பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களும் கிடையாது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் கடன் உதவி எதிர்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காமைக்கான காரணம் என்னவென சிலர் எம்மிடம் வினவுகின்றனர். நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்களினதும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் கொள்கையும், முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்துமாயின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தயாராகவே இருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மக்களின் வாழ்க்கைக்கு பேரிடியாக அமைந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவளிப்பதால் நாம் நிராகரிக்கப்படுவோம்.

மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு எம்மிடம் கேட்கின்றனர். ஆனால் அனைத்து மக்களையும் மீட்டெடுக்கும் பொறுப்பு எமக்குள்ளது.

எதிர்க்கட்சி சமூக பொருளாதார கொள்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. சமூக பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றினால் நாம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார். இந்த அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட இலங்கைக்கு நிதியளிக்கும் பல்வேறு குழுக்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் பற்றி பேசியது, குறித்த திட்டங்கள் எங்கே? மக்களை தூக்கிலிட்ட பின்னர் மக்களுக்கு உணவளிக்கும் முறைமையே காணப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் கடன் கிடைக்கவிருக்கிறது. இலங்கை நிதிச் சந்தையில் குறித்த நிதியை எவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தப் போகின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கடன் பெறும்போது அவர்களின் ஒப்பந்தந்தங்களுக்கு அடிபணிய நேரிடும். சில சரத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாததனாலேயே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

ஒப்பந்தம் வெற்றி என்றாலும் நிபந்தனைகளில் யாருக்கு பாதிப்பு என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும், உழைக்கும் மக்களும் பாரியளவில் பாதிப்புகளை சந்திக்கவுள்ளனர்.கடன்பெற்று கொள்ளும்போது வறுமையிலுள்ள மக்களையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இந்த கடனை பெற்ற பின்னர் முதலாவது மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் எழும். அதிகளவிலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, பலரும் தொழிலை இழந்துள்ளனர். மின்கட்டணம் அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மக்களின் வருவாய் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

கடந்த வருடம் பொ ருளாதார திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வருடமும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு நாட்டு மக்களை தூக்கிட்டு கழுத்தை நெரித்து கொள்வதன் ஊடாக தானா பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்? சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின்னர் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்றார்

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும், ஊடகவியலாளரும், புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

சைப்ரஸ், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றிருந்தார்.

பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தியோகபூர்வ தொடர்பாளராக இருந்ததோடு,பிரதமரின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவராவார்.

அக்காலப்பகுதியில் அவர் இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும்,இந்தியா புதுடில்லி காற்றாலைச் சக்தி கற்கைகள் மையத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலைவரிசைகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இளைஞர் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது இலக்காகும். அதற்கமைய வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். அந்த கூட்டணி எந்த வகையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது. காரணம், இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்திலேயே தேர்தலில் போட்டியிடுகின்றன.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யாகும்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியனை வழங்கினால் செலவுகளை கட்டுப்படுத்தி, அந்த தொகைக்குள் தம்மால் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

தற்போது சமூக வலைத்தள ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை முடக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. அது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

நாடு வங்குரோத்து அடைந்தமையால் ஜே.வி.பி.க்கும் பங்குண்டு. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களில் ஜே.வி.பி. பங்கேற்றிருக்கிறது.

அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஜே.வி.பி.யே அனுமதி பத்திரத்தை வழங்கியது. எனவே தற்போது தம்மை தூய்மையானவர்களாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கும் ஜே.வி.பி.யை பற்றி வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவர்.

நாம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடுவோம். வடக்கிலும் கூட்டணியாகவே களமிறங்குவோம். இது தொடர்பில் தற்போது எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

அரசியல்வாதிகளுக்கே முதலில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் -சரத் பொன்சேகா

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்.

பாடசாலை மாணவர்கள் பாதணிகளுக்கு பதிலாக பாடசாலைக்கு சாதாரண செருப்பு அணிந்து வர கல்வி அமைச்சு அனுமதி வழங்குமாறு மக்கள் கோரும் அவல நிலை தோற்றம் பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஊழல் மோசடி அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு அச்சமடைந்துள்ளார்கள்,  போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறும் எதிர்பார்த்தேன்,இருப்பினும் ஒருசில காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாரழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் முன்பு 2 வருட காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இறுதி ஆண்டில் தொழிற்துறை தொடர்பான பயிற்சி வழங்கப்படும் ஆனால் தற்போது 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கும் தரப்பினர் ஹெரோய்ன் போதைப்பொருள்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் தற்போது ஐஸ்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டியுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 350 பேரை பராமரிக்க 90 இராணுவத்தினர் மாத்திரம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே கந்நகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான் இம்ரானுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இவ்விடயத்தின் தேசிய புலனாய்வு பிரிவின் செயற்திறனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இருவேளையாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

பாடசாலை பாதனிக்கு பதிலாக சாதாரண செருப்பை அணிந்துக் கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர கல்வி அமைச்சு அனுமதி தர வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கும் நிலைக்கு நாடு அவலத்தை எதிர்கொண்டுள்ளது.

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு தான் புனர்வாழ்வு வழங்க வேண்டும்,எனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்தார்கள்.

போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும்.போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றார்.

ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்க்ததில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம்.

குறுகிய காலத்துக்குள் மக்கள் பலத்துடன் வளர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க இடமளிக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோட்டா கோஹோம், பசில் கோஹோம் என்கிற பெரிய புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி செய்தது. குறுகிய காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டுக் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றி கிடைத்தது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க கோழைகள் சதி செய்கிறார்கள். ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன். எங்களை அழிக்க நினைப்பவர்கள் மக்களோடு இணைந்து எங்களை அழித்து தோற்கடித்துக்காட்டுங்கள்.

அரசாங்கத்துக்குள்ள தீர்வு மின், நீர் கட்டணங்களை அதிகரிப்பதல்ல. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை.

அதற்காக அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாது. அவர்களின் தொழில் உரிமை காதுகாக்கப்படவேண்டும் . அரச, , தனியார் கூட்டுமுயற்சிகளின் ஊடாக நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமடையச் செய்யலாம் .

மேலும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சிக்குள் பிளவுபடாத இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர நடவடிக்கை எடுப்போம். அதேபோல் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பில் அடைப்படை உரிமைக்குள் சேர்ப்போம். மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்காக மக்களோடு ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை.

மேலும் எமது அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியப் புதியச் சட்டம் கொண்டுவருவோம். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொடவை தாராளவாதிகள் மறந்துவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.

நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை மீள நாட்டுக்குக் கொண்டுவருவேன். அத்துடன் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டத்தால் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பக்கமாக ஐக்கிய மக்கள் சக்தி நிற்பது மாத்திரமன்றி, போராட்டக்காரர்களால் முன்னெடுத்தப் புரட்சியை கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்

எனவே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியுமான நாட்டுக்கு உள்ள ஒரே தீர்வு, ஒரே மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

ஆணவத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதியால் மக்களே நெருக்கடியில் – ஹர்ஷன ராஜகருணா

பொருளாதார ரீதியில் நாடு அடுத்த ஆண்டு தற்போதுள்ளதை விட பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும். இது தொடர்பில் எம்மால் விடுக்கப்படும் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆணவத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது இந்த செயற்பாடுகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (டிச.05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் நாமும் எண்ணினோம்.

எனினும் அவரது இலக்கு நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதல்ல. மாறாக இலாபமீட்டும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனம் என்பவற்றை தனியார் மயப்படுத்துவதாகும். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

மத்தள விமான நிலையம் வருமானத்தை விட 21 மடங்கு செலவினைக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறானவற்றையே மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டுள்ளது. காரணம் அவரது வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் மீது வரி சுமையை சுமத்துபவையாகவே உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நாடு பொருளாதார ரீதியில் வீழச்சியடையும் என்பதை அறிந்திருந்தும் அது தொடர்பில் மத்திய வங்கியால் எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி எச்சரிக்கை விடுக்காவிட்டாலும் பொறுள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் அதனை செய்திருந்தோம். அடுத்த ஆண்டு இதனை விட பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று இப்போதும் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆணவத்தினால் நாம் கூறும் விடயங்களை உதாசீனப்படுத்துகின்றார். இதற்கு பதிலாக தன்னை ஹிட்லர் எனக் கூறிக் கொண்டும் , இராணுவத்தினரைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை அடக்குவேன் என்று கூறுகின்றார்.

மக்கள் இவ்வாறான அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட, மீண்டும் 75 சதவீதம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்

பொன்சேகா சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவர் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

ஜனநாயகம் மனித உரிமைகளை இன்று எமக்கு கற்றுத்தரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவராவார். அவ்வாறான ஒருவரால் என்மீது சுமத்தப்படும் போலியான சேறு பூசல்களை  ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆற்றிய உரையைத்  தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அவர் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

வனஜீவராசிகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் சேறு பூசல்கள் மாத்திரமே உள்ளன என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டு தமது எதிர்ப்பை தெரிவிக்க உரையாற்ற அனுமதி கோரினார்கள்.

எனினும் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுமாறு சபாநாயகர் உறுப்பினர்களை நோக்கிக் குறிப்பிட்டார். ”அவ்வாறாயின் சேறு பூசலையும் நிறுத்த சொல்லுங்கள். வனஜீவராசிகள் அமைச்சின் விவாதத்தின் போது சேறு பூசல்களை இடம்பெறுகிறது.

காலி முகத்திடலுக்கு மிருகங்கள் வந்தால் அடித்து விரட்டட்டும்” என ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் குறிப்பிட்டார். இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, ”எனது பெயரைக் குறிப்பிட்டால் நான் பதிலளிக்க வேண்டும்.

நான் கடந்த 9 மாதங்களாக பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை.” என்றார். இதன்போது குறிக்கிட்ட சபாநாயகர் , ”உங்களின் பெயரை குறிப்பிடவில்லை” என்றார்.

இதன்போது சரத் பொன்சேக்கா விமலவீர திஸாநாயக்கவை நோக்கி , ”யானை தடுப்பு கால்வாய் அமைத்தது முட்டாள் தனமானது” என்று குறிப்பிட்டார். இவர் அமைச்சராக பதவி வகிக்கும் போது ஒன்றும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த விமலவீர திஸாநாயக்க , ”அரசாங்கத்தின் செலவு இல்லாமல் யானை கால்வாய் அமைத்தேன். அதனால் இன்று அந்த பிரதேச மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.

60 000 , 70 000 பேரை கொன்றவர் இன்று எமக்கு ஜனநாயகம் பற்றி குறிப்பிட வருகிறார். சண்டியர்களை பாதுகாத்த பீல்ட் மார்ஷல் எமக்கு ஆலோசனை வழங்க வருகிறார் என்றார்.

மாற்றத்தை ஏற்படுத்த பஸில் ஞானி இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாடு திரும்பினார் என்பதற்காக நாட்டில் புதிதாக ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்று (20) நாடு திரும்பியமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பஸில் ராஜபக்சவின் வருகையை ‘மொட்டு’க் கட்சியின் உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

அவர் வருகை தந்தால் நாடு பிரகாசிக்கும் என்றார்கள். இறுதியில் என்ன நடந்தது?

அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடு வங்குரோத்து அடைந்தது.

எனவே, பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை அவர் மீளவும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நிதி அமைச்சர் என்ற முறையில் அவரது செயற்பாடுகள், நடவடிக்கைகள் என்பன நாடு வங்குரோத்து அடைவதற்கு மற்றுமொரு காரணியாக அமைந்திருந்தது.

இந்த அரசைக் கொண்டு நடத்துபவர் பஸில் ராஜபக்ச என்பது தற்போது தெளிவாகின்றது.

அமைச்சுகளுக்கும் பதவிகளுக்கும் நபர்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பை அவர் திரைமறைவிலிருந்து செயற்படுத்தி வருகின்றார்.

அரசையும் ஜனாதிபதியையும் இயக்கும் நபராகப் பஸில் ராஜபக்ச திறைமறைவிலிருந்து செயற்பட்டு வருகின்றார்” – என்றார்.

தேர்தலை ஒத்திவைக்க முயற்சி – சஜித் குற்றச்சாட்டு

எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், அந்தக் குழுவின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு உபாய வார்தைகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக புதிய மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும்,தேர்தல் முறைமையை மாற்றியமைக்காமல் மக்கள் அபிப்பிராயத்திற்கு செவிசாய்த்து, அவர்கள் வாக்களிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியதே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

உரிய காலத்தில் அந்தந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தந்திர உத்திகளை கையாண்டு தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பு என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

அவரது அந்த அறிக்கைகள் இன்றும் செல்லுபடியாகும் என்றால்,எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் பதவியைப் பெற்று தேர்தலை ஒத்திவைக்கும் தந்திர உத்தியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும் எனவும், மக்கள் கோரிக்கை விடுப்பது தேர்தலே என்பதால் அதை வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் 220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலை சந்திப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்டம், அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.