அரசியல்வாதிகளுக்கே முதலில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் -சரத் பொன்சேகா

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்.

பாடசாலை மாணவர்கள் பாதணிகளுக்கு பதிலாக பாடசாலைக்கு சாதாரண செருப்பு அணிந்து வர கல்வி அமைச்சு அனுமதி வழங்குமாறு மக்கள் கோரும் அவல நிலை தோற்றம் பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஊழல் மோசடி அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு அச்சமடைந்துள்ளார்கள்,  போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறும் எதிர்பார்த்தேன்,இருப்பினும் ஒருசில காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாரழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் முன்பு 2 வருட காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இறுதி ஆண்டில் தொழிற்துறை தொடர்பான பயிற்சி வழங்கப்படும் ஆனால் தற்போது 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கும் தரப்பினர் ஹெரோய்ன் போதைப்பொருள்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் தற்போது ஐஸ்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டியுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 350 பேரை பராமரிக்க 90 இராணுவத்தினர் மாத்திரம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே கந்நகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான் இம்ரானுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இவ்விடயத்தின் தேசிய புலனாய்வு பிரிவின் செயற்திறனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இருவேளையாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

பாடசாலை பாதனிக்கு பதிலாக சாதாரண செருப்பை அணிந்துக் கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர கல்வி அமைச்சு அனுமதி தர வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கும் நிலைக்கு நாடு அவலத்தை எதிர்கொண்டுள்ளது.

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு தான் புனர்வாழ்வு வழங்க வேண்டும்,எனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்தார்கள்.

போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும்.போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றார்.

போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் புனர்வாழ்வு சட்டமூலம் – எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில்  உள்வாங்கப்பட்டுள்ள தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள். முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுபடும் தரப்பினர், ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என்பதையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை மீளப்பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என எதிர்க்கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நம்புகிறேன்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சபைக்கு மீண்டும் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறேன்.

இந்த சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகார்கள்,முறையற்ற மற்றும் வன்முறைகளில் ஈடுப்படும் நபர் என்ற சொற்பிரயோகங்கள் தொடர்பில் எமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

சுதந்திர மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்களை அடக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆகவே இந்த சட்டமூலம் மக்களாணை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது.

போதைப்பொருளை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்.ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள் உரிமைகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டாம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்திற்கு அமைய சட்டமூலத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.

ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இளைஞர்களின் போராட்ட உரிமைகளை முடக்க வேண்டாம்.ஆகவே இந்த சட்டமூலத்தில் உள்ள குறைப்பாடுகளினால் தான் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதற்கமைய இன்றைய தினம் சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவில்லை.

ஆகவே குறைபாடுகள் இல்லாமல் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற எண்ணக்கருவிற்கு அமைய சட்டமூலத்தை சமர்ப்பித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று,நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல,சபைக்கு சமர்ப்பித்துள்ள சட்டமூலத்தை மீளப் பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலத்தின் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

10 வருட காலத்திற்கு முன்னர் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை அப்படையாக கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.இந்த சட்டமூலத்தில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்படாத வகையில் முன்னெடுக்கப்படுகிறது. புனர்வாழ்வளித்தல் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்பட்ட வகையில் அமைய வேண்டும் என்பதற்காக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள்,முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுப்படும் தரப்பினர்,ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு  அறிவித்துள்ளோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம் என்றார்.

மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட எம்மை மீறி செயற்பட முடியாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட எம்மை மீறி செயற்பட முடியாது. இதற்காக சட்டமா அதிபரையோ , நீதிமன்றதையோ நாட வேண்டிய அவசியமும் இல்லை.

சட்டத்தின் பிரகாரம் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமக்கே காணப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (டிச.05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளரின் மின் கட்டண திருத்த யோசனையே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிஷ்டவசமாக அமைச்சரவை அது தொடர்பான தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு காலம் தாழ்த்தியுள்ளது. அமைச்சரவை அந்த யோசனையை அங்கீகரிக்காது. மாறாக அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்தாலும் , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை ஏற்காது.

கடந்த மாதம் மின் உற்பத்திக்காக நிலக்கரிக்கு பதிலாக எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையினால் 13 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.

எனவே உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும். தொழிற்துறைகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் மின்கட்டணத்தை அதிகரிப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறுவதற்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆணைக்குழுவிற்கு எதனை செய்ய முடியும் , எதனை செய்ய முடியாது என்பது சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எமக்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவையும் கிடையாது. இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் எமக்கிருக்கிறது. அதனை முகாமைத்துவம் செய்யும் இயலுமையும் எமக்கு காணப்படுகிறது.

முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கமைய 180, 300 அலகுகளை விட அதிக மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மாறாக நிலையான கட்டணங்களே அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாத மக்களிடமிருந்து மேலும் மேலும் சுரண்டுவதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.

எம்மை மீறி அமைச்சரவையினாலும் இவ்விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான சட்டத்தினை தயாரித்தார் என்பதற்காக அவரால் அதற்கு உரிமை கோர முடியாது.

இது மக்களின் சட்டமாகும். ஆணைக்குழு உறுப்பினர்களான எம்மால் அரசியல் செய்ய முடியாது. அதே போன்று அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருக்க முடியாது.

மின் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் அதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே செய்ய முடியும். எம்மை மீறி கட்டண திருத்தங்களை மேற்கொள்வதாயின் ஆணைக்குழு தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முன்னாள் பரிசுத்த பாப்பரசரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன் கிழமை (ஜன 04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை (05) கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வியாழக்கிழமை (ஜன.05) விஜயம் செய்தார்.

அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுக்குறிப்பேட்டில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் நினைவுப் புகைப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தினார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையையும் சந்தித்து தனது இரங்கலையும் தெரிவித்தார்.

நீதிமன்றில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தமையால் வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளருக்கு சிறைத் தண்டனை

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி, நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த குற்றத்திற்காக சில மணித்தியாலங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக பொலன்னறுவை நீதவான் நிமால் அதிகாரியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்குள் வைத்ததாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது பிரதேச சபையின் மின்சார ஊழியர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிமால் அதிகாரி நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ருஹுனுகெத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் எடுத்தமை தொடர்பில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நிமால் அதிகாரி விசாரணைக்கு ஆஜராகியிருந்ததுடன், அவமரியாதையாக நடந்துகொண்டதால், மூன்று மணித்தியால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

களுத்துறையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் தேர்தல் செயலகத்திற்குச் சென்றுள்ளதோடு, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பணிகளையும் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளில் கலந்து கொள்வதில்லை – ரணில்

மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.

இரண்டு வருடங்களுக்குள் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதே தவிர, வாக்களிப்பதற்கு அல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரமே ஏற்பேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதனைத் தவிர உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு செயற்பாடுகளிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதானால் வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதமானோர் புது முகங்களாக இருப்பது பொறுத்தமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படும் நான்காயிரம் உறுப்பினர்களுக்கு மாத்திரமே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எஞ்சியவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக பணியாற்றுவார்களா என்பதை தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வுக்காக அரசியல் கட்சிகளை ஒன்றிணையக் கோரி நாவற்குழியில் போராட்டம்

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கப்பல் சேவை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் – யாழ் வணிகர் கழக தலைவர்

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.

இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நீண்டகாலமாக வணிகர் கழகம் இவ் காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்திய இலங்கை அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனம் எதிர்வரும் சனிக்கிழமை 07ஆம் திகதி வணிகர் கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் யாழ்ப்பாண வர்தகர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடாக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

வட மாகாணத்தில் இருந்து தென்னை பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் இதேவேளை இந்தியாவினுடைய சந்தை நிலவரத்தை சரியாக அறிய வேண்டும் இந்தியா வர்த்தக சங்கங்கள் கூடி கலந்துரையாடி அது சம்பந்தமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியும்.

நீண்ட காலம் எதிர்பார்த்த இந்த நிகழ்வு தற்போதைய காலத்தில் நடைபெற இருக்கின்றது அதை நாங்க இந்திய இலங்கை சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் முக்கியமாக வர்த்தகர்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதிலிருந்து முன்னேற வேண்டும் என்பதே வேண்டுகோள் ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தற்போதய அரசாங்கம் ஒரு சில பொருட்களுக்கான தடைகளை விதித்துள்ளது தடை செய்யாத பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்யலாம் அத்துடன் தடை செய்யாத பொருட்களுக்கான இறக்குமதி கட்டளைக்குரிய டொலர்களை அவர்கள் வங்கி மூலம் விடுவிக்கிறார்கள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களுக்கான தடைகள் நீக்கப்பட்டும் வருகின்றது.

ஏற்றுமதி இறக்குமதிக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்

தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடாது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படும்’ என கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.