விமான தாமதங்களால் தென்கொரியாவிற்கு இலங்கையர்களை வேலைகளுக்காக அனுப்புவது பாரிய பிரச்சினையாகவுள்ளது – மனுஷ

தொடர்ச்சியான விமான தாமதங்கள் காரணமாக இலங்கையர்களை தென் கொரியாவிற்கு வேலைகளுக்கு அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

52 இலங்கையர்கள் கொண்ட குழுவொன்று நேற்று தென்கொரியாவிற்குச் செல்லவிருந்ததாகவும், ஆனால் UL470 விமானம் சுமார் 12 மணித்தியாலங்கள் தாமதமானதால், அவர்கள் இன்னும் நாட்டில் தங்கியிருப்பதாக அமைச்சர் நாணயக்கார கடுமையான வார்த்தைகளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்குச் செல்லவுள்ள 800ஆவது குழு இதுவாகும் என்றும், இக்குழுவினரை தென்கொரியாவுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLFEB) தயார் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக இந்தக் குழுவினர் செல்லவிருந்தனர்.

விமானம் தாமதமானதால் அவர்களை தென்கொரியாவுக்கு அனுப்ப வேண்டாம் என கொரிய மனிதவள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற சம்பவம் மே மாதம் 23 ஆம் திகதி பதிவாகியிருந்ததுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் காரணமாக ஜூன் மாதம் 4 ஆம் திகதி தென்கொரியாவிற்கு சென்று பணியை ஆரம்பிக்க முடிந்தது.

இந்த விமான தாமதங்கள் தென் கொரியாவிற்கு அதிகமான இலங்கையர்களை அனுப்புவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், எனவே இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துக்காட்டியுள்ளார்.

வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ்

வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை (21) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்நிர்மாணம் என ஆரம்பிக்கப்பட்ட தொடர்பணி ஆரம்பித்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்தபோது இந்த பாடசாலையின் முதலாவது கட்டிடமும் என்னுடைய முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டது.

கல்வி என்பது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியை அதனுடைய அபிவிருத்தியை, ஆளுமையை , பல் திறன்களை சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம். எங்கு போனாலும் புலம்பெயர்ந்த சமூகம் மூன்று விடயங்களில் ஆர்வமாக இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். அதாவது தங்களுடைய பல்கலைக்கழக நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றார்கள், பாடசாலை நிகழ்வுகளிற்கு பாடசாலை புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள், தமது கிராமங்களில் உள்ள ஆலயங்களின் புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள்

வடக்கு கிழக்கிலே புலம்பெயர்ந்த சமூகத்தின் ஆதரவும் அவர்களின் அளப்பெரிய சேவையும் பல இடங்களிலே நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்தவகையிலே கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்திருக்கின்ற ஆதரவென்பது பார்க்கும் போது மிக அளப்பெரியதாக இருக்கின்றது.

வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194 பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். அதாவது பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள், இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு, இதே விடயம் நான் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக ஏழு வருடங்கள் இருந்தபோது கிராமபுறங்களிலே பாடசாலைகளை மூடியிருந்தோம்.

அதற்கு பிரதேச செயலாளர்கள் கூறிய காரணம் பிறப்பு விகிதங்கள் குறைவடைந்து செல்கின்றது என முதலாம் வகுப்பிலே மாணவர்களை அனுமானிப்பது சில பாடசாலைகளில் பூச்சியம் லெவலுக்கு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

லைக்கா குழுமத்தின் தலைவர் ஜனாதிபதியிடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன குறித்து தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான ஆரம்பமாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது குறித்த கோரிக்கையையயும் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இதனை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கான சட்ட நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கும் இணங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மேற்கொண்ட சந்திப்புக்களில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

அத்துடன் நின்றுவிடாது, இலங்கை அரசாங்கத்தினால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் – (7கோடி ரூபாய்) லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கி வைத்துள்ளார்.

தமது வாழ்வை சிறைகளில் தொலைத்த அரசியல் கைதிகளுக்கு தனி ஒருவரால் இதுவரை வழங்கப்பட்ட அதி கூடிய உதவியாக இந்த உதவி அமைந்துள்ளது என சில ஆய்வாளர்கள் தமது கட்டுரைகளில் கூட்டிக்காட்டியிருந்தார்கள்.

யுத்தம் காவு கொண்ட பிரதேசங்களையும், மக்களின் வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பது அவசியம். அந்த அரசியல் தீர்வைப் பெறுவதற்கும், அதனோடு சமாந்தரமாக – அப்பிரதேசங்களின் அபிவிருத்தியையும், நாளாந்தம் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு, ஆளும் அரசாங்கங்களோடும், அவ்வரசாங்கங்களின் தலைவர்களோடுமே பேசவேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் தனது இந்த சந்திப்புகள் தொடர்வதாக, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் பாரியாரும் லைக்கா ஹெல்த்தின் தலைவருமான பிரேமா சுபாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க கோரி மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கு அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு எல்லாவல மேதானந்த தேரர் மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு எல்லாவல மேதானந்த தேரர் கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

குற்றவாளிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவது அவசியம்

நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பிலான வழிகாட்டுதல்களை வெளியிடுவது முக்கியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை விடுதலை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி பெண்கள் ஊடக அமைப்புக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

ரோயல் பார்க் கொலை வழக்கு எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விவாதம் செய்ய முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் பயன்படுத்தப்பட்டாலும் ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே ஆவணங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மேலதிக விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலதிக சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.

அரச நிறுவனங்கள் அரச நிதியை வீணடிக்கின்றன – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வீண் விரயங்களை கட்டுப்படுத்த முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதே எமது இலக்காகும். அதனை முக்கியமான இலக்காகக் கொண்டு அதற்கு முன்னுரிமையளித்து நாம் செயற்படவேண்டியது அவசியமாகும்.

யார் என்ன சொன்னாலும் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும்.

சில புள்ளி விபரங்களில் காணப்படும் பிழைகள் மற்றும் அதிலிருந்து திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான மோசடிக்காரர்களின் சுமையையும் இறுதியில் திறைசேரி அல்லது நாடாளுமன்றத்திற்கே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அது பொது மக்களுக்கான பாரிய பாதிப்புகளுக்கே வழிவகுக்கும் எனக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த இந்தியா மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாதையை நவீனப்படுத்துவதற்கு வசதியாக கொழும்பில் – காங்கேசன்துறைக்கான சேவைகள் இந்த வருடம் ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவால் நீடிக்கப்பட்ட கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் இம்மாதத்தில் முடிவடைய இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதேவேளை, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்க இந்தியா நிதியுதவி

காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளில் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை (19) இத்திட்டம் தொடர்பான இராஜதந்திர குறிப்புக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன , துணை உயர் ஸ்தானிகர், வினோத் கே. ஜேக்கப் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் மானிய உதவியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், வசதி குறைந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் கல்வித் துறையில் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல மானியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கைக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த உதவி தற்போது சுமார் 5 பில்லியன் டொலர்களாகவுள்ளது.

அதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாகும். நாட்டின் 25 மாவட்டங்களில் 65க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 20க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் 1990 சுவசேரிய ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை இலங்கையில் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட முதன்மையான மானியத் திட்டங்களாகும்.

ஒரு தசாப்தகாலப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் – ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

இலங்கைக்குக் கடந்த ஒரு தசாப்தகாலமாக விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட ஆணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இலங்கையை எடுத்துநோக்குமிடத்து, பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கூறுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது கவலைக்குரிய விடயமெனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க், ‘இருப்பினும் இலங்கை தொடர்ச்சியாக எம்மோடு இணைந்து செயலாற்றிவருகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணைபெற்ற பலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டுமெனத் தாம் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் திங்கட்கிழமை (19) ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரின் திங்கட்கிழமை (19) ஆரம்ப அமர்வில் இலங்கை குறித்து மிகச்சொற்பளவான விடயங்கள் மாத்திரமே பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (21) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணி (ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.

இவ்வறிக்கையில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்மோசடிகள் என்பன மனித உரிமைகள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டாலும், இம்முறை இலங்கை தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படமாட்டாது.

உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பிற்கு 7 வாகனங்கள்

உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் அவர் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மூன்று மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகையும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.