யாழில் இருந்து துபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ். குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையில் உள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வாழைப்பழங்கள் துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதோடு உள்ளூர் விவசாயிகளுக்கும் பெரிதும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டமானது அனுராதபுரம் ராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் பொருளாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடகங்களை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினருடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல்வேறு அத்துமீறல்களை அரச படைகளும், அரசும் தொடர்ந்து வண்ணமே உள்ளன.

இந்த லட்சணத்திலே இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்றார்.

இந்த சூழ்நிலையிலே நாங்கள் ஜனாதிபதியினை நோக்கி தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.

அதனை செய்யாது, எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து, எங்களை அழித்து கொண்டு எங்கள் கலாசாரத்தை, எங்கள் இருப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு மறுபுறமே இவ்வாறான கோரிக்கைகளை விடுகின்றீர்கள்.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு இன பிரச்சனை தொடர்பில் பேச அழையுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.

45 ஆண்டுகளுக்கு மேலாக கறைபடாத பணியில் ஈடுபட்டுள்ளதாக வசந்த கரன்னகொட கடிதம்

அமெரிக்காவினால் அண்மையில் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னகொட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் தன்னை கறுப்புப் பட்டியலில் இணைத்த தீர்மானத்தின் மூலம், தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

45 ஆண்டுகளுக்கும் மேலாக கறைபடாத அரச பணியில் நான் பெற்ற கௌரவம் மற்றும் நற்பெயரை இந்த தவறான குற்றச்சாட்டுகள் கடுமையாக தன்னை பாதித்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஐ.சி.சி.பி.ஆர். இன் 17வது பிரிவின் கீழ் எனது உரிமைகளை நேரடியாக மீறுவதாக உள்ளது என்றும் இதற்காக பரிகாரம் தேடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் முன்னாள் கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடை விவகாரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும் இது ஊடகங்களில் வெளியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றது என்ற தவறான பிரச்சாரத்திற்காக தான் இந்த விவகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த கரன்னகொட குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அமெரிக்காவின் முடிவு இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் வசந்த கரன்னாகொட அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இங்கிலாந்து பயணித்தார் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார்.

அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழவுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(வியாழக்கிழமை) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சுமந்திரன், சிறிதரன், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களின் அமைதியான போராட்டங்களை தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமையை தடுக்க முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத விகாரைக்கு எதிராக நேற்று ஆரம்பித்த போராட்டத்திற்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், போராட்டக்காரர்கள் 2 பேரையும், போராட்டக்களத்துக்கு பந்தல் அமைக்க வந்த 3 பேரையும் கைது செய்தனர்.

அத்துடன், போராட்டக்களத்திற்குள் மக்கள் நுழைய முடியாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் பலாலி பொலிசார், மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தினர்.கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் முன்னிலையாகினார்.

அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்ததை சுட்டிக்காட்டியதையடுத்து, நீதவான் அவர்களை பிணையில் விடுவித்தார்.

விகாரைக்கு முன்பாக போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென பொலிசார் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்து விட்டு உத்தரவு வழங்குவதாக நீதவான் குறிப்பிட்டார்.

இன்று மாலை போராட்டக்களத்துக்கு வந்த நீதவான், நிலைமைகளை அவதானித்த பின்னர், மக்களின் அமைதியான போராட்டத்துக்கு நிபந்தனையுடன் நீதவான் அனுமதியளித்தார்.

இதன்படி, விகாரைக்கு வருபவர்களிற்கு இடையூறு விளைவிக்காமல், விகாரையின் வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல், வீதியை மறிக்காமல், சத்தம் எழுப்பாமல், போராட அனுமதியளித்தார்.

அத்துடன், விகாரைக்கு எதிரில் உள்ள வளவில் போராட்டம் நடத்த நீதவான் இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

விகாரையின் காணி உரித்து தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் நீதிமன்றத்தை அணுகி நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது – சர்வதேச மன்னிப்புச் சபை

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி வெகுவாக சுருக்கமடைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண தெரிவித்துள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர தினமான புதன்கிழமை (03) இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பது குறித்தும், அண்மையகாலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் தொடர்பிலும் கேசரியிடம் கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபையின் செயற்பாட்டாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், விமர்சனங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் அண்மையகாலங்களில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி என்பது மிகவும் சுருக்கமடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ‘ஊடகங்களை அமைதிப்படுத்துவதற்காக சட்டங்களை முறைகேடாகவும், ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்துவது வழமையான விடயமாக மாறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சிறுபான்மையின ஊடகவியலாளர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் த்யாகி ருவன்பத்திரண குறிப்பிட்டார்.

மேலும் தகவல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் ஊடக சுதந்திரம் என்பது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்திய அவர், ‘ஊடகவியல் ஓர் குற்றமல்ல’ என்றும் தெரிவித்தார்.

இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்

பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்துவதை முன்னிறுத்தியும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (2) நடைபெற்றது.

இதன்போது மிகவும் சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காகவும் நாட்டின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி வழங்கிய உதவிகளுக்காகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார்.

அதேவேளை டிஜிட்டல்மயமாக்கல், விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கும் நிதியியல்துறை உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் அமைச்சர் அலி சப்ரி கோரிக்கைவிடுத்தார்.

அதற்குப் பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவா, மிகமோசமான பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், மீட்சிக்கான வலுவான அடித்தளத்தை இடுவதற்கும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியதுடன் பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதி

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில், நட்புறவு கேட்போர் கூடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில், இரு நாடுகளின் விமானப் படைகளும் இணைந்து இலங்கை கடற்பகுதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உத்தேச விமான சேவைகளை அதிகரிப்பதும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கான படகு சேவைகளை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார சுற்றுலாவை மேம்படுத்தும் என இந்திய விமானப்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

யாழில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ்.ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் முன்றலில் இன்றையதினம்(03.05.2023) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளரின் கருத்து

இந்த போராட்டத்தின்போது மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்த எமக்கு ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசாங்கம் தயங்குகின்றது.

பயங்கவாத சட்டம் என்பது மூன்று தசாப்த காலம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இங்கே இருந்தது. இப்பொழுது அந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

எமக்கும் உரிமை இருக்கிறது

ஆனால் இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம். இந்த நாட்டில் இருக்க எமக்கு உரிமை இருக்கிறது.நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை.

இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் கேட்கின்ற அதே விடயங்களை தான் நாமும் கேட்கின்றோம். நாங்கள் புதிதாக எதனையும் கேட்கவில்லை .எமது சக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

நீதி வேண்டும்

சுடப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணை வேண்டும் நீதி வேண்டும் சர்வதேசம் இதனை பார்க்க வேண்டும். உலகில் சின்ன நிலபரப்பாக இருக்கும் இங்கு இடம்பெறும் விடயங்கள் பெரிதாக பேசப்படுகின்றனவே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை.

விலை பேசும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் தம்முடைய தேவைக்காக இலங்கையை பயன்படுத்துகின்றன. இந்த மக்கள் சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் சுட்டிகாட்டிகொண்டே இருப்போம்.

எங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized