மனித புதைகுழிகளை மறைப்பதற்காகவே அவ்விடங்களில் விகாரைகள்? ரெலோ தலைவர் செல்வம் எம்.பி சந்தேகம்

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொக்குதொடுவாயில் மனித புதைக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது எனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டு பிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 09 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது முழுமையான 17 உடற்பாகங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வு அகழ்வு நடவடிக்கைகள் கடந்த 06 ஆம்; திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் 9 ஆம் நாள் அகழ்வு பணிகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த அகழ்வு பணிகள், தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ். நிரஞ்சன், தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்றைய அகழ்வு பணியின் போது, ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ-1124 அடையாள இலக்கமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அகழ்வு பணி இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனிக்காது உலகம் சுற்றும் வாலிபனாக ரணில் : மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் – ஜனா எம். பி

உள்நாட்டிலேயே பல இருக்கும்போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதாக காட்டி காலத்தை கடத்துகின்றார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

11ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை கொடுத்து இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பாக பிரேரணை அங்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரதி உயரஸ்தானிகர் ஒரு எழுத்து மூலமாக அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில், இலங்கையிலே நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஒரு நியாயமான விசாரணை வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும், வடகிழக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு சர்வதேச அங்கீகரிக்க கூடிய சட்ட திட்டத்தை கொண்டு வரும் வரை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்கு மாறாக இந்தியாவின் வதிவிட பிரதிநிதி இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு இங்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக விவாதம் வர இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகள் அனைத்தும் இந்த நாட்டில் இருக்கும்போது அதை விடுத்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றது, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் இருக்கின்றது, வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு திட்டம் இருக்கின்றது, பல பிரச்சனைகள் இந்த நாட்டிலே இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் அனைத்துமே உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகம் சுற்றும் வாலிபனாக ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றார்.

பிரித்தானியா செல்கின்றார்,பிரான்ஸ் செல்கின்றார்,ஜப்பான் செல்கின்றார், சிங்கப்பூர் செல்கின்றார் தற்போது கியூபா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல இருக்கின்றார். உண்மையில் உள்நாட்டிலேயே இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதுமாக காலத்தை கடத்துகின்றார்.

தற்போதைய உயிர்த்த ஞாயிறு பிரச்சனை தொடர்பாக மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இது விடயமாக விசாரித்து அந்த அறிக்கையை பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பதாக இருக்கின்றார். ஆனால் பாராளுமன்றத்திலே இன்று இருக்கும் பொதுஜன பெரமுன கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி நிற்கும் போது ஜனாதிபதி மாத்திரம் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான சேனல் 4 வெளியிட்ட வீடியோ சம்பந்தமாக விசாரித்து ஒரு அறிக்கையை தயாரிப்பது என்பது இந்த நாட்டு மக்களை மாத்திரம் அல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாக தன்னுடைய வழமையான பாணியிலேயே ஏமாற்றும் செயலாகவே இவர் செய்து கொண்டிருக்கின்றார்.

தென்னிலங்கையில் இருந்து விமல் வீரவன்ச குழுவினரும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தமிழ் மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுவது என்பது உண்மையிலேயே நகைப்புக்குரிய ஒரு விடயம். விமல் வீரவன்சவை பொருத்தமட்டில் அவருடைய உடம்பிலே ஓடும் இரத்தம் இன வெறியுடன் சம்பந்தப்பட்ட இரத்தம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த இன துவேசத்தை இன வெறியை வைத்துக் கொண்டுதான் தன்னுடைய அரசியலை அவர் தக்கவைத்துக் கொள்கின்றார். எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் இந்த நிலையில் அந்த தேர்தலில் கூட தானோ அல்லது தான் சார்ந்தவர்களோ வெல்ல வேண்டுமாக இருந்தால் இப்படியான இன துவேச இன வெறி கொண்ட கருத்துக்களை விதைப்பது சர்வசாதாரண விடயம்.

அந்த வகையில் அவர் இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே இருக்கும் சில தமிழ் பிரதிநிதிகள் தமிழ் கட்சிகள் கூட இந்த பிரச்சினையை ஒரு அரசியல் ரீதியாக அணுகப் பார்க்கின்றார்கள். உண்மையில் இந்த விடயத்தை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் என்பது 250 க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட ஒரு சம்பவம் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்ட ஒரு சம்பவம் அது மாத்திரமல்ல இலங்கையின் நிலைப்பாட்டை வெளி உலகத்திற்கு உணர்த்திய சம்பவம்.

ஏனென்றால் கிட்டத்தட்ட 40 வெளிநாட்டவர்கள் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். அந்த வகையிலே இந்த சம்பவத்தை அரசியலுடனோ, தமிழ் தேசியத்துடனோ, தமிழ் மக்களுடனோ இணைத்து பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக இன்று இரண்டு அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது. அதில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன். இந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை மாத்திரமல்ல நாட்டில் உள்ள நிர்வாக சீர்கேடு அது மாத்திரமல்லாமல் அமைச்சுகளில் உள்ள ஊழல்கள் சம்பந்தமாக நிர்வாகத்தை ஒழுங்காக கொண்டு நடத்த முடியாமல் இன்று பலரும் பல விடயங்களை முன்வைத்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்கின்ற ஒரு பெரிய பிரளயமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த நாட்டில்.

அந்த வகையில் நேற்றைக்கு முதல் நாள் மதியம் இருந்து புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தத்திலே ஈடுபட்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக புகையிரதத்திலே நெருசல் மாத்திரம் அல்ல இருப்பதற்கு இடமில்லாமல் புகையிரதத்துக்கு மேல் இருந்து பயணம் செய்த ஒரு பல்கலைக்கழக மாணவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்த ஒரு சம்பவம் என்பது இந்த நாட்டின் ஒரு சோகமான நிர்வாக கேட்டுன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.

அந்த வகையில் அரச திணைக்கள ஊழியர்கள் அமைச்சையும் அமைச்சின் மேலதிகாரிகளையும் குற்றம் சாட்டுவதுடன் அமைச்சர்கள் ஊழியர்களை குற்றம் சாட்டும் ஒரு நிலை மாறி மாறி குற்றச்சாட்டு அளவுக்கு நிலை இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இந்த மரணத்திற்கு போக்குவரத்து அமைச்சு முழு பொறுப்பையும் எடுத்து உரிய விசாரணையை முன்னெடுத்து இந்த உயிர் இழப்பிற்கு ஒரு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆக்ரோசத்துடன் இந்த அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கம் குற்றம் சாட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்காக எதிரணிகள் எதிர்க்கட்சிகள் பின்புலத்தில் இருந்து இயக்கிக் கொண்டு இங்கே போராட்டங்கள் நடைபெறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகின்றது இதே போன்று தான் 2021 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்த பொருளாதார நெருக்கடி வந்ததன் பின்பு அரகல என்னும் போராட்டமும் நடைபெற்று இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படும் போது போராட்டங்களை செய்ய எத்தனிக்கும்போது அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் தலைமையில் இதனை திணிப்பது என்பது ஒரு புதிய விடயம் அல்ல.

அந்த வகையில் மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கடந்த வருடம் அரகலயின் மூலமாக அறிந்திருக்கின்றது தொடர்ச்சியாக இந்த அடக்குமுறை நீடித்தால் இது ஒரு பெரியதொரு போராட்டமாக வெடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சனல் 4 சமீபத்தில் அம்பலப்படுத்திய அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் தன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காடிட்டனர்.

இருப்பினும் சனல் 4 ஆவணப்படம் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் நடந்ததற்கும் உணர்ந்ததற்கு முற்றிலும் மாறுபாடு உள்ளமையினால் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தன் இரதோற்சவம் சிறப்புற இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர்கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆவது திருவிழாவின் இரதோற்சவம் இன்று (13) பக்திபூர்வமாக இடம்பெற்றன.

21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 25 நாட்கள் திருவிழா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று(13) நடைபெறுகின்றது.

நல்லூர் கந்தன், தேரேறி திரு வீதி வலம் வரும் அழகு காண்பதற்காய் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியுள்ளனர்.

அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூசை ஆகியன காலக்கிரமமாக முருகப் பெருமானுக்கு நடைபெற்றன.

ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப் பெருமன் தேரேறி வீதியுலா வருவதற்கு புறப்பட்டுள்ளார்.

பால் காவடிகள், பறவைக் காவடிகள், கற்பூர சட்டிகள், அங்கப்பிரதட்சணம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.

அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 24ஆம் திருவிழாவான இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெறுகிறது.

Posted in Uncategorized

அர்த்தமுள்ள வகையில் செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது

தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான, தனது உறுதிமொழிகளை விரைவில் செயல்படுத்துவதற்கு “அர்த்தமுள்ள வகையில்” செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

“இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும், 2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது” என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருகிறது.

இந்தியா ஊக்குவிக்கும் விடயங்கள்

அத்துடன் இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளையும் இந்தியா ஊக்குவிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையின் ஊடாடும் உரையாடலின் போது பாண்டே கூறியுள்ளார்.

சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான தமிழர்களின் அபிலாஷைகளையும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி இலங்கையில் தமிழர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியளிக்கும் என்று இந்தியா நம்புவதாக பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகம் தமக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி வருகின்றது.

13வது திருத்தம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டு வரப்பட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புடன் 9 மாகாணங்களை பகிர்ந்தளிக்கப்பட்ட அலகுகளாக உருவாக்கியது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல்கள்

இந்தநிலையில் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து ஒன்பது மாகாணங்களுக்கான தேர்தல்கள் 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத் திருத்தம் தேவைப்படுகிறது என்று பாண்டே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனது உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் மறுஉறுதிப்படுத்தலை கவனத்தில் கொண்டுள்ளது.

இருப்பினும், அதற்கான முன்னேற்றம் போதுமானதாக இல்லை, கடந்த வருடத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் அதன் பொருளாதார சவால்களை சமாளிக்க இந்தியா நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பலமுனை ஆதரவை வழங்கியுள்ளதாக பாண்டே தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

”G77+ சீனா” மாநாட்டுக்கு புறப்பட்டார்‌ ஜனாதிபதி

“தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் செப்டம்பர் 14 முதல் 16 வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

அதேநேரம், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான நுமு-649 ரக விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.15 மணியளவில் டுபாய் நோக்கி ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சென்றுள்ளனர்.

துபாயில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர், மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவலும், பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்

Posted in Uncategorized

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: 6 உடற்பாகங்கள் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.

குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்றிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (12) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இன்றையதினம் ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் துப்பாக்கி சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வு பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னி பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து நாளைய(13) தினமும் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு செய்துள்ளது

2023 ஆகஸ்ட் இறுதி வரை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இன் கீழ் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு செய்துள்ளது என்று வெரிடே ரிசர்ச் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டதிலிருந்து,எட்டு வருடங்களாக, தீர்மானத்தின் 61.1% உறுதிப்பாடுகள் ‘மோசமான’ அல்லது ‘இல்லை’ என்ற அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், (1) பரந்த நிலைமாற்று நீதி செயல்முறைகளில் ஈடுபடுதல்; (2) காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல்; (3) இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுதல்; (4) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்துதல்; (5) வலுக்கட்டாயமாக காணாமல் போதல்களை குற்றமாக்குதல்; (6) மற்றும் (7) சிறப்பு நடைமுறை ஆணை வைத்திருப்பவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற 7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும் 2015 ஆம் ஆண்டு முதல் ‘மோசமான நிலையில் இருக்கும் சில முக்கிய கடமைகளாக, பொதுமக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல்; (2) ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மத சிறுபான்மையினர் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள், (3) இந்தத் தாக்குதல்களின் குற்றவாளிகளைக் கண்டறிதல் மற்றும் (4) எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பது போன்ற விடயங்களிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என வெரிடே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வௌ்யிட்டுள்ளது.

தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக Daily Mirror பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர் திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட மவ்பிம மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜயவீர, மவ்பிம மக்கள் கட்சியை பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் யாப்பு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் வியத்மக அமைப்பிற்கு இணையாக புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதுடன், கல்விமான்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் Daily Mirror பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மவ்பிம மக்கள் கட்சியும் திலித் ஜயவீரவின் அமைப்பும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் மவ்பிம மக்கள் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார, குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த செய்தி குறித்து தொழிலதிபர் திலித் ஜயவீர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Daily Mirror பத்திரிகையின் நண்பர்களே, இங்குள்ள தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் தவறாக வழிநடத்துகிறது. தயவுசெய்து என்னை அழைக்கவும், நான் உங்களுக்கு சரியான விடயங்களை வழங்குகின்றேன்.

என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized