பசிலுடன் இணைந்து ரணில் செயற்படுவது ரணிலுக்கு தடையை ஏற்படுத்தும் – உதய கம்மன்பில

நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மே தின கூட்டத்துடன் மக்களாணையை வென்று விட்டோம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது நகைப்புக்குரியது.கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படை கொண்டு பொதுஜன பெரமுனவுக்கு குறிப்பாக ராஜபக்ஷர்களுக்கு மக்களாதரவு எந்தளவுக்கு உள்ளது என்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது. பொதுஜன பெரமுன பிரம்மாண்டமாக அமைத்த கூடாரங்கள் வெற்றிடமாகவே காணப்பட்டன.

நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்ற நிலை மாற்றமடைந்து விட்டது.மக்கள் தெளிவாக உள்ளார்கள்.மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ராஜபக்ஷ குடும்பமே நாட்டை ஆட்சி செய்தது.ராஜபக்ஷர்களின் முறையற்ற பொருளாதார கொள்கையை அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.சுட்டிக்காட்டிய குறைகளை அப்;போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருத்திக் கொள்ளவில்லை.மாறாக எங்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கினார்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது சகாக்கள் ஜனாதிபதிக்கு பாரிய தடையாக இருப்பார்கள்.

பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணையுமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எம்மிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.ராஜபக்ஷர்களுடன் இனி ஒருபோதும் ஒன்றிணைய போவதில்லை.அரசியல் ரீதியில் தனித்து செயற்படுவோம் என்றார்.

பசில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம்.

ராஜபக்ஷர்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை இல்லை என்ற தவறான கருத்தை மே தின கூட்டத்துடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவுக்கும்,ராஜபக்ஷர்களுக்கும் சார்பாகவே செயற்படுகிறார்கள்.

மே தின கூட்டம் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும்,பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பிரதான வீதியை மரித்து மேடை அமைத்து கூட்டத்தை நடத்த எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் உறுதியாக குறிப்பிட்ட பின்னணியில் ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு நடுவீதியில் மேடையமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

பாராளுமன்றத்தை சுற்றி வளைக்கும் வகையில் மக்களை தவறாக வழி நடத்திய அரசியல் கட்சிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்தோம்.

இதுவரை இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய அரசியல் கட்சி பிரநிதிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இந்த அரசியல் கட்சி முறையற்ற வகையில் செயற்படும் போது அதிகாரம் கிடைத்து விட்டால் இவர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் எமது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசியல் தீர்மானங்களை எடுத்து முன்னோக்கிச் செல்வோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறோம். எமது கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அவர் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவாக இருக்கலாம்.ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்றார்.

இலங்கையை செழிப்பான பாதையில் கொண்டு செல்ல முடியும் என நாணய நிதியம் நம்பிக்கை

இலங்கையை செழிப்பான பாதையில் மீண்டும் கொண்டுசெல்ல முடியும் என சர்வதேச நாணயநிதியம் நம்பிக்கைவெளியிட்டுள்ளது.

ஆசியா பசுபிக்கின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச நாணயநிதியத்தின் ஆசியபசுபிக்கிற்கான இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு முக்கிய பிரச்சினை உள்ள நாடு என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை அடிப்படையாக கொண்ட திட்டம் நுண்பொருளாதார ஸ்திரப்படுத்தல் பணவீக்கத்தை குறைத்தல் போன்றவற்றை வலியுறுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிஒருங்கிணைப்பு வருவாய் ஒருங்கிணைப்பினை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் வருவாய் திரட்டல் வரிவசூலிப்பு போன்றவற்றில் இலங்கை மிகவும் பின்னிலையில் உள்ளமைக்கும் இதுவும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு கொவிட்டிற்கு முன்னர்அவர்கள் முன்னெடுத்த கொள்கைளில் உள்ள தவறுகளே இதற்கு காரணம் அவர்கள் வரிச்சலுகையை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஆதரவு திட்டம் என்பது வருவாய் அடிப்படையிலான ஒருங்கிணைப்பு ஆகும் இது பொருளாதாரத்திற்கு ஸ்திரதன்மையை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் உயர்நிலைக்கு சென்ற பணவீக்கத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாணயநிதியம் விரும்புகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் ஆட்சி மற்றும் ஊழல் விவகாரங்களிற்கும் தீர்வை காணமுயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மற்றும் ஊழல் விவகாரம் குறித்து ஆழமான கண்டறிதலை மேற்கொண்ட முதல் நாடு இலங்கை எனவும் தெரிவித்துள்ள அவர் மேலும் இது இலங்கை வறியவர்கள் மற்றும் நலிந்தவர்களிற்கு எவ்வாறு உதவவேண்டும் என்பதை மையப்படுத்திய திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் கடன்வழங்குநர்கள் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களை உள்ளடக்கிய கடன் வழங்குநர்களுடன் கடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான நல்லெண்ண முயற்சிகளை இலங்கை அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை 2022 இல் 8.7 வீத வீழ்ச்சி காணப்பட்டது 2023 இல் இது 3வீதமாக காணப்படும சிறிய மீட்சி காணப்படும் எனவும் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவேண்டும் இதன் காரணமாக கடன்களை பேண்தகு தன்மை கொண்டமையாக மாற்றலாம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை இலங்கை குறைக்கவேண்டும் என் என்றால் அது வறியவர்கள் மீது சுமையை செலுத்துகின்றது வறியவர்கள் நலிந்தவர்களை காயப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இருந்து துபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ். குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையில் உள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வாழைப்பழங்கள் துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதோடு உள்ளூர் விவசாயிகளுக்கும் பெரிதும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டமானது அனுராதபுரம் ராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் பொருளாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடகங்களை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினருடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல்வேறு அத்துமீறல்களை அரச படைகளும், அரசும் தொடர்ந்து வண்ணமே உள்ளன.

இந்த லட்சணத்திலே இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்றார்.

இந்த சூழ்நிலையிலே நாங்கள் ஜனாதிபதியினை நோக்கி தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.

அதனை செய்யாது, எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து, எங்களை அழித்து கொண்டு எங்கள் கலாசாரத்தை, எங்கள் இருப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு மறுபுறமே இவ்வாறான கோரிக்கைகளை விடுகின்றீர்கள்.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு இன பிரச்சனை தொடர்பில் பேச அழையுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.

45 ஆண்டுகளுக்கு மேலாக கறைபடாத பணியில் ஈடுபட்டுள்ளதாக வசந்த கரன்னகொட கடிதம்

அமெரிக்காவினால் அண்மையில் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னகொட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் தன்னை கறுப்புப் பட்டியலில் இணைத்த தீர்மானத்தின் மூலம், தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

45 ஆண்டுகளுக்கும் மேலாக கறைபடாத அரச பணியில் நான் பெற்ற கௌரவம் மற்றும் நற்பெயரை இந்த தவறான குற்றச்சாட்டுகள் கடுமையாக தன்னை பாதித்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஐ.சி.சி.பி.ஆர். இன் 17வது பிரிவின் கீழ் எனது உரிமைகளை நேரடியாக மீறுவதாக உள்ளது என்றும் இதற்காக பரிகாரம் தேடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் முன்னாள் கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடை விவகாரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும் இது ஊடகங்களில் வெளியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றது என்ற தவறான பிரச்சாரத்திற்காக தான் இந்த விவகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த கரன்னகொட குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அமெரிக்காவின் முடிவு இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் வசந்த கரன்னாகொட அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இங்கிலாந்து பயணித்தார் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார்.

அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழவுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(வியாழக்கிழமை) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சுமந்திரன், சிறிதரன், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களின் அமைதியான போராட்டங்களை தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமையை தடுக்க முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத விகாரைக்கு எதிராக நேற்று ஆரம்பித்த போராட்டத்திற்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், போராட்டக்காரர்கள் 2 பேரையும், போராட்டக்களத்துக்கு பந்தல் அமைக்க வந்த 3 பேரையும் கைது செய்தனர்.

அத்துடன், போராட்டக்களத்திற்குள் மக்கள் நுழைய முடியாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் பலாலி பொலிசார், மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தினர்.கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் முன்னிலையாகினார்.

அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்ததை சுட்டிக்காட்டியதையடுத்து, நீதவான் அவர்களை பிணையில் விடுவித்தார்.

விகாரைக்கு முன்பாக போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென பொலிசார் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்து விட்டு உத்தரவு வழங்குவதாக நீதவான் குறிப்பிட்டார்.

இன்று மாலை போராட்டக்களத்துக்கு வந்த நீதவான், நிலைமைகளை அவதானித்த பின்னர், மக்களின் அமைதியான போராட்டத்துக்கு நிபந்தனையுடன் நீதவான் அனுமதியளித்தார்.

இதன்படி, விகாரைக்கு வருபவர்களிற்கு இடையூறு விளைவிக்காமல், விகாரையின் வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல், வீதியை மறிக்காமல், சத்தம் எழுப்பாமல், போராட அனுமதியளித்தார்.

அத்துடன், விகாரைக்கு எதிரில் உள்ள வளவில் போராட்டம் நடத்த நீதவான் இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

விகாரையின் காணி உரித்து தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் நீதிமன்றத்தை அணுகி நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது – சர்வதேச மன்னிப்புச் சபை

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி வெகுவாக சுருக்கமடைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண தெரிவித்துள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர தினமான புதன்கிழமை (03) இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பது குறித்தும், அண்மையகாலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் தொடர்பிலும் கேசரியிடம் கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபையின் செயற்பாட்டாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், விமர்சனங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் அண்மையகாலங்களில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி என்பது மிகவும் சுருக்கமடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ‘ஊடகங்களை அமைதிப்படுத்துவதற்காக சட்டங்களை முறைகேடாகவும், ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்துவது வழமையான விடயமாக மாறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சிறுபான்மையின ஊடகவியலாளர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் த்யாகி ருவன்பத்திரண குறிப்பிட்டார்.

மேலும் தகவல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் ஊடக சுதந்திரம் என்பது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்திய அவர், ‘ஊடகவியல் ஓர் குற்றமல்ல’ என்றும் தெரிவித்தார்.