உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் 60 மேலதிக வாக்குகளால் நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேநேரம் ஏ.எல்.எம். அதாவுல்லா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கு.திலீபன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டமைப்பு புலிகளின் நோக்கத்திற்கேற்பவே இன்றும் செயற்படுகின்றது – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர் என்பதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் இது குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஒத்துழைப்பில் கொத்மலையில் காலநிலை மாற்றம் தொடர்பில் சர்வதேச பல்கலைக் கழகம்

காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை கொத்மலை பிரதேசத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட வரைபை தயாரித்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த சர்வதேச பல்கலைக்கழத்தை அமைப்பதற்காக 400 ஏக்கர் நிலப்பரப்பு கொத்மலை பிரதேசத்தில்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு விஜயம் செய்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் முன்வந்துள்ளது

மேலும், அமெரிக்க பல்கலைக்கழங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே  அடையாளப்படுத்தப்பட்டுள்ள 400 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக மேலும் 200 ஏக்கர் காணியை பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கபட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழத்தின் வதிவிட வசிதகள் உட்பட அனைத்து வளங்களையும் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

தமிழர் பகுதியிலுள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும் – சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றெழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் உடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ஊடகங்களுக்கு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் பல்வேறு தேவைகளுக்கு அகழ்வுகள் மேற் கொள்ளப்பட்ட போது அதற்கான தடையங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.

ஆனால் அவையாவும் உரிய நீதி இன்றி மறைக்கப்பட்டு காலம் கடத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

கடந்தகாலத்தில் மன்னாரில் இரண்டு பாரிய புதைகுழிகளில் தோண்டத் தோண்ட எலுப்புக் கூடுகள் வந்தன ஒன்று திருக்கேதீஸ்வர வீதியில்  நீர்க்குழாய் அமைப்பதற்கான அகழ்வில்  அப்பகுதிக்கு அருகில்  யுத்தகாலத்தில் இராணுவம் இருந்து  முகாமிக்கு அருகில்  உரிய ஆய்வுகள் இல்லாமல் மறைக்கப்பட்டது இண்டாவது சதொச கட்டட அமைப்பதற்கான அகழ்வில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன  அவற்றை ஆங்கிலேயர் காலத்தவை என கதை முடித்தனர்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கான நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கள அரசாங்கததால் வழங்கப்படமாட்டாது.

எனவே தமிழர் தாயகத்தில் குறிப்பாக சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பௌத்த சிங்கள அரசாங்கத்தால் நீதி கிடைக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை அவ்வாறு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் மூன்றாம் தரப்பு மந்தியஸ்தம் அல்லது மேற்பார்வை மூலமே சாத்தியப்படும் இதனால் தாயக புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக மூன்றாம் தரப்பு மேற்பார்வையை உள்ளீர்க்க வலுவான இராஐதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து கையாள வேண்டும். அதுவே புதைகுழி விவகாரம் மட்டுமல்ல அரசியல் தீர்வுக்கும் வழியைத் திறக்கும் – என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டியில் விகாரைக்கும் நடக்கும் – சிவசேனை அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்ட விரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப் பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மறவன்புலவு சச்சிதானந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாக கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே என்றும் மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் எடுத்துரைத்தார்.

இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளதாகவும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கை வைக்கும்போது காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக் கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கண்ணீர் வடிப்பதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம் என்றும் பௌத்த சமயத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மைத்திரிபால சிறிசேன, உண்மையில் சைவர் என்றும் உலகதிற்காக பௌத்தராக வாழ்வதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறினார்.

பிரான்சில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி – வன்முறைக் காடாக மாறிய நகரங்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற , நஹெல் என்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் காவல்துறையினர் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் காரில் இருந்த ஆப்பிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார்.

இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.அத்தோடு வன்முறையும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மேக்ரான், “இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து, உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடார்பான யோசனை நாடாளுமன்ற நிதிக்குழுவில் சமர்பிக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு வார இறுதி விடுமுறை நாளில் நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிராக வாக்களிக்க உள்ளதென பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களால் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும்  தூதுவர்களும்  ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான  தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1 . கலாநிதி . ரொஜர் கோபால் – Dr. Roger Gopaul . திரினிடாட் டொபாகோ  குடியரசின் உயர் ஸ்தானிகர் – (புது டில்லி)

2 . பேராசிரியர் (செல்வி) ஜாய்ஸ் கே. கிகாபண்டா –  Prof. (Ms.) Joyce K. Kikafunda . உகண்டா குடியசின் உயர்ஸ்தானிகர்  – (புது டில்லி)

3 . திருமதி லாலாட்டியானா அக்கோச் – Mrs. Lalatiana Accouche. சீஷெல்ஸ் குடியரசு உயர்ஸ்தானிகர்  – (புது டில்லி)

4 . திரு. எலிஜியோ எல்பர்டோ சலாஸ் டி லியோன் –  Mr. Eligio Alberto Salas De Leon

     பனாமா குடியரசின் தூதுவர் –  (ஹா நோய் – Ha Noi)

5. திரு. டிடியர் வாண்டர்ஹாசெல்ட்  –  Mr. Didier Vanderhasselt

    பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவர்  (புது டில்லி)

6 . திரு. டிமிட்ரியோஸ் ஐயோனோவ் – Mr. Dimitrios Ioannou

    ஹெலனிக் குடியரசின் தூதுவர் –  (புது டில்லி)

7 . கலாநிதி பஸ்ஸாம் அல்-காதிப் – Dr. Bassam Al-Khatib

     சிரிய அரபுக் குடியரசு  தூதுவர் – (புது டில்லி) 

8 . திரு. ஜேவியர் மானுவல் பாலினிச் வெலார்டே – Mr. Javier Manuel Paulinich Velarde

    பெரு குடியரசு தூதுவர்  – (புது டில்லி)

9 . திருமதி லீ மியோன் – Ms. Lee Miyon

    கொரியா குடியரசு தூதுவர் –  கொழும்பு

10 . திரு. இஸ்டிவான் ஷப்போ – Mr. István Szabó

     ஹங்கேரி தூதுவர்  – (புது டில்லி)

இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.

Posted in Uncategorized

எஞ்சியிருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்கசிகிச்சை நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறினார்

இலங்கையின் குழந்தைகளிற்கான மிக முக்கியமான விசேடவைத்தியர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் ஒரேயொரு குழந்தைகளிற்கான கதிரியக்கசிகிச்சை நிபுணரே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

விசேடவைத்தியர் சங்கத்தின் வைத்தியர் அசோக் குணரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

2024 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் 4000 விசேடவைத்திய நிபுணர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தற்போது 2000 பேரே உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்களிற்கான ஓய்வூதிய வயது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு காரணமாக எஞ்சியுள்ள 50 வீதமான வைத்தியர்களில் 250 பேரைஇழக்கவேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாட்டில் 1750 விசேடவைத்தியர்களே காணப்படும் நிலைமை உருவாகும் என தெரிவித்துள்ள அவர் அவசரமருத்துவ பிரிவை சேர்ந்த 30 வைத்தியர்களிற்கு விசேட வைத்தியர்கள் பயிற்சியை வழங்கினோம் ஆனால் அவர்களில் 20 பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024-25 இல் நாட்டிற்கு 289 மயக்கமருந்து நிபுணர்கள் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இந்த வருடம் 155 பேரேஎஞ்சியிருப்பார்கள் 30 பேர் வெளிநாடுகளிற்கு சென்றுவிட்டனர் 60 வயதானவர்கள் ஓய்வு பெற்றால் 20 பேர் மாத்திரமே எஞ்சுவார்கள் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் 100 விசேட வைத்தியர்களும் மயக்கமருந்து நிபுணர்களும் எஞ்சியிருப்பார்கள் என சொல்வது துரதிஸ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரேயொரு குழந்தைகள் தொடர்பான கதிரியக்க நிபுணராக இருந்தார். அவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.

13ஐ முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் – கடற்தொழில் அமைச்சர்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் உள்ளன. 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக அதனை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள போதிலும் , தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரா பிரச்சினைகளாவே காணப்பட வேண்டும் என்று எண்ணும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது , ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ,

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் விஜயத்தின் போது அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அதிகார பரவலாக்கம் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில் : ஒரு கால கட்டத்தில் இலங்கையில் பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த பிரச்சிகளுக்கு தீர்வு கோரி ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் மக்கள் , அதன் ஊடாக தீர்வினைப் பெற முடியாது என ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதற்கமையவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானது.

எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக அன்றிருந்த பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒரு முழுமையான யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் காணப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும். எனினும் இதற்காக ஜனாதிபதி மாத்திரம் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் போதாது. தமிழ் மக்கள் தரப்பில் அவர்களின் பிரதிநிதிகள் உண்மையுடன் முன்வர வேண்டும்.

கேள்வி : 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் , காணி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. எனினும் மத்திய அரசாங்கம் அவற்றை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தோன்றவில்லையே?

பதில் : இருப்பதிலிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்ல முடியும். தேசிய நல்லிணக்கத்துக்கு ஊடாகவும் , பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முரணான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கேள்வி : இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வடக்கு மக்கள் சாதகமான கோணத்தில் பார்க்கின்றனரா? இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் முரண்பாடான கருத்துக்களையல்லவா முன்வைத்துக் கொண்டிருக்கின்றன?

பதில் : எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். அந்த வகையில் சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகின்றேன். இதற்கான சிறந்த அறிகுறிகளாக காணிப்பிரச்சினை , அரசியல் கைதிகள் எனக் கூறப்படுகின்றவர்களின் விடுதலை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாகவே வைத்திருக்க வேண்டும் என எண்ணும் அரசியல்வாதிகளே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி : வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனினும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் எந்த அடிப்படையில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : இந்த பிரச்சினைக்கு 1987 இல் தீர்வு வழங்கப்பட்டது. எனினும் அன்றிருந்தவர்கள் அதனை நிராகரித்ததோடு , மறுபுறம் அதனை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டனர். நாடு; எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் அதே வேளை , இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.