கனடா தன் நாட்டில் இடம் பெறும் நிறவெறிச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் அவதானம் செலுத்த வேண்டும் – சரத் வீரசேகர

இலங்கையின் உள்விவகா ரத்தில் தலையிட கனடாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புனர்வாழ்வு பணி யகச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

உலகில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததை எவ்வாறு குற்றச் செயலாகக் கருத முடியும். விடுதலைப் புலிகள் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தி ருந்தாலும், பிரிவினைவாதிகள் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து வரு கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்குக் கனடா தடை விதித்துள்ளது. கனடாவில் வாழும் பிரிவினைவாத தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடைக்காகக் கூறப்பட்ட காரணங்களில் உண்மையில்லை. போரை நிறைவுக் கொண்டு வந்த அரச தலைவர்கள், இராணுவத்தினர் அரசியல் நோக்கத்துக்காகத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இலங்கையில் சிவில் யுத்தம் ஒன்றும் இடம்பெறவில்லை மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் இடம்பெற்றது என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை இன அழிப்புச் செயற்பாடு என்று சித்திரிப்பதை முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள், கருவில் இருந்த சிசுவைக்கூட அழித்தார்கள். இதனை ஏன் சர்வதேசம் மனித உரிமை மீறல் குற்றமாகக் கருதவில்லை?

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய இராணுவத்தினரைச் சர்வதேச நீதிமன்றக் குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சதி செய்கின்றன . இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் கனடா நாட்டில் நிற வெறிச் செயற்பாடுகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம் பெறுகின்றன. ஆகவே, இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்த முன்னர் கனடா தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்.

இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மாத்திரம்தான் தமது அரசியல் தேவைகளுக்காக நல்லிணக்கம் இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் செய்கின்றார்கள். இலங்கையின் உள்விவகாரத் தில் தலையிட கனடாவுக்கு உரிமை கிடையாது – என்றார்.

அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் – சரத் பொன்சேகா

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று இந்த நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ஐ.எம்.எப். தொடர்பாக பேசுகிறோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேசுகிறோம்.

ஆனால், கடந்த 6 மாதங்களில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.

இன்னும் 25 வருடங்களில் நாடு முன்னேறி விடும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இன்னும் 25 வருடங்களில் தற்போதைய ஜனாதிபதிக்கு 99 வயதாகிவிடும். எனக்கோ 97 வயதாகிவிடும்.

அதுவரை நாம் கடுமையான வாழ்க்கைச் சுமையைதான் சுமக்க வேண்டியிருக்கும். எமது எதிர்க்கால சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், ஜனாதிபதியோ குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இன்று பேசுகிறார்கள்.

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன்று உணவுக்கே சிரமப்படும் நிலையில், அரசியல் லாபத்தைத் தேடிக்கொள்ளத்தான் ஜனாதிபதி 13 குறித்து இன்று பேசி வருகிறார்.

முன்னாள் மாகாண முதல்வர்கள் அனைவரும் காணி – பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடைப்பதை வரவேற்பதாக ஜனாதிபதி அன்மையில் தெரிவித்திருந்தார்.

இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். தெற்கிலுள்ள எந்தவொரு முதல்வரும் இவற்றை எதிர்ப்பார்த்தது கிடையாது.

வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடு இன்று இருக்கும் நிலைமையில் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து பாவத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

13ஐ முழுமையாக கொடுப்பதாயின், அதிகாரத்தை பரவலாக்கல் செய்வதாயின், முதலில் இந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடைய வேண்டும்.

இனவாதம் இந்நாட்டில் இருக்கும்போது, அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும்.

இரத்த ஆறு ஓடும். தெற்கு மக்கள் வடக்கு மக்களை குரோதத்துடன் பார்ப்பார்கள். தெற்கிலும் வடக்கிலும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது என்று நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

மகிந்த, கோட்டாபயவுக்கு ஏனைய நாடுகளும் தடை விதிக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் கடற்படை அதிகாரி மீது தடை விதித்து கனடா மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளை ஏனைய அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண் காணிப்பு அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒரு நாடு எடுத்த சக்தி வாய்ந்த முடிவு இது என்று தெரிவித் துள்ள மீனாட்சி கங்குலி, உலகின் மற்ற பெரிய நாடுகளும் இதே போன்ற நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட “மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்” அனைவரும் சம்பந்தப்பட்டவர்கள் – என்று அவர் கூறுகிறார்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:- கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, கனடா “சர்வதேச சட் டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வ தேச தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். இதில் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை அடங்கும்.

மகிந்த ராஜபக்ஷ 2005-2015 வரை ஜனாதிபதியாக இருந்தார், உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்கள் உட்பட, இலங்கை இராணுவப் படைகள் ஏராள மான போர்க்குற்றங்களை இழைத்துள்ளன. இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று காயப்படுத்தியது. பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர் . ஐக்கிய நாடுகள் சபை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற குழுக்கள் அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச போரின் இறுதிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போர்க்குற்றங்களை தவிர, ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட் டாளர்களின் கடத்தல் மற்றும் கொலை செய்ததில் தொடர்புடையவராக கருதப் படுகிறார் . அவர் 2019 இல் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்தை அவர் தவறாகக் கையாண்டதால் தூண்டப்பட்ட வெகுஜன எதிர்ப்புகள் அவரை ஜூலை 2022 இல் இராஜிநாமா செய்யவைத்தன.

உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட ‘மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்’ சம்பந் தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் “மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத் தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறு” அரசாங்கங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

கனடாவின் பொருளாதாரத் தடை கள் முக்கியமானவை, ஏனெனில் – முதல் முறையாக – அவை குற்றங்கள் செய்யப் பட்டபோது ஒட்டுமொத்த கட்டளையில் இருந்தவர்களை குறிவைக்கின்றன. இதை மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டும். பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அவர்களின் தலைமைப் பாத்திரம் எதுவாக இருந்தா லும் அவர்களைக் கணக்குப் போட்டு நீதியை உறுதிப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது – என்றும் கூறியுள்ளார்

இல்லாத கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – கே.வி.தவராசா

2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்படட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே சின்னாபின்னமாக்கி வரலாற்றுத் துரோகத்திற்கு பாத்திரவாளியாகி விட்டீர்கள் என இரா.சம்பந்தனிற்கு சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும், மத்தியகுழு,அரசியல்குழு உறுப்பினருமான கே.வி.தவராசா.

பல்வேறு விடயங்களை புட்டுப்புட்டு வைத்து, இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ள காட்டமான கடிதத்திலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் தமிழ்த் தேசியத்தின் அரசியல் இருப்புக்கு சாவுமணியடிப்பீர்கள் என்பது பலருக்கும் அப்போது தெரிந்திருந்தது. ஆனாலும் உங்களில் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு மக்களும் காத்திருந்தார்கள்; விசுவாசிகளான நாமும் காத்திருந்தோம். ஆனால் மகிந்த நாட்டை காப்பாற்றிதனாலேயே திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வரமுடிகின்றது என பாராட்டியதுடன், 2020ம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் பிரதேசவாதத்தை கக்கியதுடன் தேசியத் தலைவர் மகிந்த என நாடாளுமன்றத்தில்; நீங்கள் புகழாரமும் சூட்டினீர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கையறுநிலையின் கடைசிக் கட்டத்தில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதவேண்டிய சூழலை நீங்களே உருவாக்கியிருக்கிறீர்கள். போர் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு இருந்த ஒரேயொரு கலங்கரை விளக்கம் கூட்டமைப்பு மட்டுமே.

தமிழினத்தின் விடுதலையை இலக்காகக் கொண்டுதான் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது ஒருபலம் பொருந்திய இயக்கமாகப் புலிகள் நிலைபெற்ற காலத்தில் தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பலம் பொருந்திய அரசியல் இருப்பை தங்களின் தலைமையில் கூட்டமைப்பு நிரூபித்துக் காட்டியுமிருந்தது.

தமிழரின் அரசியல் இணைப்பும் ஒற்றுமையும் ஒரேகொள்கைக்கான அணியாகவும் மக்களின் அங்கீகாரமாகவும் 2010 ஆண்டுத் தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தல் முடிவும் வலுவானதொரு செய்தியை பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தன.ஆனால் சில ஒட்டகங்கள் கூட்டமைப்பெனும் கூடாரத்துக்குள் நுழைந்ததோடு, கூட்டமைப்பு தேய்ந்து கொண்டே சென்று 2023 இல் அமாவாசையாகி எல்லாம் முடிந்துவிட்டது போன்று தோன்றுகின்து.

கம்பீரமாகத் தமிழரின் அரசியல் இருப்பைக் கர்ஜனையோடு வெளிப்படுத்திய கூட்டமைப்பு இப்போது இல்லை. கூட்டமைப்பின் இந்த நிலைக்கு நீங்களும் பிரதான காரணகர்த்தாவாகிவிட்டீர்கள். வரலாற்றின் வசைச்சொல்லுக்கு இலக்காகி விட்டீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு என்று தலைப்பிட்டு மிக மிக உருக்கமான வேண்டுகோளை கடந்த காலங்களில் பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிட்டதோடு உங்களுக்கும் அனுப்பிவைத்திருந்தேன். எதை நீங்கள் செய்யக் கூடாது என்று உங்களிடம் அந்தக் கடிதங்கள் வாயிலாக கெஞ்சுதலாக வேண்டியிருந்தேனோ அவை அனைத்தையும் இப்போது செய்து முடித்துவிட்டு தன்னந்தனியாக இருக்கின்றீர்கள்.

2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்படட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். கடைசியில் தமிழரசுக்கட்சியைத் தவிர இப்போது ஒருகட்சியும் இல்லாத நிலையில் தனிக்கட்சி கூட்டமைப்பாகாது என்பதை நீங்கள் அறிவீர்களா? கூட்டமைப்பு இல்லாமல் அதன் தலைவர் என்ற பதவியும் பறிபோய், வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் நிற்பதைக் காண மனம் சகிக்கவில்லை.

கூட்டமைப்பில் இருந்த நம்பிக்கை சிதையக் காரணமாரனவர்களைக் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் பொறுப்பற்ற தலைமையாக நீங்கள் நடந்துகொண்டபோதே பொறுப்புள்ள தமிழ் தேசியவாதிகள் இதைச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நீங்கள் எதையும் பொருட்படுத்தவில்லை.

தமிழர் அரசியலின் இறுதி நம்பிக்கையாகவும் ஒளியாகவும் திகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டும் பல்வேறு காரணங்களைச் சொல்லி வெளியேறிய அனைவரையும் மக்கள் அரசியல் அநாதைகளாக்கிய வரலாறு முன்பிருந்தது. ஆனால் அது உங்கள் காலத்தில் சிதைவுற்று இறுதியில் கூட்டமைப்பு இருந்தாலும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று என்ற நிலைக்கு மக்களைக் கொண்டுவந்துவிட்டது.

நீங்கள் தமிழ்த் தேசியத்தின் அரசியல் இருப்புக்கு சாவுமணியடிப்பீர்கள் என்பது பலருக்கும் அப்போது தெரிந்திருந்தது. ஆனாலும் உங்களில் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு மக்களும் காத்திருந்தார்கள்; விசுவாசிகளான நாமும் காத்திருந்தோம். ஆனால் மகிந்த நாட்டை காப்பாற்றிதனாலேயே திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வரமுடிகின்றது என பாராட்டியதுடன், 2020ம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் பிரதேசவாதத்தை கக்கியதுடன் தேசியத் தலைவர் மகிந்த என நாடாளுமன்றத்தில்; நீங்கள் புகழாரமும் சூட்டினீர்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே சின்னாபின்னமாக்கி வரலாற்றுத் துரோகத்திற்கு பாத்திரவாளியாகி விட்டீர்கள்.

இனிமேல் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று நீங்கள் எந்த முகத்தோடு போய் ரணிலுடன் பேச்சு நடத்தமுடியும்? கூட்டமைப்பு இருக்கும் வரையே உங்களுக்கும் மரியாதை மக்களிடையே மட்டுமல்ல அரசியல் தலைவர்களிடமும் இருந்தது . ஆனால் கூட்டமைப்பே இல்லையென்றான பின்னர், அற்ற குளத்து அறுநீர்ப்பறவையாக அவையெல்லாமே பறந்தோடிப் போய்விட்டதை ஏன் இன்னும் உணராதிருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமே.

ஒருகாலத்தில் எங்கள் இனத்தின் ஆளுமை மிக்க அரசியல்தலைவர் என்ற விம்பம் உங்களுக்கு எம்மிடையே இருந்தது. அதை நீங்களே உடைத்துவிட்டீர்கள். காலம் உங்கள் கடைசிச் செயலையே கணக்கில் எடுக்கும். அதனால் எப்போதைக்கும் கூட்டமைப்பைச் சிதைத்தவர் சம்பந்தர் என்ற தீராப்பழியை நீங்கள் சுமப்பதைக் காண எம்மாலும் சகிக்கமுடியாதுதான். ஆனாலும் அதுவே விதி. ‘ சேராத இடம் சேர்ந்து’ வஞ்சத்தில் வீழ்ந்தீரே சம்பந்தரே என்று உங்களுக்காக அனுதாபப்பட மட்டுமே எம்மால் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு உறுதி

உள்ளூராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் உறுதியளித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராணுவ கேர்ணல் டபிள்யு.எம்.ஆர்.விஜேசுதந்தர தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அனைத்து தரப்பினரும் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த பிரியந்த ஜயவர்தன, எஸ்.துறைராஜா மற்றும் பி.பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பெப்ரவரி 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பேட்டியொன்றின் போது தெரிவித்த கருத்திற்காக  இலங்கைக்கான சீன தூதரகம் அவரை கடுமையாக சாடியுள்ளது.

அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது.

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான பிரிட்டனின் சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது எங்களின் அமெரிக்க நண்பர் சீனா சீனா என்ற மந்திரத்தை ஓதினார்சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கு சீனா பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விரிவுரைகளிற்கு முன்னர் எங்களின் அமெரிக்க சகா சில கேள்விகளை கேட்டிருக்கவேண்டும்,- சர்வதேச நாணயநிதியத்தில் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பான வீட்டோ அதிகாரத்துடன் அதிகளவு பங்குகளை கொண்டுள்ளது யார்? 2020 இல் 3 டிரிலியன் டொலர்களிற்கு மேல் டொலர்களை அச்சடித்தது யார்? இலங்கை வங்குரோத்து நிலையை அடைத்ததும் உடனடியாக தனது நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு தொடுத்தது யார் என்பதே இந்த கேள்விகள்

சீனாவிடமிருந்து அரிசி டீசல் மருந்து பாடசாலை சீருடைகளிற்கான துணி போன்றவற்றை இலங்கை மக்கள் ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் இலங்கை மக்களிற்கு உதவுவது என்ற வாக்குறுதியிலிருந்து அமெரிக்கா எவ்வாறு பின்வாங்கியுள்ளது என்பது குறித்து பொதுமக்கள் அறிய விரும்புவார்கள்.

சீனா எந்த நிபந்தனையும் அற்ற அர்ப்பணிப்பு செயற்பாடுகளை பின்பற்றும் அதேவேளை அமெரிக்க உதவிக்கு ஏன் முன்நிபந்தனைகள் என கேள்வி கேட்பதற்கு மக்கள் விரும்புவார்கள்.

சுயபரிசோதனையை மேற்கொள்வதற்கு பதில் பாழாக்கிய குற்றச்சாட்டுகளை எங்கள் அமெரிக்க சகா முன்வைப்பது கபடநாடகம் அல்லவா?

இலங்கை ஒரு நல்ல சூழ்நிலையில் இருப்பதற்கு அவசியமான தீர்க்ககரமான தீர்மானங்களை ஏன் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தில் எடுக்கவில்லை.

அல்லது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கசப்பை ஏற்படுத்துவதற்கு பதில் அவர்கள் அச்சிடும் மிகப்பெருமளவு டொலரிலிருந்து ஏன் அவர்கள் இலங்கைக்கு நிதியை வழங்கவில்லை.

வெளிநாட்டு விரிவுரையின்றி  எங்களை பாழ்படுத்துபவர்கள் யார் என்பதை புரிந்துக்கொள்ளக்கூடிய புத்திசாலிகள் இலங்கை சீன மக்கள் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – நீதி அமைச்சர்

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வளித்தல் செயலணி ஒன்றை ஸ்தாபிக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இந்த சட்டமூலத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்பட்டதே, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும் அரசியலமைப்பு 21 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருமாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  விரைவாக இயற்றப்பட்டதல்ல  முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியின் வழிகாட்டலுக்கு அமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமித்த குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டமூலத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

விடுதலைபுலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்தல் பணிகள் சட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. தவறான ஆலோசனைக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள்,போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு அக்காலக்கட்டத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டது,இந்த நடவடிக்கையை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த வருடம் போராட்டம் தோற்றம் பெற்றது. போராட்டத்தில்  ஈடுப்பட்டவர்களை அடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  உருவாக்கப்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் முன்னெடுத்த தவறான பிரசாரத்தினால் ஒரு தரப்பினர் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தியுள்ளோம்.

2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் காரியாலம், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தனியார் புனர்வாழ்வளித்தல் நிலையங்கள் ஊடான புனர்வாழ்வளிக்கப்படுகிறது.

கந்தகாடு, சேனபுர மற்றும் வவுனியா ஆகிய புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் 493 பேர் புனர்வாழ்வு சிகிச்சை பெறுகிறார்கள். சிறைச்சாலை திணைக்கத்தின் ஊடாக 10 புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் புனர்வாழ்வளித்தல் சிக்கல் சிறைந்ததாக உள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு சடுதியாக அடிமையாகியுள்ளார்கள். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக தமது பிள்ளை புனர்வாழ்வு சிகிச்சைக்கு உள்வாங்கப்படுவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை.

புனர்வாழ்வு பணியக சட்டம் இயற்றப்பட்டால் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனருத்தாபன நடவடிக்கையில் ஈடப்பட முடியும். ஆகவே நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் இந்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை – பிரிட்டன் பிரதிநிதிகள் பேச்சு

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் முன்னேற்றகரமான நகர்வு என்பன குறித்து இலங்கை மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர வெளியுறவுச் செயலாளர் பிலிப் பார்றனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (17) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது வருட பூர்த்தியில் இச்சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் 2023இல் சமூக – பொருளாதார உறுதிப்பாடு, நல்லிணக்கம் மற்றும் மீட்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் என்பன குறித்து வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பிலிப் பார்றனுக்கு விளக்கமளித்தார்.

இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்த பார்றன், இவ்விடயத்தில் இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

தற்போது பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை விசேட அவதானம் செலுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ் பிரிட்டனுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பிரஸ்தாபித்த அருணி விஜேவர்தன, அதன் மூலம் பிரிட்டன் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர் குடிப்பெயர்வு ஆகியவற்றில் பிரிட்டனின் ஒத்துழைப்பு வலுவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் காலநிலை மாற்ற சவால்களுக்கான துலங்கல்கள், 2030ஆம் ஆண்டில் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியை அடைதல் என்ற இலங்கையில் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும், இரு நாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்க வெளியீட்டை பெறல் ஆகியவற்றை முன்னிறுத்தி, இவ்வருடத்தின் முதற்காலாண்டில் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பது குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் தமது விருப்பத்தை வெளியிட்டனர்.

வேலன் சுவாமி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இந்நிலையில், வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர்.

அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப். வழங்கும் வழங்கும் கடனுதவி இலங்கையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்காது – அலி சப்றி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம்.

எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது.

ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி.

மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.