கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வீதியின் ஊடாகச் செல்லும் சாத்தியக்கூறுகள் – சட்ட வைத்திய அதிகாரி

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக இன்றையதினம் (24.11.2023) இடம்பெற்று இன்றையஅகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும்.

இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார்.

மெளலவியின் கருத்துக்கள் எமது மக்கள் மனதை புண்படுத்தியுள்ளது – ரெலோ வினோ எம்.பி சபையில் காட்டம்

இந்துக்களையும், அவர்களது கலை கலாசாரங்களையும் இழிவுபடுத்தும் வகையில் மௌலவி ஒருவர் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது எமது மக்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

இந்துக்கள் பெரிதும் போற்றுகின்ற, மதிக்கின்ற, ஆலயங்களில் மதிக்கப்படுகின்ற பரதநாட்டிய கலையை அந்த மௌலவி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார்.

இது மிகவும் வேதனையான விடயம். நாங்கள் சக மதத்தவரின் கலாசாரத்தை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நாங்கள் முஸ்லிம் தமிழ் சமூகத்தினர் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மௌலவியின் கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பெளத்த கலாசார நிகழ்வுகளுக்கு மாத்திரம் அதிகூடியளவு அதாவது 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஏனைய இந்து மற்றும் இஸ்லாமிய கலாசார நிகழ்வுகளுக்காக எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”இலங்கையை ஒரு பெளத்த சுற்றுலா மையமாக மாற்றும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதிலிருந்து இது ஒரு பெளத்த என்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. பல்லின சமூகம் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்றை அவசியமாகுமானால் இந்தியாவிடமே கோரவேண்டியுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் நிலமலா சீதாராமன் திருகோணமலை ஆலயத்தை புனரமைப்பதற்கு உதவுவதாக கூறினார். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதியையே கோருகின்றனர், நிதியை கோரவில்லை. ஆனால் அவர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நிதி எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். முன்னதாக பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன அரசியல் தீர்வு அவசியமில்லை, பொருளாதாரத் தீர்வே அவசியம் என்றார். ஆனால், நிரந்தர அரசியல் தீர்வு இன்றி பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கோ தீர்வுகாண முடியாது” எனது தெரிவித்தார்.

ரெலோவின் முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளராக கரைதுறைப்பற்று முன்னாள் தவிசாளர் விஜிந்தன் நியமனம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)வின் முல்லைத்தீவுமாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று 19/11/2023 இடம்பெற்றது. மாவட்ட பொறுப்பாளராக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் அவர்களும், உதவி மாவட்ட செயலாளராக பாண்டியன்குளம் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் செந்தூரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்களாக பத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

 

நிதி தேவையில்லை; நீதியே தேவை – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கடும் கண்டனம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(14) மாலை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருவதாகவும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் கூறியே தாங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பாதீட்டிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயத்துக்கு கண்டணம் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஓ எம் பியின் செயற்ப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும் தங்களுடைய எதிர்ப்பை மீறியும் அதற்காக பாரிய நிதிகளை ஒதுக்கி வீணாக செலவழித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் தற்போது சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற எங்களுடைய போராட்டத்தை சர்வதேச சமூகம் உற்று நோக்கியுள்ள வேளையிலே எங்களுடைய போராட்டத்தை சிதைப்பதற்காக அதற்கு இழப்பீட்டை வழங்குவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததோடு.

இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கலின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விடயத்தை ஒத்துக் கொண்டமை நல்ல விடயம் எனவும் எமக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதியே தேவை எனவும் நிதி தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜா விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்த்தக் கலந்துரையாடல் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது.

நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்த சிங்கள அரசாலும், அரச இயந்திரத்தாலும், அவமதிக்கப்படுகின்றது என்ற விடயத்தையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளி வந்ததுள்ளது.

அதுபோல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும், தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி சட்டவிரோத மீன்வாடிகள் அமைப்பு! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக மீன்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அங்கு மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்று நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் முன்னாள் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலி பாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதி, இதனோடு இணைந்த பல ஏக்கர் காணிகள் சிறு தானிய பயிர்ச்செய்கைக்காக தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. தற்போது வன இலாகா கையகப்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்து வருகிறார்கள். அப் பகுதியில் இரண்டரை மாதத்திற்கு முன்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வாடி அமைத்து அங்கே தொழில் மேற்கொள்கிறார்கள் என கொக்குதொடுவாய் மீனவர் அமைப்பும் அங்கு தொழில் செய்யும் தமிழ் மீனவர்களும் கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொண்டதோடு எனக்கும் தெரியப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டபோது கிராம சேவையாளர் அந்த வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகச் கூறிச் சென்றார். ஆனால் சட்டத்தை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வாடி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் இதுவரை அகற்றப்படவில்லை.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் அதனை அகற்ற கோரி பதாகை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இருந்த வாடியை விட இன்னுமொரு வாடி முழுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு வாடிகள் அங்கே பகுதியளவில் போடப்பட்டுள்ளன. இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து பெரியதொரு குடியேற்ற திட்டத்தை முறியடிக்கும் விதமாக செயற்படவேண்டும். – என்றார்

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்யுமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச நாடுகளுக்கு கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், வெள்ளிக்கிழமை (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருந்ததுடன், நாட்டிலிருந்தும் வெளியேறியமை பல்வேறு சர்ச்சைகளையும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு கூட்டாகக் கடிதமொன்றை எழுதுவதற்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்திருந்தன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகளின் கூட்டுத்தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச சமூகத்துக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம் இன்றைய தினம் (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படுமென கட்சி பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும், தனக்கு அச்சுறுத்தல் இருந்ததை நீதிவான் வெளிப்படையாகவே கூறியிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ் நீதிபதிக்கு எதிரான இத்தகைய அழுத்தங்கள் அவர் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் எதிரானவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும், நாட்டின் நீதிக்கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுவதை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை – சி.ஐ.டி அறிக்கை சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனிவு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும்நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு – தமிழ்க் கட்சிகள் யாழில் கூடி முடிவு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று(09) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.