ரோயல் பார்க் கொலையாளிக்கு அரசியலமைப்பை மீறி பொதுமன்னிப்பு வழங்கவில்லை – மைத்திரி

ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியல் அமைப்பை  மீறி தான் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜூட் ஜெயமகவிற்கான பொதுமன்னிப்பு அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

2005 இல் அத்துருகிரியவில் உள்ள ரோயல் பார்க் தொடர் மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின்  மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.

2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார். தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.அ

அதன் பின்னர் ஜெயமஹ நாட்டிலிருந்து வெளியேறினார் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.

இந்நிலையிலேயே தான் பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியலமைப்பை மீறவில்லை என சிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு செயல்முறையுடனான இலங்கையின் ஈடுபாட்டிற்கு பிரித்தானியா வரவேற்பு

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு இலங்கையின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுகொண்டது.

அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்தும் மற்றும் ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் இலங்கையுடன் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதாகவும் பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது – ஆளும் தரப்பு பிரதம கொறடா பிரசன்ன

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒரு போதும் சாத்தியமாகாது. அரசாங்கம் அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்திய பயணம், இந்திய பிர தமருக்கு தமிழ் கட்சிகள் கடிதம் அனுப்புவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது, அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நிகழும். இலங்கை தொடர்பாக இந்திய தரப்புக்கு பல விடயங்கள் தெரிவிக்கப்படும். குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறது.

இதனால், தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு ஜனாதிபதி அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இந்திய தரப்புக்கு தெளிவுபடுத்துவார். தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு முட்டிமோதிக் கொண்டு கடிதம் அனுப்புவது பயனற்றது. அரசியல் இலாபம் கருதியே தமிழ்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை உடனடி சாத்தியமற்றது. பாராளுமன்றத்தின் மூலமே இது அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சமஷ்டி தீர்வை கோருகின்றன. இது ஒருபோதும் சாத்தியமற்றது. அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்காது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி என்பது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது. இருக்கின்ற அரசமைப்பை மறுசீரமைத்து அல்லது புதிய அரசமைப்பு நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்துக்குள் வழங்குவார் என்றார்.

புதுக்குடியிருப்பு கைவேலியில் வனவளத் திணைக்களத்தினர் முன்னாள் போராளிகளின் வீடுகளை அழித்து பெண்கள் மீதும் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள்  முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில்  2000 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு  குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.

இந்நிலையில் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியோறிவிட்டனர் .

இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கிவிட்டனர்

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள்  கட்டு கிணறுகள் கட்டடங்கள் பயன்தரு மரங்கள் உள்ள குறித்த கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாடகை வீடுகளில் இருக்க முடியாத நிலையில் குறித்த 45 வீட்டுத்திட்டம் பகுதியில் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (12) மதியம் குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொளுத்துவதற்காக மண்ணெண்ணெயுடன் வருகை தந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த இருவரும் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை வனவள திணைக்கள  அதிகாரிகள் கொண்டு சென்ற மண்ணெண்ணெய்யை பறித்து அங்கு இருந்த நபரொருவர் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முற்ப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி  மற்றும் பொலிசார் சென்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி குறித்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்தோடு குறித்த பகுதி கிராம அலுவலர் அவர்களும் குறித்த பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினார்

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் வசதி படைத்தவர்கள் பாரிய காடுகளை வெட்டி காணி பிடிக்கிறார்கள் காசை வாங்கி கொண்டு அவர்களை அங்கு விடுகிறார்கள் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை எனவும் அப்பாவிகளான எங்களை மக்கள் வாழ்ந்த காணிகளில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை எனவும் தம்மால் வாடகை வீடுகளில் வாழ முடியாது எனவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (10) ஒன்பது  பேர்  வனவள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று ஒருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரை நீதிமன்றில் நாளை முற்ப்படுத்தவுள்ளதாக வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்

இதேவேளை தமது கடமைகளுக்கு இடையூறு என தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமருக்கான கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்றையதினம்(12) குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டனர்.

குறித்த கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனும் புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

மேலும் ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும் தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் வியாழக்கிழமை(13) இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை – அருட்தந்தை மா.சத்திவேல்

சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (12.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பேச்சு வார்த்தை, நல்லிணக்க செயற்பாடுகள், தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள், காணாமலாக்கபட்டோர் விடயமாக நியமிக்கப்படும் ஆணை குழுக்கள்,அதன் அறிக்கைகள், சமூக புதை குழிகளின் அகழ்வு, ஆய்வு முறைகள் எவற்றிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க வழிமுறையை ஆரம்பிக்க இடைக்கால சபைக்கான பதவிகளுக்கு விண்ணப்பம் கோரியிருப்பது இன்னொரு ஏமாற்று கபட நாடகமாகும். சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தென் ஆப்பிரிக்காவிற்கு அமைச்சர்கள், அரச அதிகாரிகள் சுற்றுலா செல்வதும் தென்னாப்பிரிக்க பாணியில் நல்லிணக்க செயற்பாட்டு வடிவிலான ஆணை குழு என்பதெல்லாம் பொருளாதார வீழ்ச்சி நிலையில் சர்வதேசத்தை ஏமாற்றி வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொள்ளும் தந்திர முயற்சியே அன்றி தமிழர்களுக்கு நீதிகிட்ட போவதில்லை என்பது மட்டும் உண்மை.

சர்வதேச நாடுகள், ஐநா மனித உரிமை பேரவை முன்வைக்கும் பரிந்துரைகள், யோசனைகள், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அரசு ஆயத்தமில்லை. குறிப்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் 31/1 மற்றும் 51/1 தீர்மானங்களுக்கு உடன்பாடததோடு  உள்ளக பொறி முறையில் நாட்டம் கொண்டுள்ளமை பாதிக்கப்பட்டவர்கள் தேடும் நீதியை காணாமலாக்கும் செயற்பாடு எனலாம்.

இதனை அண்மையில் மூன்று அமைப்புகள் சமூக புதைகுழிகள் தொடர்பாக வெளியிட்டு அறிக்கை தெளிவுபடுத்துகின்றது. நீதி கிட்டக் கூடாது எனும் நோக்கிலேயே இலங்கை அரசு இயங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை சர்வதேச நாடுகளும் ஐ.நா மனித உரிமை பேரவையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். அது தொடர்பில் விழிப்படைய வேண்டும். அரசு தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் செயற்பாடுகள் எதனையும் செய்வதற்கு ஆயத்தம் இல்லாததால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை இழுத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

புத்தரின் தந்தத்திற்கு ( பல்லின்) பாரிய மாளிகை அமைத்து வருடம் தோறும் விழா எடுக்கும் ஆட்சியாளர்கள் காணாமலாக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்திற்கு புத்தர்கள் என்பதையும் சமூக புதைகுளிகளில் கண்டுபிடிக்கப்படும் எச்சங்கள் ஒவ்வொன்றும் அவரவர் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் புனிதமானவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சமூக புதைகுளிகளில் கண்டெடுக்கப்படும் எச்சங்களை வைத்து விழா எடுக்குமாறு எவரும் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவி கொடுக்க வேண்டும். சர்வதேச நியமங்கள், சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அகழ்வு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கண்டுபிடிக்கப்படும் எச்சங்கள் யாருடைய என சரியாக அடையாளம் கண்டு அவரவர் குடும்பத்திடம் கையளித்து தமது சமய நம்பிக்கை மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப அடக்கம் செய்ய வழியேற்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றார்கள். அதுவே நீதி. அதுவே நல்லிணக்கத்திற்கான ஆரம்ப புள்ளி அதுவே புத்தரின் வழி என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து, ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடாத்திய அலி சப்றி

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இம்முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் விசேட ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை தென்னாபிரிக்காவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஒத்துழைப்புக்களை சுவிற்ஸர்லாந்தும், இதற்குரிய நிதி உதவியை ஜப்பானும் வழங்குவதாக அறியமுடிகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபக்ளெர் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முன்னிலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது.

இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா ஆகியோர் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது அறிக்கைகளை முன்வைத்தனர்.

சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட புள்ளித் திட்டத்துக்கமைய ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் தனித் தனியாகப் புள்ளிகளை வழங்கினர். புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் முறையே பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில், பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

1978 ஆம் ஆண்டின்  16 ஆம் இலக்க பல்கலைக் கழகச் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் படி பல்கலைக்கழகப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதால், மிக விரைவில் அடுத்த துணைவேந்தர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா தாமதிக்காமல் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள்.

உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009),  உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர்.

இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’  தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை  ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இச்சூழலில்,  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட  ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான  புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்

மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.