கடும் மழையால் யாழில் 1025 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்

கரவெட்டி,யாழ்ப்பாணம்,பருத்தித்துறை, மருதங்கேணி,சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளன. இதில் பருத்தித்துறைப்பிரதேச செயலர் பிரிவில் அதிகபட்சமாக 201 குடும்பங்களை சேர்ந்த 690 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 24 குடும்பங்களை சேர்ந்து 72 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 177 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு சந்திப்புகள் இடம்பெற்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்பு பேரவையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க, அரசியலமைப்புச் சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதற்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு 02 வார கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

வௌிநாட்டு பணம் அனுப்பல்களுக்கு ஊக்குவிப்புத் தொகை

தனியொரு பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக் கொள்ளும் முகவர்களிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

சம்பந்தனுக்கு நேரில் இ.தொ.க வாழ்த்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ´ஜனநாயகப் பொன் விருது´ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும், இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது.

இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார்.

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்க்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு, மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையால் 9,300 மெட்ரிக் தொன் யூரியா விநியோகம்

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அமெரிக்க-யுஎஸ்எய்ட் (USAID), நிதியுதவியுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் சிறுபோக நெல் விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள கமநல சேவை நிலையங்களில் தகுதியான விவசாயிகளின் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விநியோக பட்டியல்கள் 18, நவம்பர் 2022 வரை காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இந்திய தூதுவர்கள் திருகோணமலை விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர், இராஜதந்திர பணியாளர்களுடன் திருகோணமலை லங்கா ஐஓசி முனையத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அதன் செயற்பாடுகள் குறித்து இரண்டு இராஜதந்திரிகளுக்கும் லங்கா ஐஓசி பணியாளர்கள் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை முனையத்தில் இருந்து இலங்கை சந்தைக்கான, லங்கா சுப்பர் டீசலின் முதலாவது விநியோகத்தையும் இந்திய உயர்ஸ்தானிகர், இதன்போது கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் “அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள தூதரகத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து  கலந்துரையாடினர்.

அதன்பின்னர் இப் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் கையளித்தனர்.

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாட்டைத் துறந்து அகதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

இனப்படுகொலை நாடான இலங்கையில் அந்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீதான இனவெறி மிகுந்த தவறான ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். சொந்த மண்ணில் வாழ வழியற்ற நிலையில் வேறுவழியின்றி அங்குள்ள தமிழ் மக்கள் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏதிலிகளாக அவ்வப்போது புலம்பெயர்ந்தும் வருகின்றனர்.

அப்படி நிம்மதியாக வாழ இந்தப் பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், ஊரையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஆழ்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தொப்புள்கொடி உறவுகளான 300க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கனடா நாடு நோக்கிச் செல்லும் வழியில் கடந்த நவம்பர் 8 ஆம் நாளன்று புயலால் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் அரசு மனிதநேய அடிப்படையில் தமிழர்களை மீட்டு, அருகிலிருந்த வியட்நாம் நாட்டில் ஒப்படைத்த நிலையில், தற்போது அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வறுமையின் காரணமாக இருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு பெரும் பொருட்செலவில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும், பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துள்ள இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி, வறுமையிலும், பசியிலும் வாடி சிறுக சிறுக அவர்கள் உயிரிழக்கவே வழிவகுக்கும்.

 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏகாதிபத்திய பேரரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தீரத்துடன் போராடி அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலையை வென்றெடுத்த புரட்சிகர வியட்நாமிய நாடு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தாயக விடுதலைக்காகப் போராடி வரும் தமிழர்கள், அடிமைத்தன அடக்குமுறைகளால் அனுபவித்த துன்ப துயரங்களையும், மன வலிகளையும் எளிதில் உணரும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் முழுமையாக நம்புகின்றனர். எனவே ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியட்நாமிய அரசு கைவிட வேண்டுமென்று கோருகிறேன்.

வியட்நாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களும் தாங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாதென்றும், ஐநாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உடனடியாக வியட்நாம் அரசுடன் பேசி, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிடச் செய்வதோடு, அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்குத் தமது சொந்த பொறுப்பிலேயே பாதுகாப்பாக அனுப்பி வைப்பதோடு, வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனைவரும, கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதை தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
Posted in Uncategorized

அரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய்ய வேண்டும். – செல்வம் எம்.பி

அண்மையில்விடுதலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கையினை முன் வைத்தார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இன்று (10) வியாழக்கிழமை இடம்பெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் அவர்களுக்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது வரவேற்கத்தக்கது. இனப்பிரச்சினையைத் தீர்ப்தற்காக அனைத்து கட்சிகளையும் அழைத்து அதற்குரிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

தந்தை செல்வாவினுடைய காலம் முதல் வடகிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலானதீர்வினையே வலியுறுத்தி வந்ததை இங்கே குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.அண்மையிலே வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 100 நாள் போராட்டத்தை நடாத்தி முடித்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்றாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன் வைத்துள்ளார்கள். 13 ஆவது திருத்தச்சட்டத்திலே உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

நல்லிணக்க அடிப்படையில் அரசியல் கைதிகள் எட்டு பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அவர்களில் நான்கு பேரே விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்துள்ளார்கள்.அவர்கள் விடுதலை செய்யப்பட்டு பத்து நாட்கள் கடந்துள்ளன. ஏனைய நான்கு பேரில் இருவரை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த இருவருக்குமான புனர்வாழ்வினை நீதியமைச்சர் என்ற வகையில் அதனை ரத்து செய்து அவ்விருவரையும் விரைந்து விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன். ஏனைய இருவரையும் நீதிமன்றில் உள்ள வழக்குகள் மீள்ப்பெறப்பட்ட பின் விடுதலை செய்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே எட்டுப்பேரில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய நான்கு பேரினதும் விடுதலையில் உள்ள தடங்கல்களை நீக்கி விரைந்து விடுதலை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

கிறிஸ்மஸ் பண்டிகை வரவுள்ளது. அதற்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலம் அரசாங்கம் நல்லிணத்திற்காக வெளிபடுத்தும் நல்லெண்ண சமிக்ஞையாக பார்க்கக் கூடியதாக இருக்கும்.
அரசியல்கைதிகள் விடயத்தில் நீங்கள் நல்ல முடிவினை எட்டியுள்ளீர்கள். அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என தெரிவித்துக்குக் கொண்டு நன்றிகளையும் கூறிக் கொண்டு ஏனையவர்களையும் வெகுவிரைவிலே விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையிலே ஜனாதிபதி, சிறு தானிய பயிர்ச் செய்கைகள் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காக வன இலாகா வசம் உள்ள விவசாய நிலங்களை விடுவிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் வன்னி மாவட்டத்திலே குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலே மக்கள் உழுது பண்படுத்திய நிலங்களை விதைப்பதற்கு முன்னராக வன இலாகாவினர் அங்கு சென்று அந்த நிலங்களிலே பெரு மரங்களினை நடுவதற்கு முயற்சிக்கின்றார்கள். அமைச்சர் மகிந்தானந்த அளுத்த்கமமே அண்மையில் வவுனியா சென்ற போது வன இலாக வசம் இருக்கும் விவசாய நிலங்களை விடுவித்து பயிர்ச் செய்கை செய்வதன் ஊடாக பெருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் குடும்பங்களை மேலும் முன்னேற்ற முடியும் என வாக்குறுதியும் வழங்கியிருந்தார் எனவே அமைச்சர்யும், ஜனாதிபதியும்அவர்கள் இதனை கருத்தில் எடுத்து விரைந்து ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகள் விவசாயம் செய்ய மிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் வன இலாகா போன்ற திணைக்களங்கள் அவர்களுக்கு தொடர்ச்சியாக தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே விவசாய உற்பத்தித்துறையினூடாக பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

குடிவரவு,குடியகல்வு திணைக்களங்கள் வடக்கிலே கிளைகளைத் திறந்து கடவுச் சீட்டு வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். இணைய வழி ஊடாக விண்ணப்பிப்பவர்களுக்கு மூன்று நான்கு மாதங்கள் கழித்து அவர்களுக்கு திகதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சில இடைத்தரகர்கள் மக்களிடம் ஒரு கடவுச்சீட்டுக்கு இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் வாங்கிக் கொண்டு கடவுச்சீட்டினை உடனடியாக பெற்றுக் கொடுக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் இலஞ்சம் வழங்கி அதனை இடைத்தரகர்கள் மூலமாக பெற்றுக் கொள்கின்றார்கள். வெளிநாட்டிலுள்ள மக்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக தூதரங்களூடாக கடவுச்சீட்டை அனுப்பி வைக்கும் போது தூதரகங்கள் ஆவணங்களை சரி பார்த்தே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இங்கே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இருப்பவர்கள் விண்ணப்பத்தில், ஆவணங்களில் பிரச்சினை இருப்பதாக புலம்பெயர் மக்களிடம் கூறி ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரை இலஞ்சமாகப் பெற்று குறித்த கடவுச் சீட்டினை விடுவிக்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் . என்றார்