யாழில் தரம் 9 க்குட்பட்ட மாணவர்களுக்கு வெள்ளி,ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடாத்தத் தடை

ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இதில் சுகாதாரம், கல்வி, மதத் தலைவர்கள், பொலிஸ், தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இன்றைய கலந்துரையாடல் நிறைவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1 . பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு கருத்தமர்வுகளை தனியார் கல்வி நிலையங்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு பிரதேச செயலக மட்டங்களில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2 . ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும்.

3 . தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும்.

4. தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.

5 . தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடம் வரை ஆன்மிகம், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை போதிக்க வேண்டும்.

6 . இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானித்து பிரதேசமட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

இத் தீர்மானங்களை பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கும்; இந்திய துணைத்தூதர் நம்பிக்கை

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையில், அலையன்ஸ் எயார் மூலம் இயக்கப்படும் 100ஆவது விமானச் சேவைக்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.
அந்த போக்குவரத்தை மேம்படுத்த, இருநாட்டு அரசாங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தல் அவசியம்

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தலொன்று தேவை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கட்டானவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துதெரிவித்துள்ள அவர் தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் பதவியிலிருக்கும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால் இடைத்தேர்தல் அவசியம் என அவர்  தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தாங்கள் எப்படி தப்பிபிழைத்து வாழ்வது என்பது குறித்து சிந்திப்பவர்கள் மூலம் உங்களிற்கு எதிர்காலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேர்தலிற்கு அழைப்பு விடுக்கின்றோம்,இதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் எனகர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிமைகளை ஒடுக்குவதற்கான சட்டமூலங்கள் கொண்டுவரப்படுவதையே நாங்கள் இன்று பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மூலம் எதிரிகளை அச்சுறுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

அரசியல்மயமாக்கப்பட்ட சட்ட அமைப்பு மற்றும் சட்ட அமுலாக்கல் கட்டமைப்புகளை பயன்படுத்தி தனது எதிரிகளை அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட அணுகுமுறையை பிரித்தானிய தமிழர் பேரவை கண்டித்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைப்பட்டமை சம்பவம் குறித்து நாங்கள் எங்கள் கரிசiயை வெளியிட்டுள்ளோம் என குறி;பிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை பௌத்தமதகுருமார் சிங்களபேரினவாதிகள் சட்டம் ஒழுங்கை மீறும்போதெல்லாம் இலங்கையின் செயலற்ற தன்மைக்கு இது முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் நியாயமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமைகளை ஒடுக்குவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம்தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதையும் இது வெளிப்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து எதுவித தீர்மானமும் இல்லை – நீதியமைச்சர்

வடமாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் உள்ளக கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கொண்டு செல்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அப்பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் அத்தகைய தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவது குறித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயேஇவ்வாறானதொரு செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்திற்குள்ள உள்ள உரிமையே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும் இந்த அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுதல் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் முதற்தடவையாக இந்தியா – இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளினால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னேற்றத்தினால், இந்தியாவிலிருந்து பாதுகாப்பு தொடர்பான வன்பொருள் கொள்முதலானது புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கு மற்றும் இருநாட்டு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் புதன்கிழமை (7) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உரையாற்றுகையில் , தமது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் தாங்கள நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அனைத்துக் துறைகளிலும் இலங்கையுடனான ஒத்துழைப்பை பெறுமதி வாய்ந்ததாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா – இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

மேலும், உள்ளுர் கைத்தொழில்கள் மற்றும் இலங்கை பாதுகாப்பு படைகளால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களை காட்சிப்படுத்தவும், சம்பந்தப்பட்ட இந்திய தொழில்துறை நிபுணர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் இந்த நிகழ்வானது இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகளை தொடர்ந்து நவீனமயமாக்குவதன் மூலம், இந்த முன்னேற்றங்களில் முன்னணியில் இருப்பது அவசியம் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ரிமோட் தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய இந்திய பாதுகாப்பு செயலாளர் (உற்பத்தி) கிரிதர் அரமனே, இந்தியாவின் முக்கிய பங்காளிகளில் இலங்கையும் ஒன்று என்றும் இருதரப்பு உறவுகளில் அது முக்கிய தூணாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கை இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோர் இரு நாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

பாதுகாப்பு கொள்முதல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விஷேட புத்தகம் இந்திய உயர்ஸ்தானிகரால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இக்கண்காட்சியில் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் துறையின் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இலங்கையில் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளுக்காக மேலும் ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ்(Justion Divis) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் ஆர்.எம். பார்க்ஸ் நிறுனவனம் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து 45 நாட்களுக்குள் முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க இந்த ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

கடன் பத்திரங்களை திறந்து பட்டியல்களை மீளச் செலுத்துவதற்கு போதியளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் கடந்த காலத்தில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.

அதனால் நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் இந்த மூலோபாயத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, அமைச்சரவை அங்கீகாரத்துடன், நாட்டில் செயல்படும் விநியோக முகவர் வலையமைப்புகள் மூலம் பெற்றோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

இங்கு, சந்தையில் நுழையும் புதிய சில்லறை விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளில் , உள்நாட்டு வங்கிகளில் தங்கியிருக்காமல் அந்நியச் செலாவணித் தேவைகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும். அதன்படி, இந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம்,செயற்படத் தொடங்கி ஆரம்ப ஓராண்டு காலத்தில் வெளிநாட்டு மூலங்கள் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கான அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்படும்.

2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழு (CASC) மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) ஆகியவை முன்மொழிவுகளை ஆய்வு செய்து, பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு பின்வரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க பரிந்துரைத்தன.

அந்த நிறுவனங்கள்,

• Sinopec Fuel Oil Lanka (Private) Limited, F5, ஹம்பாந்தோட்டை மெரிடைம் நிலையம்,மிரிஜ்ஜவெல, ஹம்பாந்தோட்டை

• United Petroleum Pty Ltd, 600, கிளென்பெரி வீதி.ஹேதோன், விக்டோரியா 3122, ஆவுஸ்திரேலியா.

• Shell PLC உடன் ஒத்துழைப்புடன் RM Parks, 1061 N பிரதான வீதி, போர்ட்டர்வில் , கலிபோர்னியா 93257, அமெரிக்கா.

சினோபெக் ஒயில் லங்கா தனியார் நிறுவனம் (M/s Sinopec Fuel Oil Lanka (Private) Limited ) (M/s Sinopec) மற்றும் அதன் தாய் நிறுவனத்துடன் நாட்டில் சில்லறை எரிபொருள் வர்த்தகத்தில் பிரவேசிப்பதற்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக, இந்திக அனுருத்த, ஷெஹான் சேமசிங்க தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் மற்றும் குறித்த அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இராஜினாமா

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

டிக்கிரி கொப்பேகடுவவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக நியமித்திருந்தார்.

Posted in Uncategorized

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் 2300 ஆவது நாளை எட்டியது

வவுனியாவில்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றுடன் 2300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்வு கிடைக்கும் வரை இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.