வட மாகாண சுற்றுலா துறை நிறுவனங்கள் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்து ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும்நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்வதன் ஊடாக அவற்றை ஒழுங்குபடுத்தலை நோக்காக கொண்டு இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களுள் பதிவுசெய்த நிறுவனங்கள், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் முறைப்படியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் .

மேலும் இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனால் யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தவேண்டியுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள அதிகமான சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை. இதனால் இவ் விழிப்புணர்வு கலந்துரையாடல் மூலம் அதிகமாக சுற்றுலாத்துறைச்சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக உதவிப் பணிப்பாளர் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.