சீனாவுக்கு கறுவா,கடலுணவுகள், இரத்தினக்கற்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் ஆகியோரின் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றன.

இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு, தற்போதைய பொருளாதார மீட்பு செயல்முறை, வாழ்வாதார உதவி, நிதியுதவி, மக்களிடையே பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு தசாப்தங்களில் சீனாவின் புதிய அபிவிருத்தி முன்னுதாரணத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் சீனாவின் பாதை மற்றும் மில்லியன் கணக்கான சீன குடிமக்களை வறுமையில் இருந்து வெற்றிகரமாக உயர்த்தியதற்கும் இட்டுச் செல்லும் சீனாவின் உயர்மட்ட அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்ததாக சீனாவின் துணை அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்தார்.

சவாலான காலக்கட்டத்தில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பாராட்டியதுடன், சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியை குறிப்பாக இலங்கை கறுவா , கடல் உணவு, பழங்கள், காய்கறிகள் மற்றும் இரத்தினக் கற்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கு சீனாவின் ஆதரவை கோரியிருந்தார்.

மேலும் அவர் இலங்கையின் பொருளாதார மீட்சியை விளக்கியதுடன் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை வரவேற்றார்.

இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கையும் சீனாவும் இந்த ஆலோசனைகளின் போது உறுதியளித்தன.

யாழில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர் என நேற்றையதினம்(31) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.

அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே ஆது 113 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 60 பேர் இடைவிலகியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 20 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 351பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் அது 35 ஆகக் குறைவடைந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 170 பேர் இடைவிலகியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 137 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 390 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 312 ஆக அதிகரித்துள்ளது.

தென்மராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 7 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 7 பேர் இடைவிலகியுள்ளனர்.வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 92 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 59 ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 72 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 25 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 87 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 65 ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது.

பாடசாலைகளில் மீளிணைத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் சில நாள்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வராமல் விடும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

9ஆம் மற்றும் 10ஆம் தரத்துடனேயே அதிகளவானோர் இடைவிலகுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் தற்சார்பு பொருளாதரத்தை மேம்படுத்தவே சீனித் தொழிற்சாலை – ரெலோ பிரித்தானிய கிளை தலைவர் சாம்

வவுனியா நைனாமடுவில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சீனித்தொழிற்சாலையில் தாய்லாந்து நிறுவனத்தின் ஊடாக சீனா முதலீடுகளை மேற்கொள்ளுவதான ஐயங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படும் நிலையில் இந்த ஐயங்களை ரெலோ கட்சி நிராகரித்துள்ளது.

இந்தத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட செயலகத்தில்இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்துல நாணய நிதியத்தின் அழுத்தங்களால் திட்டம் முன்னகர்த்தப்படுவதாக கருதப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் 500 க்கும் மேற்ற தமிழ் குடும்பங்கள் வேலைவாய்ப்பினையும் பொருளாத உயர்வையும் பெற்றுக் கொள்வர். மேலும் தெற்கிற்கு செல்லவிருந்த முதலீட்டுத் திட்டமானது தமிழ் மக்களின் சுய சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் ரெலோவின் எண்ணக்கருவுக்கேற்ப தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வழிகாட்டுதலில்  தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக வடக்கில் முதலீட்டினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது என ரெலோ ரெலோவின் பிரித்தானியக்கிளையின் பொறுப்பாளர் சாம் சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.

யாழ். பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுட்டிப்பு

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை (01) காலை 9.30 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுசன நூலகத்தில் பிரதம நூலகர் ராகினி நடராஜ் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ம.ஜெயசீலன் நூலக ஊழியர்கள், வாசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.

நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன்,தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.

மகாவலி ஜே வலயத்துக்குரிய தகவல்களை அரச அலுவலர்கள் வழங்கக் கூடாது என முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஜே வலயத்துக்கு கோப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஊடாக ஜே வலயத்தை முன்னெடுப்பதற்குரிய தரவுகள் அதன் கீழ் உள்ளடங்கும் பிரதேச செயலாளர்களிடம் கோரப்பட்டிருந்தன. 37 கிராம அலுவலர் பிரிவுகள் இதனில் உள்ளடங்குகின்றன.

இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. மகாவலி எல் வலயத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக் காட்டப்பட்டது. இந்த வலயத்தில் முல்லைத்தீவில் 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதி மக்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகாவலி ஜே வலயத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தகவல் வழங்குவதில்லையென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடப்படும் என நேற்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட இநாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்துமாறு அமெரிக்க தூதுவர் கோரிக்கை

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் Julie Chung வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் Julie Chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு வலுவான சட்டத்துறை அனைத்து பிரஜைகளும் நீதியைப் பின்தொடர்வதை ஊக்குவிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டின் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் அவர் கோரிக்கை விடுததுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இதன்போது இதுவரையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாட உள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் அவர் ஜனாதிபதி, மத்திய வங்கி அதிகாரிகள், சபாநாயகர் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.

அத்துடன் ஒக்டோபரில், இலங்கை தொடர்பான முதலாவது மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களையும் , சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் வழங்குவார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இன்றைய ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து மாகாண, மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தலைமையில் முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவருமான இரா.துரைரெத்தினம், முன்னாள் மண்முனை மேற்குப் பிரதேசசபை பிரதித் தவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவருமான பொ.கேசவன் செல்லத்துரை, ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், முன்னாள் போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாகாண, மாவட்ட ரீதியிலான பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தீர்வு காணப்படக் கூடிய விடயங்களுக்கு உடன் தீர்வினை வழங்குவதற்கான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

அந்த அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனம் மிகக் குறைந்தளவில் வழங்கப்படுகின்ற விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் செயலாளரூடாக மற்றயை மாகாணங்களில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தளவிலான வேதனம் கொடுக்கப்படுகின்றது என்பதை அறிந்து எந்த மாகாணத்தில் கூடுதலான வேதனம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளவிலான வேதனத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களிலும் ஏனைய திணைக்களங்களிலும் பதில், அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் தற்போதைய நிலையில் புதிய நியமனங்கள் எதுவும் வழங்கப்படுவதற்கான ஏதுக்கள் இல்லை. அவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுகின்ற வேளையில் பதில், அமைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையில் இருந்து படுவான்கரைப் பிரதேசங்களுக்கான ஆற்றுவழி பாதைப் பயணத்திற்காக கடந்த சில மாதங்களாக கட்டண அறிவீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அன்றாடம் இதில் பயணிக்கும் மாணவர்கள், அரச ஊழியர்கள், ஏனைய தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தினை அடைகின்றனர். அதிலும் தற்போதைய பொருளாதார நிலையில் இவ்விடயமானது மக்களை மேலும் கஸ்டப்படுத்துவதாக அமைகின்றது என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.

இது தொடர்பில் முதற் கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்குமான கட்டண அறவீட்டினை நிறுத்தவும், ஏனையவர்களுக்கான கட்டண அறவீட்டினைப் படிப்படியாக நிறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டகால முக்கிய பிரச்சனையாக இருக்கின்றன மேய்ச்சற்தரைப் பிரச்சனை குறித்து ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக மயிலத்தமடு, மாதவணை பாரம்பரிய மேய்ச்சற்தரைகளில் வெளி மாவட்டத்தவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளும் உரிய திணைக்கள அதிகாரிகளின் கண்டுகொள்ளாத நிலைப்பாடுகளும், அங்கு பண்ணையாளர்களினால் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் சுடப்படுவதும், அபகரிக்கப்படுகின்றதுமான விடயங்கள் இடம்பெறுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதான செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இவ்விடயம் சம்மந்தமாக அரசாங்க அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு ஊடாக விபரங்களைத் திரட்டி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையையும், வலயத்திற்கு வலயம் அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் ஆசிரியர்களை சமப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் சமப்படுத்தலைச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருப்பதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை சம்மந்தாக கல்வி அமைச்சருடன் கதைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் வெளியேறும் ஆசிரியர்களை மாகாணத்திற்கு பெற்றுக் கொள்வதற்கும், திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கும் பட்டதாரிகளில் ஒரு பகுதியினரை ஆசிரியர் நியமனத்திற்குள் உள்வாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மூவின மக்களும் வாழும் இந்த மாகாணத்தில் உயர் பதவிகள், துறைசார்ந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் போது கடந்த காலங்களைப் போலல்லாமல் பாகுபாடு பார்க்காமல் நீதியாகச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த விடயத்தினையும் கருத்திற் கொண்டு, திறமையையும், துறைசாந்த நிபுனத்துவத்தையும் அப்படையாக வைத்து குறித்த விடயத்திற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இணையத்தளம் ஊடாக கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் அல்லது ஜூன் முதலாம் திகதி முதல் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இ-பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்துவது குறித்தும் குழு ஆலோசித்ததுடன், இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

இதன் பொது ஒன்லைனில் விசா விண்ணப்பத்தில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேற்கூறிய நோக்கத்திற்காக, வெளிநாட்டவர்கள் சிரமமின்றி விசாவைப் பெறுவதற்குத் தேவையான பொறிமுறையை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினருக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஐரோப்பா போன்ற அதிக வருமானம் ஈட்டும் நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, எஸ்.எம்.எம்.முஷாரப், சாகர காரியவசம், யதாமினி குணவர்தன, ஹரிணி அமரசூரிய ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்ட அதேநேரம் குழுவின் தலைவரின் அனுமதியுடன் சந்திம விரக்கொடி கலந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவர் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காகவே இலங்கை வந்துள்ளார்.

இந்த ஆலோசனைகள் நேற்று (29.05.2023) ஆரம்பித்துள்ள நிலையில் ஜூன் 01 வரை நடைபெறவுள்ளன.

இரு நாடுகளும் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலையை மதிப்பிடுவதற்கு இந்த கலந்துரையாடல் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, சீன வெளிவிவகார பிரதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.