தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நல்லூரில் சமகால நிலைமை தொடர்பில் விசேட சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (டிச. 24) மாலை ஒன்றுகூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் 2 மணிநேரம் வரை கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல், ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

Posted in Uncategorized

இக்கட்டான பொருளாதார நிலையிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை பகிருங்கள் – யாழ் ஆயர்

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை சிறப்பாக உணர்த்தும் காலம் கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் காலமாகும் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

2022ஆம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை இன மத நிற மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதும் கொண்டாடும்  இவ்வேளை கிறிஸ்து பிறப்பின்  பெருவிழா வாழ்த்துக்களை  முதலில் உங்கள் அனைவருக்கும்  தெரிவிக்கிறோம்.

வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார் (யோவான்1:1-14) என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகள்  கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையைத் தெளிவாகத் வெளிப்படுத்துகிறது.

கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையையும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்வையும் நம்பிக்கையையும்  அர்த்தத்தையும்  எமது எந்தத் துன்பமான காலநிலையம்   இக்கட்டான அனுபவமும் என்றும் குறைத்து விடவோ எடுத்து விடவோ  முடியாது.

நீங்கள் உங்கள் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிவும் அமைக்கும் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடிலும் அதனோடு இணைந்த கிறிஸ்மஸ் மரமும் மின் விளக்குச் சோடினைகளும்  நடத்தும் ஒளி விழாக்களும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையான  நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும்.

இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தை தாண்டிச் சென்று அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்படும் இறை இருப்பையும் இறை அன்பின் மனமகிழ்வையும் உங்கள் மனதுகளில் முழுவதுமாக உணர்ந்து இயன்றவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை நாம் சிறப்பாக உணர்ந்து அந்த உண்மையை பகிர்ந்து கொள்ள சிறப்பாக அழைப்பு விடுக்கும் காலம் கிறிஸ்து பிறப்பு விழா காலமாகும்.

இன்றைய இக்கட்டான பொருளாதார நிலையிலும் அன்றாடப் பொருட்களின் தட்டுப்பாடுக்கு மத்தியிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையிலும்  கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் இருக்கும் இந்த இக்கட்டான வேளையில் இந்த அன்பின் பகிர்வு கட்டாயமாகப் பணமாகப் பொருளாக உணவாக ஆடையாக இருக்க வேண்டுமென்பதில்லை.

தேவையில் இருப்போர்க்கு உடலுதவி செய்தல் – துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் தெரிவித்தல் – வைத்தியசாலையில் துன்பப்படுவோரைச் தரிசித்தல்  – சிறைச்சாலைகளில் வாடுவோரைச் சந்தித்தல் போன்ற செயல்கள் மூலம் கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை வெளிப்படுத்துங்கள்.

இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும்  பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு  அமைதி உண்டாகுக என்பதாகும் (லூக்காஸ் 2:13-14)

உலகில் அவருக்கு உகந்தோருக்கு  அமைதி உண்டாகுக எனத் தெரிவித்து இறையாசீர் மிக்க கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்றுள்ளது

வர்க்க வேறுபாடற்ற ஒரேவிதமான நத்தாரின் மகிழ்ச்சியை வழங்குவதே எமது இலக்கு – ஜனாதிபதி

இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகையைக் குறிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்.

பெத்லஹேமில் ஒரு தொழுவத்தில் பிறந்த குழந்தையே இயேசு கிறிஸ்து ஆவார். இவர் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதில் பிறப்பிலிருந்தே முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க அவர் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.

இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவமாகும்.

“செலவுகளைக் குறைப்போம், எளிமையாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவோம், துன்பப்படுபவர்களுக்கு நம்மிடம் எஞ்சியிருப்பதைக் கொடுப்போம்” என்று பாப்பரசர் போப் பிரான்சிஸ், மனிதநேயத்தின் மதிப்பைக் கற்பிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகை வீட்டுக்கும் ஏழைக் குடிசைக்கும் ஒரேவிதமான நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை வழங்குவதே எங்கள் அரசாங்கத்தின் இலக்காகும்.

எனவே அனைவருக்கும் அன்பைப் பரப்பும் மற்றும் மனிதநேயத்தைப் பகிர்ந்து கொள்ளும் குடிமக்களாக இந்த பண்டிகைக் காலத்தில் அனைவரும் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம் – எதிர்க் கட்சித் தலைவர்

அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம்.

இந்த வருட நத்தார் பண்டிகையை  இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகில் அமைதியின் செய்தியை எடுத்துரைத்து, மனிதர்கள் அனைவரையும் தீமையிலிருந்து காப்பாற்றுவதற்காக உலகிற்கு வந்த சமாதானத் தூதரின் பிறப்பு, அதாவது குழந்தை இயேசுவின் பிறப்பு உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது.

அன்பு, சமாதானம், சகோதரத்துவம் என்ற கருப்பொருளைக் கொண்ட, உன்னதமான நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்லாது, இனம், மதம், குலம், நிறம், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலுமுள்ள எண்ணற்ற மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி, தன்னுடைய குமாரனை உலகிற்கு அனுப்பியது, தேவனுடைய ராஜ்யத்தின் மதிப்புகள் மீண்டும் பூமியில் வாழ வேண்டும் என்று இறைவன் எதிர்பார்த்ததனாலாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை டிசம்பர் மாதத்தில் தேவாலயத்தில் மணிகள் ஒலிக்கச் செய்து, இயேசுவின் பிறப்பை மெழுகுவர்த்தி வழிபாடுகளுடன் கொண்டாடுகிறார்கள்.

உலகில் அனைத்து இறைதூதர்களும் ஒரு நல்ல வழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களது தர்மத்தின் சாராம்சம் சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் கருணையாக இருந்தது.

இன்று நாம் மிகுந்த பக்தியுடன் நினைவுகூரும் இயேசுநாதர், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த கருணையும் அன்பையும் காட்டிய அற்புதமானவர்.

பகிர்வு பற்றிய அற்புதமான பாடத்தை உலகுக்குக் கற்றுத் தந்த இறைமகன் இயேசு, மனித சுதந்திரத்தைப் பற்றி உலகிற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்தார். ஒருவரையொருவர் மதித்தல், ஒருவரையொருவர் அன்பாக நடத்துதல், அனைத்து மனித இனத்தையும் சகோதரத்துவத்துடன் நடத்துதல் ஆகிய உன்னத நற்பண்புகளை நடைமுறையில் உலகிற்கு போதித்தார்.

இயேசுநாதரின் கோட்பாடு அன்பு. எனவே, நத்தார் தினத்தை அமைதியின் பருவம் என்றும் கூறலாம். அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான

கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே, நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம். ஆகவே, இந்த வருட நத்தார் பண்டிகையை நாம் இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம்

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிட கோரிக்கை

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுமாறு பைடனுக்கான தமிழர்கள் எனும் அமெரிக்காவினை சேர்ந்த தமிழ் அமைப்பினால் அமெரிக்கச் செயலர் பிளிகனுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை பயங்கரவாத அமைப்புகளாகவும், அவற்றின் தலைவர்களை பயங்கரவாதிகளாகவும் வகைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க மற்றும் வனத்துறையின் தலைவரும் பாதுகாப்பு அதிகாரியுமான கலாநிதி கே.எம்.ஏ.பண்டார ஆகியோரை பயங்கரவாதிகளாக அறிவிக்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் அவசரமாக இராஜாங்கத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு அமைச்சரவை அதிகாரிகளும் தமிழர்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டதுடன் இலங்கை அரசின் நில அபகரிப்புக் கொள்கையையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இவையும் மற்றைய இலங்கை அரசாங்கத் திணைக்களங்களும் 100% சிங்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டிருக்கின்றன, தொல்பொருள் அபிவிருத்தி மற்றும் வனப் பாதுகாப்பு என்ற பொய்யான போலிப் பாவனையின் கீழ் தமிழர் நிலத்தை அபகரிக்கும் கூட்டு இலக்குடன். தமிழர்களிடமிருந்தும் தமிழ் விவசாயிகளிடமிருந்தும் காணிகள் பறிக்கப்பட்டவுடன், சிங்களக் குடியேற்றங்கள் அவர்களின் இடத்தில் வைக்கப்பட்டு, பல நூற்றாண்டுகள் பழமையான, புனிதமான இந்துக் கோயில்கள் பௌத்தர்களால் மாற்றப்படுகின்றன.

சட்டவிரோதமான நில அபகரிப்பு என்பதுடன், இது இனச் சுத்திகரிப்புக்கான தொடர்ச்சியான முயற்சி மற்றும் சர்வதேச மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும்.

இந்நடவடிக்கையானது அப்பகுதியின் தமிழர் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் அழித்து தமிழர் தாயகத்தின் ‘சிங்கள பௌத்தத்தை’ மேலும் முன்னெடுப்பதற்கான முயற்சியாகும்.

பயன்படுத்தப்படும் முறை மீண்டும் மீண்டும் வருகிறது: ஆராய்ச்சி என்ற பெயரில், தொல்லியல் துறை சில தோண்டுகிறது, குறிப்பாக இந்து கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சுற்றி. பழங்கால தொல்பொருட்கள் வசதியாகக் காணப்படுகின்றன, அவை தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்டிருக்கலாம், மேலும் அவை முக்கியமான பௌத்தப் பொருள்களாகக் கூறப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இந்து கோவில்களை இடித்து, அவற்றின் எச்சங்களில் புத்த கோவில்களை எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் விளைநிலங்கள் தென்பகுதியில் இருந்து புதிதாக வந்துள்ள சிங்களக் கிராம மக்களிடம் கையளிக்கப்படுகிறது.

வனத் துறைக்கும் இதே மாதிரிதான்: தமிழ் விவசாயிகள் தங்கள் பூர்வீக நிலங்களில் விவசாயம் செய்வதைத் தடுக்கும் உத்தரவுகளுடன், தவறான பாதுகாப்புக் கோரிக்கைகளின் கீழ், துறைக்கு நிலம் ஒதுக்கப்படும். சில மாதங்களுக்குப் பிறகு, சிங்களக் குடியேற்றங்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் கொண்டு வரப்படுகின்றனர், அதே நேரத்தில் தமிழர்கள் அவர்களது வீடுகளிலிருந்தும் வாழ்வாதாரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

ஒரு முழு மக்களையும் அழிக்க இலங்கை அரசு திட்டமிட்டு முயற்சிப்பதால், நாளுக்கு நாள் தமிழர்கள் தங்கள் சொத்துக்களையும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேலும் மேலும் இழக்கின்றனர்.

1980 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு நில அபகரிப்பு ஒரு முக்கிய காரணம்.

இது மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால்
இந்த குண்டர், குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் எங்கள் உதவிக்கு வராத வரையில் இதில் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.

தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை அங்கீகரிப்பது முதல் படி: பயங்கரவாதத் தலைவர்களால் ஆளப்படும் பயங்கரவாத அமைப்புகள். முகமூடி கிழிக்கப்படும் போது, ​​அவர்கள் ஒரு மிருகத்தனமான, இனப்படுகொலை ஆட்சியின் முன்கூட்டியே காவலர்களே தவிர வேறில்லை என்பது தெளிவாகிறது.

நாம் வாழ்வதற்கும், அமைதியைக் காப்பதற்கும், தமிழர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட இறையாண்மையுள்ள நாடு தேவை.

வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்ற முடியும். 1999 இல் கிழக்கு திமோரில் செய்தது போல், வாக்கெடுப்பை ஒழுங்கமைக்கவும் மேற்பார்வை செய்யவும் அமெரிக்கா உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் தலையீடு இந்த பயங்கரமான துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இக்கட்டான நேரத்தில் எங்களின் அவலநிலையை கருத்தில் கொண்டதற்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது

பட்டினியால் வாடிய சிறுவன் மூதூரில் பரிதாபமாக மரணம்

பட்டினியால் வாடிய சிறுவன் மூதூரில் பரிதாபமாக மரணம் – மூதூரில் பரிதாபமாக மரணம் மனதை நெகிழவைக்கும் துயரம்

மிகக் கொடிய வறுமையால் பட்டினியால் வாடிய சிறுவன் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தார். இந்தத் தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.

மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல்களை மூதூர் பாரதிபுரம் – கிளிவெட்டியில் உள்ள மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில், மூதூர் – 64 ஆம் கட்டை, சகாயபுரம் கிராமத்தில் மிகவும் வறுமை நிலையில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவர்களில் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வந்த சிறுவன் ராமராஜன் குடும்பமும் ஒன்றாகும். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆலயத்துக்கு சென்று தன்னால் முடிந்த பணிகளை செய்வான். அறநெறி பாடசாலைக்கு ஆர்வத்துடன் வருவான். எனினும், வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லை. இந்த நிலையில் நாங்கள் முடிந்தவரை அடிக்கடி சிறு உதவிகளை சிறுவன் குடும்பத்துக்கு செய்து வருகின்றோம். கடந்த வாரம் உண்ண உணவின்றி பலவீனமாக இருப்பதாகவும் அவர்களின் தற்காலிக வீட்டில் உள்ளேயும் வெளியேயும் மழை வெள்ள நீர் தேங்கி நிற்பதாகவும் எமது பணியாளர்களால் படத்துடன் உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சமூக நலன் விரும்பி ஒருவரிடம் என்பவரிடம் இருந்து நிதியை பெற்று ஒரு மாதகாலத்துக்குப் போதுமான 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருள்களை பெற்று கொடுத்தோம். நாங்கள் சிறுவனின் நிலை அறிந்து அவரின் வீட்டுக்கு சென்றபோது அவர் எழுத்திருக்க முடியாத நிலையில் சோர்ந்து காணபட்டார். அவர்களின் வீட்டுக்குள் மழை நீர் வழிந்தோடியது. வீட்டுக்குள்ளே போக முடியாதபடி சுற்றிவர நீர் தேங்கி நிற்பதை யும் காணமுடிந்தது.

இந்த நிலைகண்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினேன். இனிமேலாவது இருக்கின்ற சிறுவர்களை பாதுகாக்க அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். சகாயபுரம் கிராமம் போன்று பல கிராமங்களில் வறுமையின் கோரப் பிடி யில் சிக்கி பெருமளவு மக்கள் கவனிப்பாரற்று உள்ளனர். இவ்வாறனவர்களுக்கு நாம் உதவி வருகிறோம். அதிகாரிகளும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு என்பது நகைப்புக்குரியது – கம்மன்பில

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே ஜனாதிபதி முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (டிச. 24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எதிர்வரும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் மாறுபட்ட பல கருத்துக்களை தமிழ் தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடம் முதலில் ஒற்றுமை கிடையாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சாத்தியமற்றது.

பொருளாதார நெருக்கடியை பகடைக்காயாக கொண்டு நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்துவதாயின், 30 வருடகால யுத்தத்தை வெற்றிகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாக உள்ளது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் தான் ஜனாதிபதி ஈடுபடுகிறார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மாகாண சபை தேர்தல் மூன்று காலத்துக்கும் அதிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாக பதவி வகிக்கும்போது தான் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது. மாகாண சபை தேர்தலை நடத்தினால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.

மின் கட்டண அதிகரிப்பு – மக்களுக்கு கடவுளே துணை – டலஸ் டலஸ் அழகபெரும

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பொருளாதார பாதிப்பின் சுமையை நாட்டு மக்கள் மீது முழுமையாக சுமத்த முடியாது.

அரசாங்கம் பல்வேறு செலவுகளை குறைத்துக்கொண்டால் மக்கள் மீதான வரி விதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களை விஸ்தரித்துக்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளது.

38 இராஜாங்க அமைச்சுக்கள் அவசியமற்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை ஒரு இராஜாங்க அமைச்சுக்களை கூட நியமிக்காமல் வரையறுக்கப்பட்ட அமைச்சுக்களுடன் அரச நிர்வாகத்தை முன்னெடுத்தார். இதனை அரசாங்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

மின்கட்டண அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் மொத்த மின்பாவனையாளர்களில் 30 அலகுக்கும் குறைவான மின் அலகினை பாவிக்கும் 14 இலட்சம் மின்பாவனையாளர்கள் உள்ளார்கள்.

இவர்கள் பொருளாதார ரீதியில் கீழ்நிலை மட்டத்தில் உள்ளவர்கள். இவ்வாறான நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் தான் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும். மக்களிடம் வளம் இருந்தால் தான் மின்கட்டணத்தை செலுத்துவார்கள்.

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் எவ்வாறு வாழ்வது என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார்.

சில துறைகளுக்கான பொருட்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

நாட்டில் காணப்பட்ட கடும் டொலர் நெருக்கடி காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை 670 பொருட்களுக்கான இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை எமது நாட்டில் தயாரிக்கப்படக்கூடியவை ஆகும்.

வெசாக் கூடுகள், பட்டங்கள் மற்றும் யோகட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

எனவே, அடுத்த வருடத்திலிருந்து இவ்வாறான பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்வதா அல்லது நாமே தயாரிப்பதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களில் 1465 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. நாட்டில் நிலவிய கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அண்மையில் 795 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டது. 470 பொருட்களுக்கான இறக்குமதி தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள பிக்குகள் – கவலை தெரிவித்த பந்துல

பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.

நாட்டுக்குள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மஹரக பகுதியில் சனிக்கிழமை (டிச 24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை சடுதியாக தீவிரமடைந்துள்ளது.இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் முழுமையாக கேள்விக்குள்ளாகும்.

ஒரு நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் போது அந்த நாட்டில் சட்டம் மற்றும் அடிப்படை ஒழுக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் தலைதூக்கும்.இலங்கையிலும் தற்போது அவ்வாறான தன்மை காணப்படுகிறது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உணர்வுபூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திட்டமிட்ட வகையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை  வியாபித்துள்ளது.போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை இல்லாதொழிக்க 09 மாகாணங்களிலும் விசேட போதைப்பொருள் செயலணியை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார்.