பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கப் போகும் விமுக்தி குமாரதுங்க?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கத்துக்கு உதவி வரும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் அணியொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், விமுக்தி குமாரதுங்கவை வெளிநாடு ஒன்றில் சந்தித்து இது தொடர்பாக அறிவித்துள்ளார்
எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

எது எப்படி இருந்தபோதிலும் விமுக்தி குமாரதுங்க இந்த விடயம் தொடர்பில் தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை எனவும் பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த காலங்களில் பல செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் பிரிட்டனில் கால்நடை மருத்துவராக சேவையாற்றி வரும் விமுக்தி குமாரதுங்கவுக்கும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது எனக் கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் விமுக்தியை அரசியலில் களம் இறக்கும் நோக்கமில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்கக் கூடாது என எந்தச் சட்டத்தில் உள்ளது? – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”

– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.

‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனை துதிபாடுவோரை உடன் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” – இவ்வாறு சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்து – சொத்துக்களை நாசப்படுத்தி – மூவின மக்களையும் பிளவுபடுத்திய ஒரு அமைப்பின் தலைவரைத்தான் வடக்கு – கிழக்கில் உள்ள ஒரு தரப்பினரும், புலம்பெயர் தமிழ் மக்களும் தேசியத் தலைவராகப் புகழ்ந்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்குப் பிச்சை கேட்கப் பிரபாகரனைப் பகிரங்கமாகத் துதிபாடி வருவது வழமை.

இந்நிலையில், மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் அல்லது பிரதமராக வர வேண்டும் என்ற கனவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது பிரபாகரனைத் துதிபாடியுள்ளார்.

பிரபாகரன் உருவாகப் பௌத்த பிக்குகளோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது சிங்கள மக்களோ காரணம் அல்லர் என்பதை மைத்திரிபால புரிந்துகொள்ள வேண்டும்.

பிரபாகரனிடம் இருந்த பயங்கரவாதக் குணத்தாலும், அவரிடம் இருந்த இனவெறியாலுமே அவர் அரச படைகளுக்கு எதிராக – சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கினார். நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யவிட்ட அவர், இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது படையினரின் தாக்குதலில் மரணத்தைத் தழுவினார்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இனிமேல் யாரும் துதிபாடினால் அவர்களை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” – என்றனர்.

ஜப்பானிய பிரதமர் அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லியில் நடைபெற்ற ஜி. 20வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், ஜனாதிபதி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்கவே ஜனாதிபதியும் அரசாங்கமும் விரும்புகின்றனர் – பிரசன்ன ரணதுங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதமகொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ‘உங்களுக்கு வீடொன்று நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உரித்துரிமை பத்திரம் மற்றும் வீட்டுக்கடன் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசிலமைப்பின் 13ஆம் திருத்தம் தற்போதும் அமுலில் இருக்கிறது. அதனால்தான் மாகாண முதலமைச்சராக என்னால் செயற்பட முடியுமாகி இருந்தது.மேல் மாகாணத்தில் எங்களால் முடிந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் எப்போதும் இருந்து வருகிறேன். ஏனெனில் கொழும்பில் இருந்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

அதனால் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அந்த மாகாணங்களுக்குள்ளே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளவதாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன் அதுதொடர்பில் அவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள். சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் நன்கொடை திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்தது இந்தியா

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி பங்குடைமையானது 5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில் இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அடிப்படையில் வழங்கப்பட்டது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்றைய தினம் (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

இலங்கையின் பொருளாதார தோற்றப்பாடுகளில் காணப்படும் துரிதமான மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நன்கொடை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.

அதன் அடிப்படையில், இந்திய – இலங்கை உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்டம் (HICDP) என்ற கட்டமைப்பின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் 9 திட்டங்களுக்குமான இறுதி ஒதுக்கீடானது 50 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து குறித்த 9 திட்டங்களுக்குமான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடானது 3 பில்லியன் இலங்கை ரூபாவினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய பல்வேறு துறைகள் உட்பட கல்வி மற்றும் சுகாதாரம் முதல் விவசாயம் வரையிலான சகல துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டங்கள் காணப்படுகின்றன.

HICDP கட்டமைப்பின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 60க்கும் அதிகமான நன்கொடை அடிப்படையிலான திட்டங்கள் இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக ஏனைய 20 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. HICDP கட்டமைப்புக்காக இரு நாடுகளும் 2005ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டிருந்ததுடன் ஒவ்வொரு 5 வருட காலப்பகுதியிலுமாக இதுவரை 3 தடவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த திட்டங்களின் கீழான தனித் திட்டங்களுக்கான உச்சவரம்பும் ஒட்டுமொத்த நிதி மூலதனமும் 2023 ஜனவரியில் இந்திய அரசாங்கத்தால் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி பங்குடைமையானது 5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில் இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அடிப்படையில் வழங்கப்பட்டதாகும்.

தேவைகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும் மக்களை மையப்படுத்தியும் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு, வாழ்வாதார உதவிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் பரவிக் காணப்படுகின்றன.

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, ரயில் பாதை புனரமைப்பு, ஒன்றிணைந்த நீர் நிலை திட்டங்கள், இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஆகியவை இந்திய அரசாங்கத்தால் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியத்துவமிக்க திட்டங்களில் உள்ளடங்குகின்றன என்றுள்ளது.

வேட்பு மனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க வேண்டும்.நிதி நெருக்கடி காரணமாக இம்முறை வாக்காளர் பதவி உள்ளிட்ட சகல பணிகளும் தாமதமடைந்தன. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் இறுதிக் கட்டத்தில் நிதி விடுவிப்பு முடக்கப்பட்டதால் தேர்தல் வாக்கெடுப்பு எப்போது இடம்பெறும் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் ரோஹன பண்டார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்ற நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3000 அரச சேவையாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு அரச நிர்வாகம் அமைச்சின் ஊடாக தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தின் 120 ஆவது பிரிவின் பிரகாரம் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும் அரச சேவையாளர் ஒருவர் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் வரை அரச சேவையில் ஈடுபட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எம்மால் செயற்பட முடியாது.

அத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. இவ்விடயம் குறித்து சகல கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்று குறிப்பிட முடியாத நிலை காணப்படுவதால் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பு மனுக்கலை இரத்து செய்வதற்கு முன்னர் தேர்தல் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ள நிதியை பெற்றுத்தாருங்கள் என்று வலியுறுத்தினார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் விரைவில் இருதரப்புக்கும் பொருத்தமான புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக நிகழ்ச்சி நிரலிடப்பட்டிருந்தபோதும், வெள்ளிக்கிழமை (01) இரவு திடீரென அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக டெல்லியால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின்போது திருகோணமலைக்கு விஜயம் செய்து முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய்குழாய் திட்டத்தையும் பார்வையிடுவதாக இருந்தது.

எனினும், குறித்த எண்ணெய்க்குழாய் திட்டத்திற்கு உள்நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, உட்பட பல தரப்புக்களாலும் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

விசேடமாக, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் எண்ணெய்குழாய் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சென்று வட மத்திய மாகாணத்தையும் இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாகவும் அதற்காக 624 சதுர மைல் பரப்பை வழங்கவுள்ளதாகவும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், 144 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்படி உள்நாட்டு எதிர்ப்புக்கள் காரணமாகவா இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பிற்போடப்பட்டதா, இல்லை வேறெந்த இராஜதந்திர காரணங்களும் உள்ளனவா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல ங்கைக்கு உத்தியோகபூர்வான விஜயம் மேற்கொண்டு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டபோதும், இறுதி தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்கள் அவரது விஜயம் பிற்போடப்பட்டிருப்பதாக எமக்கு உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் கிடைத்துள்ளன.

அவருடைய விஜயம் பிற்போடப்பட்டமைப்புக்கு உள்நாட்டு காரணங்கள் எவையும் காரணமாக இல்லை.

அத்துடன், சில தரப்புக்களின் தவறான கோசங்கள் இராஜதந்திர உறவுகளில் செல்வாக்குச் செலுத்தவில்லை.

மேலும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் விரைவில் இடம்பெறவுள்ளதோடு, இரு நாடுகளும் பொருத்தமான திகதியையும் உறுதி செய்யவுள்ளன என்றார்.

ஜ.நா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்! – சந்தியா எக்னெலிகொட

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 2022 இல் ஜ.நாவில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான குழுவின் விசாவுக்கான அனுமதியை வரத்தமானி மூலம் தடைசெய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் துனைவியார் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போனவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கும் நகைச்சுவையினை நிறுத்தும் வரையில் இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது.

இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே நீங்கள் ஜனாதிபதி தானே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரமுடியும் தானே எனவே இவ்வாறான நகைச்சுவையினை நிறுத்துங்கள்.

வடக்கு கிழக்கில் பலாத்தகாரமாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் கண்ணீரில் மூச்சுவிட்ட பூமி ஆகும்.

ஏன் என்றால் கொழும்பு கொஸ்வத்தை பிரதேசத்தில் பலவந்தமாக எனது கணவரான ஊடகவியலாளர் பிரதீப் எக்கினா கொட கடத்தி செல்லப்பட்டார்.

அவர் அங்கு எரிக்கப்பட்டாரா அல்லது எங்காவது புதைக்கப்பட்டாரா? அல்லது கடலில் கொண்டு சென்று போட்டார்களா? தெரியவில்லை இருந்தபோதும் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் பல காரணங்கள் தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஒ.எம்.பி காரியாலயம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அதிகளவான பணத்தை வீண் செலவு செய்து நடாத்தி வருகின்றது.

இந்த ஓ.எம்.பி. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை உண்மையாக நீதியாக தேடி கொடுத்துள்ளதா?குறைந்தது உண்மையையாவது அமைப்புகளுக்கு முன்வைத்தா? இல்லை.

இந்த தாய்மாருக்கு தேவையானது உண்மையும் நீதியும் அது இந்த நாட்டில் நடைபெறாது என்பதால் தான் சர்வதேச அமைப்புக்களிடம் செல்லவேண்டியுள்ளது.

2022 ஜ.நாவில் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குழு இறுதிவரை இலங்கைக்கு வரவில்லை. அவர்களுக்கான விசா அனுமதியை வர்த்தமானி மூலம் தடைசெய்து அதனை ஜனாதிபதியின் வீட்டு காப்பற்றின் கீழ் போடப்பட்டுள்ளது.

எனவே சட்டத்தின் கீழ் அவர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கவும் அதற்கான நீதியை வேண்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும்” என அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.