தனிநாடு கேட்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு சரத்வீரசேகர போன்றவர்களே காரணம்; ஜனா எம்.பி தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணாவிடின் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு, என்ற நினைப்பு விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதனை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இலங்கையிலே தமிழ் மக்களின் ஆயுத போராட்ட அமைப்பு அழிந்தாலும் அவர்களின் தனிநாடு கனவு அழியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 2009லே எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன் தனிநாடு தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னும் வீரியம் அடையக் கூடிய விதத்திலே மக்களின் மனநிலை இருக்கின்றது.

2009லே சர்வதேசத்தின் உதவியுடன் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக பிளஸ் பிளஸ் அமுல்ப்படுத்தி தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று சர்வதேசத்திற்குக் கூறியது. இறுதியில் வடக்கு கிழக்கு தமிழர்களை மிகவும் கஸ்டத்திற்கும், மனவேதனைக்கும் உட்படுத்தும் செயற்பாடுகளையே செய்கின்றது.

வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் மாத்திரமல்லாமல் வடக்கு ,கிழக்கிலே சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கைக் கபளீகரம் செய்து தமிழர்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் நடவடிக்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு கோட்டபாயவுடன் இணைந்து இயங்கிய வியத்மக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நாட்டை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகளின் நிலைப்பாடு தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் உறுதியாக்குவதாகவே இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலே திருகோணமலையையும் அம்பாறையையும் தங்களது குடியேற்றத்தின் ஊடக தமிழர்களை முதன்மை இடத்தில் இருந்து திருகோணமலையில் இரண்டாம் இடத்திற்கும், அம்பாறையில் மூன்றாம் இடத்திற்கும் கொண்டு சென்றவர்கள் தற்போது மட்டக்களப்பில் தங்களது கைங்கரியத்தைச் செய்வதற்கு தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தவரைக் கொண்டு வந்து சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் அங்கு அவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாகாணசபை காலத்திலே நாங்கள் அதனைத் தடுத்திருந்தோம். அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தோம். ஆனால் தற்போதைய ஆளுநருக்கு முன்னர் இருந்த ஆளுநர் வியத்மக அமைப்பின் முக்கிய உறுப்பினர் அனுராதா ஜகம்பத் அவர்கள் இந்;த மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்பைத் தூண்டியிருந்தார். தற்போது அவர் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் பின்புலத்தில் இருந்து இந்த விடயத்iதை தூண்டிக் கொண்டிருக்கின்றார்.

நாட்டின் ஜனாதிபதி கடந்த சனி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு வந்திருந்த போது அம்பிட்டிய தேரர் தலைமையில் மட்டக்களப்பில் போராட்டம் நடத்தியதோடு மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பதாதைக்கு தும்புத்தடியால் அடித்த விடயத்தை உலகமே பார்த்தது. இதனை தமிழர் ஒருவரோ, அல்லது தமிழ் பேசும் ஒருவரோ அல்லது தமிழ் பேசும் மதகுரு ஒருவரோ செய்திருந்தால் அவரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்.

இந்த நாட்டை மக்கள் பிரதிநிதிகள் ஆள்கின்றார்களா? அல்லது புத்தபிக்குகள் ஆள்கின்றார்களா என்ற கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான புத்தபிக்குகள் தான் வியத்மக அமைப்புடன் இணைந்து வடக்கு கிழக்கை கபளீகரம் செய்திருக்கின்றார்கள். அந்த வகையிலே மயிலத்தமடு மாதவணையில் புதிதாக ஒரு விகாரையை அமைத்து அங்கு புதிது புதிதாக ஆட்களைக் கொண்டு வந்து அந்த பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக காலம் காலமாக தங்கள் கால்நடைகளை அந்த இடத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்ககான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், சிவில் செயற்பாட்டாளர்களையும் புத்த பிக்கு உள்ளிட்டவர்கள் சிறைப்பிடித்த கைங்கரியம் கூட அங்கு இடம்பெற்றது.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்யும் காலம் தொங்கி விட்டது. பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சற் தரைக்குக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒருபுறம் இந்த மாவட்டத்தின் வேளாண்மைச் செய்கையைத் தொடங்குவதற்கு விவசாயிகள் மாடுகளை அப்புறப்படுத்துமாறு தெரிவிக்கின்றார்கள். மறுபுறம் மாடுகளை தங்கள் மேய்ச்சற் தரைக்கு கொண்டு செல்ல விடாமல் அத்துமீறி ஊடுருவியிருக்கும் பெரும்பான்மையினர் தடுக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை இருக்க பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை ஆற்றிலா அல்லது கடலிலா மேய்ப்பது.

இன்று அந்தப் பண்ணையாளர்கள் 29 நாளாக சுழற்சி முறையிலான அகிம்சைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கடந்த வாரம் இங்கு வந்து அவர்களின் ஒருசில பிரதிநிதிகளைச் சந்தித்து செவ்வாய்க் கிழமைக்குள் ஒரு தீர்வு தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாகின்றது எந்தவொரு தீர்வும் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதும், மக்களை ஏமாற்றியி அரசியல் நடத்துவதும் தான் இந்த ஜனாதிபதியின் செயற்பாடு என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்த தேய்ச்சற் தரை விடயம் தொடர்பாக நாங்கள் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம், ஒத்திவைப்புப் பிரேரணையைக் கூட கொண்டு வந்திருக்கின்றோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். ஒருவர் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்தவர், தமிழ் மக்களின் மத்தியில் இருந்து இருவர் அரச தரப்பிலே இராஜாங்க அமைச்சர்களாகவும், நாங்கள் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

என் சக பாராளுமன்ற உறுப்பினர் தம்பி சாணக்கியன் அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பலே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறியிருந்தார். அவர் என்னையும் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறை கூறியிருந்தார். என்னை அவர் குறிப்பிட்டு நான் எங்கிருக்கின்றேன் என்று தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஏனெனில் அவர் மாவட்டத்தில் இருப்பதில்லை. ஆனால், எமது மாவட்ட மக்களுக்குத் தெரியும் பாராளுமன்ற அமர்வுகள் அற்ற நாட்களில் எமது மாவட்ட மக்களின் தேவைகளை என்னால் முடிந்தளவில் நான் அவர்களைச் சந்தித்து பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றேன். அவரைப் போன்று தான் நினைத்த போது மாவட்டத்திற்கு வந்து ஒரு ஊடக சந்திப்பினையும், ஆர்ப்பாட்டத்தினையும் செய்துவிட்டு போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல.

கடந்த பாராளுமன்ற அமர்விலே மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற விடயத்தையும் குறிப்பட்டிருந்தார். உண்மை நான் கலந்து கொள்ளவில்லை தான். கடந்த பாராளுமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நான் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் போது தம்பி சாணக்கியன் என்னை வந்து சந்தித்து என் மணி விழா சம்மந்தமாகக் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் நான் வாகனத்தில் ஏறிச் செல்லும் போது சக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த போராட்ட விடயத்தைத் தெரிவித்தார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த என்னை சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடும் போது இந்த விடயம் சம்மந்தமாக ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. அன்றைய நாள் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் விநோ அவர்கள் பேச இருந்த நேரத்தை எடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் ஆட்கள் இன்மையால் இப்போராட்டம் கைவிடப்பட்டதாகவும் மறுநாள் நடைபெறும் விடயம் எனக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் இவர் கூறியதாகவும் நான் அறிந்தேன்.

அன்று நான் கொழும்பில் தான் நின்றேன். நான் மட்டுமல்ல செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சாள்ஸ் உள்ளிட்ட பலரும் அங்குதான் இருந்தோம். இந்த மாவட்ட மக்கள் சம்மந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக எல்லோருக்கும் அறிவித்து செய்திருந்தால் அது பிரயோசனமாக இருந்திருக்கும். அதுமாத்திரமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையகப் பிரச்சனை சம்மந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவர்களுடன் கைகோர்த்திருந்தோம். அவர்களுக்கும் பண்ணையாளர்கள் தொடர்பான ஆர்ப்பாட்ட விடயத்தினைச் சொல்லியிருந்தால் அவர்களும் எம்முடன் இணைந்திருப்பார்கள். தனிப்பட்ட ரீதியிலே அரசியல் செல்வாக்கைப் பெற வேண்;டும், மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று செய்து விட்டு குறை கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இந்த மாவட்டத்தில் பல கட்சிகள் பல சுயேட்சைக் குழுக்களில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் வெறும் ஐந்து பேர்தான். நாங்கள் பாராளுமன்ற உறுப்பினாராக வந்ததன் பிற்பாடு இந்த மாவட்ட மக்களின் அனைவரின் பிரதிநிதியே தவிர தனக்கு வாக்களித்த மக்களுக்கான உறுப்பினர் அல்ல என்பதே எனது நிலைப்பாடு. இதனை ஏனையவர்களும் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும் என்றால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வந்து எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்கினால் தான் இந்த நாடு உருப்படும். அவ்வாறில்லாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரத் வீரசேகர கூறியது போன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இன்னமும் தனிநாடு, தமிழீழம் என்ற நினைப்பு விலகவில்லை, விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.