வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் சிதைக்கப்பட்டமை வன்முறைக்கு இட்டு செல்லும் – அருட்தந்தை சத்திவேல்

வெடுக்குநாறி மலை சைவ ஆலயம் சிதைக்கப்பட்டமை சைவ மக்களை பலவந்தமாக வன்முறைக்கு இட்டு செல்லும் திட்டமிட்ட இனவாத அரசியலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (28.03.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கினை சிங்கள பௌத்த மயமாக்கும் அடவாடி பயங்கரவாத தொல்பொருள் திணைக்களத்தோடு வேரும் பயங்கரவாத இன அழிப்பு அரசியல் சக்திகள் தமிழர்களின் தேசியத்தை சிதைக்க களமிறக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ச்சியாக சைவர்களின் வழிபாட்டுத் தலங்களை சிதைப்பதும் பக்தி சின்னங்களை உடைத்தடிப்பதும் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே வவுனியா வெடுக்குநாறி மலை சைவ ஆலயம் சிதைக்கப்பட்டுள்ளது. இது சைவ மக்களை பலவந்தமாக வன்முறைக்கு இட்டு செல்லும் திட்டமிட்ட இனவாத அரசியலாகும். இதனை வன்மையாக கண்டிப்போடு இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அரசியல் சக்திகளையும் தமிழ் அரசியல் தலைமைகளும், சமய தலைமைகளும் வெளிப்படுத்தாவிடின் இன்னும் ஒரு பயங்கர அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவை சந்திக்க வேண்டி ஏற்படும்.

ஏற்கனவே மன்னர் பிரதேசத்தில் நீண்ட காலமாக சைவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பிரச்சனை நிலவுகின்றது. இதனை சரியான வகையில் கையாள்வதற்கும் தீர்பதற்கும் சமய தலைமைகள் தவறியுள்ளனர். அரசியல் தலைமைகளும் பாராமுகமாக உள்ளனர். நீறு பூத்த நெருப்பாக காணப்படும் இப் பிரச்சினையை தொடர்ந்து நீடிப்பதற்கு சமய தலைமைகள் இடம் கொடுக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

வடகிழக்கினை சிவ பூமியாக சித்தரிக்கும் வேலை திட்டத்தின் ஓர் அங்கமாக ஆனையிறவில் நடமாடும் சிவன் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அன்று ஆனையிறவை விடுதலைப் புலிகள் உயிர் தியாகத்தோடு கைப்பற்றிய போது இருந்த மகிழ்ச்சி நடமாடும் சிலை வைக்கப்பட்ட போது ஏற்படவில்லை. வடகிழக்கில் எந்தவொரு பாரிய சலசலப்பையும் ஏற்படுத்தவுமில்லை. இதற்கு மத்தியில் திருவள்ளுவர் இந்துவா? இல்லையா? எனும் பட்டிமன்றமும் நீண்டு செல்கின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் யுத்த வெற்றியை மீண்டும் அடையாளப்படுத்தும் முகமாக முப்படைகளின் தளபதி சவேந்திர செல்வா தாது கோபுர திரை நீக்கத்திற்கு சிங்கள நடனத்தோடு அழைத்து வரப்படுகின்றார். இதன் தொடர்ச்சியாகவே கச்சைதீவில் களவாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இது சைவர்களை தனியாகவும், கிறிஸ்தவர்களை தனியாகவும், தமிழர்களின் தேசியம் காக்கும் அரசியல் கதைப்போரை தனியாகவும் பிரித்துவிட்டு அரசியல் குளிர்காயும் தந்திரமும் ஆகும்.

இன்னொரு பக்கம் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் தமது பாதுகாப்புக்காக இந்தியாவை அரவணைப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் மனநிலையை தூண்டுவதோடு இந்தியாவின் தலையிட்டால் 13 ஏற்றுக்கொள்ள வைக்கும் அரசியல் சதியும் இதன் மூலம் அரங்கேறலாம்.

இதேவேளை இன மற்றும் மதவாத காவலர்களாக செயல்படும் நாடளுமன்ற உறுப்பினர்கள் தமது தீ நாக்கை நீட்டி உள்ளனர். சரத்வீரசேகரா”சமய பயங்கரவாதம் வடகிழக்கில் தலை தூக்கி உள்ளது”என்று கூறியுள்ளதோடு விமல் வீரவம்ச

” நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமாகும். தமிழர்களுக்கும் இந்த நாட்டில் ஒரு அங்குல நிலமும் இல்லை”என கூறியுள்ளார்.

இது தமிழர்களுக்கு எதிரான அரசியல் சதித்திட்டமாகும். தமிழர்கள் தமிழ் தமது பாதுகாப்புக்காக இந்தியாவையும் 13 யும் நாட அதற்கு எதிராக தெற்கை தூண்டிவிடும் நரி தந்திரமாகும்.

ஆதலால் வடகிழக்கு மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் அரசியல் தெளிவோடு சமய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு அரசியல் பயணம் மேற்கொள்ளல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தை கூட்டாக பற்றிக் கொள்ளவில்லையெனில் தமிழர்கள் இன்னும் ஒரு அழிவையே சந்திப்பார். இதற்கு அரசியல் மற்றும் சமய தலைவர்கள் இடம் கொடுக்கக் கூடாது என்பதே எமது வேண்டுகோள்.

இலங்கையர்கள் எண்மர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ஆண் ஒருவரும் 5 பெண்களும் 2 சிறார்களுமே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இவர்கள் 8 பேரும் மன்னாரில் இருந்து நேற்றிரவு படகு மூலம் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

தமிழக கடலோர காவற்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு தனுஷ்கோடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, விசாரணைகளையடுத்து மண்டபம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

பசுமை பொருளாதாரக் கொள்கை விரைவில் அறிமுகம் – ஜனாதிபதி

பசுமை பொருளாதாரத்திற்குள் நுழையும் வலயத்தின் முதலாவது நாடாக இலங்கை விளங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பசுமைப் பொருளாதாரக் கொள்கை எதிர்வரும் இரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் இயற்கை சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த முதலீட்டாளர்களுடன் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பூரில் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனத்துக்கு சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமொன்றுக்கு திருகோணமலை – சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சம்பூர் நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்ட இடத்திலேயே, 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தவிர 23.6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சம்பூரில் இருந்து கப்பல்துறை வரையிலான 40 கிலோமீட்டர் தூரம் கொண்ட 220 கிலோவாட் மின்மாற்றுவழியை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 85 மெகாவாட்டுன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரையில் 220 கிலோவாட் இயலளவுடன் கூடிய 76 கிலோமீட்டர் தூரம் கொண்ட மின்மாற்றுவழியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை 2024 முதல் 2025 வரையிலான இரு ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் மீள்புதுப்பிக்கத்தக்க துறையின் ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டு ஏனைய பகுதிகளிலும் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்த்திணிவு சார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் என்பன இந்த இணக்கப்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மக்களின் உரிமைகளை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் நாடுகளில் இலங்கை ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை

மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஒப்புதல்

இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சூரிய சக்தி, காற்றாலை திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

தேர்தலுக்கான நிதியை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு

2023 உள்ளூராட்சி தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக இந்த வாரம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உறுப்பினர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி கூடுவார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

கொழும்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

இந்த சட்டமூலம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு மிகவும் ஒத்ததாக இருப்பதாக சட்டத்தரணி சுனில் வதகல தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பை மீறுகிறது என்பதோடு மக்கள் அனுபவிக்கும் சிவில் உரிமைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இந்த சட்டமூலத்தினால் பாதுகாக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் நாவலர் மண்டபத்தை கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர்

யாழ் நல்லூர் நாவலர் மண்டபத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி புனிதத் தன்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்ப்பாண மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் தொடர்வதற்கு ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது

வெடுக்குநாறி மலையில் மீண்டும் ஆதிசிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் – சபா குகதாஸ்

கச்சதீவில் புத்த விகாரை என்ற விடயம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசங்களை தங்களது ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவதற்கு கையில் எடுத்திருக்கின்ற புத்த பெருமானுடைய சிலையை வைத்துக்கொண்டு விகாரைகளை அமைத்து அதன் மூலமாக ஒரு பாரிய நிகழ்ச்சித் திட்டத்தை நகர்த்திச் செல்கின்றார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இருந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆட்சியாளர்கள் இன நல்லிணக்கம் மத நல்லிணக்கம் என கூறிக்கொண்டு இப்படியான சட்டவிரோதமான விகாரைகளை அமைத்தல், புத்தர் சிலைகளை வைத்தல் என்பது உண்மையிலேயே இந்த நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற வகையில் பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் மத்திய மக்களின் கலாச்சாரங்கள் மதம் உள்ளிட்ட விடயங்களை மதிக்காது அவற்றினுடைய வரலாறுகளை மாற்றி அமைக்கின்ற வகையிலும் அவற்றினுடைய புனித தன்மைகளை செயல் இழக்க செய்வதாகத்தான் இவர்களுடைய செயற்பாடுகள் முன்னெடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கச்சதீவில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் புத்தக விகாரை என்பது உண்மையிலேயே ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த ஆட்சியாளர்கள் மதத்தின் பெயரால் ஏனைய இனங்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துகின்றனர்.

இதற்கான பூரண ஆதரவை இந்த அரசு இயந்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்த அரசு இயந்திரம் என்பது நாட்டில் உள்ள அத்தனை மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு இயந்திரம் பெரும்பான்மை இனத்தின் நலன் சார்ந்து செயற்பாடுகிறது.

இது உண்மையிலேயே ஒரு மனித உரிமை மீறல், அடிப்படை ஜனநாயக உரிமை மீறல். இதை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கச்சதீவு என்பது இந்திய பூகோள அரசியலில் ஒரு முக்கிய இடமாக விளங்குகின்றது. இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்ற விடயம் இலங்கைக்கு இந்தியாக்கும் இடையிலான ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்க கூடியதாகவும் அந்த நாடுகளின் உறவுகளை சீண்டுகின்ற விதமாகவும் அமைகிறது.

அடுத்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் தகர்த்தெறியப்பட்டு அங்கிருந்த சூலங்களும் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

இது சைவ மக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகும். யாரும் உள்ளே செல்ல முடியாது என்று நீதிமன்றம் தடையுத்தரவை போட்டுள்ள நிலையில் இவ்வாறு நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.