உத்தரவாதம் வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்தது இலங்கை

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து கடன் உதவியை பெறுவதற்கு அவசியமான உத்தரவாதத்தை வழங்கியமைக்காக இலங்கை இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அவசியமாக தேவைப்படுகின்ற 2.9 மில்லியன் டொலர் கடனுதவியை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியமைக்காகவே இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அளுநர் இந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியுள்ளது என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா தேவையான அனைத்து உத்தரவாதங்களையும் வழங்கியுள்ளது இந்த கடிதத்தை அனுப்பியமைக்காக நாங்கள் முதலில் இந்திய அதிகாரிகளிற்கு நன்றியை தெரிவிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளன என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் எனினும் சீனா வழங்கிய உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

பாரிஸ் கிளப் மற்றும் சீனா உட்பட ஏனைய கடன்வழங்குநர்கள் உத்தரவாதம் வழங்கும் நிலையில் உள்ளனர் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சீனா அளித்துள்ள உத்தரவாதம் சர்வதேச நாணயநிதியத்தினை திருப்திபடுத்த போதுமானதல்ல என காணப்படும் ஊகங்கள் குறித்த கேள்விக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகின்றது- சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கை அரசாங்கங்கள் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கானதொரு கருவியாக வலிந்து காணாமலாக்குதலை பயன்படுத்தி வந்தமைக்கான நீண்டகால வரலாறு உண்டு.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் உயிர் வாழ்வதற்கான உரிமை, சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, விடுதலை மற்றும் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

அரசியல் ரீதியான தன்முனைப்பின்றி, இந்த மோசமான நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டு நேற்று (24) செவ்வாய்க்கிழமையுடன் 13 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அதன் பொருட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பாதுகாப்பு படையினரால் நீங்கள் தடுத்துவைக்கப்படுவதை அல்லது காணாமலாக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்? நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்களா அல்லது உயிரிழந்துவிட்டீர்களா என்பது பற்றி யாரும் அறியாதவண்ணம் நீங்கள் தடுத்துவைக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை பாதுகாப்புத் தரப்பினர் மறுப்பதுடன், நீங்கள் இருக்கும் இடத்தை இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.

உங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. நீங்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றீர்களா? உங்களுக்கு அவசியமான உணவு, மருந்து என்பன வழங்கப்படுகின்றதா? அல்லது அவர்கள் உங்களை ஏற்கனவே படுகொலை செய்துவிட்டார்களா? என்பது குறித்து உங்களது அன்புக்குரியவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

பல வருடங்கள் கடந்தும் உங்களுடைய விதியும், நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்பதும் யாருக்குமே தெரியவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் நீங்களும் மற்றுமொரு நபராக உள்ளடங்குகின்றீர்கள்.

13 வருடங்களுக்கு முன்னர், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நேர்ந்தது இதுவே.

பல வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்த வழக்கில் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தொடர்ந்து போராடி வருகின்றபோதிலும், தற்போது வரை எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக்கூறச் செய்யப்படவில்லை.

பிரகீத் எக்னெலிகொட ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் அவரது தொழிலுக்காக மாத்திரம் இலக்குவைக்கப்படவில்லை. மாறாக, ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளை வெளிப்படையாக விமர்சித்தமைக்காகவும் அவர் இலக்குவைக்கப்பட்டார்.

இலங்கை அரசாங்கங்கள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்கானதொரு கருவியாக வலிந்து காணாமலாக்குதலை பயன்படுத்தி வந்தமைக்கான நீண்டகால வரலாறு உண்டு.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்குழுவின் முன் நிலுவையில் உள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான இரண்டாவது நாடாக இலங்கை இருக்கின்றது.

கடந்த 1980ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் 60,000 – 100,000 வரையிலான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை மதிப்பிட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் உயிர் வாழ்வதற்கான உரிமை, சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, விடுதலை மற்றும் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் ரீதியான முனைப்பின்றி, இந்த மோசமான நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம்; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுக கூட்டம் புதன்கிழமை(25) காலை 11 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த அறிமுக கூட்டத்தில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ரெலோ,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்,ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம்(ஜனா) சித்தார்த்தன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,எம்.கே .சிவாஜிலிங்கம் ,தமிழ் தேசிய கட்சி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா,ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த 5 கட்சிகளும் எதற்காக ஒன்றிணைந்து இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக குத்து விளக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த அறிமுகக் கூட்டத்தில் குறித்த 5 கட்சிகளையும் உள்ளடக்கி மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை, இந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் -இந்திய உயர்ஸ்தானிகர்

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 ஆண்டிலும், இலங்கை 2048 ஆண்டிலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே இந்திய உயர் ஸ்தானிகர் இதனை தெரிவித்தார்.

நல்லிணக்கத்தின் ரிதம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இந்தியாவின் நாகலாந்து பிரதேசத்தில் உருவான உலகப் புகழ்பெற்ற UDX இசைக்சுழுவும் இலங்கை Heavy metal Quintet Band Stigmata இசைக்குழுவும் இணைந்து  இந்த இசை நிகழ்சியை நடத்தின.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவு, சமாதானம் மற்றும்  சபீட்சம்   என்பன தொடர்பிலான இருநாட்டு எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இரு இசைக்குழுக்களும் தெரிவு செய்யப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்,

இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும்   பல்வகைமையுடைய ஜனநாயகத்தையும் கொண்டுள்ள நாடாகும்.இந்த நிலைமை இலங்கைக்கும் பொதுவானாதாகும். மேலும் இலங்கை இன்னும் சில நாட்களில் தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே மிகவும் நெருங்கிய   நண்பர்கள் என்ற அடிப்படையில் நாம் இந்நிகழ்வை ஒற்றுமையின் உண்மையான ரிதமாக கொண்டாட வேண்டும்.

இது வெவ்வேறு இசைக் குழுக்களின் இசைச் சங்கமம் மட்டுமல்ல இது இலங்கை மற்றும் இந்தியாவின் ஒற்றுமையையும் குறிக்கும்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் நாமும் எமது ஒற்றுமை மற்றும் 75 வருட இராஜதந்திர உறவைக் கொண்டாடுவதுடன் எமது நூற்றாண்டு சுதந்திர விழாவை நோக்கிய எமது பயணத்துக்காக எம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்றும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், இராஜதந்திரிகள், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமன்றி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இப்பயணத்தில் பங்கு வகிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை, இந்தியப் பிரஜைகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுக அபிவிருத்திப் பணிகளில் மீண்டும் சீனா

150 மில்லியன் டொலர் முதலீட்டில் பொது – தனியார் பங்காளித்துவமாக முன்மொழியப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் முதல் கட்டத்தை இலங்கை முன்னெடுக்க உள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் பிரேரணையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவில் சேவை வழங்கல் மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முனைப்புடன், துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் மதிப்பீட்டின்படி, தென் முனையதிற்கு சொந்தமான Battenberg மற்றும் Bloemendhal சேவை விநியோகப் பகுதிகள் பொது – தனியார் பங்காளித்துவத்தின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.

அதன்படி சைனா மெர்ச்சன்ட் போர்ட் கம்பெனி, கொழும்பு இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல்ஸ் கம்பெனி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார நெருக்கடியாக மாறும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி – உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின்  மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவான பதில்களை உறுதி செய்ய முயல்வதாக குறிப்பிட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் அதிகரித்துவரும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரிதமாக சுகாதார நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரகிசிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த வரவு செலவுதிட்ட மதிப்பீடு 300 மில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 2023 இல் இதுவரை இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மூலம் 80 மில்லியன்  டொலர்களே கிடைத்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இன்னமும் 220 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையாகவுள்ளது இலங்கையின் சகாக்களுடன் இந்த இடைவெளியை அவசரமாக நிரப்பவேண்டிய தேவையுள்ளது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளதார நெருக்கடிகள் சுகாதார துறைக்கு பல சவால்களை அளித்த என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கும்சமூகம் நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு உதவுவதற்கும் நாங்கள் சகாக்களின் உதவியை பெறவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அனைவருக்கும் முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விநியோகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஜப்பானிடம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின்  இரண்டாவது டேர்மினலை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானிடம் ஒப்படைக்கவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கியுடனான சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்காக ஜப்பான் அளித்த ஆதரவிற்காக நன்றி உடையவராக விளங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியானதும் இரண்டாவது முனைய பணிகள் ஆரம்பமாகும் என ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரதினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பெப்ரவரி 4ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் ஊடாக எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,

ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.சிங்கள பேரின வாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம்.

தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது. போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழினப்இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக்கூறவில்லை. தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.

அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள், தமிழ் அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள், தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை வீதியில் போராடி வருகிறார்கள்,தமிழர் பகுதிகளில் தமிழருக்கு அனுமதிவழங்காமல் சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தி எமது எதிர்ப்பை இந்த அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூற வேண்டும்.

அந்த வகையில் மாணவர்களாகிய நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். எமது உரிமைகளை நாம் விடடுக்கொடுக்காமல் எமது இருப்பை உறுதி செய்வதற்கு நாம் போராட வேண்டும். ஆகவே பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்த மக்கள் எழுச்சி பயணத்தில் எம்முடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றிய யாழ். போதனா வைத்தியர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர்.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்றவற்றை நிவர்த்தி செய்து வளங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசினால் பறிமுதல் செய்யப்படும் சம்பளப் பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தினால் நிர்வகிக்கத் தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தியாவால் கொண்டு வரப்படும் தீர்வுகள் நிரந்தர தீர்வாக அமையாது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

இது பற்றி அவர் (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் “இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா ஒதுங்கிவிடாது. இந்த வகையில்தான், இந்திய வௌியுறவு அமைச்சரின் வருகையும் அமைந்துள்ளது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். “இணைக்கப்பட்ட வட,கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்” போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு.

தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா? அவ்வாறானால், இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன?கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில்,அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்?

எல்லைகளைச் சுருக்கி ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களை முடக்கியுள்ள இன ஒடுக்குமுறைகள், இனியும் நடைபெறாது என்பதை எந்தத் தரப்பு உத்தரவாதப்படுத்துவது, விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவது எப்போது,அழிக்கப்ப ட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பரிகாரமாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்ன? தமிழ் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட காணிகளைப் பெறுவது எப்படி
இதுபோன்ற சந்தேகங்களை களைந்தே,அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

தீர்வைக் குலைப்பதோ? அல்லது இழுத்தடிப்பதோ முஸ்லிம்களின் நோக்கம் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களை கைவிட்டிருந்ததுடன், ஓரங்கட்டியும் இருந்தது.

முஸ்லிம்களுக்கு இந்த ஒப்பந்தத்தில்,சந்தேகம் ஏற்பட இதுவே காரணம். எனவே, நாட்டின் நிரந்தரத் தீர்வுக்கு 13 ஐ, முழுமையாக அமுல்படுத்துவதுதான் தீர்வாக அமைந்தால், அதையும் ஏற்க முஸ்லிம்கள் தயார்தான்.ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயந்தருவது, இதை அமுல்படுத்துகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவது, மற்றும் தமிழ் மொழித் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்குவதா கக்கூறி,இடையில் காலைவாரும் சூழ்ச்சிகளை நிறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து இந்தியாவுக்குத் தெளிவுபடுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வருவது அவசியம். தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் இதுபற்றி மனந்திறந்து முஸ்லிம்களுடன் பேசாதுள்ளதுதான் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே,இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படு த்தாது அமைந்தால்,அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்