இதய நோய், உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு : தாதியர் சங்கம் எச்சரிக்கை

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருந்து மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்றும் இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில்  திங்கட்கிழமை (டிச. 5) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் ரவீந்திர கஹந்தவாராச்சி,

தற்போது உயிரிழக்கும் நோயாளர்களின் மரண சான்றிதழில் எந்த இடத்திலும் மருந்து இன்மையே அவர்களது உயிரிழப்பிற்கு காரணமாகும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக குறித்த நோய் நிலைமை காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்படுகிறது.

எமது நாட்டில் அதிகளவில் பதிவாவது இதய நோயாளர்களாவர். இதய நோயாளர்களுக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை மருந்துகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கும் தற்போது வைத்தியசாலைகளில் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இது மாத்திரமின்றி நோயாளர்களுக்கு ‘எக்ஸ் ரே’ எடுப்பதற்கான வசதிகளும் தற்போது இல்லை. இவ்வாறான தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வைத்தியசாலை கட்டமைப்பினை நிர்வகித்துச் செல்வது? உயிரற்ற நபர்கள் நாட்டை ஆட்சி செய்வதைப் போன்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பீ.மெதிவத்த, இவ்வாறான அபாய நிலைமை ஏற்படும் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அறிவித்தோம்.

ஆனால் அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான சிறந்த தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

தற்போது தேர்தலுக்கான காலம் உருவாகியுள்ளது : எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதல்ல – பஷில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய தற்போதைய செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ஊடக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு திங்கட்கிழமை (டிச.05) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

தற்போது தேர்தலுக்கான காலம் உருவாகியுள்ளது. எனினும் அது எவ்வாறு இடம்பெறும் என்பது எமக்குத் தெரியாது. கட்சி என்ற ரீதியில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இதுவரை போட்டியிட்ட சகல தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதற்காக நாம் முழு நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பினை நூறு வீதம் நிறைவேற்றத் தவறியிருந்தால் அது தொடர்பில் கவலையடைகின்றோம்.

நிச்சயம் எமது குறைபாடுகளை தீர்வு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும் , அரச நிர்வாகத்தில் ஈடுபடவில்லை. தற்போது 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரச நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதல்லவா? எவ்வாறிருப்பினும் அரச நிர்வாகத்தில் நான் இல்லாத போதிலும் அரசியலில் இன்னும் இருக்கின்றேன். நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்ல எதிர்பார்க்கவில்லை. என்னால் பாராளுமன்றத்திற்கு செல்லவும் முடியாதல்லவா? அது தொடர்பில் நான் மகிழ்வடைகின்றேன்.

69 இலட்சம் பொது மக்கள் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜநாமா செய்தார். அதனையடுத்து பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்ட போது , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தீர்மானித்தது. எமது இந்த தெரிவு தவறானதல்ல என்று எண்ணுகின்றேன்.

தற்போது ஆளும் , எதிர்க்கட்சி என அனைவரும் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகக் காணப்பட்டது. அந்த சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பொது வெளியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுவதற்கான சூழலை ஜனாதிபதி எமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அதே போன்று பொருளாதாரம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவார் என்று பாரிய எதிர்பார்ப்பு எம் மத்தியில் காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவில் எந்தவித பிளவும் கிடையாது. மக்கள் மத்தியில் நாம் ஒருமித்தே காணப்படுகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உத்தியோகபூர்வமாக இன்னும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பதவி வகிக்கின்றார். எதிர்காலத்தில் புதியவர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றார்.

சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு !

உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் இன்று (டிச.5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும் 2.3 கிலோ 45 ரூபாய் அதிகரித்து 860 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம்

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறை இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.

புதிய வருடத்தில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 17ஆம் திகதி!

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக எதிர்வரும் 10ஆம் திகதியை முழு நாளும் ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி 09ஆம் திகதி சேர்பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை பி.ப 5.00 மணிக்கு நடத்துவதற்கும் குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2022.12.03ஆம் திகதிய 2308/62 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளையைப் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக எதிர்வரும் 08ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 13ஆம் திகதிக்குப் பின்னர் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி மீண்டும்
நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஒரு அலகு மின்சாரத்துக்கு 59 ரூபாய் செல்வு

அடுத்த வருடம் நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபாய் செலவிட வேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஓர் அலகுக்கு 56.90 ரூபாய் என்ற நிலையான கட்டணம் அறவிடப்பட வேண்டும். அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது தமது யோசனை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி நாட்டின்ல 67 இலட்சத்து 9 ஆயிரத்து 574 மின்சார வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், ஓர் அலகிற்கு தற்போதைய சராசரி கட்டணம் 29.14 ரூபாய் அறவிடப்படுகிறது.

இதனால் 423.5 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். 0-30 அலகு தொகுதியில் 1,460,828 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 8 ரூபாவை செலுத்துகின்றனர்.

30-60 அலகு தொகுதியில் 1,683,172 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 10 ரூபா செலுத்த வேண்டும். 60-90 அலகு தொகுதியில் 1,702,515 நுகர்வோர் உள்ளனர். ஓர் அலகு்ககாக 16 ரூபாவை அவர்கள் செலுத்த வேண்டும்.

90-180 அலகு தொகுதியில் 1,559,131 நுகர்வோர் உள்ளனர் ஓர் அலகுக்காக 50 ரூபாவை செலுத்த வேண்டும். 180 மேற்பட்ட அலகு தொகுதியில் உள்ள 303,928 நுகர்வோர் ஓர் அலகுக்காக 75 ரூபாவை செலுத்துகின்றனர்.எனவே இதில் சமநிலை இல்லாத நிலைமை இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த வருடம் முதல் மின்சாரத்தின் ஓர் அலகுக்கான கட்டணத்தை 56 ரூபாய் 90 சதமாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கீழ் அடுக்கு (90 அலகுக்கு கீழ்) மின்சார நுகர்வோருக்கு அதிக அளவில் மானியம் வழங்கப்படும். இதில் ஒரு பகுதியை, அதிகளவில் மின்சாரத்தை நுகர்பவர்கள் செலுத்தும் மேலதிக தொகையை கொண்டும், மீதமானவை திறைசேரியினாலும் ஈடுசெய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் பொருளாதார நெருக்கடியால் ரயர்கள், வாகன உதிரிப்பாகங்கள் இன்றி பாதிப்பு

மாலியில் நிலைகொண்டு ஐ.நா அமைதிப்படையில் கடைமையாற்றும் இலங்கை இராணுவத்தினர் கவச வாகனங்கள், இராணுவ வாகனங்களுக்கான ரயர்கள் மற்றும் விமானங்கள், உலங்குவானூர்தி , ஏனைய வாகனங்களுக்கான உதிர்ப்பாகங்கள் இன்றி தமது கடைமைகளை முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 240 இலங்கை இராணுவத்தினர் மாலியில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐக்கிய நாடுகளின் உதவிகளை கொண்டு செல்லும் வாகன தொடரணிகளுக்கு 1200 km வரையான தூரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ரஷ்ய மற்றும் சீனதயாரிப்பு கவச வாகனங்களை பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். வாகன உதிரிப்பாகங்கள், ரயர்கள் இன்றி இக் கவச வாகங்களில் பல சேவையிலீடுபடுத்தப்படாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளன. மோசமான காலநிலை மற்றும் வீதிகள் காரணமாக விமானப்படையினரின் விமானங்கள், ஆயுத தளபாடங்களும் பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளன.

இதுவரையில் மாலியில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் பல்வேறு குழுக்களால் நடாத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், வெளிநாடுகளில் அமைதி காக்கும் படையினருக்கு சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், ரஷ்யா மற்றும் சீனாவில் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் அருண ரணசிங்க, மேற்படி ஹெலிகாப்டர்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புத் தேவைகளுக்கான நிதி 2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் இலங்கைக்கு 24 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றமிழைத்தோரை தண்டிக்காத ஆணைக்குழுவை அமைக்கத் திட்டம்

குற்றமிழைத்தவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது என்று கொழும்பு ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான அந்தப் பத்திரி கையில், “2023 வரவு – செலவு திட்டத் தின் மீதான இறுதி வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளார்

முதலாவது நல்லிணக்கத்துக்கான யோசனைகளை உருவாக்குவது, இரண்டாவது அமைச்சரவையை விஸ்தரிப்பது. இந்த நடவடிக்கைகள் வரவு – செலவு திட்ட விவாதம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளன. நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூடும் என்றாலும் அதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள் தெளிவாகவில்லை. எனினும், திங்கட்கிழமை வாராந்தர அமைச்சரவை கூட்டம் நீடிக்கப்படவுள்ளதுடன் இந்த செயல் முறை முன்னெடுக்கப்படவுள்ளது.

குழுவொன்று இது தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைப்பது முக்கியமான நடவடிக்கையாக காணப்படும் என கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2018 இல் ரணில்விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்ததில் பிரதமராக பதவி வகித்த வேளை இந்த யோசனை முன்வைக்கபட்டிருந்தது. இதேவேளை, கருத்துத் தெரிவித்திருந்த ரணில் விக்கிரமசிங்க மூன்று தசாப்த கால மோதலும் ஏனைய விடயங்களும் இலங்கை பொருளாதாரத்தின்மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்திருந்தார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தென்னாபிரிக்காவின் மாதிரியை பின்பற்றியதாக காணப்படும். எனினும், இலங்கையில் அதனை எவ்வாறானதாக உருவாக்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

விசாரணையின் பின்னர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து சில தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கைகளால் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அவ்வாறான ஏற்பாடு இல்லாத ஆணைக்குழுவை அமைப்பது குறித்தே அரசாங்கம்ஆர்வம் காட்டுகின்றது. தற்போது பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்பதால் விசாரணையின் பின்னர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத ஆணைக் குழுவை அரசாங்கம் விரும்புகின்றது. இதன் காரணமாக சுதந்திர தினத் துக்கு முன்னர் இந்த விடயங்களை நிறைவேற்றுவது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈழ, மலையக தமிழர்களின் பிளவுகளை கையாள அரசுக்கு இடமளிக்க மாட்டோம் – மனோ கணேசன்

ஈழத் தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருக்கின்றன எனக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட் டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் எம். பி.

இனப் பிரச்னை தீர்வு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு முன்னதாக மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், “ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தேசிய இனப்பிரச்னை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலை யில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார். இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம். பி., சித்தார்த் தன் எம். பி. ஆகியோரும் என்னிடம் உரையாடி உள்ளனர். தமிழ் தேசிய கூட் டமைப்பு எம். பிகளின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாக தெளிவுபட எமக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்ற கருத்து பகிர்வுடன் அது நிற்கிறது. மாகாண சபை, பதின்மூன்று “பிளஸ்” என்று ஆரம்பித்து விட்டு, இடையில், மாவட்ட சபை என்றும் ஜனாதிபதி ரணில் கூறினார். பின்னர் மாகாண சபைக்கு மாற்றீடாக மாவட்ட சபையை ஜனாதிபதி கூறவில்லை என்று அவரின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கம் கூறுகிறது. முப்பது வருட கோர யுத்தம் காரணமாக கடும் மனித உரிமை மீறல்களை வட, கிழக்கு உடன்பிறப்புகள் சந்தித் துள்ளார்கள். வரலாற்றில் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களிலும், சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வட, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுகளின் போதும், ஈழத்தமிழ் தேசிய இனத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை வெவ்வேறு வார்த்தைகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, இந்த அடிப்படைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுகளுக்கு நாம் எமது தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கி வந்துள்ளோம் – இனியும் வழங்குவோம். நாம் ஒருபோதும், பேரினவாதத்துக்கு துணை போய், ஈழத்தமிழ் உடன் பிறப்புகளின் தேசிய அபிலாசைகளுக்கு இடை யூறாக இருக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நண்பர்கள் நன்கறிவார்கள். இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலவும் தென்னிலங்கை களநிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் கோரிக்கைகள் மாறுபடுகின்றன. இதுபற்றிய தெளிவான புரிதல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பதை நான் நன்கறிவேன். சிவில் சமூகத்துடனான தீவிர கலந்துரையாடலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள, “இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகள்” மற்றும் “நிலவரம்பற்ற சமூக சபை” ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான அவர்களது தார்மீக ஆதரவையும் கோர விரும்புகிறோம்.

சகோதர இனங்கள், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை, தத்தம் கள நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கோரிக்கைகளுடன் அரசுடன் உரையாடுவதே சரியானது. தென்னிலங்கையில் நாம் முன் வைக்கும் கோரிக்கைகளை காரணமாகக் கொண்டு, ஈழத்தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது, வட, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அர சாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருப்பதாகக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட்டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும் – என்றுள்ளது.

கொள்ளையர்கள் அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் -சஜித்

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

எமது ஆட்சியில் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் சிறப்பாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

44 இலட்சம் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக எமது ஆட்சியில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை எமது அரசாங்கத்தில் பொறுப்பேற்கவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன முற்றாக ஒழிக்கப்படும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக் கூடிய சிறந்த நிபுணர்கள் எம்மிடம் உள்ளனர்.

சர்வ பொருளாதார முறைமையொன்றை ஐக்கிய மக்கள் அரசாங்கம் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தும். ஏற்றுமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.