2024 வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு பல்கலைக்கழகங்களை அமைப்பதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பின் போது இந்த கருத்தையே குறிப்பிட்டார். ஆனால் எந்த தவறும் திருத்திக் கொள்ளப்படவில்லை.

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் என்பதை அரச கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வரையறையற்ற கடன்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் கடன்படு எல்லையை 3400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியமடையாது.

நாட்டில் 17 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.

மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களையும்,தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது நகைப்புக்குரியது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி தனது முன்மொழிவுகள் ஊடாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.

தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் – ஹர்ஷ டி சில்வா

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தவில்லை.மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார்.

ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டும் வரவு செலவுத் திட்டம் – சஜித்

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்கு சொர்க்கமும் மக்களுக்கு நரகமும்  காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளர்.

வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்தார், மேலும் பிரார்த்தனை செய்ய வேண்டியவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று புத்த பகவான் கூட போதித்தார், ஆனால் தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவில்லை.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும், ஆட்சியாளர்கள்  சொர்க்க லோகத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.

2022 வரவு  -செலவுத் திட்ட பிரேரணையில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்தும் தெரிவித்த அவர்,  வரவு – செலவு திட்ட பிரேரணையில் அதிகளவான  விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாகவும் கூறினார்.

மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இன்று  (13) ஆம் திகதி திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று  தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும்  இன்று நீதிமன்றில் ஆஜராகினர். மகாவலி அதிகார சபை சார்பாக  அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  எந்த  ஆவணமும்  அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் நீதிமன்றுக்கு  சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேற்றுமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரி அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60வது நாளாகவும் இன்றும் போராட்டம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பில் பதிவிட்டவருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்பணியாற்றி  தற்போது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும் (Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறை பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவும் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

குறித்த நபர் சமூக ஊடக வெளியில் நன்கு அறிப்பட்டவர் என்பதுடன் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு  ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருவதுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அச்சமின்றி சமூக ஊடக பதிவுகள் மூலம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு – செலவு திட்டமாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு – செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

இந்தியாவின் சென்னையில் உள்ள IT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்.

19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு – செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

பொருளாதாரம் மீட்சியடையாமல் லெபனான் நாட்டின் நிலைக்கு செல்வதா இல்லையா என்பதை எதிர்க்கட்சியினர் தீர்மானிக்க வேண்டும். ஒருகாலத்தில் பிரித்தானியாவுக்கு கடன் வழங்கிய நாம் இன்று முழு உலக நாடுகளிடமும் கையேந்துகிறோம்.

பொருளாதார நெருக்கடிக்கு கடினமான தீர்மானங்களை  செயற்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு  கடினமான தீர்மானங்கள் இல்லாமல் போலியான அழகான விடையேதும் கிடையாது.

எதிர்காலத்தை சிறந்த முறையில் வெற்றிகொள்ள வேண்டுமாயின் நிலைபேறான பொருளாதார கொள்கை செயற்படுத்த வேண்டும்.

சுற்றுலா கைத்தொழில் துறையை மேம்படுத்த 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிவிட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் 60 சட்டங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்யப்படும்.

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தைப் போன்று புரட்சிகரமான வரவு – செலவு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்காமல் நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள்.

திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு தனித்து தீர்வுகாண முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்.

வரவு – செலவுத் திட்ட  முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை அரசியல் தரப்பினர் நாட்டுக்காக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு.

சகலருக்கும் ஆங்கிலம் ‘திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு  சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும்.

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை  வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்.

பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளது. நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படும்.

வீதி புனரமைப்புக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும். வீட்டு உரிமை முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்பார்ப்பார்களா ?

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த பரிந்துரைகளை வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளேன். ஆகவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :

சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிப்பு.

விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

தேர்தல் வெற்றியல்ல  நாட்டின் வெற்றியே எனக்கு  முக்கியம்.

ஓய்வூதியக்காரர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.

அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் தேர்தல் வரவு செலவுத் திட்டம் அல்ல, எதிர்காலத்துக்கான வரவு செலவுத் திட்டம்.

பூச்சியமாக  வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் டொலராக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் –

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது –

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல்,பொருளாதார கொள்கை தோல்வி. நவீன யுகத்துக்கு இணையாக கொள்கைகளை வகுக்காவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது.

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம்.

சகல அபிவிருத்திகளையும் எதிர்த்து எதிர்காலத்தையும் கொள்ளையடிக்க வேண்டாம்

நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி

மத்திய வங்கி  சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2023 ஆம் ஆண்டு  3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்,கடன் பெற வேண்டும்.ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது  -நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலையை நன்கு அறிவோம். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வது இலகுவானதொரு காரியமல்ல

பொருளாதார மீட்சிக்காக எடுத்துள்ள தீர்மானங்கள் சரி என்பதை கடந்த கால சமூக கட்டமைப்பு நிலைவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எமது பயணம், பாதை, சரியன கடினமானதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்

தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள் ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இதனை இனியும் தொடர முடியாது – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும் –

எவரும் பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் –

அரசாங்கம் மாத்திரமல்ல அனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம் வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு முன்மொழிந்தார்.

வடக்கு கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது – செல்வம் எம்.பி. கடும் எதிர்ப்பு

சீனாவைப் பொருத்த வரையில் இலங்கையிலே ஒரு பொது நல நோக்கோடு அவர்களின் செயற்பாடுகள் இடம் பெறுவது இல்லை. மாறாக தங்களுடைய இலாபத்தை கருத்தில் கொண்டே சீனா செயற்படுகின்றது எனவும் வடக்கிலோ கிழக்கிலோ சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது எனவும் அதை நாங்கள் எதிர்போம் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு இன்று வெள்ளிக்கிழமை (10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டது. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய இலாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.

அதேபோல் போர்ட் சிட்டியும் சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக போர்ட் சிட்டியை வைத்துக் கொண்டது. அதேநேரம் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் இப்படியாக ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி விகிதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது.

அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாத நிலையில் இருக்கிறோம். இப்பொழுது சீனா மீண்டும் வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கை தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது.

எப்படி என்று சொன்னால் இங்கே தன்னுடைய லாபம் கருதி எண்ணெய் விடயங்களை கையாள முடியுமோ அதை கையாளுகின்ற வகையிலே இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது. சீனாவினுடைய தூதுவர் வடக்கிலே பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப்பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றர். அதேநேரம் மீனவர்களுக்கு மீன் வலைகளையும் வழங்குகின்றார்.

ஆகவே சீனா நினைப்பது என்ன வென்றால் மீனவர்களை தன்னகத்தே கொண்டு வந்தால் வடக்கில் உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி அட்டைப்பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு வடக்கில் உள்ள முழுமையான நிலங்களையும் அபகரிக்கின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.

எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

இந்தியாவுக்கும் எங்களுக்கும் மீனவர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவை விட்டு நாங்கள் வேறு நாட்டின் பக்கம் நிற்கின்ற வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிறது.

ஏனென்றால் எங்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியா தான் முன்னுக்கு வருகின்ற ஒரு சூழல் இருக்கின்றது.

அந்த வகையிலே நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது.

ஆகவே இந்த விடயத்திலே சீனா தூதுவரின் வருகை வடக்கிலே எங்களுடைய மீனவ பகுதிகளில் இருக்கின்ற செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே எனவே அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பது என்னுடைய கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை அணியா? அல்லது சிங்கள அணியா? – வினோ எம்.பி சபையில் கேள்வி

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் இது இலங்கை அணி அல்ல எனவும் இது ஒரு சிங்கள அணி என்ற நிலமை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இருந்து வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கைக்குள்லேயே போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் வன்னி மாவட்டத்திலே கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் சபையிலே வாக்களிக்கின்ற உரிமை மறுக்கப்பட்டவர்களாக குறித்த மாவட்ட சம்மேளனங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற சமயத்தில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காகா நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டிந்தார்.

இந்நிலையில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காக தேர்தல் திருத்தச்சட்டங்கள் எனவும் வினோ நோகதாரலிங்கம் எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

பாகிஸ்தான் தூதரை கொல்ல முயன்ற வழக்கிலிருந்து முன்னாள் எம்.பி கனகரத்தினத்தின் மகன் உள்ளிட்ட 3 பேர் விடுதலை!

இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவராக இருந்த வசீர் அலி மொஹமட் என்பவரை கொலை செய்ய முயன்றமை, அதற்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீண்ட விசாரணையின் பின்னர் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக இருந்த வசீரை படுகொலை செய்ய சதி செய்து முச்சக்கர வண்டியில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வாதிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இன்று தனது உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 25 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட விசாரணைக்குப் பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகன் ரஞ்சன் எனப்படும் கனகரத்தினம் ஆதித்தன், ஸ்டார்ஸ் எனப்படும் யோகராஜா நிரோஷன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி சுப்ரமணியம் சோதிராஜா ஆகியோரே விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சந்தேகநபர்கள் சார்பில் நீண்டகாலமாக முன்னிலையாகி வந்தார்.

அண்மைய இலங்கை நீதித்துறை வரலாற்றில் 15 வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்து, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட கைதியாக கனகரத்தினம் ஆதித்தன் குறிப்பிடப்படுகிறார். 2009 இல் கைது செய்யப்பட்டது முதல் இன்று விடுதலையாகும் வரை அவர் தடுப்புகாவல் கைதியாகவே வைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தில் 553 மில்லியன் டொலர் முதலீடு

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் இன்று (08) அறிவித்துள்ளது.

உயர்தர உள்கட்டமைப்புக்கான நிதியுதவியை வழங்குவதில் னுகுஊ இன் அர்ப்பணிப்பு இந்த புதிய முனையத்தின் மூலம் பிரதிபலிக்கிறது என்று நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியா உட்பட அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கான அமெரிக்காவின் நிலையான அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள ஆழமான நீர் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதற்காக கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 553 டொலர் மில்லியன் நிதியுதவியை அறிவிப்பதற்காக பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஸ்கொட் நாதன் இலங்கை வந்தடைந்துள்ளார்.