உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தினால் மேலும் சில நெருக்கடிகள் தோன்றக் கூடும் – ஃபிட்ச் ரேட்டிங்ஸ்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கடன்மறுசீரமைப்பு செயற்திட்டமானது இதுவரைகாலமும் உள்நாட்டு வங்கிக்கட்டமைப்பு தொடர்பில் நிலவிய நிலையற்ற தன்மைக்குத் தீர்வுகாண்பதற்கான மிகமுக்கிய முதற்படியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், இருப்பினும் வேறுசில விடயங்களில் சிக்கல்கள் தோற்றம்பெறக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

‘இலங்கையின் அபிவிருத்தி பிணையங்கள் தொடர்பில் அரசாங்கம் 3 விதமான மறுசீரமைப்புக்களை முன்மொழிந்திருக்கின்றது. இருப்பினும் பிணையங்கள் வடிவிலான அக்கடன்களை உள்நாட்டு நாணயமாக மாற்றுகின்ற தெரிவையே வங்கிகள் பெரும்பாலும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம்’ என சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பங்களிப்பானது கடன்மறுசீரமைப்பின் விளைவாக வங்கி நிதிக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அமையவேண்டியது அவசியம் என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘தற்போது முன்மொழியப்பட்டுள்ள செயற்திட்டத்தின் பிரகாரம் மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது, அது வங்கிக்கட்டமைப்பின்மீது வைப்பாளர் நம்பிக்கை இழப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தாது என்றே நாம் நம்புகின்றோம்.

இருப்பினும், நிதியீட்டல் மீதான அழுத்தங்கள் வங்கி தொடர்பான தரப்படுத்தல்களில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். எனவே, இந்தத் தாக்கத்தை சீர்செய்வதற்கு, கடன்மறுசீரமைப்பு நடைமுறைகள் குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அதன்விளைவாக வங்கி நிதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் மதிப்பீடு செய்யவேண்டும்’ என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்ளகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பானது இலங்கையின் வங்கிக்கட்டமைப்பை சூழ்ந்து காணப்பட்ட நிலையற்றதன்மைக்குத் தீர்வுகாண்பதற்கு வழிகோலியிருந்தாலும், சில அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்வதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் இலகு ரயில் திட்டத்தை மீள செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவைத் தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்தார்.

குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

குருந்தூர்மலை வழக்கு இலக்கம் AR/673/2018 வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்து நீதிபதி அவர்கள் குருந்தூர்மலையை நேரில் சென்று பார்வையிட்டு 2023.08.08ம் திகதி தவணை போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயத்தின் போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

WhatsApp Image 2023 07 04 at 8.48.29 PM குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் களவிஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023அன்றைய தினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது.

இந் நிலையில் அவ்வாறு குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு 04.07.2023இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த களவிஜயத்தின் போது குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மே்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிபதியால் ஆராயப்பட்டுள்ளது.

அதேவேளை பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் 08.08.2023ஆம் திகதிக்கு குறித்த வழக்கினை நீதிபதி திகதியிட்டுள்ளது.

மேலும் நீதிபதி இவ்வாறு குருந்தூர்மலைக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு பாாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தண்ணிமுனிப்பு மக்கள், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களும் அங்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பித்தது ஏர் சைனா

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான “ஏர் சைனா” மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது .

குறித்த நிறுவனத்தின் முதல் விமானமானது நேற்று திங்கட்கிழமை (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கொரோனா தொற்று காரணமாக சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்த சீன விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது .

குறித்த விமானமானது ஏ-320 ஏர்பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமானம் CCA-425 ஏ-320 ஏர்பஸ் ரக விமானம் நேற்று (03) இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.அந்த விமானத்தில் 142 பயணிகளும் 09 விமான ஊழியர்களும் பயணித்தனர் .

குறித்த “Air China” விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவிலிருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் அதே விமானம் கட்டுநாயக்காவிலிருந்து அதே நாளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் செங்டுவுக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏர்லைன்ஸ் விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

BOI ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்தார். இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சரால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பெரஹரா கலாசாரத்திற்கு எதிராக சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்கள் – அஸ்கிரிய பீடாதிபதி

பௌத்த விகாரை ஒன்றில் வைத்து யானை முத்துராஜா மோசமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, பல அரச சார்பற்ற நிறுவனங்கள் யானைகளை பெரஹரா கலாசாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தை விளம்பரப்படுத்த முயல்வதாக அஸ்கிரிய பீடாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் மேற்கொள்ளும் திட்டமிட்ட பிரசாரம் இது என்றும் தேரர் கூறினார்.

“எந்த நாட்டிலும் ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த கலாச்சாரம் உள்ளது, சிங்கள பௌத்த கலாச்சாரத்தில், யானைகளைப் பயன்படுத்தினோம், இங்கிலாந்தில், குதிரைகள் தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர்களின் அரச விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்“ என்று அவர் கூறினார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2022 இல் மனித-யானை மோதலின் போது அதிக எண்ணிக்கையிலான யானைகள் கொல்லப்பட்டன. ஆனால் துஷ்பிரயோகம் காரணமாக வளர்ப்பு யானைகள் எதுவும் இதுவரை இறக்கவில்லை என்றார்.

யானைகளை பராமரிப்பதற்கு தொழில் பயிற்சியோ அல்லது கல்வியோ வழங்காததே யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம் என்றும், விகாரைகளுக்கு யானைகளை வழங்கக்கூாது என பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடாதிபதி, யானை வளர்ப்பு எப்போதும் நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே, எமது சொந்த பெரஹரா கலாசாரத்தை பாதுகாக்க அந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

முத்துராஜாவின் பராமரிப்பு செலவை தாய்லாந்திடம் கேட்கப் போகும் முன்னாள் தியவடன நிலமே

தாய்லாந்து மன்னர் தலதா மாளிகைக்கு வழங்கிய யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தால், யானையின் பராமரிப்பு செலவுக்காக வழக்கு தொடரப்போவதாக முன்னாள் தியவடன நிலமே நெரஞ்சன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பரிசாக வழங்கியதை திருப்பிக் கேட்பது நெறிமுறைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

தாய்லாந்திலிருந்து முத்துராஜா யானை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 37 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை யானை ஆரோக்கியமாக உள்ள போதிலும், யானை குறித்த தவறான தகவல் தாய்லாந்திற்கு நாடா என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்கர்களின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ தலதா மாளிகைக்கு யானைக் குட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்குமாறு கோரப்பட்டதாகவும், அதன்படி 1986ஆம் ஆண்டு அரசர் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜா யானையை தலதா மாளிகைக்கு பரிசளித்ததாகவும் முன்னாள் தியவடன நிலமே கூறுகிறார்.

யானை துன்புறுத்தப்பவில்லையென்றும், அரச சார்பற்ற நிறுவனம் தவறான தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி- யாழ்ப்பாணம் புதிய கப்பல் மார்க்கத்துக்கு புதுவை முதல்வரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை!

யாழ்ப்பாணம்- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம், திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (4) முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அச்சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்களை உரையாடினர். அச்சந்திப்பில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அளித்த கடிதத்தில், “இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தங்களின் சார்பில் ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள். குறிப்பாக இலங்கை பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் புதுச்சேரியில் இருந்து மருந்துகளை அனுப்பியது பெரும் உதவியாக இருந்தது.

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி-காங்கேசன் துறை மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயனாதீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரேலியாவில் உள்ள சீதை கோயில், ரம்பொடவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு வைத்தியசாலைகளில் பெரும் ஆளணி பற்றாக்குறை

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலே மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தி தெரிவித்தார்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக காணப்படுகின்றார்கள்.

அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்ற படியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம்-என்றார்

சரத் வீரசேகரவை எச்சரித்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத் வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்து தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாது என்றும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுகிறது என்றும் அங்கிருந்து சரத்வீரசேகரவை விலகிச் செல்லுமாறும் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.