ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

BOI ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்தார். இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சரால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பெரஹரா கலாசாரத்திற்கு எதிராக சதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்கள் – அஸ்கிரிய பீடாதிபதி

பௌத்த விகாரை ஒன்றில் வைத்து யானை முத்துராஜா மோசமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, பல அரச சார்பற்ற நிறுவனங்கள் யானைகளை பெரஹரா கலாசாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தை விளம்பரப்படுத்த முயல்வதாக அஸ்கிரிய பீடாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் மேற்கொள்ளும் திட்டமிட்ட பிரசாரம் இது என்றும் தேரர் கூறினார்.

“எந்த நாட்டிலும் ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த கலாச்சாரம் உள்ளது, சிங்கள பௌத்த கலாச்சாரத்தில், யானைகளைப் பயன்படுத்தினோம், இங்கிலாந்தில், குதிரைகள் தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர்களின் அரச விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்“ என்று அவர் கூறினார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2022 இல் மனித-யானை மோதலின் போது அதிக எண்ணிக்கையிலான யானைகள் கொல்லப்பட்டன. ஆனால் துஷ்பிரயோகம் காரணமாக வளர்ப்பு யானைகள் எதுவும் இதுவரை இறக்கவில்லை என்றார்.

யானைகளை பராமரிப்பதற்கு தொழில் பயிற்சியோ அல்லது கல்வியோ வழங்காததே யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம் என்றும், விகாரைகளுக்கு யானைகளை வழங்கக்கூாது என பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடாதிபதி, யானை வளர்ப்பு எப்போதும் நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே, எமது சொந்த பெரஹரா கலாசாரத்தை பாதுகாக்க அந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

முத்துராஜாவின் பராமரிப்பு செலவை தாய்லாந்திடம் கேட்கப் போகும் முன்னாள் தியவடன நிலமே

தாய்லாந்து மன்னர் தலதா மாளிகைக்கு வழங்கிய யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தால், யானையின் பராமரிப்பு செலவுக்காக வழக்கு தொடரப்போவதாக முன்னாள் தியவடன நிலமே நெரஞ்சன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பரிசாக வழங்கியதை திருப்பிக் கேட்பது நெறிமுறைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

தாய்லாந்திலிருந்து முத்துராஜா யானை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 37 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை யானை ஆரோக்கியமாக உள்ள போதிலும், யானை குறித்த தவறான தகவல் தாய்லாந்திற்கு நாடா என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்கர்களின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ தலதா மாளிகைக்கு யானைக் குட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்குமாறு கோரப்பட்டதாகவும், அதன்படி 1986ஆம் ஆண்டு அரசர் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜா யானையை தலதா மாளிகைக்கு பரிசளித்ததாகவும் முன்னாள் தியவடன நிலமே கூறுகிறார்.

யானை துன்புறுத்தப்பவில்லையென்றும், அரச சார்பற்ற நிறுவனம் தவறான தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி- யாழ்ப்பாணம் புதிய கப்பல் மார்க்கத்துக்கு புதுவை முதல்வரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை!

யாழ்ப்பாணம்- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம், திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (4) முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அச்சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்களை உரையாடினர். அச்சந்திப்பில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அளித்த கடிதத்தில், “இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தங்களின் சார்பில் ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள். குறிப்பாக இலங்கை பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் புதுச்சேரியில் இருந்து மருந்துகளை அனுப்பியது பெரும் உதவியாக இருந்தது.

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி-காங்கேசன் துறை மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயனாதீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரேலியாவில் உள்ள சீதை கோயில், ரம்பொடவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு வைத்தியசாலைகளில் பெரும் ஆளணி பற்றாக்குறை

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலே மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தி தெரிவித்தார்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக காணப்படுகின்றார்கள்.

அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்ற படியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம்-என்றார்

சரத் வீரசேகரவை எச்சரித்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத் வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்து தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாது என்றும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுகிறது என்றும் அங்கிருந்து சரத்வீரசேகரவை விலகிச் செல்லுமாறும் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மக்களுக்காக முதலீட்டை உருவாக்க முயற்சிப்பதாலேயே சீனித்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு – செல்வம் எம்.பி

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் கஷ்டப்பட வேண்டாம். வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – சீனித் தொழிற்சாலை தொடர்பில் 4வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் அதில் பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை . சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

எம்மைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை.

வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

ஆகவே, தயவு செய்து யாரும் தேவையில்லமால் தலையிட வேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும்.

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாட்டு பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல தெரிவிக்கின்றோம்.

வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

எங்களைப் பொறுத்த வரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேண்டாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என தெரிவித்தார்.

போர் நடந்த இடங்களில் மனித புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும் – விஜயதாஸ ராஜபக்ச

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின்
கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ஆகியோர் தவிர்த்துள்ளனர்.

அத்துடன் “போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” என்று நீதி அமைச்சர் அலட்சியமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் கடந்த 29ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பான மேலதிக அகழ்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் – பங்கேற்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் வலியுறுத்தப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரம்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்டப் பணிகள் இடம்பெறும். இதைவிட மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.” – என்றார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ

“போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தோண்டும் போது சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்படும்.

முல்லைத்தீவு புதைகுழியிலிருந்து போரில் ஈடுபட்ட ஒருதரப்பின் சீருடைகள் மீட்கப்பட்டதாக அறிந்தேன். நீதிமன்றம் அந்தப் புதைகுழியை அகழ்வதற்கான உத்தரவையும் விடுத்துள்ளது. அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எல்லாம் பதிலளிக்க முடியாது. அதேவேளை அந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் என்னால் பதில் கூற முடியாது.” – என்றார்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான 3ம் கட்ட போராட்டம் ஆரம்பம்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகியுள்ளது.

இன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (02) போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஞாயிறு இரவு போராட்டக்காரர்கள் பாதுகாப்பற்ற புதருக்கு அருகாமையிலேயே உறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு பலாலி பொலிஸார் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் தற்போதைய ஆட்சியாளர்கள் – கொழும்பு பேராயர் கவலை

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற பொய்யான கருத்தை வெளியிட கூடாது என்றும் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொய்யான வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், ஜனாதிபதி அவர்களே. இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.

20 வீதமான மக்கள் நாட்டின் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். 80 வீதமான மக்களுக்கு சரியான உணவைப் பெற முடியவில்லை.

கொழும்பு துறைமுகம் டிகோவிட்ட வரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது அரசாங்கம் துறைமுகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது.

தற்போதுள்ள துறைமுகம் துண்டு துண்டாக விற்கப்படுகிறது. இந்த மனிதன் என்ன கனவு காண்கிறான்? அவருடைய இலக்கு என்ன? இதுதான் இலக்கு.

முத்துராஜவெல முழுவதையும் அழித்துவிட்டு, இவற்றை வெளியூர்களுக்கு விற்று, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாகச் செத்துவிடுவார்கள்.

நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிச்சமாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கை தொடருமானால் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.