வடக்கு கிழக்கில் கிழக்கில் பூரண ஹர்த்தால்; தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் கூட்டாக அழைப்பு

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை வெளியிட்டனர்.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்து, 75 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், தமிழ் பேசும் மக்களாகிய நாம், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதி கோரி நிற்கின்றோம்.

 

போர் முடிந்து 14 வருடங்கள் உருண்டோடி விட்டன. இருந்தும், இதுவரையில் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. மாறாக, எமது துன்பங்களும் துயரங்களும் நீடித்து நிற்கின்றன.

 

எம் மீதான அழுத்தங்களும் நெருக்குதல்களும் தொடர்கின்றன. எமது தாயகமான வட-கிழக்கு மாகாணங்களில் எமது பெரும்பான்மைப் பலத்தை சிதைத்து. இருப்பை பலவீனப்படுத்தி. உரிமை கோரி நாம் எழுந்து நிற்க முடியாத நிலைமையை காலப்போக்கில் ஏற்படுத்தும் இலக்குடன், அரசாங்க மட்டத்திலும் – அதன் ஆதரவோடும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எமது தாயகத்தில், வரலாற்று ரீதியாக எமது வழிபாட்டு தலங்கள் அமைந்திருந்த பல்வேறு இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகள் மீறப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் குருந்தூர்மலை. திருகோணமலையில் கன்னியா மற்றும் விளையாட்டரங்க சுற்றாடல். யாழ்ப்பாணத்தில் தையிட்டி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. குருந்தூர்மலையிலும். தையிட்டியிலும் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.

 

 திருகோணமலையில் இலுப்பைக்குளத்தில், விகாரை ஒன்றுக்கான முன் நடவடிக்கைகள், ஆளுநரின் கட்டளையையும் மீறி. மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களம், வனத் திணைக்களம். வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன எமது பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து அபகரித்துள்ளன. காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில். மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் தமிழ்ப் பண்ணையாளர்களின் பல்லாயிரக்கணக்கான கால் நடைகளின் மேய்ச்சல் தரவையாக மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பாரிய பிரதேசத்தை, சிங்களக் குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகள் ஆக்கிரமிப்பாளர்களால் பெருந்தொகையில் பிடிக்கப்பட்டும். சுடப்பட்டும். கொல்லப்பட்டும் உள்ளன. இதனால் பண்ணையாளர்களின் வாழ்வே இருண்டு போய் உள்ளது. பயிர் அறுவடை முடிந்தவுடன் குடியேற்ற வாசிகள் வெளியேறி விடுவார்கள் என்று அரசாங்கத் தரப்பில் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றோடு கலந்து போய் பல மாதங்கள் ஆகிவிட்டது.

 

ஆக்கிரமிப்பு தொடர்கின்றது. மறுபுறத்தில், குருந்தூர்மலை ஆலய வழக்கில் எமது மக்களின் வழிபாட்டு உரிமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்த முல்லைத்தீவு நீதிபதி, அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களின் விளைவாக நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளார்.

 

யுத்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட பல நூற்றுக்கணக்கான படுகொலைகளில், சர்வதேசத்தை திருப்திப்படுத்த, சிலவற்றுக்கு வழக்குகள் தொடுக்கப்பட்டதனை நீங்கள் அறிவீர்கள்.

 

 மூதூர் – குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான வழக்கு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, சிங்கள யூரி சபையினர் முன்பு விசாரணை செய்யப்பட்டதன் முடிவில், எதிரிகளான இராணுவத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை யார்தான் மறக்க முடியும்? அதைப்போலவே, மிருசுவில் படுகொலைகள் பற்றிய வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு, கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது.

 

மேலும், யுத்தம் மீண்டும் வெடித்த போது, 5 தமிழ் மாணவர்கள் திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் நீதி மறுக்கப்பட்டது. கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவங்களிலும் உண்மை புதைக்கப்பட்டு விட்டது.

இவை எல்லாம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வோர் தண்டிக்கப்படாமல், தப்பிவிடுவார்கள் என்பதற்கு உறுத்தும் உதாரணங்கள் ஆகும்.

இப்பொழுது, நீதிக்காக துணிந்து நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நேர்ந்திருக்கும் கதி தொடர்பிலும் உண்மை மழுப்பப்பட்டு, மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது

 

இந்தச் சூழ்நிலையில், இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு வட- ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு, வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.

 

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் வடக்கு,கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு‌ தமிழ்த் தேசியக் கட்சிகள்‌ கோரிக்கை

மட்டக்களப்பில் வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஹர்த்தால் கடையடைப்பிற்கு வர்த்தக சங்கம் அரச ஊழியர்கள் போக்குவரத்து துறையினர் பொதுமக்கள் ஆனைவரும் ஆதரவு வழங்குமாறு  கோரி இன்று செவ்வாய்க்கிழமை (17) தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்துகட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா.அரியேந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் தவிசாளரும் ரெலோ, அமைப்பின் பிரதி தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கேசவன்,  ஈ.பி,ஆர்.எல்.எப், அமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உநுப்பினருமான இரா.துரைரெட்ணம், ஜனநாயக போராளிகள் கட்சி பிரதி தலைவர் நகுலேஸ் ஆகியோர் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்

இந்த நாட்டில்  நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால்  இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதை சிந்திக்கவேண்டு ஜனநாயக ஆட்சி இல்லாமல் 74 சதவீதமான சிங்கள மக்களின் இன நாயக ஆட்சி நடைபெறுகின்றது இதனை சுட்டிக்காட்டுவதற்கும் நீதிதுறையை பாதுகாப்பதற்கும் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிரான அச்சுறுத்தல்.

மற்றும் தொல்லியல் திணைக்களம் என்ற பெயரில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றது அதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களம் வனவிலங்கு திணைக்களம் மாகாவலி திணைக்களம் ஊடாக பல்வேறுபட்ட ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்றது

எனவே இதனை கண்டித்து வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தையும்  சட்டஆட்சியையும்  மனித உரிமையையும்  நீதிதுறையின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஹர்த்தால் கடையடைப்பு பொது வேலை நிறுத்தத்திற்கான  அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

தனிநாடு கேட்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு சரத்வீரசேகர போன்றவர்களே காரணம்; ஜனா எம்.பி தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணாவிடின் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு, என்ற நினைப்பு விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதனை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இலங்கையிலே தமிழ் மக்களின் ஆயுத போராட்ட அமைப்பு அழிந்தாலும் அவர்களின் தனிநாடு கனவு அழியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 2009லே எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன் தனிநாடு தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னும் வீரியம் அடையக் கூடிய விதத்திலே மக்களின் மனநிலை இருக்கின்றது.

2009லே சர்வதேசத்தின் உதவியுடன் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக பிளஸ் பிளஸ் அமுல்ப்படுத்தி தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று சர்வதேசத்திற்குக் கூறியது. இறுதியில் வடக்கு கிழக்கு தமிழர்களை மிகவும் கஸ்டத்திற்கும், மனவேதனைக்கும் உட்படுத்தும் செயற்பாடுகளையே செய்கின்றது.

வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் மாத்திரமல்லாமல் வடக்கு ,கிழக்கிலே சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கைக் கபளீகரம் செய்து தமிழர்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் நடவடிக்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு கோட்டபாயவுடன் இணைந்து இயங்கிய வியத்மக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நாட்டை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகளின் நிலைப்பாடு தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் உறுதியாக்குவதாகவே இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலே திருகோணமலையையும் அம்பாறையையும் தங்களது குடியேற்றத்தின் ஊடக தமிழர்களை முதன்மை இடத்தில் இருந்து திருகோணமலையில் இரண்டாம் இடத்திற்கும், அம்பாறையில் மூன்றாம் இடத்திற்கும் கொண்டு சென்றவர்கள் தற்போது மட்டக்களப்பில் தங்களது கைங்கரியத்தைச் செய்வதற்கு தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தவரைக் கொண்டு வந்து சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் அங்கு அவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாகாணசபை காலத்திலே நாங்கள் அதனைத் தடுத்திருந்தோம். அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தோம். ஆனால் தற்போதைய ஆளுநருக்கு முன்னர் இருந்த ஆளுநர் வியத்மக அமைப்பின் முக்கிய உறுப்பினர் அனுராதா ஜகம்பத் அவர்கள் இந்;த மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்பைத் தூண்டியிருந்தார். தற்போது அவர் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் பின்புலத்தில் இருந்து இந்த விடயத்iதை தூண்டிக் கொண்டிருக்கின்றார்.

நாட்டின் ஜனாதிபதி கடந்த சனி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு வந்திருந்த போது அம்பிட்டிய தேரர் தலைமையில் மட்டக்களப்பில் போராட்டம் நடத்தியதோடு மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பதாதைக்கு தும்புத்தடியால் அடித்த விடயத்தை உலகமே பார்த்தது. இதனை தமிழர் ஒருவரோ, அல்லது தமிழ் பேசும் ஒருவரோ அல்லது தமிழ் பேசும் மதகுரு ஒருவரோ செய்திருந்தால் அவரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்.

இந்த நாட்டை மக்கள் பிரதிநிதிகள் ஆள்கின்றார்களா? அல்லது புத்தபிக்குகள் ஆள்கின்றார்களா என்ற கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான புத்தபிக்குகள் தான் வியத்மக அமைப்புடன் இணைந்து வடக்கு கிழக்கை கபளீகரம் செய்திருக்கின்றார்கள். அந்த வகையிலே மயிலத்தமடு மாதவணையில் புதிதாக ஒரு விகாரையை அமைத்து அங்கு புதிது புதிதாக ஆட்களைக் கொண்டு வந்து அந்த பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக காலம் காலமாக தங்கள் கால்நடைகளை அந்த இடத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்ககான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், சிவில் செயற்பாட்டாளர்களையும் புத்த பிக்கு உள்ளிட்டவர்கள் சிறைப்பிடித்த கைங்கரியம் கூட அங்கு இடம்பெற்றது.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்யும் காலம் தொங்கி விட்டது. பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சற் தரைக்குக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒருபுறம் இந்த மாவட்டத்தின் வேளாண்மைச் செய்கையைத் தொடங்குவதற்கு விவசாயிகள் மாடுகளை அப்புறப்படுத்துமாறு தெரிவிக்கின்றார்கள். மறுபுறம் மாடுகளை தங்கள் மேய்ச்சற் தரைக்கு கொண்டு செல்ல விடாமல் அத்துமீறி ஊடுருவியிருக்கும் பெரும்பான்மையினர் தடுக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை இருக்க பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை ஆற்றிலா அல்லது கடலிலா மேய்ப்பது.

இன்று அந்தப் பண்ணையாளர்கள் 29 நாளாக சுழற்சி முறையிலான அகிம்சைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கடந்த வாரம் இங்கு வந்து அவர்களின் ஒருசில பிரதிநிதிகளைச் சந்தித்து செவ்வாய்க் கிழமைக்குள் ஒரு தீர்வு தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாகின்றது எந்தவொரு தீர்வும் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதும், மக்களை ஏமாற்றியி அரசியல் நடத்துவதும் தான் இந்த ஜனாதிபதியின் செயற்பாடு என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்த தேய்ச்சற் தரை விடயம் தொடர்பாக நாங்கள் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம், ஒத்திவைப்புப் பிரேரணையைக் கூட கொண்டு வந்திருக்கின்றோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். ஒருவர் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்தவர், தமிழ் மக்களின் மத்தியில் இருந்து இருவர் அரச தரப்பிலே இராஜாங்க அமைச்சர்களாகவும், நாங்கள் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

என் சக பாராளுமன்ற உறுப்பினர் தம்பி சாணக்கியன் அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பலே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறியிருந்தார். அவர் என்னையும் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறை கூறியிருந்தார். என்னை அவர் குறிப்பிட்டு நான் எங்கிருக்கின்றேன் என்று தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஏனெனில் அவர் மாவட்டத்தில் இருப்பதில்லை. ஆனால், எமது மாவட்ட மக்களுக்குத் தெரியும் பாராளுமன்ற அமர்வுகள் அற்ற நாட்களில் எமது மாவட்ட மக்களின் தேவைகளை என்னால் முடிந்தளவில் நான் அவர்களைச் சந்தித்து பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றேன். அவரைப் போன்று தான் நினைத்த போது மாவட்டத்திற்கு வந்து ஒரு ஊடக சந்திப்பினையும், ஆர்ப்பாட்டத்தினையும் செய்துவிட்டு போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல.

கடந்த பாராளுமன்ற அமர்விலே மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற விடயத்தையும் குறிப்பட்டிருந்தார். உண்மை நான் கலந்து கொள்ளவில்லை தான். கடந்த பாராளுமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நான் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் போது தம்பி சாணக்கியன் என்னை வந்து சந்தித்து என் மணி விழா சம்மந்தமாகக் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் நான் வாகனத்தில் ஏறிச் செல்லும் போது சக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த போராட்ட விடயத்தைத் தெரிவித்தார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த என்னை சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடும் போது இந்த விடயம் சம்மந்தமாக ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. அன்றைய நாள் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் விநோ அவர்கள் பேச இருந்த நேரத்தை எடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் ஆட்கள் இன்மையால் இப்போராட்டம் கைவிடப்பட்டதாகவும் மறுநாள் நடைபெறும் விடயம் எனக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் இவர் கூறியதாகவும் நான் அறிந்தேன்.

அன்று நான் கொழும்பில் தான் நின்றேன். நான் மட்டுமல்ல செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சாள்ஸ் உள்ளிட்ட பலரும் அங்குதான் இருந்தோம். இந்த மாவட்ட மக்கள் சம்மந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக எல்லோருக்கும் அறிவித்து செய்திருந்தால் அது பிரயோசனமாக இருந்திருக்கும். அதுமாத்திரமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையகப் பிரச்சனை சம்மந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவர்களுடன் கைகோர்த்திருந்தோம். அவர்களுக்கும் பண்ணையாளர்கள் தொடர்பான ஆர்ப்பாட்ட விடயத்தினைச் சொல்லியிருந்தால் அவர்களும் எம்முடன் இணைந்திருப்பார்கள். தனிப்பட்ட ரீதியிலே அரசியல் செல்வாக்கைப் பெற வேண்;டும், மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று செய்து விட்டு குறை கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இந்த மாவட்டத்தில் பல கட்சிகள் பல சுயேட்சைக் குழுக்களில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் வெறும் ஐந்து பேர்தான். நாங்கள் பாராளுமன்ற உறுப்பினாராக வந்ததன் பிற்பாடு இந்த மாவட்ட மக்களின் அனைவரின் பிரதிநிதியே தவிர தனக்கு வாக்களித்த மக்களுக்கான உறுப்பினர் அல்ல என்பதே எனது நிலைப்பாடு. இதனை ஏனையவர்களும் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும் என்றால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வந்து எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்கினால் தான் இந்த நாடு உருப்படும். அவ்வாறில்லாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரத் வீரசேகர கூறியது போன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இன்னமும் தனிநாடு, தமிழீழம் என்ற நினைப்பு விலகவில்லை, விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜா விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்த்தக் கலந்துரையாடல் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது.

நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்த சிங்கள அரசாலும், அரச இயந்திரத்தாலும், அவமதிக்கப்படுகின்றது என்ற விடயத்தையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளி வந்ததுள்ளது.

அதுபோல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும், தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

ஹர்த்தால் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்னாயத்த கூட்டம்

ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது.

ஹர்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட தலைவர் நிரோஷ், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு – தமிழ்க் கட்சிகள் யாழில் கூடி முடிவு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று(09) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் எம்.பிக்கள் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும் – சபா குகதாஸ்

தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (07.10.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றத்திலும் ஒற்றுமை இன்மையை காட்டிக் கொடுக்காமல் சுயலாப நோக்கில் செயற்படாமல் ஒற்றுமையே பலம் என்ற நோக்கில் களத்தில் இறங்குங்கள் செயலில் காட்டுங்கள்.

பாதிப்பின்விரக்தி நிலையில் வாழும் வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மைத் தமிழ் மக்களின் மனநிலையை விளங்கிக் கொண்டு தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து அரசியல் இருப்புக்கான குளிர்காய்தலை தவிர்க்க வேண்டும் உள்ளக நீதிப் பொறிமுறையில் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய விடையம் மிக முக்கியமானது.

தமிழர் தரப்பு அதனை வலுப்படுத்தி சர்வதேச நீதிப் பொறிமுறைக்கான கதவினைத் திறக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடுவதன் மூலமே மாற்றத்தை கொண்டு வரலாம்.

இத்தகைய போராட்டம் நாட்கள் கழிய பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைப்பதற்கான வழியை திறக்கும்.

தனித்து ஓடினால் மக்கள் நன்றாக ரசிப்பார்கள் வாக்கு வங்கி அதிகரிக்கும் என நினைக்கும் பிற்போக்கு சிந்தனையை தவிர்த்து சகலரையும் ஒன்றினைத்து போராடினால் நீதிக்கான வழி திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்க தீர்மானம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவுஎடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலுக்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

சட்டங்கள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புக்களும் தமிழருக்கு எதிரானதாக வேண்டும் என இனவாதிகள் அதிகாரம் செலுத்துகின்றனர். – மனித  சங்கிலி போராட்டத்தில் நிரோஷ்

தமிழ் மக்களின் உரிமைகளை அடக்குவதற்காக சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக பாரிய மனித உரிமை மீறலை மேற்கொண்ட இலங்கை அரச கட்டமைப்பு தற்போது ஒரு படி மேலே சென்று, தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்கு நேரடியாகவே நீதிபதிகளின் தீர்ப்புச் சுதந்திரத்திலும் கைவைத்துள்ளமை நீதிபதி சரவணராஜாவுடன் அப்பட்டமாக வெளித்தெரிய வந்துள்ளதாக ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக மருதனார்மடம் முதல் யாழ்நகர் வரை பேரணியின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்காக தமிழ் மக்கள் இந்தளவு தூரம் போராடுகின்றனர் என்பதில் இருந்து எம்மிடத்தில் காணப்படும் ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசு நீதித்துறையின் சுதந்திரத்தினை மீறி ஏனும் தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால், இலங்கை அரச கட்டமைப்பு பயங்கரவாதச் சட்டம், அவரகாலச்சட்டம், தற்போது கொண்டுவரப்படவுள்ள சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் பிற்போக்கானதும் இனவாத நோக்கத்தினை நிறைவேற்றக்கூடிதுமான தொல்லியல் சட்டங்கள் என எமக்கு எதிராக பல சட்டங்களை பிரயோகிக்கித்துவருகின்றது. பாராளுமன்றில் காணப்படும் இனவாத பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டு எண்ணிக்கையில் குறைவானதேசிய இனங்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை இயற்றி அவற்றை நீதிமனங்களின் வாயிலாக எம்மீது  அரச கட்டமைப்பு பிரயோகித்தது. இவ்வாறான சட்டங்களினால் தமிழ் மக்கள் சொல்லெணாத் துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் உள்ள சட்டங்கள் மாத்திரமல்ல நீதிமன்றத்தின் தீர்ப்புக்களும் சிங்கள பேரினவாத கட்டமைப்பிற்கு சாதகமாகக் கணப்பட வேண்டும் என்று தான் அரசும் சிங்கள பேரினவாதிகளும் அதற்காக உச்ச அதிகாரத்தை பிரயோகிக்கின்றார்கள்.

தற்போது தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்காக குருந்தூர்மலை போன்ற இடங்களில் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்களை தொல்லியல் திணைக்களம்  உள்ளிட்ட அரச திணைக்களங்கள்; அவமதித்துள்ளன.  பேரினவாத சிந்தனைகளின் அடிப்படையில் நீதிபதிகளை அச்சுறுத்தி தீர்ப்பினை அவமதிக்கின்றனர். நீதித்துறையை அவமதிக்கின்னர். இந்த நாட்டை ஏனைய இனங்கள் வாழ முடியாத தனிச்சிங்கள பௌத்த இனவாத தேசமாகக் கட்டியெழுப்பவே இவை அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எந்த nருக்கடிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உள்நாட்டுப்பொறிமுறை தீர்வாகது என்பது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டுள்ளது என ரொலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி

இன்றைய மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு உள்நாட்டு சட்டங்களுக்கமைய நீதி கிடைக்காது என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும் இலங்கையில் மீண்டும் ஒரு இன அழிப்பு நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று (04) புதன் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் எமது குறுகிய கால அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

இன்றைய போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறுபட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் குருந்தூர்மலை சைவத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்று வழக்காடிய உறவுகளும் கலந்துகொண்டனர் என்பதுடன் அவர்கள் நீதிபதிக்கு எத்தகைய அழுத்தங்கள் இருந்தன என்பதையும் தெளிவாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்த கருத்துகள் சர்வதேச சமூகத்தின் செவிகளுக்குச் சென்றிருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இருக்கின்ற குறுகிய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய இனத்திற்கு இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீதி கிடைக்காது என்பதை நாம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்த வேண்டிய அவசியம் தமிழர் தரப்பிற்கு இருக்கின்றது. தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய இருக்கின்றோம்.

எமது தொடர்ச்சியான போராட்டங்களே எமக்கான நீதியையும் நியாயத்தையும் எமது வாழ்வுரிமையையும் நிலைநாட்ட வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கட்சி அரசியலைப் புறந்தள்ளி எத்தகைய முரண்பாடுகளையும் ஒதுக்கிவைத்து, எமது இனத்தின் இருப்பிற்காக அனைவரும் தொடர்ந்து இணைந்து செயற்பட அறைகூவல் விடுக்கின்றோம்.

போராட்டத்தில் கலந்துகொண்ட சகலருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.