புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணபட்டியல்

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாளை(செவ்வாய்கிழமை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணத்திற்கான கொடுப்பனவு பட்டியலை வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்த கொடுப்பனவு தொகையை வழங்குவதுடன், வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10கோடி நட்டஈடு செலுத்தும் அளவிற்கான பணம் இல்லை – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, தாம் சிங்கப்பூரில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போதியளவு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும், அதனை தம்மிடம் எவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையே நான் சாட்சியமாகவும் வழங்கியிருக்கின்றேன்.

88 பக்கங்களை கொண்ட தீர்ப்பு அறிக்கையின் எந்தவொரு இடத்திலும், அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஜனாதிபதி தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறெனில் தமக்கு ஏன், உயர் நீதிமன்றில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கலாம்.

குறித்த தீர்ப்பில், ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் தவறிழைக்கு சந்தர்ப்பத்தில், அதற்கு ஜனாதிபதியே பொறுப்பானவராவார்.

அதனடிப்படையில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்குரியதாகும்.

அவர்கள் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை காரணமாகவே தமக்கு குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா அபராதத்தை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை.அதனை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்.

தமக்கு எவ்வாறான தடங்கல் ஏற்படினும் எனது சேவையை முன்னெடுப்பதற்கு தயராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஓரிரு வருட காலத்தில் “13′ கட்டம் கட்டமாக முழுமையாக அமுல் ; நல்லூரில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அதனை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம். காணமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும். இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கண்டறிவதை நாமும் விரும்புகிறோம், அதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். எனவே உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப் படும். – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றுத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் துர்கா மணி மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப் பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரத்தில்

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் – சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி, பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளோம். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும். அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். குறிப்பாக தைப்பொங்கல் என்பது தேசிய விழாவாகும். முற்காலத்தில் விவசாய நாடாக எமது நாடு இருந்தது. நெல் அறுவடை கிடைத்த போது அதனைக் கடவுளுக்குப் படைத்தோம்.

கலை நிகழ்வுகளுக்கு பாராட்டுகள்

இன்றைய தைப்பொங்கல் நிகழ்வில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய இராமநாதன் அழகியற் கலைப் பீட மாணவர்களை பாராட்டுகிறேன். உயர் தரத்திலான கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. நாதஸ்வர கச்சேரியும் பாரம்பரிய அடிப்படையில் சிறப்பாக அமைந்தது. அனைவருக்கும் பாராட்டை தெரிவிக்கிறேன். இந்த குழுக்கள் உலக மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்க முடியும். அது தொடர்பில் இலங்கையர்களாக நாம் பெருமை அடைகிறோம். காலியில் நடத்தப்படுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் கலை விழாவொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். நாமும் இந்தியாவை விட மாற்றமாக புதிய தமிழ் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளோம். அதனை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நல்லிணக்கத்தை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நிறைவு செய்யப்பட்டன.

ஒன்றுபடுவோம்

எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசிய மானது. 30 – 40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத, இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்க ளுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும். தைப்பொங்கல் விழா மேடையில் பொங்கல் தயார் செய்வதை கண்டேன். நெருப்பின் மேல் பானையை வைத்து தண்ணீர் மற்றும் பால் என்பவற்றை ஊற்றி அரிசி,கருப்பட்டி என்பற்றை இட்டு பொங்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலையில் நாம் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பேகர் என அனைவரையும் இட்டு அதன் ஊடாக இலங்கையர் என்ற தனித்துவத்தை உருவாக்குவோம்.

பெப்ரவரியில் தீர்வு

வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த விழாவின் பின்னர் ஆராய இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்று அவர்களிடம் கோரினேன். நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் கட்சி எம்.பிகளுடன் பேசினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி பெப்ரவரி மாதம் வெளியிட வேண்டும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கிறேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். இந்தப் பிரச்சினைகளை ஒதுக்கியோ காலங்கடத்தியோ தீர்க்க முடியாது. தீர்வு என்ன என்பதை நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் வெளியிட வேண்டும்.

காணமல் போனோர் விடயம்

உண்மையைக் கண்டறிய வேண்டும் பல பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். காணமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கண்டறிவதை நாமும் விரும்புகிறோம், அதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். எனவே உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதே போன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம். கடந்த வருடம் இதனை தெற்கிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

காணி விடுவிப்பு

அடுத்து காணிப் பிரச்சினை காணப்படுகிறது. வன்னியில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்புள்ள காணிப் பிரச்சினை குறித்து ஆராய இருக்கிறோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் மீள காணிகளை கையளிப்பது குறித்தும் ஆராயப்படும். யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக படையினர் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை மீள வழங்க இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்.

யாழ் ஆயர் அவர்கள் கோரியது போன்று கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களை மீள நிர்மாணிக்க இருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்ற ஆலயங் கள் உள்ளன. புதிதாக ஆரம்பித்தவைக ளும் உள்ளன.

அடுத்து 13 ஆவது திருத்தத்தை முழு மையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம். இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம். வறுமை, பட்டினி, தொழிலின்மை என் பன தமிழ், சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும்.

மலையக மக்களின் பிரச்சினை

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டி இருக்கின்றன. மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளையும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டாம் கட்ட பேச்சு நடத்த இருக்கிறோம். மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது.

அதன் பின்னர் முஸ்லிம் எம்.பிகள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து பேச இருக்கிறோம். முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களையும் அழைத்து பேச வேண்டியுள்ளது.

தமிழ் ,முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓரங்கட்டப்பட்ட கிராமங்கள் உள்ள்ன. அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. குலபேதம், வறுமை காரணமாக ஒதுக்கப்படும் நிலை உள்ளது. கிறிஸ்தவ மக்களுக்கு தமது பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் உள்ளது. அவை குறித்து ஆராய சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க இருக் கிறோம். இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இலங்கையர் என்ற தனித்துவத்தை உறுதிப்படுத்துவோம். இவை அனைத்தையும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம். – என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாதூகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், குலசிங்கம் திலீபன், பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியு மான சாகல ரத்னாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பணிக்குழாம் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு பிரதானிகள், ஜனாதிபதியின் வட மாகாணத்திற்கான மேலதிகச் செயலாளர் இளங்கோவன் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

வடக்கில் மூன்று இடங்களில் நிலவிடுவிப்புக்கு ஜனாதிபதி பணிப்புரை

வலி. வடக்கில் 110 ஏக்கரும்,வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கரும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரும் நிலத்தை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந் துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும், வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானவை என இனங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என கோரியபோது, 5 இடங்களில் 110 ஏக்கரை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பார்கள் என படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர்.

அதில் பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டி வடக்கில் 18 ஏக்கர், கே.கே.எஸ. பிரிவில் 28 ஏக்கர், கீரிமலையில் 30 ஏக்கர், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடங்களிலுமாக 110 ஏக்கரை இம் மாத இறுதியில் விடுவிக்க இணக்கம் தெரி விக்கப்பட்டது. இதேநேரம் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 641 ஏக்கரையும் விடுவித்தால் அங்கே கட்டடங்கள் எழுந்தால் விமானங் கள் தரை இறக்க முடியாத நிலை ஏற்படும் என மறுப்புத் தெரிவித்தபோது, அவ்வாறானால் அங்கே உள்ள தோட்ட நிலங்களை உடன் விடுவியுங்கள், மக்கள் பொருளாதார நெருக்கடியில் தோட்டச் செய்கையை மேற்கொள்வர் என கோரினார். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகப் பதிலளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு

இதேநேரம் வடமராட்சி கிழக்கில், நாகர் கோவில் கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட 19 ஆயிரத்து 368 ஏக்கரில், 4 ஆயிரத்து 360 ஏக்கருக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை வேண்டும், அது மக்களின் உறுதிக் காணிகள், யுத்த காலத்தில் அப் பகுதியில் படையினருக்கும் புலிகளிற்கும் இடையில் நீண்ட காலம் போர் இடம் பெற்றபோது மக்கள் அங்கே செல்லாத காரணத்தால் பற்றைகள் வளர, அதனைக் காடு எனக் கருதி, வன ஜீவராசிகள் திணைக்களம் தனக்குரியது என வர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அவ்வாறானால் அதனைப் பரிசீலிக்கலாம் எனக் கூறிய போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு, அந்த இடம் எனக்குத் தெரியும், அப் பகுதியில் எந்தக் காடும் இருக்கவில்லை, அதனால் அப் பகுதியை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுத்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறூந்தூர்மலை பகுதியில் உள்ள 341 ஏக்கரில் 6 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வற்றை மக்களிடம் வழங்க (ஜனாதிபதி ) நீங்கள் கூறியும் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நிலங்களில் தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லைக் கல்லை அகற்றி விட்டுத்தரவில்லை என மாவட்ட அரச அதிபர் பதிலளித்தபோது, அந்த இடத்தை மாவட்ட அரச அதிபரே உடன் விடுவிக்க வேண்டும், தொல்லியல்த் திணைக்களத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் என்னுடன் பேசுமாறு தொல்லியல் திணைக்களத்திற்குப் பதிலளியுங்கள் என ஜனாதிபதி உத்தரவிட்டார் என அறிய வந்தது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்படடோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

பேரணி காரணமாக பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ள நல்லூர் பகுதியை சுற்றிலும் வீதிதடைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுவாகலில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் சாரதி மற்றும் அதில் சென்றவர்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தனர்.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து சாதகமான சமிக்ஞை – ஷெஹான்

சீன எக்ஸிம் வங்கியுடன் (சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ‘சாதகமானவையாக’ அமைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கடந்த வியாழக்கிழமை நிகழ்நிலை முறைமை ஊடாக சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சீன எக்ஸிம் வங்கியின் தலைவரால் வெளிக்காட்டப்பட்ட பிரதிபலிப்பு சாதகமானதாக அமைந்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அதேவேளை நாம் இந்தியாவுடனும் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றோம். எனவே தற்போது அவர்களிடமிருந்து ‘உத்தரவாதத்தை’ (கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான) பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.

அந்த உத்தரவாதத்தை வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். இந்நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரை எதனையும் கூறவில்லை’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முதற்கட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வுதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைக் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் எதிர்வுகூறியிருந்தது.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ள கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படாத நிலையில், இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பீ.சீ.ஆர் அறிக்கை, தடுப்பூசி உறுதிப்படுத்தல்களை சமர்பிக்க அறிவுறுத்தல்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது புதிய கொவிட் விதிமுறைகளை அறிமுகப்படுத்த சுற்றுலா துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான  அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றுலா துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றுலா துறை அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான  அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கொவிட்  எதிர்ப்பு தடுப்பூசியைப் பெறாத சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட பீ.சீ. ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளை  இலங்கைக்கு வருகை தரும் அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் உலகளாவிய ரிதியில் மீண்டும் கொவிட் தொற்று நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவை இணங்கச் செய்ய சர்வதேச நாணய நிதியம் முயற்சி

சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதுடன் இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவை இணங்கச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, கடன் ஸ்திரத்தன்மை மற்றும் அதுசார்ந்த நெருக்கடிகள் தொடர்பில் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும், இவ்விடயத்தில் தாம் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்துச் சிந்திப்பதற்கும் சீனாவிற்கு உதவத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘அந்தவகையில் நாம் சீன அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதுடன் இரு முக்கிய விடயங்கள் தொடர்பில் செயற்பட்டுவருகின்றோம். முதலாவதாக தீர்வொன்றை நோக்கிய கலந்துரையாடலுக்கு ஏற்றவாறு சீனாவின் அனைத்துக் கடன் முகவரங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கின்றோம். மிகநீண்ட செயன்முறையான இது தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது’ என்று கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சாட், சாம்பியா, இலங்கை மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளுக்கான கடன் தீர்வை நோக்கிய பாதையை வகுப்பது குறித்து சீனாவுடன் கலந்துரையாடிவருகின்றோம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘இவ்விவகாரத்தில் பெருமளவிற்கு சீனாவின் முயற்சியையும் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் சீனாவில் இருந்தபோது சீன நிதியமைச்சு மற்றும் சீன மக்கள் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அனுமதிகோரினோம். அதேபோன்று சீனாவின் பாரிய கடன்வழங்குனர்களான சீன எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்திக்க விரும்பினோம். அதற்கமைவாக அவர்கள் இச்சந்திப்பிற்கு வருகைதந்ததுடன் இவ்விவகாரம் தொடர்பில் மிகவும் ஆரோக்கியமாகவும் நேரிடையாகவும் கலந்துரையாடினோம்’ என்று கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஆசியப்பிராந்தியத்தின் தற்போதைய நிலைவரங்களால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ‘இலங்கை மற்றும் பாகிஸ்தான் என்பன இந்தியாவின் அயல்நாடுகளாக இருக்கின்றன. இந்நாடுகள் நிலையற்றதும், தளம்பலானதுமான நிலையில் உள்ளன.

எனவே இப்போது நான் இந்தியாவில் இருந்திருந்தால், உலகில் என்ன நடக்கின்றது என்பது குறித்தும் அந்நிகழ்வுகள் என்னை எவ்வாறு பாதிக்கப்போகின்றது என்பது குறித்தும் பெரிதும் கவலைப்பட்டிருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் – எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பொங்கல் வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உழவர்கள் தங்கள் உழவுக்கு உதவிய சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றியறிதலாக தை முதலாம் திகதியை தைப்பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பொங்கல் விழாவானது, மனிதனுக்கும் மற்றும் இயற்கைக்கும் உள்ள உன்னத உறவை புலப்படுத்துவதாக அமைகிறது.

அனைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகவும்,பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய நட்பின் அடையாளமாகவும் தை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார அடையாளத்தை பேணுவதுடன்,மனிதனுக்கும் இயற்கையுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை அடையாளப்படுத்துவதாகவும் அமைகிறது.

மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமூகத்தின் நட்புணர்வைப் புதுப்பிப்பதுடன்,எதிர்கால வெற்றிக்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பெறுவதற்கு ஏதுவாக தைத்திருநாள் அமைகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியான இக்காலகட்டத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு அளப்பரியது.ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு அமைவாக இலங்கையர்களாக இனம் – மதம் கடந்து சகோதரத்துவத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி,நாட்டை ஒன்றாய் முன்னோக்கி கொண்டு செல்ல உறுதி பூணுவோம்.

இனம்,மதம்,சாதி போன்ற குறுகிய வேறுபாடுகளை மறந்து இயற்கையோடு இணைந்து வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி,அனைத்து இந்து பக்தர்களுக்கும்,உலக மக்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.