மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் நான் உறவுப்பாலமாக செயற்படுவேன் – பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை

மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர் கு.அண்ணாமலைக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையில் இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி., பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர்கள், இ.தொ.காவின் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட கட்சி பிரமுகர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உறுப்பினர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே ராமேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலும் சிறந்த தொடர்பு இருக்கிறது.

அந்த வகையில் இலங்கைக்கு வந்திருந்த பா.ஜ.கவின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினோம்.

இலங்கை கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், முதல் நாடாக உதவிய இந்தியாவுக்கு காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்தோம்.

அத்துடன், இந்திய அரசின் உதவியின் கீழ் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.

இதன்போது மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தான் உறவுப்பாலமாக செயற்படப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார் என கூறினார்.

யாழ் கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில்? நிலாந்தன்.

கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு கிழமைகள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க 13ஐ முழுமையாக அமல்படுத்த போவதில்லை. கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அது தெரிகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரம் தொடர்பில் அவர் தெளிவற்ற வார்த்தைகளில் கதைக்கிறார். இப்பொழுதுள்ள போலீஸ் நிர்வாக கட்டமைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு டிஐஜி உண்டு. அதை மாற்றி ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு டிஐஜி என்று நியமிக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பில் ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டபடி, கொழும்பு மாநகரத்துக்கு ஒரு டிஐஜியும் 9 மாகாணங்களுக்கு ஒன்பது டிஐஜிக்களுமாக மொத்தம் பத்து டிஐஜிக்கள் நியமிக்கப்படுவார்கள்.ஆனால் இதைச்சொன்ன ரணில் அதன்பின் சொன்ன வார்த்தைகள்தான் இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. போலீஸ் அதிகாரத்தில் மாற்றம் இராது என்று அவர் கூறுகிறார். அதாவது இப்போது இருப்பதைப் போலவே போலீஸ் நிர்வாகம் மத்திய அரசுக்குக் கீட்பட்டதாகவே இருக்கும் என்று பொருளா?அப்படியெஎன்றால் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் கிடையாது. அதாவது ரணில் விக்ரமசிங்க கதைப்பது 13 மைனஸ் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அண்மையில் கொழும்புக்கு வந்து போன இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியபடி 13 ஆவது திருத்தம் தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அதை முழுமையாக அமல்படுத்தும் நோக்கம் ரணிலிடம் இல்லை என்று தெரிகிறது. பிக்குக்களின் ஆர்ப்பாட்டம் அவருக்கு ஒரு சாட்டு. அதைக் காட்டியே அவர் 13ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று கையை விரிக்கலாம். அவர் அப்படிக் கையை விரித்தால் இந்தியா என்ன செய்யும்? 13 ஆவது திருத்தத்துக்கூடாகத்தான் இலங்கை தீவின் இனப் பிரச்சினையில் தான் தலையிட முடியும் என்று இந்தியா கூறிவருகிறது. அங்குதான் தனக்கு சட்டப்படியான உரித்து உண்டு என்றும் இந்தியா வலியுறுத்துகின்றது. ஏனெனில் இந்திய உடன்படிக்கையின் பிரகாரம்தான் இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடலாம் என்றும் இந்தியா கூறி வருகிறது. அப்படியென்றால், 13ஐ ரணில் முழுமையாக அமுல்படுத்த மாட்டார் என்றால் அவருக்கு எதிராக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்குமா?

இல்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவ்வாறு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் ஒரு ராஜதந்திரச் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. 13ஆவது திருத்தம் என்பது இந்தியாவும் இலங்கையும் பெற்றெடுத்த குழந்தை.அது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் விளைவு.இந்திய-இலங்கை உடன்படிக்கையில் தமிழ் மக்கள் கையெழுத்திடவில்லை. எனவே 13ஐ முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்க வேண்டியது அதன் பெற்றோரில் ஒருவராகிய இந்தியாதான்.ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்தியா அதைச் செய்யவில்லை. 2009 க்கு முன்புவரை அவ்வாறு செய்வதற்கு யுத்தம் ஒரு தடை என்று கூறலாம். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அதை அமுல்படுத்தாமைக்கு இலங்கை மட்டுமல்ல,இந்தியாவும் பொறுப்புத்தான்.இதில் இந்தியா தனது கூட்டுப்பொறுப்பை நிறைவேற்றதே தவறியிருக்கிறது.அதன் விளைவாக 13ஆவது திருத்தம் எனப்படுவது இலங்கையில் இரண்டு இனங்களினாலும் கைவிடப்பட்ட ஓர் அனாதையாகும் நிலைதான் காணப்படுகிறது.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், 13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கை மீது நிர்ப்பந்தங்களை பிரயோகித்தால் தவிர கொழும்பு அதைச் செய்யாது. இலங்கை இப்பொழுது இந்தியாவிடம் கடன் பெற்றிருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடனான உறவைச் சுமூகமாக்க வேண்டியிருக்கிறது.எனவே இந்தியா,இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும்.

ஆனால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த யாழ். கலாச்சார மையத்தைக் கையளிக்கும் நிகழ்வைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா அவ்வாறு கொழும்பின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை உண்டா.என்ற கேள்வி வலிமையாக மேலெழுகிறது.

கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைச்சர் ஒருவரும் கட்சியின் தமிழகத்திற்கான அமைப்பாளரும் யாழ்ப்பாணம் வருகை தந்திருக்கிறார்கள். கலாச்சார மையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் வந்திருந்தபோது அந்த மையம் சம்பிரதாயபூர்வமாக மெய்நிகர் வெளியில் திறந்து வைக்கப்பட்டது. அதை ஒரு “மென் திறப்பு” என்று இந்திய தூதரகம் அழைத்தது.

இப்பொழுது கலாச்சார மையத்தை கையளிக்கும் நிகழ்விற்கு பாரதிய ஜனதாவின் இரண்டு தமிழ் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் வந்தார்கள். அந்த கலாச்சார மையத்தை இலங்கை மத்திய அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது. அதை யாழ் மாநகர சபையிடம் கையளிப்பதற்கு அவர்கள் தயாரில்லை. அது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் பரிசு என்ற அடிப்படையில் அதைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாநகர சபைதான் நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகின்றது. அவ்வாறு நிர்வகிக்கத் தேவையான நிதி உதவியை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கும் இந்தியா தயாராக காணப்படுகிறது. ஆனால் கொழும்பு அதற்கு வெவ்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக அவதானிக்கப்படுகிறது. அதனால்தான் கலாச்சார மையத்தை கையளிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இப்பொழுதும் அதற்கு வேண்டிய நிர்வாகக் கட்டமைப்புகள் உருவாக்கப்படாமலேயே கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கிறது.

கலாச்சார மையத்தை திறப்பதற்கு முதலில் பிரதமர் மோடி வருவார் என்று கூறப்பட்டது. பின்னர் ஜனாதிபதி வருவார் என்று கூறப்பட்டது. அதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியிலும் இறுதியாக வந்தது யார் என்றால் ஒரு துணை அமைச்சரும் பாஜகவின் தமிழக அமைப்பாளரும்தான். அதில் இந்தியா ராஜதந்திர பரிபாஷையில் ஒரு செய்தியை உணர்த்துகின்றது. யாழ்ப்பாணம் வந்த இருவரும் தமிழர்கள் என்பதும் விசேஷம். அதன் மூலமும் இந்தியா இலங்கைக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகிறது. ஆனால் அந்த இருவரும் வந்திருந்த அதே காலப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் கடற் தொழில் அமைச்சு ஒரு காரியத்தை செய்தது. அது என்னவெனில், எல்லை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் வந்த காரணத்தால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளில் ஒரு பகுதி தமிழ் மீனவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதையாவது உணர்த்த விரும்பியதா?

கலாச்சார மையத்தைக் கையளிப்பதற்காக வந்திருக்கும் துணை அமைச்சர் மீன்வளத் துறைக்குரிய துணை அமைச்சரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் வடக்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து மீனவ சமூகங்களோடு உரையாடிக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில்தான் இலங்கையின் கடல் தொழில் அமைச்சு மேற்கண்டவாறு இந்திய மீனவர்களின் படகுகளை தானமாக கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு ஒரு செய்தியை கூற விரும்புகிறது.வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இணைப்பு திட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவுக்குள்ள வரையறைகளை உணர்த்துவதே அச்செய்தி ஆகும்.

வடக்குக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்புகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட திட்டங்களை இலங்கை இழுத்தடித்தே அமுல்படுத்தி வருகிறது. பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பல மாதங்கள் எடுத்தன.எனினும் ஓடுபாதை போதாது என்ற காரணத்தால் சிறிய ரக விமானங்களைத்தான் இறக்கக் கூடியதாக உள்ளது. அதனால் 27 கிலோகிராமுக்கு அதிகமான ஏடையுள்ள பொதிகளை பயணிகள் காவ முடியாது.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து இதோ தொடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.ஆனால் அது திறக்கப்பட்ட பின்னர்தான் நம்பலாம். இது போன்ற “கனெக்டிவிட்டி” திட்டங்களில் கொழும்பு வேண்டுமென்றே இழுத்தடிப்புகளைச் செய்து வருகிறது. இந்தப் பின்னணிக்குள் வைத்து பார்க்கும்போது பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்திலும் இலங்கை இந்தியாவின் சொற் கேட்டு நடக்குமா? இந்தியாவும் அதற்காக இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் நிலையில் உள்ளதா?

எனவே கூட்டிக் கழித்து பார்த்தால் தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னரும் அங்கே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் சிந்தனைகளில் அதிகம் மாற்றம் நிகழவில்லை. 13ஐ அவர்கள் எதிர்ப்பது என்பது கஜேந்திரகுமார் கூறுவது போல இந்திய எதிர்ப்பின் ஒரு பகுதிதான்.அவர்கள் இந்தியாவை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.ஆனால் இந்தியா சிங்களவர்களையும் தமிழர்களையும் சம தூரத்தில் வைத்து கையாளலாம் என்று நம்பிக் கொண்டே இருக்கப் போகிறதா ?

தேர்தல் ஏற்பாடுகளுக்கு 100 மில்லியனை வழங்கியது திறைசேரி

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் மூலமான வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எனவே அறிவிக்கப்பட்டபடி திகதியில் தேர்தலை நடத்த ஆணைக்குழுவும் மற்ற தேர்தல் செயலக அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது – சரத் வீரசேகர

கடுமையான நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது என சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வங்குரோத்து நிலை ஏற்பட்டபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தபட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்ததா என்பதை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம்!

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைகள் வழமை போன்று மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாரத பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு உடனடியாக சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்துமாறு இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆகியோரிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரே மேற்படி கோரிக்கை விடுத்ததுடன் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியாவின் மேற்பார்வையுடன் பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் பரிந்துரைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இடையில் இராப்போசன விருந்துபசாரமொன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணை அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலையுடன் உரையாடினார்கள்.

அச்சமயத்தில், சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.

ஆனால் தற்போது இலங்கையில் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதேநேரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 1987ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதையடுத்து அரசியமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்திற்கும் தற்போது நடைமுறையில் காணப்படுகின்ற அதன் வடிவங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

1 கிலோ நெல்லை ரூபா.100 வீதம் கொள்வனவு செய்ய கிளிநொச்சியில் ரணில் உறுதி

கிளிநொச்சியில் விவசாயிகளின் நெல்லை கிலோ கிராம் ஒன்று 100 ரூபாய் விகிதம் கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை அரசு ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சியில் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறுமுகநாவலரின் பணிகளின் மூலமே சிங்கள தலைமைத்துவம் உருவானது; யாழில் ஜனாதிபதி ரணில்!

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட்டால் நாட்டை வேகமாக முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசின், 1350 கோடி ரூபாய் நன்கொடையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ நேற்று (11) முற்பகல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க-

எமது 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் கொண்டாட நாம் தீர்மானித்தோம். அந்த வேலைதிட்டத்தை நாம் இந்த கலாசார மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றோம். இது எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொடுத்த பரிசு ஆகும். அதனால் அவருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிப்பதே நான் செய்யும் முதல் விடயம்.

இந்தியாவும் இலங்கையும் முன்னெடுத்து வரும் வேலைதிட்டங்களில் பிரதானமானதொரு அம்சம் இதுவாகும். ஒரு புறத்தில் இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் மறுபுறத்தில் விசேடமாக திருகோணமாலை துறைமுகத்தின் பாரிய அபிவிருத்தி வேலைதிட்டம் தொடர்பிலும் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.

வலு சக்தி தொடர்பிலும் நாம் பேச்சு நடத்தி வருகின்றோம். அதுபோலவே எமது பொருளாதார நெருக்கடியின்போது இந்த கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நாம் பாராட்டுகின்றோம்.

இக்கலாசார மையம் ஒரு பொதுவான மையமாகும். நான் எப்போதும் கூறுவேன் எம்மிடையேயுள்ள கலாசாரத்தை வேறு பிரிக்க முடியாது என்று. ஒரு நாயணத்தின் ஒரு பக்கம் இலங்கை என்றால் மறுபக்கம் இந்தியாவாகும்.

எம்மிடமுள்ளது ஒரு கலாசாரம். அதனை நாம் பாதுகாத்து மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதனால் இந்த மையத்தை பொதுமக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு உங்கள் அனைவர் சார்பிலும் இந்தியாவுக்கும் இந்தியாவின் பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அதுபோலவே இன்று இந்த நடன நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்கும் அதன் பின்னர் பங்கெடுப்பவர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களிடமிருந்து எமது சுதந்திரப் போராட்டத்துக்கு கிடைத்த ஒத்துழைப்புக்காகவே 75ஆவது சுதந்திர தினத்தை நாம் இம்முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானித்தோம்.

யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்தே ஹிக்கடுவே ஶ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார்.

1915 ஆம் ஆண்டு குழப்பங்கள் நிலவிய காலத்தில் எமது சிங்கள பௌத்த தலைவர்களை பாதுகாத்துக் கொடுத்தவர் பொன்னம்பலம் இராமநாதன் என நான் இவ்விடத்தில் கூற விரும்புகிறேன்.

ஹென்றி பேதிரிஸ் அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்குமாறு அவர் அப்போதைய ஆளுநருக்கு அறிவித்தார். அதற்கு பதிலாக ஹென்றி பேதிரிஸின் நிறைக்குச் சமனான தங்கத்தை தருவதாக க் கூறினார். எனினும் அது வெற்றியடையவில்லை.

பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை தேசிய சபையை உருவாக்கினார். தொழிற்சங்கங்களுக்கு தலைமைத்துவம் தாங்கினார். சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்த போதும் துரதிஷ்டவசமாக அவர் 1924ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிலிருந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் எப்.ஆர் சேனாநாயக்க காலமானார்.

அவர் வாழ்ந்திருந்தால் இதை விடவும் வித்தியாசமானதொரு வரலாற்றை நாம் கண்டிருந்திருப்போம். சிங்கள கலையை எமக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியவர் ஆனந்த குமாரசுவாமி . அவரின் காலத்திலேயே இது மேம்படுத்தப்பட்டது.

அருணாச்சலம் மஹாதேவா அவர்களும் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அது போலவே இந்து தர்மத்தை முன்னேற்றுவதற்கும் கொழும்பு சிவன் கோவிலை கட்டுவதற்கும் இங்கு கோவில்களை உருவாக்கவும் இந்த குடும்பம் உதவி செய்தது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் சிங்களம், தமிழ், பௌத்தம், இந்து ஆகிய பிரிவுகள் முன்னேற உதவி செய்தனர்.

இலங்கையர் சார்பாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்கள் சார்பாகவும் அக்குடும்பத்துக்கு நன்றி கூற நாம் கடமைபட்டுள்ளோம்.

அவர்களைப் போலவே வைத்தியலிங்கம் துரைசாமியையும் எம்மால் மறக்க முடியாது. சுதந்திரத்தைப் பெறுவதற்காக டி.எஸ் சேனாநாயக்க அவர்களுக்கு உதவிய அமைச்சர் சி.சுந்தரலிங்கம் , அமைச்சர் சி.சிற்றம்பலம், அமைச்சர் நல்லைய்யாஆகியோரையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

நாம் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களையும் இங்கே நினைவு கூற வேண்டும். நாம் செல்வநாயகம் அவர்களையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். அதுபோலவே அமைச்சர் எம்.திருச்செல்வம் அவர்களையும் நினைவுபடுத்துகின்றோம்.

இந்த தலைவர்களே ஏனைய தலைவர்களுடன் இணைந்து இலங்கையை ை உருவாக்குவதற்காக பணியாற்றினர். அதன் காரணமாகவே இப்பிரதேசத்தில், இந்த யாழ்ப்பாணத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்த அரசாங்கம் தீர்மானித்தது.

நாம் தற்போது புதியதொரு பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இலங்கையர்களாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நல்லிணக்கம் தொடர்பில் நான் கடந்த 08 ஆம் திகதி அன்று பேசினேன். எனவே அது பற்றி நான் இங்கே மீண்டும் பேசப் போவதில்லை. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் நான் நேற்று பேசினேன். அதனால் அது குறித்தும் நான் இங்கே பேசப்போவதில்லை. ஆனால் கலாசாரம் தொடர்பில் நான் இங்கு பேசப்போகிறேன்.

இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நல்லிணக்கம், அபிவிருத்தி, கலாசாரம் இவையே எமது கொள்கையாகும். யாழ்ப்பாணக் கலாசாரத்தில், தமிழ் கலாசாரத்தில் இலங்கையின் கலாசாரம் போஷணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் கலாசாரம் இலங்கையிலிருந்து உருவான கலாசாரம் என்பதுடன் இது தமிழ் நாடு மற்றும் கேரளாவுடனும் தொடர்புபட்டதொரு கலாசாரம் ஆகும். இது விசேடமாக தஞ்சாவூரிலிருந்து வந்த பாணடியன், விஜய நகர் இராச்சியங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

சந்திரபாகு ஆட்சியாளர் முதல் ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களின் காலம் வரை, சப்புமல் புவனேகபாகு அரசரின் காலம் , சங்கிலி மன்னனின் காலம் ஆகியவற்றின்போது விசேட கலாசார பிணைப்புகள் இப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டன.

நல்லூரில் பாரிய கோயிலைக் கட்டுவித்தனர். அதுபோலவே சங்கிலிய மன்னரின் பாரிய மாளிகை இருந்தது. அன்று நிர்மாணிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைப் பார்த்தால் அந்த மாளிகைகள் எவ்வளவு விசாலமானது என்பதை புரிந்து கொள்ளலாம். கோட்டை அரசருக்கு இதைவிட பெரிய மாளிகையொன்று அவசியம் என்றால் அவரது மாளிகை இதைவிட மிக பிரமாண்டமாக இருந்திருக்குமென எம்மால் இதைப் பார்த்து ஊகித்துக் கொள்ள முடியும்.

‘சிராவஸ்தி மஹால்’ எனும் விசாலமான கலாசார மத்திய நிலையம் ஒன்று இருந்தது. தஞ்சாவூர் சிராவஸ்தி மஹால் அதற்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. பழைய புத்தகங்கள் இருந்தன. வரலாறு குறித்தும் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பிலும் பயன்படுத்தப்பட்டு வந்த செக்கராச சேகரம் என்ற நூலையும் திருக்கேதீஸ்வரத்தையும் போர்த்துக்கீசிலிருந்து வந்தவர்கள் அழித்ததுடன் அவற்றை தீயிட்டும் கொளுத்தினர்.

அதனால் தான் மீகபுள்ளே ஆரச்சி போர்த்துக்கேயருக்கு எதிராக இரண்டு கலகங்களை முன்னெடுத்தார். அவரை மறந்துவிட வேண்டாம். மீண்டும் இக்கலாசாரம் ஒல்லாந்து காலத்தில் இழக்கப்பட்டது. தேசவழமை சட்டமாக்கப்பட்டது. மீண்டும் வரலாறு புதுபிக்கப்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இது மீண்டும் மேம்படுத்தப்பட்டது. 1840இல் முதலாவது பத்திரிகை வெளியிடப்பட்டது. புத்தகங்கள் வெளிவந்தன. அதனுடாக மீண்டும் இலக்கியம் வளர்ந்தது. எனினும் யுத்தத்துடன் இவையனைத்தும் மீண்டும் அழிக்கப்பட்டன. நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. யாழ்.கோட்டை சிதைக்கப்பட்டது.

யுத்தம் நடந்தாலும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அதுபோலவே வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரும் இந்த தமிழ் கலையையும் கலாசாரத்தையும் பாதுகாத்தனர். இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியிலும் தற்போது அதற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.

திரைப்படம் உள்ளது. யுத்தம் பற்றிய புத்தகங்கள் உள்ளன. அதுபோலவே கலையும் உள்ளது. புதிய கலை உருவாகியுள்ளது. புதிய கலாசாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதுபோலவே அனைத்து இடங்களில் இருந்தும் கருத்துகள் உள்வாங்கப்படுகின்றன.

நாம் இங்கே சம்பிரதாய தமிழ் இசையைக் கேட்கிறோம். திரைப்படங்கள் ஊடாக நாம் தமிழ் பாடல்களை செவிமடுக்கின்றோம். அதுபோலவே ஏ.ஆர் ரஹ்மானின், ‘சின்னச் சின்ன ஆசை’யின் இசைக்கும் நாம் பாடல் பாடுகின்றோம். யொஹானியின், ‘மெனிக்கே மகே ஹித்தே’ என்ற பாடல் இசைக்கும் நாம் பாட்டு பாடுகின்றோம். இவ்வாறு கலாசாரம் புதிய கலை வடிவம் பெற்றுள்ளது. அதனை நாம் முன்னேற்ற வேண்டும்.

காலி இலக்கிய விழாவைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் நாம் ஓர் இலக்கிய விழாவை நடத்துவோம் என நான் கலாசார அமைச்சரிடம் கூறினேன்.

அதுபோலவே இங்கு நாம் புதிய கலையொன்றை முன்னேற்றுவோம். இலங்கைக் கலையின் ஒரு பகுதியாக இதனையும் உள்ளடக்குவோம். முக்கிய பகுதியாக அடையாளப் படுத்துவோம். இந்தப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தூக்கி நிறுத்த வேண்டும். அப்போது இது எமது எல்லோரதும் நாடு ஆகும். இந்த இடம் தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் கலாசாரத்தின் மத்திய நிலையமாக இருக்க வேண்டும். அதனால் அமைச்சரே, நாம் இந்த இடத்திற்கு ‘சரஸ்வதி மஹால்’ என பெயரிடவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறுங்கள். நாம் புதிய எதிர்பார்ப்புடன் முன்னேறிச் செல்வோம். அனைவருக்கும் நன்றி. என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவாஜிலிங்கம்

ஜனாதிபதியின் வருகை எதிர்த்து தமிழ்த் தேசிய கட்சியின் எம்.கே சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

போராட்டமானது காந்தி சிலைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் அனந்தி சசிதரன், வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி துணிவற்றவர். எம்மை இப்பாதையால் நடந்து சென்று சந்திக்க கூட பொலிசார் எமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை .பொலிசார் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமிழில் உரையாடவில்லை சிங்களத்தில் பேசி இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பொலிசாருக்கு ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் பல மணி நேரங்கள் முறுகல் நிலை ஏற்பட்டது. பொலிசாரை திட்டி பல வார்த்தை பிரயோகங்களால் சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டார் அதே போல் போலிசாரும் பல கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளியிட்டனர்.

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுதலை

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார்.

சனிக்கிழமை (11) இரவு 11மணியளவில் நீதவானின் வாசஸ்தலத்தில் 18 பேரையும் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே பதில் நீதவான் இந்த உத்தரவையிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் சனிக்கிழமை (11) மதியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

எனினும் தடை உத்தரவை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே 18 பேரையும் பிணையில் விடுத்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார்.