யாழ்.மக்களை முன்னணியினர் இனியும் ஏமாற்ற முடியாது; கட்டி முடிக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக ஏமாற்று நாடகம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

யாழ்ப்பாண தமிழ் மக்களை இனியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏமாற்ற முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37 வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் மிகப்பெரிய ஒரு கதவடைப்பு போராட்டத்தினை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்தினோம். பாரிய போராட்டமாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு முதற்தடவையாக இங்கு நடாத்திக் காட்டி இருந்தோம்.

எதற்காக அதனை செய்திருந்தோம் என்பதை அறியாத ஒரு தரப்பு- நான் நேரடியாகவே கூறுகின்றேன்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த கர்த்தாலை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நடாத்திய கர்த்தாலை எள்ளி நகையாடினார்கள்.

தமிழ் மக்களின் உணர்வினை எள்ளி நகையாடினார்கள். அதனுடைய விளைவு இன்று தெரிகிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று தையிட்டியில் விகாரை கட்டி முடிந்து கலசம் வைத்த பின் விகாரையினை இடித்து விட போகின்றோம் என தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஏன் இந்த கர்த்தாலை நடாத்தினோம் என்றால் அண்மையில் நாவற்குழி ஜம்புகோள பட்டினம், குருந்தூர் மலையில் விகாரைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அத்தோடு கலாச்சார சின்னங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் இருப்பு அழித்தொழிக்கப்படுவதற்கு எதிராக எமது கண்டனத்தினை தென்னிலங்கைக்கு பதிவு செய்வதற்குமாக சர்வதேச அரங்கிற்கும் வெளிப்படுத்துவதற்குமாக ஆரம்ப கட்டமாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அது பரிபூரண வெற்றியாக அமைந்திருந்தது.

அதனை எள்ளி நகையாடி அந்த கர்த்தாலுக்கு அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று தையிட்டியிலே கட்டி முடித்து கலசம் வைக்கப்பட்டிருக்கும் விகாரையினை அகற்றுவற்கு நாங்கள் போராடுகின்றோம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளை சாவகச்சேரியில், நெடுங்கேணியில் விகாரை வரும். எல்லா இடங்களிலும் வரும். இவ்வாறு தனித்தனியே போராட போகின்றோமா அல்லது மக்களை ஒரு தேசமாக ஒருங்கிணைத்து இவற்றைத் தடுத்து நிறுத்த போகின்றோமா என்பதுதான் எமது கேள்வி.

அதற்காகத்தான் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் போராட்டத்தினை தையிட்டியில் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்பவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும்.

சரியான தலைமையினை தெரிவு செய்யவேண்டும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும்.

மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபடுவோருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.