இலங்கையின் தேசிய வலுக்கட்டமைப்புக்களை இந்தியாவுடன் இணைப்தால் பாதிப்பில்லை

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையின் தேசிய சக்தி வலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் ஆபத்து எதுவும்எதுவுமில்லை உலகின் ஏனைய நாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இலங்கை தனது சக்தி வலு கட்டமைப்பை இந்தியாவுடன் இணைப்பதால் என்ன ஆபத்து ஏற்படப்போகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான மனோநிலையே எங்கள் பொருளாதாரத்தை பல தசாப்தங்களாக வீழ்ச்சியை நோக்கி இட்டுச்சென்றது என குறிப்பிட்டுள்ள அவர் எண்ணெய் குதங்களை நாங்களே வைத்திருக்க விரும்பியதால் பல தசாப்தங்களாக அவற்றை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் பொதுமக்கள் தனியார் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தால் கடந்த 12 மாதங்ளில் எங்களின் எரிசக்தி பாதுகாப்பு எங்கோ சென்றிருக்கும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் சக்தி வலு பாதுகாப்பு காணப்படுவதைஉறுதி செய்வதே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முன்னெடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் சக்தி வலு பாதுகாப்பு என்பது உணவு பாதுகாப்பு மருந்து பாதுகாப்பு உட்பட அனைத்துடனும் தொடர்புபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாங்கள் தீர்மானங்களை எடுப்போம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக தெளிவாக உள்ளார் கடந்த 12 மாதங்களில் இந்தியா எங்களிற்கு பெரும் ஆதரவாக காணப்பட்டுள்ளது எனவும் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என தெரிவித்தனர்.

அண்மையில் இராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது தபால் மூல வாக்கெடுப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குச் சீட்டுக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அரசாங்க அச்சகம் வாக்குச் சீட்டுக்களை உரிய திகதிகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமை காரணமாக இவ்வாறு தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் – அமெரிக்க பிரதிநிதிகள் குழு இடையே பேச்சுவார்த்தை

இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நாட்டை வந்தடைந்த அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை சந்தித்தனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் நாட்டை வந்தடைந்த தூதுக்குழுவிற்கு இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி. ரோயல் தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.

அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவினருடனான பேச்சை புறக்கணித்தது திறைசேரி

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு திறைச்சேரியின் செயலாளர், நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிந்த நிலையில், திறைச்சேரியின் செயலாளர் உட்பட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று (16) பிரசன்னமாகவில்லை என அறிய முடிகிறது.

தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் மார்ச் 09 திகதி வாக்கெடுப்பு தொடர்பில் இவ்வார காலத்திற்குள் உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்கெடுப்பிற்கு தேவையான வாக்குச் சீட்டு அச்சிடல் பணிகள் நிதி நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (16) காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெறவிருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள திறைச்சேரியின் செயலாளர் உட்டப ஏனைய அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என அறிய முடிகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியிடம் 800 மில்லியன் ரூபாவை கோரியிருந்த நிலையில் அந்த தொகை முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகிறது.

வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு 400 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பட்டுள்ள நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடலுக்காக 40 மில்லியன் ரூபாவை திறைச்சேரி அரச அச்சகத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.

முழுமையான தொகை வழங்க வேண்டும் அல்லது 200 மில்லியன் ரூபா முற்பணத்தை வழங்க வேண்டும் இல்லாவிடின் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியாது என குறிப்பிட்டு அரச அச்சகத் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை இடைநிறுத்தியது.

வாக்குச்சீட்டு அச்சிடல் இடைநிறுத்தப்பட்டதால் கடந்த 15 ஆம் திகதி விநியோகிக்கப்படவிருந்த தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகம் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை பிற்போடப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் 50 சதவீதமளவில் நிறைவுப் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த நிதி நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில்  வியாழன் (16) திறைச்சேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்தது.

இவ்வாறான பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இவ்வார காலத்திற்குள் ஒரு உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு – பஷில்

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர் எனவும், போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள்தான் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவைத் தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் இல்லை என உறுதியாகக் கூறியதாகவும், எனினும், கோட்டாபய அவரது விருப்பத்தின்படி ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும், அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குங்கள் என கோட்டாவுக்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் நாடாளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு தாங்கள் முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்கம் செய்யாது – ஜனாதிபதி

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (15) காலை நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது இது தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி இவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பாரிய பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கே அதிகளவில் உள்ளன.

இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலே இவ் மையம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படுகின்றது என தெரிவித்தார்.

அதில் ஒன்று உப வேந்தரை நீக்கக் கோரி ருஹூணு பல்கலைகழகத்திலும் மற்றையது எமது கூட்டுத்தாபனம் ஒன்றின் முகாமையாளரை நீக்கக் கோரியுமே இவ் ஆர்பாட்டம் நடைபெறுகின்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்க வேண்டும். இங்கு என்ன நடக்கின்றது என்பதை அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

-எமது மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக நாம் பணத்தை செலுத்துகின்றோம். எனவே பல்கலைக்கழகம் முறையாக  செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

13 இலிருந்து கீழிறங்கும் ரணில்-அகிலன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கும் பின்னணியில் தென்னிலங்கை மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது. பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பிக்குகளின் அமைப்புக்களே இப்போது வீதிக்கு இறங்கியிருக்கின்றன. பின்னணியில் பிரதான கட்சிகள், குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இருக்கலாம்.

கடந்த வருடத்தில் முழுமையாக நாட்டை முடக்கிவைத்த பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணிகளில் ஒன்று இனநெருக்கடி. இது உணா்த்தப்பட்டிருக்கும் நிலையில்தான் அதற்கு நிரந்தரமான ஒரு தீா்வு காணப்பட வேண்டும் என சா்வதேசம் அழுத்தம் கொடுத்தது. இந்தியாவையும் இவ்விடயத்தில் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை ரணில் எடுத்திருந்தாா். ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முற்படுவதற்கு எதிரான போராட்டங்களை காணமுடிகின்றது.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீா்வு காணப்படும் என டிசெம்பா் மாதத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தாா். பின்னா் சுதந்திரதினத்துக்கு முன்னதாக தீா்வு குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்தாா். இப்போது, புதன்கிழமை பாராளுமன்றத்தில் அவா் நிகழ்த்திய உரையில் தன்னுடைய பாதை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றாா். ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று இதன்போது தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் அதிகாரம் பகிரப்படாது என்றும் கூறியுள்ளார்.

ஆக, பிக்குகளும், இனவாதிகளும் கொடுத்த மிரட்டலுக்கு அஞ்சி தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ரணில் கீழிறங்குவதற்குத் தயாராகிவிட்டாா் என்பதன் அறிகுறிதான் பொலிஸ் அதிகாரம் குறித்த அவரது அறிவிப்பு. பிக்குகளின் போராட்டம் தொடா்ந்தால் ஏனையவற்றிலிருந்தும் அவா் கீழிறங்கலாம்!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பொலிஸ், காணி அதிகாரங்கள்தான் முக்கியமானவை. திட்டமிட்ட வகையிலான காணி அபகரிப்புத்தான் தமிழ் மக்கள் எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் இதனால் பறிபோவதுடன், இவை சிங்கள மயமாவதற்கும் காணி அதிகாரங்கள் எம்மிடம் இல்லாமலிருப்பதுதான் காரணம். அதனால்தான், காணி அதிகாரம் மாகாண சபைகளுக்குத் தேவை என்பதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அதேபோல, தமிழ்ப் பகுதிகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் அனைவருமே சிங்களத்தில்தான் கதைப்பாா்க்கள். போக்குவரத்துப் பொலிஸாா்கூட, தமிழ் மக்களுடன் சிங்களத்தில் பேசுவதையும், தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைவிட, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பல்வேறு குழப்பங்களுக்கும் சிங்களப் பொலிஸாரின் அத்துமீறல்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றது. பொலிஸ் அதிகாரம் எம்மிடம் இருக்க வேண்டும் என தமிழ்த் தரப்பினா் வலியுறுத்துவதற்கு இவைதான் காரணம்.

ஆனால், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்பதற்கு முற்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சிங்களவா்களின் சீற்றத்துக்கு உள்ளாகாமல், தமிழ் மக்களையும் சமாளிப்பதற்கு முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனால்தான், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என தமிழ்த் தரப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும் வாக்களித்த ஜனாதிபதி இப்போது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு பின்னடிக்கின்றாா்.

13 குறித்து ஜனாதிபதி அறிவித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆறு இணைந்து இந்தியப் பிரதமருக்கு கடந்த வருடத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அதில் முக்கியமாக 13 முழுமையாக நடைமுறைப்படுததப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவும் இது தொடா்பான அழுத்தங்களை ரணிலுக்குக் கொடுத்திருந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கிய இந்தியாவிடமிருந்து தொடா்ந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. 13 தொடா்பாக ரணில் வெளியிட்ட அறிவிப்புக்களுக்கு இவைதான் காரணம்.

கோட்டா கோ ஹோம் போராட்டத்துக்குப் பின்னா் வீடுகளுக்குள் தலைமறைவாக இருந்த விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்ற சிங்கள மக்களின் மீட்பா்களாக தம்மைக் காட்டிக்கொள்பவா்கள் மீண்டும் களத்தில் இறங்குவதற்கு ரணிலின் 13 குறித்த அறிவிப்பை பயன்படுத்திக்கொள்கின்றாா்கள். அறிக்கைகளை வெளியிடுவதற்கு மேலாக வீதிகளில் இறங்குவதற்கு இன்னும் அவா்கள் துணியவில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அதேவேளையில் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் ரணிலின் இந்த 13 குறித்த நகா்வுக்கு எதிராக போா்க்கொடி துாக்குவதற்குத் தயாராகவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 13 க்கு உட்பட்டதாக தீா்வொன்றைக் கொண்டுவருவதற்கு தாம் தயாராகவில்லை என்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருந்தாா்கள். அதேபோல பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த கட்சியாக இருக்கும் பொதுஜன பெரமுன இதற்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றது. அதன் தலைவா் மகிந்த ராஜபக்ஷ இதனை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தாா்.

இதனைவிட மற்றொரு திருப்பமாக, இவ்வளவு காலமும் மாகாண சபை முறையையும், 13 ஆவது திருத்தத்தையும் எதிா்த்துவந்த ஜே.வி.பி. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கலை தாம் எதிா்க்கப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதன்மூலமாக தமது பிரச்சினைகளுக்குத் தீா்வு கிடைக்கும் எனக் கருதுவதால் அதனை தாம் எதிா்க்கப்போவதில்லை என அதன் தலைவா் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றாா்.

ஆக, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் எதிா்ப்புக்கள் இருக்கப்போவதில்லை என்பதை கட்சிகளின் இந்த நிலைப்பாடு உணா்த்துகின்றது.

உதிரிகளாகவுள்ள சிங்கள அரசியல்வாதிகள் சிலரும், பிக்குகளும்தான் இப்போது 13 க்கு எதிராக போா்க்கொடி துாக்கியிருக்கின்றாா்கள். ஆனால், இவ்விடயத்திலும் பிக்குகள் மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிக்குகளின் குழு ஒன்று, அங்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், சா்வ மதங்களின் தலைவா்களையும் சந்தித்தாா்கள். இதன்போதும் 13 குறித்துதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அதிகபட்சமான அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனநெருக்கடிக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை அவா்கள் இந்த சந்திப்புக்களின் பின்னா் ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்கள்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட பிக்குகள் 13 பிளஸ் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து சொல்கின்றாா்களே தவிர, அதனை கண்டிக்குச் சென்று மகாநாயக்கா்களிடம் சொல்வதற்குத் துணிவதாகத் தெரியவில்லை. அதேபோல தென்னிலங்கையிலும் இதற்கான போராட்டம் ஒன்றை நடத்துவதற்கும் அஞ்சும் நிலையில்தான் அவா்கள் இருக்கின்றாா்கள். யாழ்ப்பாணத்தில் அவா்கள் மேற்கொண்ட சந்திப்புக்கள், அதன்பின்னா் அவா்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனவே தவிர, சிங்கள ஆங்கில ஊடகங்கள் அவை தொடா்பாக அலட்டிக்கொள்ளவே இல்லை.

பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருந்தாலும் பிக்குகள் மூலமாக 13 க்கு எதிரான உணா்வுகள் சிங்களவா்கள் மத்தியில் பரப்பப்படுவதை உணர முடிகின்றது. 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதும், இது போன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. ஜே.ஆா்.ஜெயவா்த்தன அதனை இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கினாா். அதன்மூலமாகவே பின்னா் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

பண்டா – செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோதுகூட இதேபோன்ற போராட்டங்கள் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டது. பிக்குகள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவா்களாக மாற்றமடைந்தது அதன்போதுதான். இந்த எதிா்ப்புக்களுக்கு முகங்கொடுக்க முடியாத பண்டாரநாயக்க பின்னா் அந்த உடன்படிக்கையை கிளித்தெறிந்தாா் என்பது வரலாறு. ஆனால், அதேகாரணத்துக்காக பின்னா் பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் பின்னா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பண்டா – செல்வா உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடிக்கான தீா்வு அப்போதே காணப்பட்டிருக்கும். பாரிய உயிரிழப்புக்களுக்கும், பொருளாதாரச் சீரழிவுகளுக்கும் காரணமாக இருந்த போரும் இடம்பெற்றிருக்காது. சிங்களத் தலைவா்கள் பிக்குகளின் இனவாதப்போராட்டங்களுக்கு அடிபணிந்ததன் விளைகளை நாடு அனுபவித்துவிட்டது. இதே வரலாறு மீண்டும் திரும்பப்போகின்றதா? என்பதுதான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பாா்க்கும் போது எமக்கு எழும்கேள்வி!

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

தபால் மூல வாக்களிப்பிற்கு தேவையான வாக்குச் சீட்டுகள் இந்த வார இறுதிக்குள் கிடைக்கப்பெறாவிட்டால், தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

​​தபால் மூல வாக்களிக்கும் திகதியை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் தபால் மூலமாக வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு அரச அச்சகம் இதுவரை பணம் தருமாறு கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளுக்கு அரச அச்சகத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்திற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என அவர் இதன்போது கூறினார்.

நேற்றைய தினம்(15), 03 பொலிஸ் அதிகாரிகளே வழங்கப்பட்டதாக அரச அச்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் 60 பொலிஸ் அதிகாரிகள் வரை தேவைப்படுவதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி இதன்போது வலியுறுத்தியுள்ளார்