அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் போது ஏன் பிரச்சினைகள் எழுகின்றன? சஜித் கேள்வி

“எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன?” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

“எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம்” – என்றும் வலியுறுத்திய அவர், “கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும” – என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் மீண்டும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது எமது சட்டப் புத்தகத்தில் இன்று அல்லது நேற்று வந்த ஒன்றல்ல. இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன.?

நாட்டிலுள் இனங்களும் மதங்களும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிப்பதில்லை. அதுவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது.

ஆகவே, சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்கள மொழி பேசும் எமது சிங்கள மக்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர்.

அதே போன்றே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர்.

அவ்வாறே முஸ்லிம் மக்களும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதுவே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும்.

13ஆவது திருத்தச்சட்டம் தோல்வி கண்ட பொறிமுறை – தேசிய மக்கள் சக்தி

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்குக் கிடையாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை. எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாகப் பிரச்சினைகள் தீரவில்லை. அது தோல்வி கண்டதொரு பொறிமுறையாகும். நானும் மாகாண சபையில் அங்கம் வகித்துள்ளேன். தீர்வுக்குப் பதிலாக அதன்மூலம் நிர்வாகப் பொறிமுறையில் பிரச்சினைகள் வந்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாத போதிலும், அது வெள்ளை யானையாகக் கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர். எனவே, இதற்கு மாற்றுத் தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13 ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

13 ஆவது திருத்தச் சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர், அதனைக் குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சமூகமாக வாழ முடியும்.” – என்றார்.

Posted in Uncategorized

13ஐ அமுல்படுத்துவது தொடர்பில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுமாறு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வை எட்டுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்தப் பிரச்சினைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் இருப்பதும் எமக்குள்ள பாரிய கடமையாகும்.

ஆகையால் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தலையீடுகளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும். மேலும் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கால எல்லை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் கட்சிக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்டு வரும் அதிக அளவிலான உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட எண்ணி இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்தக் கருத்தில் உறுதியாக இருப்பது எமக்குத் தெரியும்.

இது போன்ற முற்போக்கான அபிலாஷைகளைப் பாராட்டபட வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்கையில் தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி இவ்விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகின்றோம்.

தமிழ் புலம்பெயர்ந்த தரப்பினரில் குறிப்பிடத்தக்க குழுவினர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயத்துக்கு நாட்டின் முதன்மை தரப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்தப் பேச்சுகளைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கான கடமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு போன்றே அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் துரோகிகள் என்று எதிர்காலச் சந்ததியினர் குற்றஞ்சாட்ட வழிவகுக்கும். ஆகையால் ஜனாதிபதி உள்ளிட நாடாளுமன்றம் உன்னத நோக்கத்துடன் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் எதிர்க்கட்சித்தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு, தேசிய அமைப்புகளின் ஒற்றுமை, தேசப்பற்றுள்ள தேசியப் படை, இரண்டாம் தலைமுறை, யாழ். சிவில் சமூக மையம், அகில இலங்கை அமைப்பு, பிரஜை அதிகாரத்திற்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் அமைப்பு, பூகோள இலங்கை சங்கம், நீதி மற்றும் இறைமைக்கான மக்கள் குரல், தேசப்பற்றுள்ள அறிஞர் சங்கம் என்பன கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி இல்லாததால் அலுவலகப் பிரதிநிதி ஒருவரிடம் போராட்டக்காரர்கள் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது – அனுரகுமார

பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்

சண்டே டைம்சிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளர்ர்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது ஆனால் அது தங்களின் உரிமை என தமிழ் மக்கள் கருதுகின்றர் மாகாணசபைமுறை தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கேள்வி-

அரசமைப்பின் 13வது திருத்தம் குறித்து தேசிய மக்கள் சக்தியி;டமிருந்து எந்த கருத்தும் பதிலும் இல்லையே உங்களால் அதனை தெளிவுபடுத்த முடியுமா?

பதி;ல்- நாங்கள் பல தடவை 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்த எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம்.

2019ம் ஆண்டு வெளியான எங்களின் கொள்கை குறித்த ஆவணத்திலும் இது குறித்து தெரிவித்திருக்கின்றோம்.

எனினும் நான் மீண்டும் உங்களிற்கு இதனை தெளிவுபடுத்துகின்றேன்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபைமுறையே முழுமையான தீர்வு என நாங்கள் கருதவில்லை எனினும் மாகாணசபைகள் கடந்த மூன்று தசாப்தங்களிற்காக மேல் நாட்டில் காணப்பட்டுள்ளன எங்கள் கட்சியும் மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வடக்குகிழக்கு மக்கள் மாகாணசபைகளை தங்களின் உரிமைகளில் ஒன்று என கருதுகின்றனர்.

பல வருடங்கள் வேண்டுகோள் விடுத்த பின்னர் தங்களிற்கு கிடைத்த வெற்றி மாகாணசபைகள் என வடக்குகிழக்கு மக்கள் கருதுகின்றனர்.

மாகாணசபை முறையை தொடரவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி- தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அணுகும்?

பதில்-

மாகாணசபைமுறை மாத்திரம் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு போதுமானதல்ல என்பதை நான் ஏற்கனவே உங்களிற்கு தெரிவித்துள்ளேன்.

இலங்கையில் பல வருடங்களாக அரசியல் என்பது ஒரு சமூகத்தை மற்றைய சமூகத்துடன் மோத விடுவதாக காணப்படுகின்றது.

உதாரணத்திற்கு 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி என்பது முழுமையாக முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான கோசத்தினை அடிப்படையாக கொண்டிருந்தது.

எங்கள் நாட்டின் வரலாறு முழுவதும் அரசியல் வெற்றிக்காக சமூகத்தின் ஒரு பகுதியினரை மற்றைய தரப்பிற்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

அரசியல்கட்சிகள் அவை எந்த சமூகத்தை சேர்ந்தவையாகயிருந்தாலும் சரி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சில சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் பதற்றத்தை தூண்டியுள்ளன.

எங்கள் அரசியல் முற்றுமுழுதாக இதிலிருந்து வேறுபட்டது.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாங்கள் தேசிய ஐக்கியம் இன ஐக்கியம் ஆகியவற்றிற்காக குரல்கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான முதல் நடவடிக்கையாக சமூகங்களை பிரிப்பதற்கு பதில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் அரசியல் முறையை உருவாக்கவேண்டும்.

நாங்கள் அதனை செய்கின்றோம்.

கேள்வி- இதன் மூலம் பிரச்சினைகளிற்கு எவ்வாறு தீர்வை காணமுடியும்?

பதில்- தமிழர்களாக உள்ளதால் தமிழ் மக்கள் சில இனத்துவ நெருக்கடிகளை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும்.

அது மொழி கலாச்சாரம் மத சுதந்திரம் அரசியல் அதிகாரத்திற்கான போதியளவு சமவாய்ப்பின்மை போன்றவையை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன.

இவற்றிற்கு தீர்வை காணவேண்டும்.

அரசமைப்பில் சில ஏற்பாடுகள் உள்ளபோதிலும் அவற்றை பின்பற்றவில்லை நடைமுறைப்படுத்தவில்லை.

பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்து 15வருடங்களாகின்றது ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு நேர்மையான தீர்வுகள் எவற்றையும் முன்வைக்கவில்லை.

நாங்கள் இரண்டு விதமான அணுகுமுறைகளை நம்புகின்றோம்.

முதலாவது அரசியல் விவகாரம் -பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்.

இரண்டாவதாக இலங்கையின் ஏனைய சமூகத்தினரை போல தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன இந்த பிரச்சினைகளிற்கு தீர்வுகள் காணப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இல்லையேல் ஒருவரை ஒருவர் தூண்டிவிடுகின்ற பிரிவினைவாத அரசியல் கலாச்சாரத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது.

எனவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம்.

கேள்வி – நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கபடவேண்டும் – இது குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம்.

நிறைவேற்று அதிகார முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அது பொருத்தமற்றது என நாங்கள் கருதிவந்துள்ளோம்.

46 வருடங்களிற்கு பின்னரும் இது இலங்கைக்கு பொருத்தமற்றது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஆகவே இதனை நீக்கவேண்டும்.

கேள்வி- தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் தொடர்பான உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்- ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயற்படும் அரசாங்கம் எங்களிற்கு தேவையில்லை அனைத்து சமூகத்தினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

நாங்கள் வடக்கை சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம், மலையகம் மற்றும் முஸ்லீம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் நாங்கள் சிங்களவர்களிற்கான அரசாங்கத்தை மாத்திரம் உருவாக்கவேண்டியதில்லை.

வடக்கு மக்கள் அது சிங்கள அரசாங்கம் என கருதும் ஒன்று தேவையில்லை.

நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களின் பரந்துபட்ட ஆதரவு அவசியம் .அவர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவேண்டும்.a

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது சிக்கலை ஏற்படுத்தியவர் சுமந்திரனே – நீதியமைச்சர் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடும் அழுத்தம் பிரயோகித்தார்.மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் உரையாற்றுகிறாரா அல்லது பிரதேச சபையில் உரையாற்றுகிறாரா ? என்பதை அறியவில்லை.உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.அவரது உரையில் விரக்தி மாத்திரமே எதிரொலித்தன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் இவர் சபையில் உரையாற்றுகையில் ‘உயர்நீதிமன்றம் வீட்டுக்கு செல்ல வேண்டும் ‘ என்று இவர் குறிப்பிட்டார்.இவர்களுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு செல்ல கூடாது என்று குறிப்பிடுகிறார்.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.

இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ‘உயர்நீதிமன்றத்தின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு உண்டு.அன்று குறிப்பிட்ட விடயத்துக்கும்,இன்று குறிப்பிடும் விடயத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் உண்டு.நான் அன்று குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாறுப்பாடும் கிடையாது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர், மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.சிறந்த சட்ட வரைபை நாங்கள் தயார் செய்து முன்வைத்தோம்.உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகித்தார்.இதனால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.இதற்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும்.ஆகவே நீங்கள் தான் ( சுமந்திரனை நோக்கி) நீங்கள் தான் அப்போதைய பிரதமருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தீர்கள்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் .நான் எதிர்க்கட்சி உறுப்பினர் நீங்கள் தான் அமைச்சரவை உறுப்பினர் ஆகவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும் ‘ என்றார்.

நான் அமைச்சரவையில் இருந்தேன். சிறந்த சட்ட மூலத்தையே பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தோம்.சட்டமூலம் குழுநிலை வேளையில் திருத்தம் செய்யப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்கள் கவனத்திற் கொள்ளவில்லை.இவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.சிக்கலை நீங்களே (சுமந்திரனை நோக்கி) ஏற்படுத்தினீர்கள் என்றார்.

பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவினால் இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நிறையப் படிமுறைகளை தாண்டி வரவேண்டியிருக்கின்றது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.

ஒருவேளை, இந்த முயற்சி தொடர்ந்தும் முன்னகருமாக இருந்தால், நாம் உருவாக்கி வைத்துள்ள தேசிய நல்லிணக்கத்தினை பயன்படுத்தி, அதனை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் – கம்மன்பில

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். ஆகவே மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் ஏற்பாடுகள் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22ஆவது திருத்த யோசனையை எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் அதிகாரத்தை இரத்து செய்யும் வகையில் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில முன்வைத்த இருபத்திரெண்டாவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடந்த ஆண்டு ஜூலை மாதமளவில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திக் பிரதான அம்சமாக மாகாண சபைத் தேர்தல் முறைமை,பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் காணப்படுகின்றன.பொலிஸ் அதிகாரத்தை நீக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவே முதன் முறையாக தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.13ஐ அமுல்படுத்தினால் தற்போது உள்ள நல்லிணக்கம் கூட பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தலைமைகளுக்கு கிடையாது.பிரச்சினைகளை புதிதாக உருவாக்கி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

13 ஆவது திருத்தத்துக்கு அமைய பொலிஸ் சேவை மாகாண பொலிஸ் தேசிய பொலிஸ் என இரண்டாக வேறுப்படுத்தப்படும்.தேசிய பொலிஸ் அதிகாரிகள் மாகாணங்களுக்குள் இருக்கும் பொலிஸ் சீருடை அணிய அனுமதி வழங்கப்படமாட்டாது. அதற்காக மாகாண முதலமைச்சரின் அனுமதி பெற வேண்டும். பிரிவினைவாதிகளை தாக்க பாதுகாப்பு தரப்பினர் பிரிவினைவாதிகளிடம் அனுமதி கோர வேண்டும்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தின் ஊடாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதனூடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காணி மற்றும் பொலிஸ் விவகாரங்கள் தொடர்பில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தான் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின் 256 மற்றும் 257 அத்தியாயங்களில் மாநில அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் இலங்கைக்கு எதிராக மாகாணங்கள் செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்ற ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக வழங்கினால் இலங்கை இராணுவத்துக்கும்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொலிஸுக்கும் இடையில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம். பொலிஸ் நியமனத்தில் மாகாண முதலமைச்சரின் தலையீடு காணப்படும். ஆகவே இது தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் என்பதொன்று இருப்பதால் தான் தமிழ் தலைமைகள் அதனை முழுமையாக அமுல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இரத்து செய்யும் வகையில் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே 22 ஆவது திருத்த யோசனை சட்டமூலத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என்றார்.

ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன்காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம்.ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

தமிழ்க் கட்சிகளாலேயே 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது – விஜயதாஸ ராஜபக்ச குற்றச்சாட்டு

“தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது என்றும், கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. 13ஆவது திருத்தம் இன்று நலினமடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், 13ஆவது திருத்தத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் உரிய முறையில் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து மோதல்களுக்கும் அரசியல் முரண்பாட்டுக்கும்தான் தமிழ்க் கட்சிகள் முக்கியத்துவம் வழங்கிச் செயற்பட்டனவே அன்றி, 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது உரியமுறையில் பயன்படுத்த எத்தனிக்கவில்லை.

இதனால்தான் வடக்கு மாகாணத்துக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படாமல் மீளத் திரும்பியது. கிழக்கு மாகாணத்திலும் இதேபோன்றதொரு நிலையே இருந்தது. ஆக, இருக்கும் அதிகாரங்களைக்கூட சரிவரப் பயன்படுத்தாமலிருந்துவிட்டு கூடுதல் அதிகாரங்களைத் தாருங்கள் என்று கேட்பது பொருத்தமற்றது.” – என்றார்.அ