கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? : ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கேள்வி

வட மாகாண ஆளுநரால் அவரின் செயலகத்தில் நேற்று (15.11.2022) நடந்த கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது. இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது. நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும்.

ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் இந்த கூட்டம் நடந்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை நீண்டகால நோக்கில் எதிர்விளைவுகளைக் கொண்டுவரும்

– கலாநிதி ஜெகான் பெரேரா

 

ஏனைய சகல துறைகளுக்கும் செலவினங்கள் குறைக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை  அதிகாரத்தை இறுகப்பிடித்து அரசியல் உறுதிப்பாட்டு தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் பாதுகாப்பு படைகள் மீது எந்தளவுக்கு தங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மோசமான நிலைமை்இனிமேல் தான் வரப்போகிறது என்ற அரசாங்கத்தின் பயத்தையும் இது பிரதிபலிக்கிறது. முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் நாடு விடுபடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களைப் பொறுத்தவரை இது தீமைக்கான அறிகுறியேயாகும்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்ததமை தொடர்பில் எழுந்த நியாயப்பாட்டு கேள்விகளுக்கு அப்பால் அவரின் வருகை அவருக்கு சர்வதேச முறைமைகளுடன் இருக்கும் பரிச்சயத்தின் ஊடாக சர்வதேச ஆதரவைப் பெற்று அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்கு உதவும் என்ற எதிர்பார்ப்புடன் வரவேற்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு இன்னமும் நிறைவேறவில்லை. நாட்டுக்கு இறுதியாக கிடைத்த பெருமளவு உதவி இந்தியாவிடம் இருந்தே வந்தது.விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர்தான் இது நடந்தது.

நாட்டுக்கு தேவைப்படுகின்ற கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் என்றே தற்போது நம்பிக்கை வைக்கப்படுகிறது. அவ்வாறு கிடைக்கக்கூடிய கடனுதவி இவ்வருடம் மார்ச் மாதம் கடன்தீர்க்க வக்கில்லாத நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கையுடன் மீண்டும் அலுவல்களை ஆரம்பிக்க கடன்வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு பச்சைவிளக்காக அமையும்.சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை பிரதிபலிப்பதாக பட்ஜெட் அமையும் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளிப்படையாகவே கூறினார்.

இதுவரையில் இறுக்கமான இரகசியமாக இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை பகிரங்கப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார்.அந்த யோசனைகள் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கடுூமயான சந்தேகங்கள் பொதுவெளியில் கிளம்பியிருந்தன.சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள்  பொதுமக்களிடம் வேண்டிநிற்கும் தியாகம் தொடர்பில் மூளக்கூடிய கோபம் ஜனாதிபதிக்கு எதிராக திருப்பிவிடப்படக்கூடும்.தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டு மக்களை சிறப்பாக பாதுகாக்கமுடியும் என்று அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள (ஆட்சிக்கு வரும் ஆர்வம்கொண்ட ) தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

இத்தகைய பில்புலத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான எதிர்ப்பை மக்கள் தேர்தல்களின் மூலமாகவோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவோ காட்டுவதை ஜனாதிபதியும் அவரது குழுவினரும் விரும்பமாட்டார்கள்.உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்கும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைய அரைவாசியாக குறைப்பதற்கும்  தேசிய எல்லை நிர்ணய குழு தீடீரென்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இதை அரசாங்கம் கூறுகிறது.இது அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்படவேண்டியிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய தந்திரோபாயமாகவும் நோக்கப்படலாம். அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கக்கூடிய வாய்ப்பை அது இல்லாமல் செய்யும்.சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியையும் விட கூடுதலானதாக இருக்கும் பாதுகாப்பு பட்ஜெட் அரசாங்கத்துக்கு எதிரான எந்த கிளர்ச்சியையும் ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படைகள் ஊக்கம் பெறுவதை உறுதிசெய்யும் எனலாம்.

நியாயப்பாட்டு நெருக்கடி 

இவ்வருடம் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கி மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கிய நேரத்தில் இருந்து அரசாங்கம் அதன் நியாயப்பாடு தொடர்பிலான நெருக்கடியொன்றை எதிர்நோக்கிவருகின்றது.அந்த நெருக்கடியை அரசாங்கத்தினால் அலட்சியம் செய்ய இயலாது.இவ்வருடம் மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவையின்்பதவி விலகல் அரசாங்கத்தை பெரும்்பீதிக்குள்ளாக்கி பாதுகாப்பற்ற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறது.இரு மாணவர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி பதாதைகளை ஏந்திய வண்ணம் வீதிப்போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசாங்கத்தின் இந்த பாதுகாப்பின்மையின் ஒரு அறிகுறியாகும்.

இவ்விரு பெண்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்திருக்கிறது.பெரும் எண்ணிக்கையான பொலிசார் பெண்களை சுற்றிவளைத்து வாகனத்தில் பலவந்தமாக ஏற்றியதை காணக்கூடியதாக இருந்தது.இந்த களேபரத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெண் பொலிசாரை கழுத்தில் பிடித்து கொடூரமாக நடத்தியதை சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில் காணமுடிந்தது. அந்த பொலிஸ் அதிகாரிகள் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கும் தெரியவில்லை.

அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை மற்றவர்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் பாதுகாப்பு அக்கறைகளில் மூழ்கியிருக்கிறது.இது நாட்டையும் அரசாங்கத்தையும் பொறுத்தவரை துரதிர்ஷ்டமானது.இரு மாணவர் தலைவர்களை எந்த குற்றச்சாட்டும் சுமத்தாமல்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கும் கூடுலாக தடுத்துவைத்திருக்கும் அரசாங்கத்தின் செயல் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை மாத்திரமல்ல, நியாயமாக சிந்திக்கக்கூடிய எவரையும் கடும் சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த செயல் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பைக் கொண்டுவரக்கூடியதாகும்.இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பயனுடையதாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதா இல்லையா என்பது அடுததவருடம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவிருக்கிறது.ஐரோப்பிய ஒன்றியம் அந்த சலுகையை நீடிப்பது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை பொறுத்ததேயாகும்.இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும் தற்போது தொடருகின்ற மனித உரிமை மீறல்களும் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச அரங்குகளிலும் விவாதத்துக்கு எடுக்கப்படுகின்றன.இது நாட்டுக்கு பெரும் பாதிப்பைக் கொண்டுவரும்.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த வாரம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மக்கள் சபையில் (House of Commons) நடைபெற்ற விவாதத்தின்போது நாட்டில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.இலங்கை மீது சில வகையான தடைகளை கொண்டுவரவேண்டும் என்று கோரிய அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என்றும் இராணுவச் செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு புதிய தலைமுறை தடைகள் திட்டமான உலகளாவிய மக்னிட்ஸ்கி  சட்டத்தை இலங்கைக்கு பிரயோகிக்கவேண்டும் என்று  ஒரு உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.இந்த சட்டம் தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்து விதிக்கப்படுகின்ற பாரம்பரிய தடைகளுக்கு மாறாக, உலகம் பூராவும்  குற்றமிழைத்தவர்களுக்கு — அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் — எளிதாக பிரயோகிக்கக்கூடியதாகும்.

இராணுவ வரையறை

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை நீண்டகால நோக்கில் எதிர்விளைவுகளைக் கொண்டுவரப்போகிறது என்பது கவலை தருகிறது.அந்த அணுகுமுறையினால்  நெருக்கடியின் அறிகுறிகளை தற்போதைக்கு மாத்திரம் அடக்கிவைக்கமுடியும்.மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் ‘ இலங்கை ; பல்பரிமாண நெருக்கடி —  மனிதாபிமான தேவைகளும் முன்னுரிமைகளும் — ஜூன் — டிசம்பர் 2022 ‘ என்ற தலைப்பில் அறிக்கையொன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு கோடி 35 இலட்சம் மக்கள் — சனத்தொகையில் 61.1 சதவீதமானோர் — உணவு தட்டுப்பாடு  காரணமாக சமாளிப்பு யுக்திகளை கையாளுவதாகவும் 47.7 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை சமாளிக்கும் யுக்திகளை கையாளுவதாகவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

8 நவம்பர் 2022  வெளியிடப்பட்ட அந்த அறிக்கை ,” சுமார் 53 இலட்சம் மக்கள் அல்லது சனத்தொகையில் 24 சதவீதமானோர் தங்களது உணவு வேளைகளை குறைத்திருக்கிறார்கள்.சனத்தொகையில் அதே சதவீதத்தினரில் வயதுவந்தவர்கள் பிள்ளைகள் சாப்பிடவேண்டும் என்பதற்காக தங்களது உணவைக் குறைக்கின்றார்கள்.குடும்பத்தில் பெண்களே இறுதியாக சாப்பிடுகிறார்கள்.2021 இறுதிப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ளமுடியாத உணவுவகைகளை சாப்பிடும் குடும்பங்களின் விகிதம் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது.” என்று கூறுகிறது.உண்மையிலேயே மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தேர்தல்கள் பின்போடப்பட்டு தங்களது நம்பிக்கைக்குரியவர்களை மக்கள் தெரிவுசெய்யமுடியாமல் போகும் பட்சத்தில் தாங்கள் அனுபவிக்கும் இடர்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதியால் இறங்கி போராடவே செய்வர்.விலைவாசி உயர்ந்து, எரிபொருட்களும் பசளை வகைகளும் கிடைக்காத நிலையில், தினமும் அரைவாசி நேரம் மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுந்து அறகலய போராட்டம் மூண்டது.அதேபோன்ற விரகத்தியான ஒரு கட்டம் மீண்டும் தோன்றி மக்கள் கிளர்ந்தெழுவார்களேயானால், பாதுகாப்பு படைகளினால் அதை அடக்க இயலும் என்று எதிர்பார்க்கமுடியாது.

நியாயபூர்வமான போராட்டங்களை ஒடுக்குவதை விடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம்  கிடைப்பதற்கு அரிதான அதன்  வளங்களை ஒதுக்குவதே தற்போதைய தருணத்தின் பிரதான தேவையாகும்.மறுபுறத்தில், அரசாங்கம் மக்களை அடக்கி எதிர்காலத்தில் கிளர்ச்சிகள் மூளாமல் இருப்பதை தடுப்பதற்கு பாதுகாப்பு படைகளில் தங்கியிருக்கிறது என்றே  தோன்றுகிறது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆயுதப்படைகள் மீது அரசாங்கம் ஏன் இந்தளவு கூடுதல் கவனத்தைக் குவிக்கிறது ? 2030 பாதுகாப்பில் ஏன் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது? என்று கேள்விகள் கிளம்பலாம் என்பதை ஒத்துக்கொண்டார்.” நாம்்பிறந்தபோது இந்து சமுத்திரத்தில் எந்த தகராறும் இருக்கவில்லை.ஒரு கட்டத்தில் இந்து  சமுத்திரம் ஒருவருக்கும் தேவைப்படவில்லை.இன்று அவ்வாறில்லை. நாம் தப்பிப்பிழைக்கவேண்டும் என்றால், ஆற்றல்களை, பாதுகாப்பு ஆற்றல்களை, மூலோபாய ஆற்றல்களை, எல்லாவற்றையும் பயன்படுத்தவேண்டியிருக்கும்” என்று ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.

கடல் போக்குவரத்து சுதந்திரம் இல்லையென்றால் நாடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையைக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இந்த பதில்  நம்பும்படியாக இல்லை.ஏனென்றால், பிரிட்டிஷ் அல்லது பிரெஞ்சு  இராணுவங்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கும் இராணுவத்தை பேணுவதற்கு பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்பகுதி போகிறது.மக்களை தவறாக வழிநடத்திய இந்த வகையான கூற்றுக்களும் நியாயப்படுத்தல்களுமே சுதந்திரம் பெற்று 74 வருடங்களுக்கு பிறகு நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தன.உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி அதன் மூலம் தெரிவாகின்ற அரசியல் பிரதிநிதிகளுடன் அடுத்து முன்னெடுக்கவேண்டிய திட்டங்கள் குறித்து பேச்சு நடத்துவதே பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான நிலைபேறான அரசியல் உறுதிப்பாட்டை அடைவதற்கான ஜனநாயக பாதையாகும்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஐ.நா பங்களிப்பு அவசியம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி பங்கேற்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே குரலில் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் அடங்கலான குழுவினரை இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு எடுத்துரைத்தனர்.

கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அரசியல் ஸ்தீரத்தன்மை அற்ற நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு பற்றியும் ஐ.நா குழுவினருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வடக்கில் முப்படையினருக்கு காணி சுவீகரிப்பது தொடர்பில் பிரதேச செயலர்களுடன் ஆளுநர் தனது அலுவலகத்தில் கூட்டம் நடாத்தவிருந்த போது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டது.

இராணுவத்துக்கு 11.2% ஒதுக்கீடு, இனவாத சிந்தனைகளை மையமாக கொண்ட பாதீடு. – சுரேஷ் பிரேமச்சந்திரன்

நாடாளுமன்றில் அதிபரால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் – தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்தத்தில் இந்த வரவு-செலவுத் திட்டமானது நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய ஒன்று என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு-செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டமானது, எந்தவிதமான ஆரவாரமுமின்றி, நாடாளுமன்றத்தின் ஆதரவுக் குரல்களுமின்றி அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் நேற்று 14.11.2022 சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்த வருமானமாக 3415பில்லியன் ரூபா என்றும் மொத்த செலவாக 5819 பில்லியன் ரூபா என்றும் எதிபார்க்கப்படுகிறது. அதன்படி துண்டுவிழும் தொகையாக 2404பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு இணங்கவே இந்த வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மையும் உள்ளது. இலங்கை ஏற்கனவே வங்குரோத்து அடைந்த நாடாகவும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாடாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது.

இதன் காரணமாக மிகப்பாரிய அளவிலான பணவீக்கமும் அதன் விளைவாக கடந்த வருடத்திலும்விட, நான்கு, ஐந்துமடங்கு விலை அதிகரிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கோ தனியார்துறை ஊழியர்களுக்கோ எவ்வித ஊதிய உயர்வுகளுமில்லாமல் இருக்கின்ற அதேசமயம், பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து மிக உச்சத்தில் இருக்கின்றது. இதனால் ஏற்கனவே மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த அரச உத்தியோகத்தர்களும் தனியார்துறை ஊழியர்களும் தொழிலாளர்களும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டுகோடி இருபது இலட்சம் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் ஏறத்தாழ தொண்ணூறு இலட்சம் மக்கள் மூன்றுவேளை உணவிற்கே அல்லாடுவதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லை என்றும் பல இலட்சம் மாணவர்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதில்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றிற்கு நிவாரணம் வழங்கக்கூடிய எந்த விடயங்களும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதுமாத்திரமல்லாமல், மக்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை தரக்கூடிய எத்தகைய எந்த விடயங்களும் இதில் உள்ளடக்கப்படவுமில்லை.

மேலும், நாட்டை கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்றோ, மக்களுக்குமேல் ஏற்றப்பட்ட சுமைகளை எவ்வளவு கால அவகாசத்தில் தம்மால் குறைக்க முடியுமென்றோ எத்தகைய அறிவுறுத்தல்களும் இல்லை. உண்மையில் அதிபருக்கே இது தொடர்பில் எத்தகைய தெளிவும் இல்லை என்பதை உணரமுடிகிறது.

அதிபர் தனது உரையின்பொழுது நாங்கள் எங்கே தவறிழைத்தோம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டிருக்கின்றார். இலங்கை சுதந்திரமடைந்த அடுத்த வருடம் தான் பிறந்ததாகவும், இன்று எழுபத்தைந்து வருடம் பூர்த்தியடைந்த நிலையில் மிகப் பின்தங்கிய வங்குரோத்து அடைந்த ஒரு நாடாக இலங்கை இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற அதிபர் எங்கே பிழை விட்டிருக்கின்றோம் என்றும் கேட்கின்றார்.

உண்மையில் அவருக்கு இதற்கான விடை தெரிந்திருக்கும். ஆனால் அந்த விடயத்தைத் தயக்கமின்றி தெளிவாகச் சொல்வதற்கு அவர் அஞ்சுகின்ற நிலைமையை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டில் பல மொழிகள், பல மதங்கள், பல கலாசாரங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டு சகலருக்கும் சம உரிமைகள், சம சந்தர்ப்பங்கள் வழங்கும் ஒரு நாடாக இதனை மாற்றியிருந்தால், ஆசியாவின் வளமிக்க ஒரு நாடாக இது மாறியிருக்கும்.

எங்களுக்குப் பின்னர் சுதந்திரமடைந்த சிங்கப்பூர் அவ்வாறுதான் செயற்பட்டது. நான்கு மொழிகள், நான்கு இனங்கள், பல மதங்கள் பல்வகையான கலாசாரங்கள் இவை எதுவும் பாதிக்கப்படாத ஒரு நாடாக சிங்கப்பூர் கட்டியெழுப்பப்பட்டது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக வளர்ச்சியடைந்த ஒரு நாடாக சிங்கப்பூர் மாறியிருக்கின்றது. இனவாதத்தில் ஊறிப்போயிருக்கக்கூடிய சிங்கள அரசியல் தரப்பு இதனை இன்னமும் உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் சிங்கள பௌத்தத்தைப் பேணிப்பாதுகாப்பது என்றும் இதற்கு முப்படையினரும் உதவவேண்டும் என்ற அடிப்படையிலும் இனவாத சிந்தனைகளை மையமாக வைத்து கட்டியமைக்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு செலவீனமாக இலங்கையின் மொத்த செலவீனத்தில் 11.2 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 130கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் அதுவும் அண்டை நாடுகளுடன் நீண்ட எல்லைகளையும் எல்லைத் தகராறுகளையும் கொண்ட நாடே பாதுகாப்பிற்கு 9வீதத் தொகையையே ஒதுக்கியுள்ளது. இரண்டுகோடியே இரண்டரை இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைக்கு பாதுகாப்பிற்காக 41000 கோடி ரூபா செலவு அவசியம்தானா? இவ்வளவு பெருந்தொகை படையினர் தேவைதானா? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வளவு முகாம்கள் தேவைதானா? இலங்கை, எந்த நாட்டிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இவ்வளவு பெரிய பாதுகாப்புப்டையை வைத்துக்கொண்டு அதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்கின்றது? இலங்கை, உலகத்தின் பதிநான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிற்கு இவ்வளவு பெரிய இராணுவ அமைப்புமுறை அவசியம்தானா?

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் என மூன்று துறைகளை உள்ளடக்கிய ஒரு அமைச்சுக்கு வரவு-செலவுத்திட்டத்தில் 23.4.வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான கருத்து என்னவென்றால், இலங்கை முழுவதிலுமுள்ள அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், மாகாணசபை ஊழியர்கள், மாகாணசபை நடவடிக்கைகள், உள்நாட்டலுவல்கள் என ஒட்டுமொத்தமான இலங்கையின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக 23.4 வீதத்தை ஒதுக்கும் இந்த அரசாங்கம் பாதுகாப்பு என்ற பெயரில் முப்படையினருக்கும் 11.2வீதத்தை ஒதுக்கியதானது அரசாங்கத்தின் தேவையற்ற செலவீனத்தையே காட்டுகின்றது.

தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளும் சர்வதேச சமூகமும் அரசாங்கத்தின் இத்தகைய அநாவசிய செலவுகளைக் குறைக்கும்படிக் கோரியபோதிலும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் நாட்டின் இன்றைய சூழலில், இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இன்றைய அதிபர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபொழுது, மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பில் 1500கோடி ரூபா முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்காக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? இதனைப் போன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் வெளிநாட்டுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பாரிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இலங்கை வங்குரோத்து அடைந்தமைக்கு இதுவே முக்கியமான காரணமென்றும் சிங்கள புத்திஜீவிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறைந்தபட்சம் இவற்றை மீளக் கொண்டுவருவதற்கான ஏதேனும் ஒரு வழிமுறையைக்கூட இவரால் அறிவிக்கமுடியவில்லை. அதுமட்டுமன்றி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழல்களையும் இலஞ்ச லாவன்யங்களையும் நிறுத்தி, அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய உருப்படியான எத்தகைய திட்டங்களையும் இவரால் அறிவிக்க முடியவில்லை.

இவ்வாறான ஒரு வரவு-செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்புடையதல்ல, தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்தத்தில் இந்த வரவு-செலவுத் திட்டமானது நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய ஒன்று என்பதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” – என்றுள்ளது.

Posted in Uncategorized

காணிக்காகப் போராடத் தமிழர்கள் போல் முஸ்லிம்களும் உடன் இணையவேண்டும்

முஸ்லிம்களாகிய நாங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாகப் போராடி நிறைய விடங்களைச் சாதித்திருக்கின்றார்கள்.

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றும்கூட தமிழ் மக்களின் பிரதேசங்களில் காணிகள் கையகப்படும் சந்தர்ப்பங்கள் இருந்து வருகின்ற நிலையில் அதற்குக் காரணமானவர்களை ஒன்றுகூடி அவர்கள் விரட்டியடிக்கின்றார்கள். ஆனால் அம் மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமை எங்களிடத்தில் இல்லை. எமது ஊர்கள் யாவும் தற்போது தனியான தீவுகளாக மாற்றப்பட்டு உள்ளன. இவ்வாறான பிரதேச வாதங்களால் தான் வெளியூர் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் இங்கு வந்து எமக்கு மேல் நின்று கொண்டு எங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் வித்தியாசமான அரசியலைச் செய்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் பிரதேச வாதமாகும். எனவே தான் ஒவ்வொரு கிராமமும் தனித்தனியாகச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

வரவு செலவுத்திட்டம் பொருளாதார மீட்சி ஸ்திரதன்மையை அடிப்படையாக கொண்டது

2023 வரவு செலவுதிட்டம் பொருளாதார மீட்சி அதனை ஸ்திரப்படுத்தியவாறு எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவக்கூடிய நடுத்தர நீண்டகால பொறுளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டுவந்ததாகஅவர்  தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பின்பற்ற சில தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதாரம் மேலும் மோசமாக பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் தாமதங்கள் மீட்பு நடவடிக்கையை பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் குறைக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப நாட்களில் நீண்டவரிசைகள்  பலமணிநேர மின்வெட்டு போன்றன காணப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி ஆளுநர் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையேற்பட்டது வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாணயக்கொள்கையை இறுக்கமாக்கியிருக்காவிட்டால் வட்டி வரிகள் போன்றவற்றை அதிகரித்திருக்காவிட்டால் பணவீக்கம் 100 வீதத்திற்கும் அதிகமானதாக காணப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் – ஹர்ஷ

வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

பாராளுமன்றில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினருக்கு செலவிடும் தொகையானது பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேவையற்ற செலவீனங்களை குறைத்து பொருளாதார மீட்சிக்கு அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டால் மாத்திரமே தலைவருக்கான கௌரவத்தை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாட்டில் மேலும் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கான செலவீனங்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையில் தற்போது 60 அமைச்சர்கள் வரை பதவியில் உள்ளார்கள்.

மேலும் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கினால் அமைச்சர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாகனங்கள், அதற்கான எரிபொருள் செலவீனம், அமைச்சர்களுக்கான நிர்வாக சேவையினருக்கு வேதனம், இவை அனைத்தையும் நோக்கும் போது இந்த பாதீடானது மக்களுக்கு அனுகூலமான பாதீடு அல்ல என்பது புலனாகின்றது.

அது மாத்திரமின்றி சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது.

மேலும் பணவீக்க அதிகரிப்பின் வேகம் குறைவடைந்துள்ள போதிலும், பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போது உணவு பணவீக்கமானது நூற்றுக்கு ஐந்து வீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது நூற்றுக்கு 95 வீதமாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. எனினும் உணவு பணவீக்கமானது தற்போது சீராக உள்ளதாகவும், ஆகையினால் வாழ்வதற்கு ஏற்றச்சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் பொருளாதார கணிப்பினை கேட்டுச் சிந்திக்கும் போது நகைச்சுவையாகவே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை – பிரேமலால் ஜயசேகர

பலாலி சர்வதேச விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார் கடந்த வாரம் கடத்தொழில் அமைச்சர் பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கு இந்தியாவே தடையாக உள்ளது என தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,

நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன் துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமே ஆக இருந்தால்  காங்கேசன் துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்

தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் காரணமாகவே இன்றைய தினம் காங்கேசன் துறைமுகத்திற்கு நேரடியாக அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினைமேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் நான் ஆராய்ந்து இருக்கின்றேன்

குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன அவ்வாறான வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பித்து மிக விரைவில் இந்த காங்கேசன் துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்

அதேபோல் பலாலி சர் வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும் குறிப்பாக அமைச்சின் ஒருவர் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஊடகவியலாளர் வினவிய போது அது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் எல்லாம்  பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது

அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார் ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவன் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

தவறை ஏற்றுக்கொண்டாலேயே மன்னிக்க முடியும் – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இருப்பவர்கள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும் தங்களின் பாவங்களுக்கு மிகவும் வேதனையான கர்மவினையை சந்திக்க நேரிடும் என்றும் தவறை ஏற்றுக் கொள்ளுங்கள் அதனை நாம் மன்னிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு கனேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத்திட்டத்தை குறித்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது பேராயர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி எனக்கு தனிப்பட்ட வகையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு வந்த மறுநாளே அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து அவற்றையெல்லாம் எவ்வாறு வெளிப்படையாகக் கூற முடியும்? என்று கேட்டார்.

அறிக்கைகளை சிபாரிசு செய்ய வேண்டியது நீங்கள் இல்லை இதனை பொலிஸாரிடம், நீதிமன்றத்திடம் ஒப்படையுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒன்றும் கூறவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர். ஏன் அவருடைய பொறுப்புகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறார். அதன் பின்னணியில் அரசியல் சதி ஒன்று இருப்பதாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பல தெளிவற்ற விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளிக்கொணர்வதற்கு எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

சட்டா அதிபர் திணைக்களத்திற்கு கண்களும் இல்லை, காதுகளும் இல்லை,அதனால் ஒன்றையும் செய்வதற்கு முடியாது உள்ளது.

தற்போது நாட்டில் செவிடான யானைகள் மற்றும் ஒரு பெரிய யானையும் அதன் கூட்டத்துடன் வந்துவிட்டது. அவர்களிடம் வீணை வாசிப்பது பயணற்றது.

சட்டத்தை நினைத்தப்படி மாற்றி இதை வைத்து அதனை கை கழுவி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு நினைத்தால் மற்றவர்களுக்கு ஹீரோவாக தோன்றலாம். ஆனால் ஒன்று நினைவில் இருக்கட்டும். வேதத்தில் உள்ளது. நீங்கள் செய்த பாவங்கள் உங்களை பின் தொடரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்