைகளை முழுமையாக தீர்க்குமாறு கோரினேன். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இப்போதும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்வோம். ஜனாதிபதி முன்னெடுக்கும் இந்த விடயத்தில் நாங்கள் காலை பிடித்து இழுக்கப் போவதில்லை.

சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன். இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள் வேண்டும். நீங்கள் செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு தீர்வே முக்கியம் என்றார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் என்னிடம் கேட்கின்றனர். இவ்விடத்திற்கு நான் அமைச்சரவைக்கு மட்டும் அறிவித்தே வந்துள்ளேன்.

ராஜபக்ஷவினருக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு அடிபணிந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். உண்மையான ராஜபக்‌ஷவாதிகள் அந்த பக்கமே இருக்கின்றனர். அதனால் 13 தொடர்பில் பொதுஜன பெரமுனவின் இரண்டு பக்கத்தில் இருப்பவர்களும் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேசி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.